Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Monday, March 16, 2015

எனக்குள் ஒருவன் : தவறவிடக்கூடாத தமிழ் படம்

முன் குறிப்பு 1: நீங்கள் இன்னும் எனக்குள் ஒருவன் பார்க்கவில்லை என்றால் தியேட்டருக்கு போய் பாருங்கள். ஒரு அற்புதமான அனுபவத்திற்கு நான் உத்திரவாதம்

மு.கு.2: இதன் ஒரிஜினலான கன்னட படம் "லூசியா"வை நான் பார்க்கவில்லை. என் பார்வை முழுக்க தமிழின் எனக்குள் ஒருவனைப் பற்றி மட்டுமே.

*****

கிறிஸ்டோஃபர் நோலன் உலகையே பிரமிப்பில் ஆழ்த்திய "இன்செப்ஷன்" படத்தில் ஒரு காட்சி வரும். கனவுக்குள் கனவு என நான்கு நிலைகளுக்கு செல்வதற்கு தகுந்த சரியான மயக்கமருந்து ஃபார்முலா தேடி ஒருவரிடம் செல்வார்கள். அவர் தன் மருந்தின் வீரியத்தை காட்ட ஒரு அறைக்கு அழைத்துச் செல்வார். அங்கே சுமார் 20 பேர் அந்த மருந்தை எடுத்துக்கொண்டு உறங்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களை அடித்தால் கூட எழமாட்டார்கள்.

அந்த கெமிஸ்ட் "இவர்கள் எல்லாரும் தினம் இங்கே வருவார்கள். காலை எழுந்து சென்றுவிட்டு, மீண்டும் சீக்கிரமாக இங்கே திரும்பி விடுவார்கள்" என்பான்

லியானார்டோ அவரிடம் "திரும்ப தூங்க இங்கே வருவார்களா?" எனக்கேட்க‌

அந்த கெமிஸ்ட் சொல்லும் பதில் "இல்லை, அவர்கள் இங்கே வருவது திரும்ப விழித்தெழ"

அதாவது, அந்த மனிதர்களைப் பொறுத்தவரை  இந்த புற உலகம் வேறு வழியில்லாமல் இருக்கும் இடம். அந்த கனவுலகம்தான் அவர்களைப் பொறுத்தவரை நிஜ வாழ்க்கை, அதைத்தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

"எனக்குள் ஒருவன்" படத்தின் அடிப்படை கதையின் ஒருவரி அந்த கெமிஸ்ட் சொல்லும் பதில்தான்

****

ஒரு தியேட்டரில் டிக்கெட்டில் டார்ச் அடித்து சீட் நெம்பர் பார்த்து சரியான சீட்டில் உக்காரவைக்கும் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் விக்கி என்ற கருப்பு சித்தார்த்திற்கு கிடைக்கும் அற்புத மாத்திரை லூசியா.

மருந்து கம்பெனி நடத்தி வரும் ஜான் விஜய் "இதை போட்டுகிட்டா உனக்கு கனவு வரும், அதுல நீ வாழ நினைச்ச மாதிரி எல்லாம் வாழலாம்" என்று சொல்லி கொடுக்கும் மாத்திரையை போட்டுக்கொண்டு தூங்க, கனவில் ஒரு பெரிய சினிமா ஸ்டாராக விக்னேஷ் என்ற வெள்ளை சித்தார்த். 

அதன்பின் கனவிலும் நிஜத்திலும் என்று பேரலலாக போகும் இரட்டை கதை, இரண்டிலும் ஒரே ஆட்கள் வேறு வேறு பாத்திரங்களாக என்று கடைசி வரை திரைக்கதையில் அதகளம்.

படத்தின் மேக்கிங் அற்புதம். அதிலும் கனவு கருப்பு வெள்ளையிலும் நிஜம் வண்ணத்திலும், அதற்கான காரணங்கள் என்று அசத்தியிருக்கிறார்கள்.

கதையின் மிகப்பெரிய பலமே க்ளைமாக்ஸ் காட்சிகள். படம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகியும் அதிலிருந்து இன்னும் நான் வெளிவரவில்லை.  

இதற்கு மேல் சொன்னால் ஸ்பாயிலர் ஆகிவிடும் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

"ஐ டோன்ட் சீ டமில் மூவிஸ்" என்று சொல்பவர்களும் பார்க்கவேண்டிய படம் இது. 

************

ஸ்பாயிலர் அலெர்ட்: படம் பார்க்காதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம்.

படம் பார்த்தவர்களுக்கு, படத்தோட க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் பிரமிப்பாக‌ இருந்திருக்கும். 

சில வருசங்களுக்கு முன்னால் அமெரிக்க வாழ் பதிவர் நண்பர் ஸ்ரீதர் நாராயணன் கதை வசனம் எழுதி நண்பர் கணேஷ் சந்திரா & அவர் நண்பர்கள் நடித்த ஒரு குறும்படம் "நிமித்தக்காரன்". சுமார் கால்மணிநேரம் ஓடும் இந்த குறும்படமும் கனவுகளைப் பற்றியே பேசுகிறது.

வசனம் அதிகம் இருந்தாலும் பொறுமையாக பார்த்தால், க்ளைமாக்ஸில் ஒரு வாவ் மொமென்ட் உண்டு, முக்கியமாக இதை எனக்குள் ஒருவனுடன் ரிலேட் செய்ய முடியும்.

பி.கு: எனக்குள் ஒருவனின் கன்னட ஒரிஜினலான லூசியா ரிலீஸ் ஆனது ஃபிப்ரவரி 2013. இந்த நிமித்தக்காரன் ரிலீஸ் ஆனது ஏப்ரல் 2011. அதாவது இரண்டு வருடங்களுக்கு முன்பே..





Monday, October 8, 2012

ஹிஸ் நேம் ஈஸ் பாண்ட், ஜேம்ஸ் பாண்ட்

இந்தியர்களுக்கு நவம்பர் மத்தியில் தீபாவளி என்றால் உலகெங்கும் இருக்கும் ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களுக்கு நவம்பர் இரண்டாம் தேதியே தீபாவளி அட்வான்ஸாக வந்துவிடுகிறது.

கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டு, பின் படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, அதன் பின் மீண்டும் துவங்கப்பட்டு நவம்பர் 2ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள பாண்டின் அடுத்த படமான “ஸ்கைஃபால்”ஐ ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.

பாண்ட் மீது நடக்கும் கொலைமுயற்சி, அவர் இறந்துவிட்டதாக அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் போது அவர் மீண்டு வருவது என்று கதையின் ப்ரீல்யூடை ட்ரெய்லரில் காட்டி எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறார்கள். லண்டன் ஒலிம்பிக் துவக்க விழாவில் இங்கிலாந்து ராணியை பாண்ட் (டேனியல் க்ரைக்) அழைத்து வருவது போல் காட்டியது இந்த படத்திற்கான அட்டகாசமான விளம்பரம்.

இதன் அடுத்த கட்டமாக, இங்கிலாந்தின் புகழ்பெற்ற பாடகி Adele பாடியுள்ள Skyfall தீம் பாடல் வெளிவந்துள்ளது. வழக்கமான ஜேம்ஸ் பாண்ட் படங்களின் டைட்டில் பாடல்களை நினைவுபடுத்தும் அதேநேரம் நம் காதுகளுடன் மனதையும் குளிர்விக்கும் குரலில் அசத்தியிருக்கியிறார். யூ ட்யூபில் அதன் வரிகளுடன் கேட்டு மகிழுங்கள்.


*******

Monday, December 26, 2011

ஒரு காதல்கதையும் அடைய முடியாத நான்காம் இலக்கும்

படிக்க ஆரம்பிக்கும் முன் ஒரு கேள்வி: பெரிய விமான நிறுவனங்களில் விமானம் ஓட்டும் ஒரு பைலட்டின் ஆரம்ப சம்பளம் எவ்வளவு?

சென்ற வாரம் பொழுது போகாமல் ரீடரில் படிக்காமல் வைத்திருந்த பதிவுகளை படித்துக் கொண்டிருந்தபோது வினவின் பக்கங்களில் ஒரு பதிவின் தலைப்பே ஈர்த்தது. மைக்கேல் மூரின் “Capitalism - A Love Story" என்ற ஆவணப்படத்தைப் பற்றி பதிவு அது. ஏற்கனவே மைக்கேல் மூரின் ”ஃபாரன்ஹீட் 9/11” படம் பார்த்திருந்ததால் மைக்கேல் மூர் மீதிருந்த மரியாதையால் அந்த படத்தை டவுன்லோடி பார்க்க ஆரம்பித்தேன்.

ஒவ்வொரு முறை நம் அரசியல்வாதிகளை திட்டும் போதும் “அமெரிக்க அரசியல்வாதிங்கள பாருங்க, எவ்ளோ தொலைநோக்குப் பார்வை அவங்களுக்கு. எத்தனை போர்கள் எதுக்கு பண்ணுறானுங்க, அவங்க நாடு நல்லா இருக்கணும்னுதானே, அமெரிக்கர்கள் குடுத்து வெச்சவங்க” என்ற ரீதியில் பேசிக் கொண்டிருக்கிறோம்.

”ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். அமெரிக்க நிறுவனங்கள் எந்த அளவுக்கு அரசின் துணையுடன் மற்ற நாடுகளை சீரழிக்கின்றன, அதற்கு அவர்கள் கையாளும் தந்திரங்களும் மோசடிகளும் அதிர்ச்சி அடைய வைக்கும். ஆனால் அத்தனையும் தன் நாட்டு மக்களின் நலனுக்காக செய்யப்படுவது என்று நம்மை தேற்றிக் கொள்ளும்முன் பார்க்க வேண்டிய படம் “முதலாளித்துவம் - ஒரு காதல் கதை” என்ற மைக்கேல் மூரின் ஆவணப்படம்.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை எப்படி அமெரிக்க நிறுவனங்களும், வால் ஸ்ட்ரீடும் தன் சொந்த நாட்டு மக்களை சூறையாடுகின்றன, 99 சதவீத மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து 1 சதவீத உயர்தட்டு மக்களை காப்பாற்ற என்ன என்ன செய்கின்றன என்பதை ஆதாரங்களுடன் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக விளக்கிக் கொண்டே போகிறார்.

அதில் ஒன்றுதான் மேலே சொன்ன பைலட் சம்பளம். அமெரிக்காவிற்கு வேலைக்கு வரும் எந்த சாஃப்ட்வேர் ஆளும் குறைந்தது வருடத்திற்கு 40,000 டாலர்கள் சம்பளம் பெற முடியும். ஓரளவு திறமை இருந்தால் 60லிருந்து 70ம் தனியாக கன்சல்டண்ட்களாக மாறினால் 100 ஆயிரம் டாலர்களையும் சம்பாதிக்க முடியும். ஆனால் அமெரிக்காவின் பெரிய விமான நிறுவனங்களில் வேலை செய்யும் பைலட்களின் சம்ப்ளம் 15,000 டாலர்களில் மட்டுமே ஆரம்பிக்கிறது. 20,000 என்பது சராசரி. அதாவது மாதம் 1,500 டாலர் அளவிற்கு.

வேலையாட்களுக்கு குறைந்த சம்பளம் தருவதன் மூலம் கொள்ளை லாபம் அடிப்பது மட்டுமல்லாமல், தனியார் சிறைச்சாலை பலன் பெற நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்து சின்ன தவறு செய்யும் சிறுவர் சிறுமிகளையும் பல மாதங்கள் சிறையில் அடைப்பது, ஒவ்வொரு நிறுவனமும் தன் வேலையாட்களின் மீது அவர்களின் குடும்பங்களுக்கேத் தெரியாமல் இன்ஸ்யூரன்ஸ் எடுத்து அவர்களின் சாவிலும் பணம் பண்ணுவது, வீட்டுக்கடன் வட்டி கட்ட முடியாமல் வீட்டை விட்டு வெளியேறும் குடும்பத்தினரையே அந்த வீட்டை குறைந்த காசுக்கு சுத்தம் பண்ணித் தர சொல்வது, அமெரிக்க அதிபரைச் சுற்றி பெரும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களே இருப்பது, அவர்கள் எடுக்கும் முடிவுகளே நாடாளுமன்றத்தில் எப்படியாவது நிறைவேற்றப்படுவது என்று உச்சபட்ச கொடுமைகளை காட்டும்போது, நம்ம ஊரே பரவாயில்லடா என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

அமெரிக்காவின் இன்னொரு முகம் தெரிய அவசியம் பார்க்கப்படவேண்டிய படம் இது

*********

இந்த வாரம் நான் பார்த்த இன்னொரு படம் மேற்சொன்னதிற்கு முற்றிலும் மாறுபட்ட ஆக்சன் திரைப்படம். டாம் க்ரூஸின் பல படங்களைப் பார்த்திருப்பதாலும் இதற்கு முந்தைய மூன்று Mission Impossible படங்களும் திருப்தியான ஆக்சன் மசாலாவாக இருந்ததாலும் இதன் நான்காம் பாகத்தை தவறவிட வேண்டாம் என்று கடந்த சனிக்கிழமை சென்றிருந்தேன்.

டிஜிட்டல் ப்ரொஜெக்சன், டிடிஎஸ், டால்பி என்று சவுண்ட் எஃபக்ட் என்று கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும் சினிமா தொழில்நுட்பத்தின் தற்போதைய உச்சம் என்று IMAX தியேட்டர்களை சொல்லலாம். சுமார் 80 அடி உயரம் மற்றும் அகலத்துடன் மிகப்பெரிய ஏறத்தாழ சதுரமான திரை, 12 ஆயிரம் வாட்ஸ் சவுண்ட் சிஸ்டம், 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஸ்பீக்கர்கள் என்று படம் பார்ப்பதை முற்றிலும் புதிய அனுபவமாக மாற்றவல்லவை இந்த தியேட்டர்கள்.

அதனால் இந்த முறை படத்தை IMAXல் பார்க்கலாம் என்று முடிவு செய்து பார்த்தேன். படத்தின் முக்கிய காட்சிகளான துபாயில் நடக்கும் நிகழ்வுகள் பெரும்பாலும் IMAX கேமிராவிலேயே எடுக்கப்பட்டதால் படம் கலக்கலாக இருந்தது. படத்தின் மற்ற பகுதிகள் 70 எம் எம் ல் எடுக்கப்பட்டதால் மேலும் கீழும் இடம் விட்டு பாதி திரை அளவுக்கே தெரியும் காட்சிகள், ஸ்பெஷல் கேமிராவில் எடுக்கப்பட்ட காட்சிகள் வரும்போது முழுத்திரையிலும் விரியும்போது விசிலடிக்கத் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி பெங்களூர் சன் நெட்வொர்க் வளாகத்தில் எடுத்திருப்பதும், பெங்களூர் மந்த்ரி மால் வளாகம் முன் சில காட்சிகளும் வருவது நம் சினிமா மார்க்கெட்டிற்கு ஹாலிவுட் தர ஆரம்பித்திற்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

மசாலாப்பட ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம், உங்கள் ஊரில் IMAX இருந்தால் நிச்சயம் IMAXல் பார்க்கப்படவேண்டிய படம்.

Friday, October 21, 2011

துணுக்ஸ் - 2011/10/21

ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது, தமிழ் பதிவர்களுக்கு கூகுள் பஸ் சர்வீஸ் ஆரம்பித்ததும் பதிவுகளின் மீதான நாட்டம் அப்படியே குறைந்துவிட்டது. பஸ் ஆரம்பித்து ஏறத்தாழ ஒன்றரை வருடம் ஆகி இருக்கிறது. இதில் கடந்த ஒரு வருட காலத்தை திரும்பிப் பார்த்தால் மிகச்சில பதிவர்களைத் தவிர பெரும்பாலானோர் பதிவு எழுதுவதை வெகுவாக குறைத்துக் கொண்டனர் அல்லது அடியோடு நிறுத்தி விட்டனர். என் பதிவை எடுத்துப் பார்த்தால் ஏப்ரலுக்குப் பிறகு ஏறத்தாழ ஆறுமாத காலம் எந்த பதிவும் இல்லை.

ஆனால் இந்த காலகட்டத்தில் பஸ்ஸில் முழு வீச்சுடன் இயங்கிக் கொண்டிருந்திருக்கிறேன். என்னைப் போன்றே பலரை பஸ்ஸில் பார்க்க முடிகிறது. இதில் பிரச்சினை என்னவென்றால் பதிவைப் போன்று நீண்டகால சேமிப்பாக (படைப்பு, தகவல், மொக்கை எல்லாவற்றையும்) பஸ்ஸை கொள்ள முடியாது. மிகச்சிறந்த உதாரணம் குசும்பன். பஸ் வந்ததும் அவரது நகைச்சுவை உணர்வு எந்தவிதத்திலும் குறைந்து விடவில்லை, ஆனால் அதை எல்லாம் மீண்டும் பஸ்ஸில் படித்துப் பார்த்து ரசிக்க முடியுமா என்ன?

கார்க்கி, பரிசல்காரன் போன்றவர்கள் ட்விட்டரில் இணைந்து மொக்கை போட்டதும் இதே போன்றே. ரைட்டர் பேயோன் போன்று ட்விட்டர் மூலம் புகழ் பெற்று ட்விட் தொகுக்கப் பெறும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காது என்றே நினைக்கிறேன். முடிந்த வரை இனிமேல் பதிவிலும் அவ்வப்போது எழுதலாம் என்று இருக்கிறேன். மற்ற பதிவர்களும் பதிவுகளை எழுதினால் மகிழ்வேன்.

*******

”அமெரிக்காவுல எல்லாம் என்னா சுத்தம் தெரியுமா? நம்ம ஆளுங்களும் இருக்கானுங்களே, எங்க பாத்தாலும் குப்பை போட்டுகிட்டு.. இங்க பாரு எங்க போனாலும் பிச்சைக்காரனுங்க” என்ற ரீதியில் எவனாவது இனிமே பேசினால் அவன் குமட்டுலயே குத்தலாம்.

நான் இங்கே வந்து ஒரு மாதம் ஆகிறது. நம் ஆட்களே பரவாயில்லை எனும்படி இந்த ஊர் ஆட்களின் நடத்தை இருக்கிறது. தெருவில், சாலையில், நடைபாதையில் என்று அங்கிங்கெனாதபடி எங்கும் எந்த நெருடலும் இல்லாமல் எச்சில் துப்புகிறார்கள். பக்கத்தில் எவனாவது இருக்கிறானா இல்லையா என்ற கவலை இன்றி சிகரெட்டை புகைக்கிறார்கள். கொஞ்சம் விலை கம்மியான அபார்ட்மெண்ட்களுக்குச் சென்றால் வித்தியாசமான சிகரெட் நெடி மூக்கை அரிக்கிறது, சாலை ஓர கற்களுக்கு பீர்பாட்டில் அபிஷேகம் எல்லாம் சாதாரணம்.

எல்லாவற்றையும் விட மோசமான விசயம் பிச்சைக்காரர்கள். சாலையில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் “டூ யூ ஹேவ் அ டாலர்?” என்று கேட்பது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக இருக்கிறது, இத்தனைக்கும் அவனோ / அவளோ ஓரளவு நாகரிகமாக உடை உடுத்திக்கொண்டு, செல்ஃபோன் எல்லாம் வைத்திருக்கிறார்கள். ஒரே ஒரு முறை ஒருவன் கேட்டது காதில் விழாதது போல நான் நகர்ந்து போக அவன் கெட்ட வார்த்தைகளால் சத்தமாக திட்ட ஆரம்பித்துவிட்டான். நம்மை தாக்கக்கூட தயங்கமாட்டான்கள் என்பதால் இப்போதெல்லாம் ஒரு டாலர் நோட்டு சட்டைப்பையில் இல்லாமல் வெளியில் வருவதில்லை.

நான்கு வருடங்களுக்கு முன் பஃபல்லோவில் இருந்ததற்கும் இப்போது இங்கே நாஷ்வில்லில் இருப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாட்டை உணர முடிகிறது

அமெரிக்கா சார்.. அமெரிக்கா...

******

டென்னஸி மாகாணத்தின் தலைநகரான நாஸ்வில் நகரம் “ம்யூசிக் சிட்டி” என்றழைக்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றார்போல் திரும்பிய பக்கமெல்லாம் இசை, இசை, இசை.. கண்ட்ரி ம்யூசிக் என்று இவர்கள் அழைக்கும் இவர்களின் நாட்டுப்புற இசை இங்கே பிரபலம். இசைக்கான பெரிய ம்யூசியம், இசை மகான்கள் குறித்த குறிப்புகளுடன் “வாக் ஆஃப் ஃபேம்”, ஆங்காங்கே தெருவில் சின்ன சின்ன ஸ்பீக்கர்களை வைத்து எஃப் எம்மில் இசை ஒலிபரப்பு என்று அருமையான உணர்வைக் கொடுக்கிறார்கள்.

ஒருமுறை டாக்ஸியில் போய்க்கொண்டிருந்தபோது ட்ரைவரிடம் “எஃப் எம்ல உங்க கண்ட்ரி ம்யூசிக் போட முடியுமா?” என்று கேட்க, “தாரளமா, ஆனா உங்களுக்கு புடிக்காது” என்றார். “ஏன்”என்று கேட்க அவர் சொன்ன பதில் “நீங்க இந்தியர்கள்தானே, இந்த ம்யூசிக்ல பெரும்பாலும் ஒரு மாதிரி சோகமாவே இருக்கும், நாய் செத்து போச்சி, பொண்டாட்டி ஓடிப்போயிட்டா.. இப்படி, இந்தியர்களுக்கு இது அதிகமா புடிக்கறதில்லை” என்றார். சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஆனால் பாடலைக் கேட்டதும் அவர் சொன்னது சரி என்று உணர்ந்தாலும் அவர் சொன்ன காரணம் தவறென்று தோன்றியது. பின்ன என்னங்க? இங்கிலீஷ் படத்தை சப்டைட்டிலோட பாத்தாலே புரியாதவங்க நாம, வெள்ளைக்காரனோட மீட்டிங்ல பேசுறப்ப பாதி புரிஞ்சி பாதி புரியாம தலைய ஆட்டிட்டு வந்து ஆஃப்ஷோர் மக்களோட உசுர எடுக்குற நமக்கு அவனுங்க உச்சஸ்தாயில அதிரடி ம்யூசிக்குக்கு நடுவுல பாடுற பாட்டு புரிஞ்சிடுமா என்ன? :)

Monday, January 10, 2011

திருவிழாவில் தொலைந்து போன கதை

காட்சி 1:
”ஹலோ பாஸ், சொல்லுங்க”

“எப்ப வர்றீங்க நீங்க? சொல்லுங்க மீட் பண்ணலாம்”

காட்சி 2:
”சகா, ஒரு விசயம் பேசணும்”

“அங்க வருவீங்கள்ல, மீட் பண்ணி பேசலாம்”

காட்சி 3:
”ஹலோ, பிசியா?”

“ஷூட்டிங் முடிச்சிட்டு நேரா அங்கதான் போயிட்டு இருக்கேன், நீங்க எப்ப வர்றீங்க?”

******

இதற்கு மேலும் புத்தகக் கண்காட்சிக்கு (தப்பு.. தப்பு) திருவிழாவிற்கு போகவில்லை என்றால் பாரா, பத்ரி தலைமையில் பிரபல பதிவர்கள் ஒன்று கூடி ”பதிவர்கள் என்னுடன் அன்னம், தண்ணி புழங்கக்கூடாது” என்று தீர்ப்பு எழுதிவிடுவார்களோ என்ற பயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 09 2011) குடும்பத்துடன் போவதற்கு திட்டம் தீட்டினேன்.

ஞாயித்துக்கிழமை கூட கொஞ்சநேரம் சேத்தி தூங்க விட மாட்டீங்களே என்று தங்கமணி திட்டிக்கொண்டே எட்டரை மணிக்கு எழுந்து கிளம்பத் துவங்கினார். கண்காட்சியின் துவக்க நேரத்தை 8 மணிக்கு வைக்காமல் 11 மணிக்கு வைத்தவர் கிடைத்தால் பூசை அறையில் அவர் படத்தை மாட்டி வழிபடுவார் போல தெரிந்தது. நல்லவேளை, அந்த புண்ணியாத்மா யாரென்று தெரியவில்லை.

பதினொன்றரை மணிக்கு உள்ளே நுழையும் போதே கூட்டம் ஓரளவிற்கு இருந்தது. பெரும்பாலும் தனியர்களும் ஒரு சில குடும்பஸ்தர்களையும் பார்க்க முடிந்தது. மதிய உணவுக்கு பிறகே கண்காட்சி களைகட்டும் என்று நான் போட்ட கணக்கு தப்பவில்லை என்பது மகிழ்வாகவே இருந்தது (பின்ன கணக்குல பத்தாவதுல செண்டம் வாங்குனவங்கல்ல நாங்க எல்லாம்)

சென்ற ஆண்டு 5 ரூபாய் இருந்த பார்க்கிங் இந்த ஆண்டு 20 ரூபாய், என்ன கொடுமை இது என்று மனதுக்குள் திட்டிக் கொண்டே பார்க்கிங் டிக்கெட்டை வாங்கினேன், ’போன தடவை பைக், இந்த முறை கார், அப்புறம் எதுக்கு அவங்களை திட்டுற’ என்று உள்மனசு எச்சரித்தாலும் ஆற்றாமையாகத்தான் இருந்தது. :)

உள்ளே நுழைவதற்கு முன்னரே வலது புறம் இருந்த ஃப்ரூட் சாலட், ட்ரை ஃப்ரூட்ஸ், ஃப்ரூட் ஜூஸ், வறுகடலை பாக்கெட்களை ஒரு பார்வை பார்த்துக் கொண்டேன். நுழைவுச் சீட்டு வழக்கம்போல் ஐந்து ரூபாய். அதில் இருந்த பரிசுக் கூப்பனை கூட்டமாக நின்று எழுதிக் கொண்டிருந்தார்கள். என் அதிர்ஷ்டத்தின் மீது இருந்த அலாதி நம்பிக்கையால், அவர்கள் எல்லாம் ஏமாந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் நான் கலந்து கொள்ளவில்லை. பரிசு பெறுபவர் எனக்கு நன்றியெல்லாம் சொல்லத் தேவையில்லை என்பதையும் பதிவு செய்துக் கொள்கிறேன்.

உள்ளே சென்றதும் ஏற்பட்ட மன உணர்வை விவரிக்க இயலவில்லை. ஒரு மிட்டாய் கடையுனுள் நுழையும் சிறுவனைப் போல எந்த பக்கம் போவது, எதை வாங்குவது என்று வழக்கம் போலவே குழம்பினேன். பிறகு முடிவெடுத்து வலது பக்க கடைசி வரிசைக்கு சென்று பார்க்க ஆரம்பித்தோம்.

ஜூனியருக்கான கதை, கலரிங், ட்ராயிங் புத்தகங்களை தங்கமணி தேடத் தொடங்கி இருந்தார். நான் நண்பர்களுக்கு அலைபேச ஆரம்பித்தேன். “வந்துட்டீங்களா சகா, இன்னும் ஒரு மணிநேரத்துல அங்க இருப்பேன்” என்றார் ஒருவர். “இன்னும் அரை மணிநேரத்துல வந்துடுவேன். நான் நேத்தே பார்க்கிங் ரொம்ப கஷ்டப்பட்டேன், இடமே இருக்க மாட்டேங்குது, ஏதாச்சும் செய்யணும் பாஸ்” என்றார் அடுத்தவர்.

கடைசியில் அலுவலக நண்பர் ஒருவர் சிக்கினார். தங்கமணி மற்றும் அவர் தம்பியை விட்டுவிட்டு நண்பரும் நானும் ஜூனியரை இழுத்துக் கொண்டு பிரபல பதிப்பகங்களின் ஸ்டால்களைத் தேடிப் போனோம்.

காலச்சுவடிற்கு சென்றேன். பதிப்பகத்தார் அந்த நேரத்திற்கு பில்லிங் டேபிள் மீது அமர்ந்திருந்த ஈக்களை துரத்துவதில் மும்முரமாய் இருந்தார்கள். புத்தக அடுக்குகளில் ஒரு பார்வையை ஓடவிட்டுவிட்டு ஓடி வந்துவிட்டேன்.

உயிர்மையில் ஓரளவிற்கு கூட்டம் இருந்தது. மனுஷ்யபுத்திரன் வாசலிலேயே உட்கார்ந்து வரிசையில் நின்றுகொண்டிருந்த வாசகர்களுக்கு ஆட்டோக்ராஃபிக்கொண்டு இருந்தார். அவரிடம் கையெழுத்து வாங்க ஆசையாய் இருந்தாலும் கவிதைக்கும் எனக்குமான தொலைவு பயமுறுத்தியதால் முயற்சியை கைவிட்டுவிட்டு நண்பர் நர்சிம்மின் ”தீக்கடல்” வாங்கினேன் (யாருப்பா அது, அந்த புக்கும் கவிதைதான்னு சொல்றது?). பலநாட்களாக வாங்க நினைத்த கிரா, காழியூரானின் “மறைவாய் சொன்ன கதைகள்” புத்தகத்தையும் வாங்கினேன்.

நண்பர் ஆயிரம் ரூபாய்க்கும் மேல் சுஜாதாவை மட்டுமே வாங்கினார். வருடத்திற்கு வருடம் சுஜாதா புத்தகங்களின் வருகை அதிகரித்துக் கொண்டிருப்பது வழக்கமாக புத்தக கண்காட்சிக்கு வருபவர்களுக்கு தெரியும் என்று நினைக்குறேன். வாத்தியார் வாத்தியார்தான்.

அடுத்த ஸ்டாப் எங்கே செல்வது என்றெல்லாம் யோசிக்கவில்லை, கண்காட்சிக்கு வந்து விட்டு “வரலாற்றுச் சுவடுகள்” வாங்காமல் போனால் உம்மாச்சி கண்ணை குத்திடும் என்று எல்லோரும் பயமுறுத்தி இருந்ததால் இரண்டாம் எண் ஸ்டாலுக்கு விரைந்தேன். தினந்தந்தியின் ஸ்டால், உள்ளே ஒரே ஒரு புத்தக விற்பனை மட்டுமே, ஆனாலும் அந்த கண்காட்சி ஆரம்ப நேரத்திலும் ஐந்து பேராவது நின்றிந்தார்கள். ஆறாவது மற்றும் ஏழாவதாய் நாங்கள் நின்றோம். முந்நூறு ரூபாயே குறைவு என்று எல்லாரும் கூவிவிட்ட இந்த புத்தகம் 10 சதவீத கழிவிற்கு பிறகு 270 ரூபாய்க்கு கிடைக்கிறது. என்ன ஒரே பிரச்சினை, சில்லறை இல்லை மற்றும் கிரெடிட் கார்டு வாங்குவதில்லை. இருந்தாலும் மக்களின் வரவேற்பைப் பார்கையில் சந்தேகமே இல்லாமல் இந்த கண்காட்சியின் ”பெஸ்ட் செல்லர்” இதுதான் என்று சொல்ல முடியும்.

கிழக்கை அடைந்தோம். இந்த கண்காட்சியின் மிகப்பெரிய ஸ்டால் இவர்களுடையது. புத்தகங்களை இன்னும் சிறப்பாக அடுக்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது. எந்த புத்தகம் எங்கே என்று தேட வேண்டி இருந்தது, அதுவும் அவ்வளவு பெரிய ஸ்டாலில். சொக்கனின் “காந்தி கொலை வழக்கு” வாங்கினேன். வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் மிஸ்ஸாகி இருந்ததால், நான் வாங்க உத்தேசித்து இருந்த பாராவின் புத்தகத்தின் பெயர் சட்டென்று நினைவில் வராமல் அங்கே இருந்தவரிடம் “பாராவோட புது புக்கு என்ன வந்திருக்கு” என்றேன். ”மாயவலை” என்றார். “அது போன வருசமே இருந்ததுங்க, வேற” என்றேன். “டாலர் தேசம்” என்றார். “ஸாரிங்க, நானெல்லாம் ரூபாய்ல சம்பாதிக்குறவன்” என்று கூறிவிட்டு நானே தேட முனைந்தேன்.

கிழக்கில் இருப்பவர்கள் பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் போல. ஒரு மாதிரி மிரட்சியுடனே நின்று கொண்டிருப்பதாக தோன்றுகிறது. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னவரும் பாராவின் இரண்டு புத்தகங்கள் தவிர வேறு எதையும் சொல்லத் தெரியவில்லை. பதிப்பகம் பற்றி நன்கு தெரிந்தவராக இருந்தால் என் தொப்பையைப் பார்த்த உடனே “உணவின் வரலாறு” என்று சரியாக சொல்லியிருப்பார். நானேதான் தேடி எடுத்துக் கொண்டேன். நண்பர் இன்னும் படிக்கவில்லை என்று சொன்னதால் “உலோகம்” வாங்க சொன்னேன், வாங்கினார். இன்னொரு பெஸ்ட் செல்லரான ”ஆர் எஸ் எஸ்” அவரது பட்டியலில் இருந்ததால் அதையும் அள்ளினார்.

பத்ரி ஏற்கனவே எழுதியிருந்ததைப் போல பில்லிங் சிறப்பாக, விரைவாக முடிகிறது. நன்றி. பில்லிங்கிற்கு அருகிலேயே ஹசன் பிரசன்னா சக ஊழியர்களுடன் தீவிர டிஸ்கஷனில் இருந்தார். அன்றைய பெஸ்ட் செல்லர் எது என்பது குறித்தாக இருக்கலாம், அவர் முக பாவங்களைப் பார்த்தபோது அநேகமாக பால்கோவாவை லிச்சி ஜூஸ் ஓவர்டேக் செய்துவிட்டது என்று தோன்றியது :)

வெளியில் வந்தால் பதிவர் வெயிலான் வந்திருந்தார். அலுவலக வேலையாக சென்னை வந்தவர் இங்கு வருவதற்காகவே ஒருநாளை ஒதுக்கி இருப்பது தெரிந்தது. பை நிறைய புத்தகங்களுடன் இன்னும் வாங்கவிருப்பதாக சொன்னார். வாழ்க வாசிப்பின் மீதான அவரது ஈடுபாடு.

ஜூனியரை அவரது அம்மாவுடன் கோர்த்துவிட்டு விட்டு விகடன் பிரசுரத்தை தேடினோம். வழியில் புதிய தலைமுறை தென்பட்டது. ஸ்டால் முழுவதும் பெயருக்கேற்றார் போல் இளம் தலைமுறை. எந்த பெண்ணாவது என்னைப் பார்த்து புன்னகைப்பார் என்று எதிர்பார்த்தேன். ம்ஹூம்.. அதனால் நானும் புறக்கணித்து விகடனுக்கு சென்றேன்.

கட்டெறும்பு சைஸாகிவிட்ட விகடன் ஸ்டால் ஆச்சர்யத்தைக் கொடுத்தது. சிறு ஸ்டால், அதிலும் ஒரே ஒரு வழி மட்டுமே. மறுவழி அடைக்கப்பட்டிருந்தது. மிகக்குறைவான அளவில் புத்தகங்கள். இந்த வார ஆனந்தவிகடன், ஜூனியர் விகடன் கூட இருந்த மாதிரி தெரியவில்லை. என்ன ஆனது விகடனுக்கு என்று புரியவில்லை. நண்பருக்கு “வந்தார்கள் வென்றார்கள்” மற்றும் “லிங்கம்” வாங்க ஆலோசனை கூறினேன். இரண்டையும் வாங்கினார்.

விடிய‌ல் ஸ்டால் க‌ண்ணில் ப‌ட்ட‌து. சென்ற‌ முறை வாங்கிய‌ "ஒரு பொருளாதார‌ அடியாளின் ஒப்புத‌ல் வாக்குமூல‌ம்" ந‌ன்றாக‌ இருந்த‌தால் இம்முறையும் எதாவ‌து தேறுமா என்று பார்க்க‌ அருகில் சென்றேன். ஆளுய‌ர‌த்திற்கு பெரிய‌ சைஸ் புத்த‌க‌ங்களை அடுக்கி புர‌ட்சி செய்திருந்த‌ன‌ர். வீட்டில் த‌லைய‌ணைக‌ள் தேவை இல்லாத‌தால் எதுவும் வாங்க‌வில்லை.

வெளியே வரும் வழியில் கண்ணதாசனில் “வனவாசம்”, “மனவாசம்” மற்றும் விசாவில் சுஜாதாவின் “ஆ” வாங்கினேன். நண்பர் விடைபெற்றுக் கொண்டு சென்றதும், ஜூனியருக்கு ஃப்ரூட் சாலட் வாங்கி மேடைக்கு எதிரில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்து சாப்பிட்டோம். முடித்தவுடன் அந்த டப்பாவைப் போட குப்பைக் கூடைகள் எங்குமே இல்லை. ஆங்காங்கே குப்பைக் கூடைகளை வைக்க ஆவன செய்யலாம்.

அவ்வளவு நேரம் இருந்துவிட்டு சாப்பிடாமல் போனால் சமையல் காண்ட்ராக்ட் எடுத்தவருக்கு நஷ்டம் ஏற்பட்டுவிடும் என்று நல்ல எண்ணத்தில் சாப்பிடப்போனோம். வழக்கம்போலவே ஒரு சிறிய இடம். உணவின் சுவையும் தரமும் விலையும் ஓரளவிற்கு இருந்தாலும் அமர்ந்து சாப்பிட இடவசதி அவ்வளவு கூட்டத்திற்கு போதுமானதாக இல்லை. நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விசயம் இது. பரோட்டாவும் சாம்பார் சாதமும் சாப்பிட்டு விட்டு நடையை கட்டினோம்.

சில ஆச்சர்யங்களும், ஏமாற்றங்களும்:
1. தங்கமணி ஜூனியருக்கான புத்தகங்கள் மற்றும் சிடிக்களை வாங்கி இருந்தார். இந்த முறையாவது எட்டு புள்ளிக் கோலம், செட்டிநாட்டு அசைவ உணவுகள் செய்முறை இதை எல்லாம் வாங்குவாரா என்று எதிர்பார்த்திருந்தேன். வாங்கவில்லை. சிட்னி ஷெல்ட‌ன், அக‌த்தா கிறிஸ்டி என்று பேசிக் கொண்டிருந்தார். த‌மிழ் எழுத்தாள‌னை ம‌திக்காத‌ த‌மிழ் ச‌மூக‌ம் என்ப‌து புரிந்த‌து.
2. பெரும்பாலான‌ கடைகளில் கார்ட் ஏற்றுக் கொள்வதில்லை. பணம் கொண்டு செல்வது நல்லது.
3. சில்லறைத் தட்டுப்பாடு (அதாவது 10 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகள்) பார்க்கிங் முதற்கொண்டு எல்லா இடத்திலும் இருக்கிறது, தேவையான அளவுக்கு எடுத்துச் செல்லவும்
4. முதலிலேயே வாங்க வேண்டியவற்றை பட்டியல் போட்டுக் கொண்டு செல்லவும், அதை பத்திரமாக வைத்திருப்பது அதை விட முக்கியம்.
5. கிழக்கு, உயிர்மை போன்ற வெகு சிலரே சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளைக் கொடுக்கிறார்கள். பெரும்பான்மை பதிப்பாளர்கள் சுற்றுச்சூழலை எல்லாம் கண்டு கொள்வதில்லை என்பதால் ப்ளாஸ்டிக் பைகளே அதிகம் தென்படுகிறது. தவிர்க்க நினைப்பவர்கள் வீட்டில் இருந்தே பை கொண்டு செல்வது நல்லது.

நான் கிளம்பும்வரை பதிவுலக நண்பர்கள் வரவில்லை. இன்னும் ஒருமணிநேரத்துல வந்துடுவேன், அரை மணிநேரத்துல வந்துடுவேன் என்று ரன்னிங் கமெண்ட் கொடுத்துக் கொண்டிருந்த சகா இரண்டு மணிக்கு நான் கிளம்பும் வரை கண்ணில் தென்படவில்லை, தோழியுடன் அப்பாயிண்ட்மெண்ட் போல. :)

இந்த புத்தகக்கண்காட்சியில் கவிஞர் அவதாரம் எடுத்திருக்கும் பிரபல பதிவரும் வரவில்லை. பார்க்கிங் இடம் தேடிக் கொண்டிருந்திருப்பார் அல்லது பேனா வாங்க எங்காவது சென்றிருப்பாராய் இருக்கும். :)

Wednesday, March 31, 2010

சங்கம்: சில(ர்) சொல்ல தயங்கும் கருத்துகள்

மதிப்பிற்குரிய வலையுலக நண்பர்களுக்கு,

சென்னை வலைப்பதிவர் சங்கம் (அ) குழுமம் ஆரம்பித்தல் தொடர்பாக கடந்த ஒரு வாரத்தில் நிகழும் எந்த விச‌ய‌மும் த‌மிழ் வ‌லையுல‌க‌ எதிர்கால‌த்திற்கு ந‌ல்ல‌தாக‌ப் ப‌ட‌வில்லை. புதிதாக‌ பார்ப்ப‌வ‌ர்க‌ள் / வருபவர்கள் "இவ்வ‌ள‌வு அர‌சிய‌லா இங்கே?" என்று நினைத்து வில‌க‌க்கூடிய‌ அள‌வுக்கு பிர‌ச்சினைக‌ள் பேச‌ப்ப‌டுகின்ற‌ன‌, எதிர்வினையாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌, ப‌தில‌ளிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. பெரும்பாலானோருக்கு ஏன் இவ்வ‌ள‌வு பிர‌ச்சினை என்றே புரிய‌வில்லை. பிர‌ச்சினைக்குக் கார‌ண‌ம் தெரிந்த‌வ‌ர்க‌ள் க‌றுப்பும் வெள்ளையுமாக‌ ப‌திவிட‌வும் முன்வ‌ர‌வில்லை.

த‌ற்போதைய‌ பிர‌ச்சினைக‌ள் குறித்த‌ என் பார்வையே இந்த‌ ப‌திவு. அதே நேர‌ம் விவ‌ர‌ம் அறிந்த‌ ப‌ல‌ ப‌திவ‌ர்க‌ளின் மன‌திலும் இதே எண்ண‌ ஓட்ட‌ங்க‌ள் இருக்கும் என்ப‌தையும் அறிந்தே இருப்ப‌தால் இந்த‌ ப‌திவு எழுதுவ‌து அவ‌சிய‌மாகிற‌து.

பின்புலம்:
வலைப்பதிவுகள் முன் எப்போதையும் விட அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களாலும், திரைத்துறையினராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருவது உண்மை. சமீபத்தில் லீனா மணிமேகலை பிரச்சினை குறித்து ஜூனியர் விகடனில் வந்த கட்டுரையும், அதிக அளவில் கதை, கவிதைகளை அச்சு ஊடகங்களில் பார்க்க முடிவதும், "கம்ப்யூட்டர் இருந்தா என்ன வேணும்னா சினிமாவைப் பத்தி எழுதுறாங்க" என்ற ரீதியில் வரும் பேட்டிகளுமே இதற்கு அத்தாட்சி.

சமீபத்திய கேபிள் சங்கர் & பரிசல் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்த இயக்குனர் சி.எஸ்.அமுதன் "என் படத்தோட முதல் ரிசல்ட்டை நான் தெரிஞ்சுகிட்டதே பரிசல்காரனோட வலைதளத்துல இருந்துதான்" என்று சொல்லியதில் இருந்தே வலைப்பூக்களின் வீச்சையும், திரைத்துறையினர் அதற்கு தரும் முக்கியத்துவத்தையும் உணரலாம்.

இது மட்டுமின்றி, வலைப்பூக்களின் வளர்ச்சி இன்னும் அபரிதமாக இருக்கும் என்பதில் இதை எழுதும் எனக்கோ அல்லது படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கோ எந்த சந்தேகமும் இருக்கப் போவதில்லை. ஆகவே ஊடகங்களும், திரைத்துறையினரும் வலைப்பதிவர்களின் மீது இன்னும் அதிக அளவில் கவனிப்பை செலுத்தப் போகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்வோம்.

தற்போதைய நிகழ்வுகளை இந்த பின்புலத்துடனேயே அணுக வேண்டி இருக்கிறது.

சில கேள்விகளும், என் கருத்துகளும்:
இப்போது பொதுவான சில கேள்விகள் எல்லோருக்கும் இருக்கின்றன.

1. வலையுலக சூழ்நிலை இப்படி இருக்கிறது, சரி. இப்போது சங்கம் ஆரம்பிக்க வேண்டிய தேவை / நோக்கம் என்ன?
2. இவ்வளவு அவசர அவசரமாக கூட்டத்தைக் கூட்டி, முடிவெடுப்பதாகக் காட்டி, ப்ளாக்கர் ஃப்ரொஃபைல் உருவாக்கி, வலைப்பூவை உருவாக்கி, அதில் எழுத்துப் பிழைகளைக் கூட சரி செய்யாமல் அவசரமாக பதிவிட வேண்டிய நிர்பந்தம் என்ன?
3. பதிவுலகில் மிகவும் மதிக்கப்படும் / அனைவரும் அறிந்த / மூத்த பதிவர்களே இது குறித்து கேள்விகள் எழுப்புவது ஏன்?
4. ஏன் ஒரு ஒருமித்த கருத்து ஏற்படுத்த முன் நிற்பவர்கள் முயலவில்லை? அல்லது அப்படி ஒரு கருத்து ஏற்படும் வரை பொறுத்திருக்க முடியவில்லை?

இந்த எல்லா கேள்விகளுக்கும் என்னைப் பொறுத்தவரை ஒரே காரணம்தான் தோன்றுகிறது. இந்த சங்கம்/குழுமம் பதிவர்களுக்காகவோ அல்லது பதிவர் நலனுக்காகவோ ஏற்படுத்தப்படவில்லை. முற்றிலும் முன்னெடுத்துச் செல்பவர்களின் சொந்த நலனுக்காவே துவங்கப்படுகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

எப்படி?

1. சமீபத்திய லீனா மணிமேகலை குறித்த ஜூவி கட்டுரையையே எடுத்துக் கொள்வோம். அது குறித்து சம்பந்தப்படவர்கள் மட்டுமின்றி பலதரப்பட்டவர்களின் கருத்துகளும் கேட்கப்பட்டன. ஒரு எழுத்தாளர், அரசியல்வாதி, பெண்ணியல்வாதி, பதிவர் என்ற ரீதியில். தற்சமயம் சங்கம் என்ற ஒன்று இல்லாத நிலையில் ஒரு வலைப்பதிவர் என்ற முறையில் நண்பர் அப்துல்லாவிடம் கேட்கப்பட்டிருந்தது. ஒரு உறுதியான சங்கம் அமைந்தால் "சென்னை வலைப்பதிவர் சங்கத் தலைவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்" என்ற ரீதியில் அவர்களிடம்தான் கருத்து கேட்க எல்லா ஊடகங்களும் விரும்பும்.

2. திரைத்துறையைச் சேர்ந்த இயக்குனர்கள், கலைஞர்கள் வலைப்பதிவர்களை வெகுசுலபமாக அடைய இந்த சங்கத்தின் நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பதையே விரும்புவார்கள்.

3. சென்னை மாரத்தான் (அ) எழுத்தாளர்களின் புத்தக வெளியீட்டு விழா போன்ற பொது விழாக்களில் வலைப்பதிவர்களின் பிரதிநிதியாக இந்த சங்கத்தின் தலைவரோ நிர்வாகிகளோ மேடையேற்றப்படுவார்கள்.

எப்படிப் பார்த்தாலும் வலைப்பதிவர்கள் அனைவருக்குமான ஒட்டுமொத்த பிரதிநிதியாக இந்த சங்க நிர்வாகிகள் முன்நிறுத்தப்படுவார்கள். தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இதைவிட வேறு நல்ல வழிமுறை இல்லையென்றே தோன்றுகிறது.

இந்த சங்கத்தை முன்னெடுத்துச் செல்லும் யாருக்கும் சங்கத்தின் நிர்வாகி ஆகும் எண்ணம் இல்லை என்று யாரும் சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அன்றைய கூட்டத்தில் நடந்ததும், அதன் பின்னான பின்னூட்ட பதில்களும், பதிவுகளும் அவர்களுக்கு தங்களை நிர்வாகிகளாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற அளவு கடந்த ஆசையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

உண்மையில் இந்த சங்கத்திற்கு நிர்வாகிகளாக தகுதி பெற்றவர்கள் யார்? நம் ஒவ்வொரு பதிவுகளையும் உலகிற்கு கொண்டு சேர்க்கும் தமிழ்மணம், தமிழிஷ் போன்ற திரட்டிகளை நடத்துபவர்களும், தன் கைக்காசைப் போட்டு பதிவர்களின் எழுத்துகளை அச்சில் கொண்டு வரும் பதிப்பாளர்களும் (உதாரணம் அகநாழிகை வாசு, கிழக்கு பத்ரி, நாகரத்னா குகன்) மற்றும் அவ்வப்போது போட்டிகளையும் பட்டறைகளையும் நடத்தி பதிவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் உரையாடல் நண்பர்களும்தான்.

ஆனால் இவர்கள் யாரையும் முன்னிறுத்தாமல் தங்களை முன்னிறுத்திக் கொள்ள விழைவது மட்டுமில்லாமல் "இந்த சங்கம் ஆரம்பிப்பதில் உரையாடல் குழுவினருக்கு விருப்பமில்லை / மாசம் ஒரு படம் காட்டுங்க போதும்" என்ற ரீதியிலான வசைகளையும் பொழியும் சோ கால்டு சங்க நிறுவனர்கள் சாதிக்கப் போவதுதான் என்ன?

ஆதார‌ங்க‌ள்:
சரி, இவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளதான் சங்கம் ஆரம்பிக்கிறார்கள் என்று எப்படி சொல்கிறாய், ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்பவர்களுக்கு, இவர்கள் போட்ட பின்னூட்டங்களையும் பதிவுகளையும் ஒருமுறை படியுங்கள். அதே போல் இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ப்ளாக்கர் ப்ரொஃபைலையும் ஒரு முறை பாருங்கள்.

தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்

அக்டோபர் 2009ல் இருந்து இந்த ப்ரொஃபைல் இருக்கிறது. ஏன் இதுவரை யாருடனும் விவாதிக்கப்படவில்லை, யார் இதை உருவாக்கியது, ஏன் இத்தனை நாட்களாக இது குறித்து மவுனமாக இருந்தார்கள், இப்போது ஏன் திடீரென்று ஒரே வாரத்தில் எல்லாவற்றையும் செய்ய நினைக்கிறார்கள், அப்படி என்றால் யாருக்கும் தெரியாமல் இத்தனை நாட்களாக திரைமறைவு வேலைகள் நடந்து வந்ததா?

நான் ஏன் இதை எழுதுகிறேன்?
அமைதியாக சிறு சிறு ஊடல்களுடன் மட்டுமே சென்று கொண்டிருக்கும் தமிழ் வலைப்பதிவுலகை இந்த நிகழ்வு சுக்கு நூறாக சிதைத்துவிடும் என்று நான் அஞ்சுவது முதல் காரணம்.

பைத்தியக்காரனுக்கும் வாசுவுக்குமே உரசல் வந்திருப்பதும், லக்கியின் இன்றைய பதிவுமே அத‌ற்கு உதார‌ண‌ம்.

அடுத்தது, இந்த சங்கம் ஆரம்பிப்பது குறித்த மாற்றுக் கருத்துகளை அவர்கள் எதிர்கொண்ட விதம், முக்கியமாக பைத்தியக்காரன் அவர்கள் மீதான வசை. ஒரு மூத்த பதிவரையே இப்படி நடத்துபவர்கள் சங்க நிர்வாகிகளாக இருந்தால் ம‌ற்ற‌ இளைய‌, புதிய‌ ப‌திவ‌ர்க‌ள் எப்ப‌டி ந‌ட‌த்த‌ப்ப‌டுவார்க‌ள் என்று எழுந்த‌ ப‌ய‌ம்.

பெரும்பாலான பதிவர்களின் மனதிலும் இதே இருப்பதாக நான் கருதுகிறேன், ஆனால் ஏனோ அவர்கள் சொல்லத் தயங்குவதாகப் படுகிறது. அப்பட்டமான உண்மைகளைப் பேசுவதன் மூலம் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையே முக்கிய காரணம்.

எல்லாவற்றையும் விட முக்கியமாக காரணம், எனக்கு பைத்தியக்காரனும் நண்பர், கேபிள் சங்கரும் நண்பர், லக்கிலுக்கும் நண்பர். இவர்களுடன் சில விசயங்களில் மாற்றுக் கருத்து கொண்டிருந்தாலும் அது கருத்து அளவில் மட்டுமே. இந்த பிரச்சினையின் மூலம் இவர்கள் யாருடனான நட்பும் முறிவதை நான் விரும்பவில்லை என்பதே இதை எழுதத் தூண்டியது.

எழுதுவதற்கான தகுதி:
இவ்ளோ பேசுறியே நீ இதை எழுதுறதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு? என்று கேட்பார்களேயானால், "தமிழ் வலைப்பதிவர்கள்" என்ற வார்த்தை குறிக்கும் குழுவில் நானும் ஒரு சிறு பகுதி. அவர்கள் தங்களைப் பிரதிநிதிகளாகக் காட்டிக் கொள்ள முயல்வது என்னையும் உள்ளிட்ட குழுவிற்குதான். என்னை மற்றவர்கள் தங்களின் நலனுக்காக உபயோகப்படுத்திக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை என்பதாலும் என் கருத்துகளை மிக நீண்ட யோசனைக்குப் பின் வெளியிடுகிறேன்.

கடைசியாக, உங்களை சுய விளம்பரப் படுத்திக் கொள்ள வலைப்பதிவர்களாகிய எங்களை உபயோகித்துக் கொள்ளாதீர்கள். வலைப்பதிவர்களிடையே கருத்துப் பரிமாற்றம் (அ) அவர்கள் மூலம் சமூகத்திற்கு நல்லது செய்தல் (அ) வலைப்பதிவர்கள் சிறப்பாக செயல்பட உதவுதல் போன்ற காரணங்களுக்காக யார் என்ன குழுமம் / சங்கம் துவங்கினாலும் நான் என்னை இணைத்துக் கொள்வது மட்டுமல்ல, ஆக்கப்பூர்வமாக செயல்படவும் ஆயத்தமாகவே இருக்கிறேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

Monday, February 22, 2010

கொஞ்சம் சினிமா, கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் கோபம்

கடந்த ஒரு மாதத்திற்குள் நான் பார்த்த இரண்டு தமிழ்ப்படங்கள் தமிழ் சினிமா ஒரு தேவையான திருப்பத்தைக் கடந்திருப்பதைக் காட்டுவதாகத் தோன்றியது. இரண்டிலும் பெரிய ஹீரோக்கள் இல்லை, ஆனாலும் பேசப்பட்ட படங்கள்.

முதலில் தமிழ்ப்படம். இத்தனை வருடங்களாக தமிழ் சினிமாவில் பார்த்து பார்த்து சலித்த அத்தனை விசயங்களையும் அழகாக ஒரு கதைக்குள் கோர்த்து மாலையாக்கி இருக்கிறார்கள். தாலி சென்டிமென்ட் மட்டும் மிஸ்ஸிங், எப்படி மிஸ் செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆச்சர்யமான விசயம் நம் மக்கள் அந்த படத்தை எதிர்கொண்ட விதம். தியேட்டருக்குள் நுழையும் ஒவ்வொருவரும் சிரிக்கத் தயாராக இருக்கிறார்கள், சிரிக்கிறார்கள், சிரிக்கிறார்கள், சிரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு பேராசியர் ஞான சம்பந்தன் குறித்து சுஜாதா சொன்னது நினைவுக்கு வருகிறது. அவர் பேச ஆரம்பித்தவுடன் நான்கைந்து ஜோக்குகளை சொல்லி தயார்படுத்தி விடுவார். அதன்பின் அவர் "இன்னிக்கு வெள்ளிக்கிழமை" என்று சொன்னாலும் நாம் சிரிப்போம் என்று சொல்வார். இந்த படமும் அதே வகைதான். ஹாட்ஸ் ஆஃப் அமுதன் & டீம்..


அடுத்த படம் நாணயம். தமிழ்ப்படத்திற்கு முற்றிலும் எதிர் வகையான சீரியஸ் டைப் படம். எஸ்.பி.பி தயாரிப்பில் வந்திருக்கும் இந்த படத்தின் ஹீரோ பிரசன்னா உலகின் பாதுகாப்பான வங்கி ஒன்றை வடிவமைக்க அவரை ப்ளாக்மெயில் செய்தே அந்த வங்கியை சிபி கொள்ளையடிக்க முயல்வதுதான் கதை. நல்ல திரைக்கதை, ஆங்காங்கே திடுக்கிடும் திருப்பங்கள் என்று நல்ல திரைப்படம்.

விளம்பரம் சரியாக இல்லாததும், அவ்வப்போது ஸ்பீட் ப்ரேக்கர் போடும் தேவையில்லாத அளவுக்கதிமான பாடல்களும் படத்தின் மைனஸ் பாயிண்ட்ஸ். ஜேம்ஸ் வசந்தன் இசையில் "நான் போகிறேன் மேலே மேலே" பாடல் கலக்கல் மெலடி, லேசான இளையராஜா டச்சுடன் இருக்கும் இந்த பாடலில் எஸ்.பி.பி.யின் குரல்.... ம்ம்ம்ம்... ரோஸ் ஈஸ் எ ரோஸ்..

***

சென்ற வார இறுதியில் வீட்டிற்கு வந்திருந்த உறவினர்களுடன் மாமல்ல‌புரம் சென்றிருந்தோம். உலகம் எல்லாம் ரிசஸனில் அடிபட்டாலும் ஈ.சி.ஆர்.ல் மட்டும் வளம் கொழிப்பது கொஞ்சமும் குறைந்ததாக தெரியவில்லை. பங்களாக்களும் பண்ணை வீடுகளும் மட்டுமல்ல, மாமல்ல‌புரம் சென்று சேர்ந்த ஒரு மணி நேர பயணத்தில் பார்த்த வாகனங்களில் பெரும்பாலானவை மெர்சிடிஸ், பி.எம்.டபிள்யூ, ஹையர் என்ட் ஹோண்டோ, டொயோட்டோ கார்கள்தான். ஒருவேளை ஈ.சி.ஆர்.க்கு மட்டும் ரிசஸன் இல்லையோ?

***

மாமல்ல‌புரத்தில் ஐந்து ரதம் பகுதிக்கு செல்ல நாங்கள் சென்றிருந்த அதே சமயம் (பிப்ரவரி 20 மதியம்) இரண்டு அரசுப் பள்ளிக்கூடங்களில் இருந்து மாணவ மாணவிகள் அழைத்து வரப்படிருந்தனர். நாங்கள் நுழைவுச்சீட்டு வாங்க வரிசையில் நின்றிருந்தபோது அவசர அவசரமாக வந்த இருவர் என்னையும் தாண்டிப் போய் கவுன்ட்டரில் டிக்கெட் வாங்க முற்பட்டனர். இருவரும் அந்த மாணவர்களுடன் வந்த ஆசிரியர்கள். கடுப்பான நான் "வரிசையில் வாங்க, நீங்க எல்லாம் டீச்சர்ஸ்தான, குழந்தைகளுக்கு நல்ல எக்ஸாம்பிள் செட் பண்ணுங்க" என்று கொஞ்சம் சத்தமாகவே திட்டினேன். என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

ஒருவர் மட்டும் பின்வாங்க இன்னொருவர் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆசிரியருக்கு உண்டான கடமை உணர்ச்சியில், மாணவர்களை வழிநடத்தணும் என்ற உங்க கடமைய ஆத்துலைன்னா கூட பரவாயில்ல, அடுத்தவன் திட்டுறானே என்ற உணர்ச்சி கூடவா இருக்காது? :(

இனிமேல் இங்கிலாந்தில் குடியுரிமை பெற விரும்பும் மற்ற நாட்டவர்கள் 'வரிசையில் நிற்பது' போன்ற இங்கிலாந்து நாட்டவர்களின் அடிப்படை ஒழுக்கங்களை பின்பற்ற வேண்டியது முக்கியம் என்று அந்த நாட்டு அரசு சென்ற வாரம் கூறியிருந்தது முற்றிலும் சரி.

டிக்கெட் வாங்கிக் கொண்டு சிற்பங்களைப் பார்க்கச் சென்றபோது அதைவிட பெரிய அதிர்ச்சி. அங்கே அரசு பள்ளி யூனிஃபார்மில் வந்திருந்த மாணவர்களுடன் பத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்களின் கைகளையும் பிடித்துக் கொண்டு கலர் உடையில் அவர்களின் குழந்தைகள். ஒரு ஆசிரியர் கூட மாணவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. இவர்கள் எல்லாம் வருவதே மாணவர்களை கவனித்துக் கொள்ளதான் என்பதுகூடவா தெரியாது இல்லை புரியாது.

அரசு அலுவலர்களுக்கே உண்டான அலட்சியம், அரசு பணத்தில் தங்கள் தேவைகளை கவனித்துக் கொள்வது எல்லாமே ஒரு கட்டத்தில் பழகி விட்டாலும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் மனப்பான்மை நான் படித்தபோது இருந்ததை விட இன்னும் மோசமாகி இருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. இது நல்லதல்ல என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை.

ஒன்று மட்டும் வெட்ட வெளிச்சம். எதிர்கால இந்தியாவின் எந்த நல்ல தூணும் அரசுப் பள்ளிகளில் இருந்து வரப்போவதில்லை, வர வாய்ப்பிருந்தாலும் இந்த மாதிரி ஆசிறியர்கள் விடப்போவதில்லை.

Monday, December 28, 2009

துணுக்ஸ் - 2009/12/28

ஏறத்தாழ ரெண்டு மாசமாச்சி பதிவு போட்டு.. ஆபிஸ்ல ப்ளாக்கர்க்கு ஆப்பு, வார நாட்களில் வீட்டுக்கு திரும்பி வரவே 11 மணி, வார இறுதிகளில் வெளியூர் பயணங்கள் என்று பதிவு போடவே முடியவில்லை. இந்த வாரத்துல ரெண்டு பதிவாவது போடமுடியும்னு நெனக்கிறேன். இப்ப மட்டும் எப்படி உனக்கு நேரம் கிடைச்சதுன்னு கேக்குறவங்களுக்கு, பதில் கடைசியில..

*****

கொங்கு நாட்டு பதிவர்களுக்கு பாராட்டுகள், சிறப்பாக ஒரு பதிவர் சந்திப்பை ஏற்பாடு செஞ்சு, வெளியூர் பதிவர்களை அதில் கலந்துக்க வெச்சி கலக்கிட்டாங்க, ரொம்ப நாளா சென்னைப் பதிவர்கள் செய்யணும்னு பேசிகிட்டு இருந்த விசயம், அவங்க உயிர் கொடுத்திருக்காங்க.. அவங்களுக்கு ஒரு சல்யூட்..

*****

தெலுங்கானா பிரச்சினையில மத்தியில இருக்குற காங்கிரஸ் அரசோட முடிவெடுக்கிற திறமைய பாத்து எனக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். முதல்ல தெலுங்கானா கிடையாதுன்னாங்க, கே.சி.ஆர் உண்ணாவிரதம் இருந்தாரு, உடனே சரி குடுத்துடறோம்னாங்க, அடுத்ததா கடலோரா ஆந்திராவும், ராயலசீமாவும் எதிர்ப்பு தெரிவிச்சாங்க, இப்ப தெலுங்கானா முடிவை மறுபரிசீலனை செய்யுறோம்ன்றாங்க, உடனே தெலுங்கானாவே பத்தி எரியுது..

ஒரு முடிவை எடுக்கும் முன்னால எல்லா விசயங்களையும் யோசிச்சி, என்ன விதமான பின்விளைவுகள் ஏற்படும் இதையெல்லாம் யோசிக்காம, எடுத்த முடிவுல உறுதியா இல்லாம அவனவன் இழுத்த இழுப்பெக்கெல்லாம் போற அரசாங்கத்தை எக்ஸ் ரே எடுத்தா இப்படித்தான் இருக்குமோ என்னமோ?? :(((



*****

ஜூனியருக்கு எல்.கே.ஜி அட்மிஷன் வாங்க கடந்த ஒரு மாசமா அலைஞ்சதுல ஒரு விசயம் நல்லா புரிஞ்சது. ஒரு நல்ல ஸ்கூல்ல எல்.கே.ஜி அட்மிஷன் வாங்கணும்னா தரவேண்டிய டொனேஷன், நான் எல்.கே.ஜி ஆரம்பிச்சி எம்.சி.ஏ முடிக்கிறவரைக்கும் ஆன மொத்த செலவை விட அதிகம். அதே போல் அரசு பள்ளிகளோட தரம் எந்த அளவுக்கு இருக்குன்றதும் பெரிய கேள்விக்குறி.

20 வருடங்களுக்கு முன்னால நான் ஆரம்பப் பள்ளிகள் படிச்சிட்டு இருந்தப்ப அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகளை விட அதிக எண்ணிக்கையில இருந்தது ஆனால் இப்போது தெருவுக்கு தெரு தனியார் பள்ளிக்கூடங்கள். ஊருக்கு ஊர் இன்ஜினியரிங் காலேஜ். ஒவ்வொன்றிலும் கேப்பிடேஷன் ஃபீஸ் என்ற பெயரில் பல ஆயிரங்களில் இருந்து சில லட்சங்கள். இதே ரீதியில் போனா இன்னும் சில வருசங்களில் படிப்புன்ற விஷயம் நடுத்தர வர்க்கத்திற்கு எட்டாக்கனியாகிடும்ன்றப்ப ஏழைகள் நிலைமை??

*****

பதிவர்கள் எல்லாரும் வேட்டைக்காரனை அடிச்சி துவைச்சு பிரிச்சி மேஞ்சிட்டாங்க. எல்லாரும் சொல்ற ஒரே விசயம் இந்த படமும் டிபிக்கல் விஜய் ஃபார்முலான்றதுதான். மூணு வருசத்துக்கு முன்னால் போக்கிரி வந்த புதுல விஜய் டிவியில லொள்ளு சபா செஞ்ச காமெடி ஷோல இதே விசயத்தை கண்டபடி கிண்டலடிச்சிருப்பாங்க. இப்பவும் அது அப்படியே பொருந்துதுன்றது விஜய்யைப் பொறுத்தவரை வேட்டைக்காரனை விட பெரிய தோல்வி.

அந்த லொள்ளுசபாவை நீங்களும் பார்த்து ரசியுங்க..

Lollu sabha - Bakery - Part 1
Lollu sabha - Bakery - Part 2
Lollu sabha - Bakery - Part 3

இந்த நிகழ்ச்சி பண்ணினதற்காக பயங்கரமா எதிர்ப்பு தெரிவிச்சி, அவங்களை அடுத்த வாரமே மன்னிப்பு கேக்க வெச்சதெல்லாம் நடந்தது. விஜயும் அவரது ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவிக்க காட்டுற முனைப்புல கொஞ்சமாவது கதை தேர்வுல காட்டலாம்.

*****

ரெண்டு மாசமா பதிவே போடாமா இருந்துட்டு இப்ப பதிவு போடுறதுக்கு காரணம் சனிக்கிழமை அன்னிக்கு தங்கமணி ஊருக்கு போய்ட்டாங்கன்றதும், இன்னும் 10 நாள் கழிச்சிதான் திரும்பி வருவாங்கன்றதும்தான் அப்படின்னு நீங்களா முடிவு பண்ணிகிட்டா அதுக்கு கம்பேனி பொறுப்பேற்காது..ஹி..ஹி..

Thursday, October 29, 2009

உங்களுக்கு துப்பறியும் கதைகள் பிடிக்குமா?

இந்த இடுகையை நீங்கள் படிக்கிறீர்கள் என்றால் தலைப்பில் இருக்கும் கேள்விக்கான பதில் "ஆமாம்" என்பதாகவே 99 சதவீதம் இருக்கும். "இல்லை" என்பவர்களும் தொடர்ந்து படிக்கலாம். :)

ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளின் இறுதியில் அல்லது தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தங்களின் பதின்ம வயதுகளை (டீன் ஏஜ்) கடந்தவர்களில் பெரும்பாலானோர் ராஜேஷ்குமார், சுபா மற்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோரின் துப்பறியும் நாவல்களில் மனதை பறிகொடுத்திருப்பீர்கள் (அ) பறிகொடுத்திருக்கிறோம்.

விவேக், ரூபலா, நரேந்திரன், வைஜெயந்தி, பரத், சுசிலா இவர்களோடு வயது வித்தியாசம் இல்லாமல் விஷ்ணு, செல்வா, முருகேசன், ராமதாஸ் (அவரு இல்லீங்க), ஜான்சுந்தர், அனிதா என்று அனைவரும் நமக்கு நெடுநாள் நண்பர்கள் என்றால் அது மிகையல்ல.

இவர்கள் அனைவருக்கும் முன்னோடி அல்லது எழுத்துலகின் முதல் பிரபல துப்பறியும் ஹீரோ என்றால் அது ஷெர்லாக் ஹோம்ஸ் என்பது ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை. ஆங்கிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகி சக்கை போடு போட்ட இந்த மனிதரைப் படைத்தவர் ஆர்தர் கோனன் டாயில்.

ஒரு கற்பனை கதாபாத்திரத்தின் வெற்றியே வாசகர்கள் அவரை நிஜம் என்று நினைப்பதும், அவரை பின்பற்ற நினைப்பதுமே. உதாரணமாக நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பல வசனங்களை நாம் நம்மை அறியாமலேயே நம் அன்றாட உரையாடல்களில் பயன்படுத்துகிறோம் என்பதே அவரின் வெற்றியாகக் கருத முடியும். அந்த வகையில் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் வெளிவந்து வெற்றியடைந்த காலகட்டத்தில் கதைகளில் வரும் அவரது முகவரியான "221 பி, பேக்கர்ஸ் தெரு, லண்டன்" என்ற முகவரிக்கு கடிதங்கள் எழுதும் அளவுக்கு அவரை உண்மையான மனிதராக வாசகர்கள் நினைத்தார்கள் என்றால் அவரது வீச்சினைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் அவரது கதைகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதால் தமிழர்களிடையே அவர் அவ்வளவு பிரபலம் ஆகவில்லை. ஆனால் அவரது பெயரை எங்காவது எப்பொழுதாவது கேட்டிருக்கும் நமக்கு அவரது கதைகளைப் படிக்க அவ்வளவாக வாய்ப்புகள் இல்லாமலே இருந்தது.

இந்த குறையைப் போக்க தமிழில் எடுக்கப்பட்டிருக்கும் முதல் முயற்சியாகவே கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் "ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறிகிறார்!" வரிசையின் முதல் புத்தகமான "ஒரு மோதிரம் இரு கொலைகள்!" அமைந்திருக்கிறது. தமிழில் இதை மொழி பெயர்த்திருப்பவர் நம் பதிவர்களிடையே நன்கு அறிமுகமான "பத்ரி சேஷாத்ரி".

ஹோம்ஸை வைத்து ஆர்தர் எழுதிய முதல் கதையான A Study in Scarlet என்ற கதையையே முதல் கதையாக மொழிபெயர்த்திருப்பது ஹோம்ஸை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நல்ல உத்தியாக இருக்கிறது. ஹோம்ஸ் யார், அவரது தோற்றம், இயல்புகள், அவருக்குத் தெரிந்தது, தெரியாதது என்று அனைத்தையும் நம்மால் இந்த முதல் கதையிலேயே அறிந்து கொள்ள முடிவது இந்த புத்தகத்தின் சிறப்பு.

இலக்கியத்தனமாக இல்லாமல் நாம் ஏற்கனவே விரும்பி படிக்கும் தமிழ் துப்பறியும் நாவல்களின் மொழியிலேயே ஓரளவுக்கு இந்த புத்தகமும் வந்திருப்பது படிப்பதற்கு இதமாக இருக்கிறது. மேலும், எழுத்தாளர் ஆர்தர் டாயில் குறித்தும், ஹோம்ஸ் குறித்தும் பத்ரி கொடுத்திருக்கும் முன்னுரைகள் கதை படிக்கும் முன்பு நம்மை அழகாக தயார் செய்கின்றன. என்னைப் பொறுத்தவரை இந்த புத்தகம் மிகச் சிறப்பாக வெளிவந்திருக்கிறது என்றே சொல்வேன்.

இனி, கதைக்குச் செல்வோம். ஷெர்லாக் ஹோம்ஸின் கதைகள் எல்லாமே அவரது நண்பரான டாக்டர் வாட்சன் என்பவரது பார்வையிலேயே செல்லும். கதைகளை எழுதிய ஆர்தர் டாயில் ஒரு மருத்துவர் என்பதால் தன்னை வாட்சன் இடத்தில் வைத்து எழுத இந்த நடை அவருக்கு சுலபமாக இருந்திருக்கலாம். கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளியான இந்த கதைகளின் களம் 19ம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து இங்கிலாந்து திரும்பும் டாக்டர் வாட்ஸன் தன் நண்பர் மூலம் ஷெர்லாக் ஹோம்ஸுடன் அறையில் தங்குகிறார். ஹோம்ஸின் வித்தியாசமான நடவடிக்கைகளால் அவர் என்ன தொழில் செய்கிறார் என்பது தெரியாமல் சில நாட்கள் குழம்பும் வாட்ஸன், பின்னர் அவர் ஒரு துப்பறியும் நிபுணர் என்பதும், காவல்துறையினர் கண்டுபிடிக்கவே திணறும் சில வழக்குகளில் அவர்களுக்கு உதவுகிறார் என்பதையும் தெரிந்து கொள்கிறார்.

லண்டன் நகரில் கொல்லப்படும் அமெரிக்கப் பிரஜை ஒருவரது கொலைக்கான காரணத்தைத் தேடும் இரு ஸ்காட்லாண்ட் யார்டு அதிகாரிகளுக்கு உதவ ஹோம்ஸ் செல்ல அவருடன் தொடரும் வாட்ஸன், கொலை நடக்கும் இடத்தில் இருக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன விசயங்களை வைத்து ஹோம்ஸ் எப்படி கொலைகாரனை கண்டுபிடிக்கிறார் என்பதை விவரிக்கிறார். கதையின் முதல் பாதியில் கொலைகாரன் கண்டுபிடிக்கப்பட, கொலைக்கான காரணம் கதையின் இரண்டாவது பாதியில் விரிகிறது.

இரண்டாவது பாதியில் விவரிக்கப்படும் அமெரிக்காவின் யுடா மாகாண குடியமர்தலும் அந்த மக்களின் வாழ்க்கை முறையும், அவர்களின் மூடப் பழக்க வழக்கங்களும், அதனால் பாதிக்கப்படும் சாமான்யர்களும் என்று முதல் பாதி கதைக்கு முற்றிலும் வேறான‌ தளத்தில் கதை பயணிப்பது ஒரு நல்ல வாசிப்பனுபவத்தைக் கொடுக்கிறது.

கதையின் முடிவில், தான் கொலைகாரனை கண்டுபிடித்தது எப்படி என்பதை ஷெர்லாக் ஹோம்ஸ் விவரிக்கும்போது அவரது துப்பறியும் திறமை நம்மை வியப்பில் ஆழ்த்துவது உண்மை. ஏன் ஷெர்லாக் ஹோம்ஸ் இவ்வளவு பிரபலம் என்பதற்கு சரியான விளக்கமே அந்த கடைசி அத்தியாயம் என்பதே என் கருத்து.

துப்பறியும் நாவல் பிரியர்கள் கண்டிப்பாக படிக்கவேண்டிய புத்தகமான இது மற்றவர்களுக்கு ஒரு வித்தியாசமான வாசிப்பனுபத்தைத் தரும் என்பதற்கு நான் உத்தரவாதம்.


பதிப்பாளர்கள்: கிழக்குப் பதிப்பகம்
புத்தகத் தொடர்: ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறிகிறார்!
புத்தகம்: 1. ஒரு மோதிரம் இரு கொலைகள்!
எழுதியவர்: ஆர்தர் கோனன் டாயில்
தமிழில்: பத்ரி சேஷாத்ரி

மேலதிக தகவல்கள் மற்றும் ஆன்லைனில் புத்தகம் வாங்க இங்கே செல்லவும்.

Monday, October 19, 2009

இரண்டு புத்தகங்கள் + இரண்டு திரைப்படங்கள் + ஒரு தத்துவம்

புத்தகம் 1: எரியும் பனிக்காடு:
நாம் தினமும் குடிக்கும் தேநீரின் பின்னால் இருக்கும் கறுப்பு சரித்திரத்தை சொல்லும் ரெட் டீ (Red Tea) என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழ் வடிவம்தான் இந்த புத்தகம். ஆங்கிலத்தில் பி.எச்.டேனியல் அவர்களால் எழுதப்பட்டு, தமிழில் இரா.முருகவேள் அவர்களால் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த புத்தகம், 1920களில் மலைப்பகுதிகளில் தேயிலைத் தோட்டம் அமைக்க இந்திய ஏழைகளின் வாழ்க்கையை சூறையாடிய வெள்ளையர்கள் + இந்தியர்களின் வாழ்க்கையை சொல்லும் இரத்தம் தோய்ந்த வரலாறு.

தமிழகத்தில் நடக்கும் கதை, ஆங்கிலத்தில் எழுதப்பட்டு மீண்டும் தமிழில் மொழிபெயர்ப்பது சவாலான விசயம். அந்த பகுதி மக்கள் அந்த காலகட்டத்தில் பேசிய மொழியை எழுத்தில் கொண்டுவந்திருக்கும் முருகவேள் பாராட்டப்பட வேண்டியவர்.

அவசியம் படிக்கப்பட வேண்டிய புத்தகங்களின் வரிசையில் முதல் சில இடங்களில் இருக்கும் புத்தகம் இது என்று சொன்னால் அது மிகையில்லை.

இந்த புத்தகம் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் விமர்சனம் இங்கே.

திரைப்படம் 1: Hangover:
சமீபத்தில் நான் பார்த்து ரசித்த சிறந்த பொழுதுபோக்கு படங்களில் ஒன்று. படத்தின் நான்கு ஹீரோக்களில் ஒருவனது பேச்சிலர் பார்ட்டியை கொண்டாட லாஸ் வேகாஸ் நகருக்கு செல்பவர்கள், தாங்கள் தங்கும் ஹோட்டலின் மொட்டைமாடியில் உட்கார்ந்து தண்ணியடிக்க ஆரம்பிக்கிறார்கள். காலையில் தங்கள் அறையில் விழித்து எழுந்தால் முதல் நாள் நடந்தது எதுவும் நினைவில் இல்லை என்ற நிலையில், அறையில் பாத்ரூமில் ஒரு புலி உறும, கப்போர்டில் குழந்தை அழ, இவர்கள் கார் என்று ஒரு போலீஸ் காரை கொண்டு வந்து ஹோட்டல் சிப்பந்தி நிறுத்த என்று குழப்பத்தின் மேல் குழப்பமாக ஆரம்பித்து அனைத்தும் சுபமாக முடிவதுதான் கதை.

தமிழில் உல்டா பண்ண அருமையான திரைக்கதை. யார் செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

எனக்கு இந்த படத்தை அறிமுகப்படுத்திய கேபிள் சங்கரின் விமர்சனம் இங்கே.

புத்தகம் 2: Pirate Latitudes:
ஜுராஸிக் பார்க் எழுதிய மைக்கேல் கிரிக்டன் போன வருடம் இறந்த பிறகு அவரது கணிணியை நோண்டிக் கொண்டிருந்த அவரது உதவியாளர் கண்டுபிடித்த இதுவரை வெளிவராத இரண்டு நாவல்களில் ஒன்று "பைரேட் லாட்டிட்யூட்ஸ்". கிரிக்டனால் முழுவதுமாக‌ எழுதி முடிக்கப்பட்டிருந்த இந்த நாவல் நவம்பர் இறுதியில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர கிடைத்துள்ள இன்னொரு முடிக்கப்படாத நாவலை எழுதி முடிக்க எழுத்தாளரை தேடிக்கொண்டிருக்கிறாராம் பதிப்பாளர். ஒரு அப்ளிகேஷன் போடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். :)

சுஜாதாவோட கணிணியையும் யாராவது நோண்டுங்கப்பா, உங்களுக்கு புண்ணியமா போகட்டும்.

திரைப்படம் 2: 2012:
உலகின் மிகப்பெரிய அழிவு எது நடந்தாலும் அல்லது நடக்கப்போவதாக தெரிந்தாலும் அதை படமாக்குவது ஹாலிவுட் இயக்குனர்களுக்குக் கை வந்த கலை. டைட்டானிக், 9/11, உலகப்போர்கள் என்ற பெரிய அழிவுகளை வெற்றிப்படங்களாக்கியவர்கள் அவர்கள். இன்டிபென்டன்ஸ் டே, காட்ஸில்லா, டே ஆஃப்டர் டுமாரோ ஃபேன்டஸி படங்களின் இயக்குனர் ரோலன்ட் எம்மரிக் இயக்கி நவம்பர் 13ல் வெளிவர இருக்கும் 2012 படம், 2012ல் உலகம் அழியும் என்ற கருத்தை ஒட்டி எடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனரின் முந்தைய படங்களைப் போலவே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தின் ட்ரைலரே மிரட்டுகிறது. சும்மாவா பின்ன, 260 மில்லியன் டாலர் பட்ஜெட்டாச்சே (சுமாராக 1300 கோடி ரூபாய்). ஏறத்தாழ தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியின் ஐந்து வருட பட்ஜெட்டை விட இந்த ஒரு படத்தின் பட்ஜெட் கொஞ்சம் அதிகம்தான்.

நான் அதிகம் எதிர்பார்க்கும் படம் இது.

தத்துவம்:
நான் தற்போது படித்துக்கொண்டிருக்கும் சன்ஸ் ஆஃப் ஃபார்சூன் (Sons Of Fortune) கதையில் எழுத்தாளர் ஜெஃப்ரி ஆர்ச்சர் (Jeffrey Archer) கொடுத்திருக்கும் ஆலிவர் ஹோம்ஸ்(Oliver Wendell Homes)ன் ஒரு தத்துவம் இன்றைய பதிவுலகத்திற்கு பொருத்தமாக தோன்றியது.

'Beat a man with the strength of your argument, not the strength of your arm'

Thursday, October 8, 2009

இணையம் இல்லா எட்டு நாட்களும், கற்பிழந்த மலைகளின் ராணியும்

ஆகஸ்ட் நடுவுல இருந்து செப்டம்பர் வரைக்கும் ஏறத்தாழ ஒரு மாசமாவே நான் வலையுலகில் அதிகம் செயல்படவில்லை. ஏற்கனவே சொன்ன மாதிரி அலுவலகத்தில் வலைப்பூக்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டதால் என்னால் வலையுலகில் பதிவுகளை முழுவதுமாக படிக்கவோ பின்னூட்டமிடவோ முடியவில்லை. அது மட்டுமின்றி செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் ஒரு வாரம் எங்காவது குடும்பத்துடன் சுற்றுலா செல்லலாம் என்று முடிவு செய்திருந்ததும் காரணம். ஒரு வார விடுமுறைக்கு முன்னால் முடிக்கவேண்டிய பணிகளும், விடுப்பு முடிந்து வந்ததும் சேர்ந்து போன ஆணிகளை பிடுங்கிய வகையிலும் ஏறத்தாழ ஒரு மாதமே ஆகிவிட்டது.

சென்ற வருடம் இதே நேரத்தில் நாங்கள் ஐந்து நாட்கள் கொடைக்கானல் சென்றிருந்தோம். அந்த பயணம் அருமையாக இருந்ததால் இந்த வருடம் அதே போல் ஊட்டி செல்லலாம் என்று முடிவு செய்திருந்தோம். சென்ற வருடம் போலவே, கணிணி, இணையம், அலுவலக வேலைகள் என்று எல்லாவற்றுக்கும் ஒரு வாரம் மொத்தமாக லீவ்.

எனக்கென்னவோ கொடைக்கானலைப் போல் ஊட்டி வசீகரிக்கவில்லை. முதல் காரணம் ஊரே முற்றிலும் வணிகமயமாக்கப்பட்டிருப்பதுதான். எங்கெங்கு திரும்பினாலும் கடைகள், கடைகள், கடைகள். மக்கள் நடமாட்டமும் மிக அதிகம். சீசனே இல்லாத இந்த சமயத்திலே இப்படி என்றால் சீசன் சமயத்தில் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

வெள்ளையன் கண்டுபிடித்து ஆரம்பித்த ஒரு இயற்கையான மலைப்பிரதேசத்தை எந்த அளவுக்கு சீரழிக்க முடியுமோ அந்த அளவுக்கு நாம் சீரழித்து இருக்கிறோம். மிகச்சிறந்த உதாரணம் ஏரி. கூவத்தின் மறுபதிப்புதான் அந்த மலைவாசஸ்தலத்தின் ஏரி. மலைரயில் ஊட்டியைத் தொடும்போதே தெரியும் கழிவுநீர்க் கால்வாயும், நம் நாசியை நிறைக்கும் கெட்ட வாடையும் இந்த முறை எங்கள் தேர்வு தவறு என்று சத்தியம் செய்து சொன்னதாகவே தோன்றியது.

ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து சென்ற மலைரயில் பயணமும் அவ்வளவு இனிதாக இல்லை. கால் வைக்கவே இடம் இல்லாத அளவுக்கு சின்ன இடத்தில் ஐந்து மணிநேரப் பயணம் கொஞ்சம் கடுப்படித்தது. டார்ஜிலுங் மலை ரயில் குறித்து படித்தபோது இதை விட சிறிய ட்ராக்கில் ஓடினாலும் முதல் வகுப்பு என்று தனியாக ஒன்று உண்டு என்பது தெரிந்தது. அதுபோல் எதாவது மாற்றம் செய்தால் சிரமம் இல்லாமல் பயணம் செய்யலாம்.

அதையும் தாண்டி பயணத்தில் கண்ட‌ சில நல்ல விசயங்கள்:
1. சாப்பாடு பிரச்சினையே இல்லை. நாங்கள் சேரிங்கிராஸ் அருகே தங்கியிருந்த ப்ரீதி பேலஸ் ஹோட்டலின் வெஜிடேரியன் ரெஸ்டாரண்ட் அருமை. அதிலும் அங்கே சாப்பிட்ட ஆனியன் ஊத்தப்பம்.....ம்ம்ம்ம்ம்ம்ம். மறக்காமல் முயற்சிக்கவும். அது மட்டும் இல்லாமல் பல தரமான உணவகங்களைக் காணமுடிந்தது. ஒரு சுற்றுலா பிரதேசத்தில் உணவுப் பிரச்சினை இல்லாமல் இருப்பது ஒரு ப்ளஸ் பாய்ண்ட்.
2. ஊட்டியின் க்ளைமேட். அற்புதம், வேறென்ன சொல்ல‌??
3. கொடநாடு வ்யூபாய்ண்ட்: கொஞ்சம் தூரம்தான் என்றாலும் (ஊட்டியில் இருந்து 50 கி.மீ. கோத்தகிரியில் இருந்து சுமார் 20 கி.மீ). மிஸ் பண்ணக்கூடாத இடம். மற்ற வ்யூபாய்ண்ட்கள் போலில்லாமல் தூரத்தில் தெரியும் பரந்து விரிந்த சத்தியமங்கலம் காடுகளும், ஒரு கோடு போல் தெரியும் பவானி ஆறும், தூரத்தே தெரியும் பவானி சாகர் நீர்த்தேக்கமும் முற்றிலும் வித்தியாசமான அனுபவம். கொடநாடு எஸ்டேட்டின் விஸ்தீரணத்தையும் வழியில் பார்க்கமுடிவது ஒரு ப்ளஸ். :)
4. திரும்பும் நாளன்று எதேச்சையாக கோத்தகிரியில் ஏற்பட்ட பதிவர் லதானந்த் அவர்களுடனான சந்திப்பு ஒரு கூடுதல் ஆச்சர்யம்.

Monday, September 21, 2009

உன்னைப்போல் ஒருவன்!!!! என்னை ஏமாற்றிய கமல்....

"உங்களோட சீரியஸ் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடைவதாகத் தெரியவில்லையே. இது பற்றி?" கொஞ்சம் தைரியம் அதிகமான ஒரு ரிப்போர்ட்டர் கமலிடம் சில வருடங்களுக்கு முன் கேட்டிருந்தார்.

"ஒவ்வொரு சீரியஸ் படம் பண்ணினதும் அடுத்ததாக கமல் ஒரு காமெடி படம் பண்ணுவாரு, அதைப் பாத்துக்கலாம்னு மக்கள் நினைக்குறாங்களோ என்னவோ" என்ற அவரின் பதில் இன்னமும் எனக்கு நினைவில் இருக்கக் காரணம் அவர் சொன்ன வகை சினிமா ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதுதான்.

"ஹே ராம்" பார்க்கவில்லை. "காதலா காதலா" பலமுறை பார்த்தாலும் சலிக்கவில்லை. "மகாநதி" கிளிப்பிங் வந்தாலும் சேனல் சேஞ்ச். "அவ்வை சண்முகி" பத்து தடவையாவது பார்த்தாச்சு. இதே ட்ரீட்மெண்ட்தான் கமலின் ஒவ்வொரு சீரியஸ் படங்களும் நான் கொடுத்து வந்திருக்கிறேன்.

"உன்னைப்போல் ஒருவன்" படத்தின் விளம்பரத்தை முதல்முறை பார்த்தபோதே இது எனக்குப் பிடிக்கும் என்று தோன்றியது. காரணம் பெரிதாக ஏதுமில்லை என்ற போதும் கமலின் கெட்டப்பும், மோகன்லாலின் வசன உச்சரிப்புகளும் ஈர்த்தன.

அதேநேரம் கமல் தன்னுடன் நடிக்கும் பெரிய நடிகர்களை சரியாக உபயோகப்படுத்துவதில்லை (அ) அவர்களை விட தன் கதாபாத்திரத்தை சிறப்பாகக் காட்டுகிறார் என்பது என்கருத்து. உதாரணம் குருதிப்புனல், ஹே ராம், பஞ்சதந்திரம் போன்ற படங்கள். அதிலும் இது அவரது சொந்தத் தயாரிப்பு. அதனால் இந்த படத்திலும் மோகன்லாலை மட்டம் தட்டியிருப்பார், தன் மகளின் இசைக்கு பெரிய முக்கியத்துவம் கொடுத்திருப்பார் என்று எதிர்ப்பார்ப்புடனேயே படம் பார்க்கச் சென்ற என்னை நடு மண்டையில் "நச்"சென்று அடித்திருக்கிறார் கமல்.

படத்தில் ஹீரோ என்று யாரும் இல்லை. லீட் ரோலில் கமல் + மோகன்லால். மோகன்லாலுடன் தொடங்கும் படம் அவருடனே முடிகிறது. கமலுக்கு ஒரே கெட்டப். எந்த இடத்திலும் யாரும் ஓவர் ஆக்ட் செய்யவில்லை. தேவை இல்லாத வசனங்கள் இல்லை, படத்தின் கதைக்கு சம்பந்தமில்லாத ஒரு ஷாட் கூட இல்லை.‍ எல்லாமே "ஜஸ்ட் ரைட்".... எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு மட்டுமே, கூடவும் இல்லை, குறைவும் இல்லை.

தெளிவான கதை, அதை முழு வேகத்தில் நகர்த்தும் திரைக்கதை, தனித்துத் தெரியாமல் கதையின் ஓட்டத்திற்கு துணைபுரியும் இசை, அற்புதமான கேமிரா, அந்தந்த கேரக்டர்களில் அச்சாக பொருந்தும் நடிக நடிகைகள், வார்த்தைக்கு வார்த்தை பின்னி எடுக்கும் இயல்பான வசனங்கள், நிஜம் என்று நம்ப வைக்கும் செட்கள் என்று பட்டாசு கிளப்பி இருக்கிறார்கள்.

படம் பார்த்து இவ்வளவு நேரமாகியும் இது தமிழ்ப்படம், கமல் படம் என்பதை நம்ப முடியாமல் இருக்கிறேன். ஹேட்ஸ் ஆஃப் டு யூ கமல்..

******************

பின்குறிப்பு 1: இவ்வளவு அற்புதமான படத்தின் இரண்டு பெரிய சறுக்கல்கள். ஒன்று சென்னையில் நடக்கும் கதை, ஆனால் சென்னையில் எடுக்கப்படவில்லை, காரணத்தை கமல் மட்டுமே சொல்ல முடியும்.
சென்னையில் எடுத்திருந்தால் படம் இன்னமும் ஆதன்டிக்காக இருந்திருக்கும். படம் பார்க்கும் போது என் தங்கமணிக்கும் எனக்கும் நடந்த உரையாடல்:

தங்கமணி: ஏங்க, கமல் அஞ்சு பாமும் சென்னையிலதானே வெச்சதா சொல்றாரு...
நான்: ஆமா.. ஏன் கேக்குற?
தங்கமணி: அப்புறமா ஏன் போலீஸ் போய் ஹைதராபாத்ல இருக்குற ப்ரசாத்ஸ் மல்டிப்ளக்ஸ்ல பாமை தேடுறாங்க?
நான்: ஙே...

மற்றொரு விசயம், படத்தின் ட்விஸ்டே பாம் வைப்பவரை முதலில் தீவிரவாதியாக படம் பார்க்கவர்கள் நினைக்க அதை முடிவில் மாற்றுவதுதான். ஆனால் கமல் அந்த பாத்திரத்தை செய்வதால் "நிச்சயமா இதுக்கு எதுனா நியாயமான காரணம் இருக்கும்" என்று நாம் நம்புகிறோம், அதன்படியே நடக்கிறது. ஒருவேளை மோகன்லாலும் கமலும் கதாபாத்திரங்களை மாற்றிச் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ?

பின்குறிப்பு 2 : சாதரணமாக நான் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை ('கொய்யால, முதல்ல நீ பதிவே எழுதுறதில்ல, அப்படி எழுதுனாத்தானே என்னத்தை எழுதுறன்னு கவலைப்படுறதுக்கு' என்று கத்தும் கார்க்கி, ஆதி, கேபிள், பரிசல் வகையறாக்கள் அமைதி கொள்க). ஆனால் இந்தப் படம் பார்த்து இன்னமும் பிரமிப்பு நீங்காமல் யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவே இந்தப் பதிவு.

Monday, August 10, 2009

என்னவோ போங்க சார்!!!

ஏறத்தாழ ரெண்டு மாசமாகுது பதிவு போட்டு. ஜூலை மாசம் முழுசும் ஒரு பதிவு கூட போட முடியலை. முக்கியமான காரணம் ஆபிஸ்ல ப்ளாக்ஸை(Blogs) ப்ளாக்(block) பண்ணிட்டாங்க. ஹி..ஹி.. ரொம்ப ஓவராத்தான் ப்ளாக் படிச்சிருக்கேன் போல, கடுப்பாகிட்டாங்க. அதனால என்னோட ப்ளாக்கையே என்னால படிக்கமுடியல.

இருக்குற ஒரே வழி ரீடர்தான், அதிலயும் பதிவுகளை படிக்க மட்டும்தான் முடியும், பின்னூட்ட முடியாது. கஷ்டம்தான், வீட்டுல என்னோட பர்சனல் லேப்டாப்பும் என் பையன் கைவண்ணத்துல புட்டுகிச்சி, அதனாலதான் கொஞ்சம் லாங் கேப், அப்பப்போ பின்னூட்டம் மட்டும் போட்டுகிட்டு இருக்கேன். பாக்கலாம் மாசம் ஒரு பதிவாவது போட முடியுதான்னு. "போட்டுட்டாலும்...." அப்படின்றீங்களா?? என்னவோ போங்க சார்!!!

***************

பதிவர் முரளிகண்ணனை ரொம்ப நாளா காணோம், கண்டுபிடிச்சி குடுக்குறவங்களுக்கு என்ன பரிசு குடுக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன். :)

அதேபோல கொஞ்சம் அதிகமாவே மீள்பதிவுகள் போடுற நண்பர் கார்க்கிக்கு பப்ளிக்கா ஒரு குட்டு.

சமீபத்தில் நான் ரொம்ப ரசிச்ச பதிவு நையாண்டி நைனாவோட எதிர் கவுஜகள். தபூ சங்கர் பாணி நான்கு வரி காதல் கவிதைகளை கிண்டல் அடிச்சி இவர் போடுற பதிவுகள் முற்றிலும் புதிய வகை எதிர்க்கவுஜகள். படிச்சவுடனே வாய்விட்டு சிரிக்க வைக்குது. பாராட்டுகள் அவருக்கு.

அதேபோல் நண்பர் நர்சிம். திரட்டிகளில் இருந்து விலகுன பின்னால இவரோட படைப்புகள்ல ஒரு வேகம், வித்தியாசத்தைக் காட்டுற முனைப்பு எல்லாம் தெரியுது. நடந்த பிரச்சினைகளை ஏணிப்படியா உபயோகிச்சிகிட்ட அவரோட திறமைக்கு ஒரு சல்யூட். அதனால அவரை இனிமே திரட்டிகள் உள்ளாறயே விட வேணாம்னு சொல்றியாடான்னு கேக்குறீங்களா? என்னவோ போங்க சார்!!!

***************

நண்பர் ஓசை செல்லா புதுசா ப்ளாக்சாய் அப்படின்னு ஒரு தளம் ஆரம்பிச்சிருக்காரு. முதல் பார்வையில ஒரு வித்தியாசமான ப்ளாக் அக்ரிகேட்டர் மாதிரி தெரியுது. அவரது முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்.

அதுக்காக அவர் அனுப்பிய மெயிலில் தவறுதலாக எல்லா மெயில் ஐடிகளையும் டூ அட்ரஸிலேயே போட்டுவிட அதற்கு எல்லோரும் "ரிப்ளை டூ ஆல்" போட, அந்த அட்ரஸ்களை எடுத்து சிலர் அட்வர்டைஸ்மென்ட் அனுப்ப என்று ஒரே களேபரம். நான் போய் "ரிப்ளை டூ ஆல்" போடாதீங்க, அட்வர்டைஸ்மென்ட் அனுப்பாதீங்கன்னு சொன்னவுடனே "நீ என்ன பெரிய பில்கேட்ஸா?" என்ற ரீதியில் வந்த பதில்களில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை.

அந்த பதிலை அனுப்பிய புத்திசாலிகள் மன்னிக்கவும் அதிபுத்திசாலிகள் இருக்கும் இடத்தில் என்னை போன்ற கோயிந்துகளும் இருப்பார்கள் என்பது புரியாமல் "உன் டவுசரை அமுக்குவேன்" என்ற ரீதியிலான மின்னஞ்சல்கள் அனுப்பினால் நான் பயந்துவிட மாட்டேனா? அது கூடவா சார் உங்களுக்குத் தெரியாது? என்னவோ போங்க சார்!!!

****************

உரையாடல் போட்டியில் வென்ற அனைவருக்கும் வாழ்த்துகள். வெற்றி பெற்ற இருபது கதைகளையும் படிச்சிட்டேன், அதனால தைரியமா வாழ்த்துவேன். :)

எதிர்பார்த்தது போலவே முடிவில் சில ஆச்சர்யங்கள். கண்டிப்பாக பரிசு பெறும் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில கதைகள் பரிசு பெறாமல் போனது குறித்த விமர்சனங்கள் எழுகின்றன. நண்பர் ஜமால் அழகாக சொல்லியிருப்பதை இங்கே கோடிட்டுக் காட்டுகிறேன்.

//
நண்பர் பைத்தியக்காரன்-சுந்தரின் முடிவு அறிவிப்பில் குறிப்பிட்டதுபோல, இது ஒரு தேர்ந்தெடுப்பு. இது மதிப்பீடு அல்ல. இதில் குறைநிறைகள் இருக்கும். அது தேர்வாளர்களின் தனிப்பட்ட அனுபவம் மற்றும் பயிற்ச்சி சார்ந்தது.
//

இந்த முறை பரிசு பெற்ற கதைகளில் பொதுவான அம்சமாக எனக்குத் தென்படுவது "கட்டுடைப்பு". சரியா சுந்தர்ஜி & பைத்தியக்காரன்?

ஆமா உன் கதை என்னாச்சின்னு கேக்குறீங்களா? முதல்லயே நடுவர்கள் யாருன்னு தெரிஞ்சிருந்தாலாவது அவங்களை பாத்து "நானெல்லாம் இங்க சிறுகதை எழுத்தாளார்னு ஃபார்ம் ஆயிட்டேன்யா, என்னையும் ஜீப்புல ஏத்திக்குங்கய்யா"ன்னு கெஞ்சி கூத்தாடி ஜீப்ல ஏறியிருக்கலாம், கடைசி வரைக்கும் நடுவர்கள் யார்ன்றத சொல்லாமயே வெச்சிட்டாங்க நம்ம ஆளுங்க, என்னவோ போங்க சார்!!!

****************

ஆமா இது நீ வழக்கமா எழுதுற "துணுக்ஸ்"தானே, தலைப்பை மாத்தி வெச்சு ஏமாத்துறியாடான்னு கேக்குறீங்களா? என்னவோ போங்க சார்!!!

Wednesday, June 17, 2009

இந்த வாரம் வலைச்சரத்தில்

நண்பர்களே,

சீனா அய்யாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வாரம் நான் வலைச்சர ஆசிரியராக இருக்கிறேன். என் வலைச்சரப் பதிவுகளை படிக்க கீழ்கண்ட இணைப்புகளை கிளிக்கவும்...

1. வலைச்சரத்தில் வெண்பூ : ஒரு சுய‌ அறிமுகம்
2. விகட(ன்)கதை சொல்லிகள்!!!
3. வெண்பூவிற்கு வயது ஒன்று
4. கோ-இன்சிடன்ஸ் பதிவர்கள்
5. என்னை அசத்திய கவிஞர்கள்
6. சினிமா வலைஞர்கள்

Wednesday, March 25, 2009

துணுக்ஸ் - 2009/03/25

எப்படியோ 33 வருசத்துக்கு அப்புறமா நம்ம துளசி டீச்சர் ஊர்ல ஒரு டெஸ்ட் மேட்ச் ஜெயிச்சாச்சி. எதிர்பார்த்த முடிவுதான்னாலும் எனக்கு ஒரு சின்ன வருத்தம். மேட்ச் ஆரம்பிக்கறதுக்கு முன்னால இருந்தே எப்படியாவது இந்தியா முதல் இன்னிங்க்ஸ்ல 535 ரன்னுக்கு மேல அடிக்கணும்னு வேண்டிகிட்டு இருந்தேன், அது நடக்காம போயிடுச்சி. அது என்ன 535? கடைசியா சொல்றேன் :)))

இந்த தொடரையும் ஜெயிச்சா 40 வருசத்துக்கு அப்புறமா நம்ம ஜெயிக்குற தொடரா இருக்கும். செய்வாங்களா?

*****

விகடன்ல இந்த வாரம் ரெண்டு விசயம் ஆச்சர்யப்படுத்துனது. ஒண்ணு கிருஷ்ணா டாவின்சி எழுதுன "அச்சக்காடு" சிறுகதை. அற்புதமான களம், அருமையான நடை, மிஸ் பண்ணாதீங்க.

அடுத்தது "ஹாய் மதன்"ல ஒருத்தர் கேட்ட "காந்திஜி தாஜ் மஹாலை பாத்திருக்காரா?"ன்ற கேள்வி. ரொம்ப சாதாரணமா தெரிஞ்சாலும், இந்தியான்னு சொன்னவுடனே இந்தியர் அல்லாத ஒவ்வொருத்தருக்கும் ஞாபகம் வர்ற ரெண்டு விசயம் காந்திஜியும், தாஜ் மஹாலும்தான். மதனும் அதே பிரமிப்பை தன் பதில்ல காட்டியிருந்தாரு. ரொம்ப வித்தியாசமான கேள்வி இது.

ரெண்டு நல்ல விசயம் இருந்தா ஒரு உறுத்துற விசயமும் இருக்கணும்ல. அது என்ன இப்பவெல்லாம் விகடன் சினிமா மார்க் 43ஐ தாண்டுறதே இல்லை. சிவா மனசுல சக்திக்கு 42, நான் கடவுளுக்கு 43, காஞ்சிவரத்துக்கு 43.. ஒண்ணுமே புரியல, விகடன் மார்க் குடுக்குறத மறுபரிசீலனை பண்ணுறது நல்லதுன்னு நெனக்கிறேன்.

*****

இதோ மறுபடியும் நாடு தழுவிய தேர்தல் திருவிழா. தேதி அறிவிச்ச உடனே உண்ணாவிரதம்னு ஒருத்தர் ஆரம்பிக்கிறாங்க‌, இத்தனை நாளா பிரச்சினைக்காக உயிரையே தருவேன்னு சொன்ன எல்லாருமே அமைதியாகிட்டாங்க. என்ன அரசியலோ ஒண்ணுமே புரியல...

*****

இந்த தேர்தல் களேபரத்துக்கு நடுவுல கிரிக்கெட் வேற. அதுக்கு பாதுகாப்பு தர முடியலன்னு மத்திய அரசு உண்மையை சொன்னா, உடனே "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வித்தியாசம் இல்லையா?"ன்னு பொசக்கெட்டத்தனமா ஒரு கேள்வி கேக்குறாங்க. விட்டா தேர்தலை தள்ளி வைக்க சொல்லுவாங்க போல. ஏன்யா, நாட்டோட அடுத்த பிரதமர் யார்னு முடிவு பண்ணுறத விட, அடுத்த அஞ்சு வருசத்துக்கு நமக்காக திட்டங்களைத் தீட்டப்போற அமைச்சர்கள் யாருன்னு தெரிஞ்சுக்குறத விட, நமக்காக நாடாளுமன்றத்துல பேசப்போற பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்குறத விட விளையாட்டு முக்கியமா போச்சா?

இத்தன நாளா விளையாட்டுலதான் அரசியல் பண்ணிகிட்டு இருந்தீங்க, இப்ப அரசியல்ல விளையாட்டா?

*****

இப்போ ஐ.பி.எல் போட்டிகள் தென்னாப்பிரிக்காவுல நடக்குதாம். எல்லா கிரிக்கெட் வீரர்கள், டீமை ஏலம் எடுத்த நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள், பி சி சி ஐ நிர்வாகிகள் எல்லாரும் இன்னும் ரெண்டு மாசத்துக்கு தென்னாப்பிரிக்காவுலதான் இருப்பாங்க.

எனக்கு ஒரே ஒரு கேள்வி சாமிகளா? இத்தனை வருசமா "இந்தியா" அப்படின்ற பேர்ல கிரிக்கெட் விளையாண்டு கோடி கோடியா சம்பாதிச்ச எந்த *****ம் ஓட்டு போடப் போறதில்லையா?

*******

அது என்னா 535?

161 + 121 + 99 + 154 = 535

வேற ஒண்ணுமில்லை, இதுக்கு முன்னால 2002 டிசம்பர் மாசம் நியூஸிலாந்துல நம்ம ஆளுங்க ரெண்டு டெஸ்ட் விளையாண்டு ரெண்டுலயும் தோத்தாங்க. அந்த ரெண்டு மேட்சுல நாலு இன்னிங்க்ஸ்லயும் இந்திய அணி அடிச்ச மொத்த ஸ்கோர்தான் இது.. :))))

Monday, February 16, 2009

நினைவுகளை மீட்டெடுத்த‌ விப‌த்து

விபத்துகள்... இன்றைய இயந்திர உலகின் தவிர்க்க முடியாமல் போன அம்சம். ஒருத்தர் செத்தால் சாவு, நூறு பேர் செத்தால் புள்ளிவிவரம் என்று சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்பது நம் எல்லோருக்குமே தெரியும். ஆனால் ஒரு சில விபத்துகள் நம்மை உலுக்கும், ஒரு சில நம் பழைய நினைவுகளை கிளறும். இந்த வாரம் 50 பேரை பலிகொண்ட அமெரிக்காவில் நடந்த விமான விபத்தும் என்னை கொஞ்சம் பாதித்தது உண்மை, காரணம்... விபத்து நடந்த இடம்.. நியூயார்க் மாநிலத்தின் பஃபலோ நகரம் (Buffalo). என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒன்றரை வருடங்களை கழித்த இடம்.

முதல் வெளிநாட்டுப் பயணம், கேரியர் கிராஃப் 90 டிகிரியில் ஏறிய காலகட்டம், எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் நான் நானாக இருந்த / இருக்கவிட்ட‌ சூழல், தங்கமணியுடன் பூசல்களே இல்லாமல் இருந்த நாட்கள் (அ) மாதங்கள், முதல் குழந்தையின் முதல் விநாடிகளும் முதல் ஸ்பரிசமும், முதல் கார், அளவில்லாத பயணங்கள் என்று என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவுகளை பஃபல்லோ எனக்கு அளித்தது என்றால் மிகையில்லை.

***

புவியியல் ரீதியாக பஃபல்லோ அமைந்திருக்கும் இடமும் அதன் முக்கியத்துவத்துக்கு ஒரு காரணம். உலகின் மிகப்பெரிய அருவி + உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றான நயாகாரா அருவியின் மிக அருகில் உள்ள பெரிய நகரம். நியூயார்க் மாகாணத்தின் மேற்கு எல்லையில் நியூயார்க் நகரில் இருந்து 8 மணி நேர தொலைவில் இருந்தாலும், நயாகராவிற்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் வந்து இறங்க வேண்டிய விமான நிலையம் பஃபல்லோ நயாகரா சர்வதேச விமான நிலையம்தான். எழுத்தாளர் சுஜாதா கூட தனது நயாகரா பயண அனுபவங்களில் இங்கே தங்கியிருப்பதை குறிப்பிட்டிருப்பார்.

நியூயார்க், நேவார்க், டெட்ராய்ட், வாஷிங்டன், சிகாகோ என்று எல்லா பெரிய நகரங்களில் இருந்தும் வரும் விமானங்கள் சுற்றுலா பயணிகளாலும், புகழ்பெற்ற பஃபல்லோ பல்கலைக்கழக மாணவர்களாலும் நிரம்பி வழியும். நயாகராவின் பிரமாண்டத்தை ரசிக்கவும், தன் மேல் படிப்புக்கான ஆர்வத்துடனும் பயணம் செய்த எத்தனை பேர் இந்த விபத்தில் இறந்திருப்பார்கள் என்று நினைக்கவே மனம் பதறுகிறது.

விபத்திற்கு காரணம் என்னவாக இருக்கும்?

இன்று உலகம் முழுதும் கிடைக்கும் ப‌ஃபல்லோ சிக்கன் விங்ஸ், நியூயார்க் மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரம், நயாகரா நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் இருக்கும் அமெரிக்க நகரம், பஃபல்லோ பல்கலைக்கழகம், அமெரிக்காவின் மிக அதிகமான எண்ணைக் கொண்ட நெடுஞ்சாலை (I 990) என்று பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் இந்த நகரின் இன்னொரு பிரபலமான‌ அடையாளம் குளிர்.

நான் முதல் முதலில் அங்கே சென்றபோது வெயில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்க, எங்கு நோக்கினும் சாலை பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தது. என் கிளையண்டிடம் கேட்க, அவர் சிரித்துக் கொண்டே, "ஒரு வருசத்தோட நான்கு சீசன்ஸ் என்னன்னு தெரியுமா" என்று கேட்க, "ஏன் தெரியாமல், சம்மர், ஃபால், வின்ட்டர், ஸ்ப்ரிங்" என்றேன். "அது மத்த ஏரியாக்களுக்கு, இந்த ஏரியாவை பொறுத்தவரைக்கும், அல்மோஸ்ட் வின்ட்டர், வின்ட்டர், ஸ்டில் வின்ட்டர், கன்ஷ்ட்ரக்ஷன்" என்றார். பனி இல்லாத 5 மாதங்களை அடுத்து வரும் பனிக்காலத்திற்கு தயார் படுத்திக் கொள்ள உபயோகப்படுத்திக் கொள்ளும் அவர்களின் அறிவு இந்தியனான என்னை ஆச்சர்யப்படுத்தியதில் வியப்பில்லை.

அமெரிக்காவின் 5 பெரிய நன்னீர் ஏரிகளில் ஒன்றான எர்ரீ ஏரியின் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கும் இந்த நகரில் வருடத்தின் பெரும்பகுதி பனியால் மூடப்பட்டிருக்கும். சமயத்தில் மைனஸ் 20 டிகிரி ஃபார்ன்ஹீட் வரைகூட வெப்பநிலை செல்லும் என்றால் புரிந்து கொள்ள முடியும்.

இந்த விபத்திற்கும் காரணம் விமானத்தின் இறக்கைகளில் பனி உறைந்தது காரணமாக இருக்கலாம் என்று வரும் செய்திகளை படிக்கும்போது பனிப்பொழிவில் இரண்டு மூன்று அடி பனிகுவியலுக்குள் சிக்கிக் கிடக்கும் காரும், அதை சரி செய்ய ஐஸ் ஸ்கார்ப்பர், டீ ஐசிங் உப்பு, நான்‍ஃப்ரீஸ் வின்ஷீல்ட் வாட்டர் என்று ஒவ்வொரு கார் ஓனரும் தயாராய் இருக்க, விமானத்திற்கு எவ்வளவு முன்னேற்பாடுகள் தேவைப்பட்டிருக்கும், அதில் யார் செய்யத்தவறிய ஒன்றால் விபத்து ஏற்பட்டது என்பதெல்லாம் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

எப்படியோ, 50 பேரை பலி கொண்ட இந்த விபத்து என் பசுமையான நினைவுகளை மீட்டெடுத்தது என்று சொல்லலாம்..

ஐ மிஸ் யூ பஃபல்லோ..

Monday, December 15, 2008

என் மதிப்பிற்குரிய தமிழ் வலையுலக நண்பர்களுக்கு

என் மதிப்பிற்குரிய தமிழ் வலையுலக நண்பர்களுக்கு,

கடந்த சில‌ வாரங்களாகவே என்னால் வலைப்பூ உலகில் முற்றிலுமாக இயங்க முடியவில்லை. நான் பதிவு எழுதி ஒன்றரை மாதங்கள் ஆனதே இதற்கு சாட்சி. சில வெளியில் சொல்ல இயலாத காரணங்களால் என்னால் கடந்த இரு வாரங்களாக சக பதிவர்களின் பதிவுகளை படிக்கக் கூட முடியவில்லை.

சிலர் என்னை மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் கேட்டதற்கும் என்னால் சரிவர பதில் சொல்ல முடியவில்லை அல்லது சொல்லத் தெரியவில்லை. தற்போதைய நிலை இன்னும் சில வாரங்களுக்காவது (மாதங்கள்?) தொடரும் என்பதால் என்னை நீங்கள் வலையுலகில் பார்ப்பது அரிதாகவே இருக்கும்.

ஏற்கனவே என்னுடன் மின்னஞ்சலிலும், தொலைபேசியிலும் தொடர்பிலிருக்கும் நண்பர்கள் அவ்வப்போது அழையுங்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் மறக்காமல் அனைவரின் பதிவுகளையும் படிப்பேன்.

சில நாட்கள் (அல்லது மாதங்கள்) கழித்து மீண்டும் பழைய வேகத்துடன் என்னால் திரும்பி வர முடியும் என்று நம்புகிறேன். அதனால் என் மொக்கையிலிருந்து உங்களுக்கு முழு விடுதலை கிடைத்துவிட்டதாக எண்ணி யாரும் மகிழ்ச்சியடைய வேண்டாம். :)))

சென்னையில் பதிவர் சந்திப்பு நடந்தால் கண்டிப்பாக எனக்கு தெரிவிக்கவும். வருவதற்கு முயற்சி செய்கிறேன்.

என் பதிவுகளை வாசித்து ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி.. நன்றி..

Monday, November 3, 2008

துணுக்ஸ்

சென்ற வாரத்தில் ஒருநாள் நானும் தங்கமணியும் உட்கார்ந்து தாமிராவின் தங்கமணி பற்றிய புலம்பல்களை படித்து சிரித்தபின் தங்கமணி கிச்சனுக்கு சென்றார். அதன்பின் நடந்த உரையாடல்..

தங்கமணி: என்னங்க?

நான் (ஹாலில் இருந்து சத்தமாக): என்னம்மா?

தங்கமணி: அடுத்தது நீங்க என்ன பதிவு போடப் போறீங்க?

நான்: ஒரு சிறுகதை போடலாம்னு இருக்கேன்.

தங்கமணி: என்ன? நீங்களும் என்னை வெச்சி எதுனா புலம்பப் போறீங்களா?

நான் (ச‌ரியாக‌ அவ‌ர் சொன்ன‌தை காதில் வாங்காம‌ல்): த‌லைப்பு "பேய் பிடித்த‌வ‌ன்" அப்ப‌டின்னு வெக்க‌லாம்னு இருக்கேன்.

"டிட‌ங்க்..." (ஹி..ஹி.. அவ‌ங்க‌ கையில‌ இருந்த‌ க‌ர‌ண்டி ஹால்ல‌ லேண்ட் ஆன‌ ச‌த்த‌ம் அது)

*******

பலமுறை நான் யோசித்ததுண்டு, பிரபலங்களை விளம்பரத்துக்கு உபயோகப்படுத்துவதால் எந்த அளவுக்கு மக்களை கவரமுடியும் என்று. இதுகுறித்து லக்கி கூட ஏற்கனவே ஒருமுறை பதிவெழுதியிருக்கிறார். ஆனால் சிலநாட்களுக்கு முன் எனக்கு பிராக்டிகலாக அதை உணரும் வாய்ப்பு கிடைத்தது.

என் பையனுக்கு இரண்டு வயது ஆவதால், அவனை ப்ளே ஸ்கூலில் சேர்க்கலாம் என்று முடிவெடுத்தோம். நாங்கள் இருக்கும் வீட்டிற்கு அருகில் அவனுக்கு விளையாட வேறு குழந்தைகள் இல்லை. மேலும் நாங்கள் குடியிருக்கும் ஏரியாவும் சிறிது மோசமாக இருப்பதால் அவ‌ன் அடிக்கடி நினைத்தபோதெல்லாம் வெளியே விளையாட‌ செல்ல முடிவதில்லை.

ஆனால் என் தங்கமணிக்கு இந்த ஏரியாவில் நல்ல ப்ளேஸ்கூல் கிடைக்காது என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை. அதற்காகவே மற்ற நல்ல பகுதிகளுக்கு வீடு மாற்றவேண்டும் என்று கூறிக்கொண்டிருப்பார். நெட்டில் தேடியபோது அருகில் ஒரு நல்ல ப்ளேஸ்கூல் செயின் இருப்பது தெரிந்தது. ஏற்கனவே நான் அந்த ப்ளேஸ்கூல் பெயரை அறிந்திருந்தேன். கொஞ்சம் பணம் அதிகம் என்றாலும் குழந்தைக்கு நல்ல இடமாக இருக்கும், மேலும் எனக்கும் ஆபிஸ் அருகில் என்பதால் அவனை கொண்டு விட, அழைத்து வர என்று சுலபமாக இருக்கும் என்பதால் அங்கேயே அவனை சேர்த்தோம்.

முதல் இரண்டு நாள் தங்கமணியும் அவனுடன் சென்று வந்தார். என்ன செய்வாங்க தெரியலயே? நாம பாத்துக்குறமாதிரியே பாத்துகுவாங்களா? என்ற கவலைகள் வேறு அவருக்கு.

இரண்டாம் நாள் திரும்பி வந்தவுடன் தங்கமணி என்னிடம் "என்னங்க.. உங்களுக்கு தெரியுமா? இந்த ஸ்கூல்லதான் ***** நடிகை கூட அவங்க குழந்தையை சேத்திருக்காங்க. இன்னிக்கு கூட்டிட்டு போக வந்திருந்தாங்க" என்று சின்னத்திரையில் கோலம் போடும் நாயகி பெயரை கூறினார்.

இப்போதெல்லாம் என் தங்கமணிக்கு அந்த ஸ்கூல் நல்லதா என்பது பற்றி எந்த சந்தேகமும் எழுவதில்லை. யாரிடமாவது பையனை ஸ்கூலுக்கு அனுப்பவதைப் பற்றி சொல்லும்போதும் "நல்ல ஸ்கூல்தான்.. ***** கூட அவங்க குழந்தையை அங்கதான் போட்டிருக்காங்க" என்கிறார்..

*******

என் அலுவலகத்தின் பார்க்கிங் லாட் அருகே புகைபிடிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. எப்போதுமே குறைந்தது ஐந்து பேராவது அங்கே நின்று ஊதிக்கொண்டு இருப்பார்கள். தடை வந்தவுடன் அலுவல வளாகம் முழுவதும் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

விடுவார்களா நம் ஆட்கள்!! அலுவலகத்தின் அருகில் இருந்த ஒரு முட்டுச்சந்து (20 அடி அகலம் இருக்கும்) உள்ளே ஒரு டீக்கடை இருக்கும். அங்கே சென்று தம் அடிக்க ஆரம்பித்தனர். மெயின் ரோடில் இருந்து கொஞ்சம் உள்வாங்கி இருப்பதால் அவ்வளவு சீக்கிரம் போலீஸார் கண்ணை ஈர்க்காது என்பதால் அங்கு எப்போதும் கூட்டம்தான்.

அங்கே டீ நன்றாக இருக்கும் என்பதால் அவ்வப்போது நானும் செல்வதுண்டு (டிஸ்கி: டீ மட்டும்தான்). சென்ற வாரத்தில் ஒருநாள் மாலை நேரம் அங்கே டீ குடித்துக் கொண்டிருந்தபோது மெயின் ரோடில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு கான்ஸ்டபிள் திரும்பி பார்த்துவிட்டு எங்களை நோக்கி வர ஆரம்பித்தார்.

அந்த நேரம் ஒரு 10 பேர் அங்கே தம் அடித்துக் கொண்டிருந்தார்கள். என்னைப் போல் சிலர் டீ மட்டும் குடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தோம். எனக்கா வயிற்றைக் கலக்குகிறது, வருகிறவன் இங்கிருக்கும் எல்லோரையும் பிடித்துக் கொண்டு போய்விட்டால் என் மானமும் கப்பலேறி விடுமே! ஒரு நல்ல டீ குடிக்க ஆசைப்பட்டது தப்பா!! என்று மனதிற்குள்ளேயே புலம்பல்.

தம் அடிப்பவன்களும் அதே மனநிலைதான் போல. எல்லோரும் 'தம்'மை வெளியே தெரியாதவாறு மறைத்துக்கொண்டு ஓரக்கண்ணால் அந்த கான்ஸை பார்த்துக்கொண்டிருந்தனர். வந்த கான்ஸ் சுற்றியும் பார்த்துவிட்டு கடைக்காரனை பார்த்து மெல்லிய குரலில் கேட்டார்.. "ஒரு கோல்ட் ஃப்ளேக் குடு"

*********

இரண்டு, மூன்று வாரத்திற்கு முன்னால் நானும் தங்கமணியும் வெளியே சென்றுவிட்டு மதியம் சாப்பாடு வெளியே சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். வீட்டில் தங்கமணியின் தம்பியும் இருந்ததால் பார்சல் வாங்க அந்த உயர்தர சைவ உணவகத்துக்கு சென்றோம். சென்னையில் மிக மிக பிரபலமான அந்த உணவகத்தில் பார்சல் ஆர்டர் செய்தோம். இரண்டு சாம்பார் சாதம், ஒரு தக்காளி சாதம், ஒரு தயிர் சாதம் என்று நான்கு ப்ளேட் ஆர்டர் செய்தால் பில் 130 ரூபாய் வந்தது.

அடப்பாவிகளா! இவ்ளோ காசா! ஆவரேஜா ஒரு ப்ளேட் விலை ரூபாய் 32.50 என்று மனதிற்குள் திட்டினாலும், சரி, பரவாயில்ல குவாலிட்டியும் டேஸ்டும்தான முக்கியம், அதுக்குதான தேடி புடிச்சி இங்க வரோம் என்று மனதை சமாதானப் படுத்திக் கொண்டு பார்சலை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.

வீட்டிற்கு வந்து பார்சலை பிரித்தப்புறம்தான் கிளைமேக்ஸே!!! படுபாவிகள், வைத்திருந்த சாப்பாட்டின் அளவு ஒவ்வொரு பாக்ஸிலும் இரண்டு கரண்டி அளவில்தான் இருந்தது. இரண்டு வயதாகும் என் மகனுக்கே கண்டிப்பாக அந்த அளவில் இரண்டு ப்ளேட் சாப்பாடு வேண்டும். நாங்களோ வெளியே சுற்றிவிட்டு பசியோடு வந்திருக்கிறோம்.

அந்த அளவு சாப்பாடு போடுவதுபோல் அளவாக பிளாஸ்டிக் டப்பா வேறு. தட்டில் அந்த சாப்பாட்டை கொட்டினால் இருக்கும் இடமே தெரியவில்லை. இதில் சாம்பார் சாதத்தில் இரண்டு பெரிய சைஸ் காய்கறி வேறு. அதை எடுத்துவிட்டால் ஒரு கரண்டி அளவுக்கு மட்டுமே சாப்பாடு இருந்தது.

வந்த கோபத்திற்கு என் வீட்டில் உட்கார்ந்து கொண்டே மானசீகமாக அவன்களை நன்றாக திட்டிவிட்டேன், சாபமிட்டேன் என்பது சாலப் பொருத்தமான வார்த்தை. ஒரு நாளைக்கு எத்தனை ஆயிரம் பேர் இது போல் பார்சல் வாங்கிப்போய் ஏமாந்து சாபமிடுவார்கள்!! அந்த உணவக அதிபருக்கு வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் போனது ஏன் என்று புரிந்தது.

Tuesday, October 21, 2008

என் 25ம் பதிவு : சைக்கிள் ரேஸ் அனுபவங்கள்

இது என்னோட 25வது பதிவு. முதல்ல இத்தனை நாளா என் பதிவுகளையும் படிச்சி எனக்கு பின்னூட்டம் போட்டு என்னை ஊக்கப்படுத்தின உங்க எல்லாருக்கும் நன்றி. போன ஜீன் மாசம் எழுத ஆரம்பிச்சேன். இந்த அஞ்சு மாசத்துல மொத்தமாவே 25 பதிவுதான்னு சொன்னாலும் உங்க மனசுல நிக்குற மாதிரி எழுதியிருக்கேன்னுதான் நெனைக்கிறேன். அதனால எனக்கு நானே குடுத்துக்குறேன் ஒரு ஷொட்டு, அதேநேரம் பல காரணங்களால நீங்க எதிர்பார்க்கிற அளவுக்கு நெறய பதிவு போடுறதில்ல, அதுக்கு எனக்கு நானே குடுத்துக்குறேன் ஒரு குட்டு..

இந்த பதிவுல என்ன போடுறதுன்னு ரொம்ப யோசிச்சப்ப, அட அப்படின்னு சொல்லமுடியாட்டாலும் கொஞ்ச நாளா என் மனசை அரிச்சிட்டு இருக்குற ஒரு விசயத்த உங்க கூட பகிர்ந்துக்கலாம்னு நெனச்சேன். அதுதான் இங்க.. (படிச்சிட்டு திட்டாதீங்க)..

****

எங்க ஊர்ல ஐப்பசி மாச வாக்குல மாரியம்மன் பண்டிகை ரொம்ப விமர்சையா கொண்டாடுவோம். அதுக்காக ஒவ்வொரு நாளும் பாட்டு கச்சேரி, பட்டி மன்றம், விளையாட்டு போட்டின்னு களை கட்டும். இப்படிதான் கொஞ்ச வருசத்துக்கு முன்னால எங்க ஊர்ல இருக்குற ஒரு பெரிய மனுசன் சைக்கிள் ரேஸ் ஏற்பாடு பண்ணுனாரு. போட்டியில் கலந்துகிட்டு ஜெயிக்கிறவங்கள அனவுன்ஸ் பண்றதுக்கும் பரிசு குடுக்குறதுக்கும் எங்க ஊர்லயே பெரிய சைக்கிள் கடை வெச்சிருக்குற அண்ணாச்சியை கூப்புட்டிருந்தாங்க.

நானும் என் ஃப்ரண்ட்ஸும், ஆஹா ஊருக்குள்ள நம்மள ப்ரூஃப் பண்ண இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சிடுச்சே, இதை விடக்கூடாதுன்னு எங்க சைக்கிளுங்கள நல்லா சர்வீஸ் பண்ணி தெனமும் பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சோம். சின்ன ஊர் அப்படின்றதால யார் யாரெல்லாம் கலந்துக்குவாங்க, யாருக்கு ஜெயிக்கறத்துக்கு வாய்ப்பு இருக்கு அப்படின்னெல்லாம் ஓரளவுக்கு தெரியும். நானும் இது வரைக்கும் இப்படி ரேஸ்ல எல்லாம் கலந்துகிட்டதே இல்ல. இருந்தாலும் பரவாயில்லை நாமளும் ரவுடிதான்னு உலகம் எப்படி நம்பும்னு வடிவேலு கணக்கா ப்ளான் போட்டேன்.

போட்டி வித்தியாசமா இருந்திச்சி. ஏறத்தாழ‌ 30, 40 பேர் கலந்துகிட்டாங்க. எல்லாரையும் ஒரே டைம்ல விட்டா டிராஃபிக் ஜாம் ஆகும்னு, கொஞ்சம் கொஞ்சம் பேரா பிரிச்சி விட்டாங்க. கிளம்புற நேரத்தையும் போய் சேர்ற நேரத்தையும் தனித்தனியா நோட் பண்ணிகிட்டாங்க. இதுல என்ன பிரச்சினைன்னா, நாம ஃபர்ஸ்ட் ப்ரைஸா இல்லையான்னு நமக்கே தெரியாது. அவங்க சொல்ற வரைக்கும் வெய்ட் பண்ணனும்.

ஆனா ரேஸ் பாத்துகிட்டு இருந்த என் ஃப்ரண்ட்ஸ்லாம் "கண்டிப்பாக உனக்கு ப்ரைஸ் கிடைக்கும்டா, ரொம்ப நல்லா ஓட்டுன" அப்படின்னாங்க. ஒரே சந்தோசம். முதல் ப்ரைஸ் இல்லாட்டினாலும் மொத மூணு இடத்துல ஒருத்தனா வந்தா சந்தோசமுன்னு நானும் நெனச்சிகிட்டு இருந்தேன்.

சாயங்காலம் வரைக்கும் போட்டி நடந்தது. நாங்க எல்லாரும் சாயங்காலமே ஜெயிச்சவங்க பேர் சொல்லிடுவாங்கன்னு நெனச்சோம். ஆனா அவங்க ஒண்ணுமே சொல்லல. சரின்னு மறுநாளும் போய் பாத்தோம். அப்பவும் ஒண்ணும் சொல்லல. சரி, நாப்பது பேரு கலந்துகிட்டாங்க. அத்தனை பேரோட டைம் டீடெய்லயும் சரியா கணிச்சிதானு சொல்ல முடியும் அப்படின்னு நெனச்சோம். சோதனையா, அடுத்த ஒரு வாரத்துக்கு ஒண்ணுமே சொல்லல. எங்களுக்கா ரொம்ப கஷ்டமா போச்சி. "என்னடா இது? ரேஸ் ஆரம்பிக்கறதுக்கு ஒரு மாசம் முன்னாலயே அப்படி வெளம்பரம் பண்ணுனாங்க. இப்ப என்னடான்னா இப்படி இழுத்தடிக்கிறாங்களே"ன்னு பேசிக்குவோம்.

அப்படி, இப்படின்னு ஒரு மாசம் கழிச்சி, பண்டிகையெல்லாம் முடிஞ்சப்புறம் ஒருநாளு பக்கத்து ஊட்டு ஃப்ரெண்டு வந்து "டேய்.. இன்னிக்கு அங்க ரிசல்டு சொல்றாங்களாண்டா! வா, ஒனக்கு ப்ரைஸ் குடுக்கப் பேர் கூப்புடுறப்ப நீ இல்லைன்னா நல்லா இருக்காது" அப்படின்னு சொன்னான். ஆஹா.. அப்படின்னு விழுந்தடிச்சி ஓடுனேன் (அந்த வேகத்துலயும், போட்டோ எடுத்தா பளிச்சின்னு தெரியுறதுக்காக பவுடரை அப்பிட்டு ஓடுனது வேற கதை).

அங்க போனா ஒரு சின்ன மேடையில ஊர் பெரிய மனுசனுங்க எல்லாம் உக்காந்திருந்தாங்க. இத்தன பேருக்கு நடுவுல நம்ம பேரை சொல்லத்தான் போறாங்கன்னு அப்படியே இளிச்சிகிட்டே நின்னுகிட்டு இருந்தேன். சைக்கிள் ஷாப் ஓனர் கையில ஒரு லிஸ்ட் இருந்தது. அதை ஒரு தடவை படிச்சிட்டு அவர் மைக் முன்னால நின்னாரு..

"எல்லாருக்கும் வணக்கம். நீங்க எல்லாரும் இந்த சைக்கிள் ரேஸ்க்கு இவ்ளோ ஆதரவு தருவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. என் கையில உங்க எல்லோரோட டைம் டீடெய்லும் இருக்கு. இதுல மூணுபேருக்கு ப்ரைஸ் குடுக்கப் போறோம்."

அப்படின்னு நிறுத்தினாரு. எனக்கா தாங்கல. இந்த மனுசன் ஏன் இப்படி நீட்டி முழக்குறாரு. சொல்லவேண்டியதுதான அப்படின்னு நெனச்சிகிட்டே அவர் சொல்றத கேட்டுகிட்டு இருந்தேன்.

"ஆனா பாருங்க.. உலகத்துல எத்தனையோ சைக்கிள் இருக்குது, ஆனா நான் விக்குற அட்லஸ் சைக்கிள் மாதிரி வேற எதுவுமே கிடையாது. அதனால அட்லஸ் சைக்கிள் வெச்சி இந்த ரேஸ்ல கலந்துகிட்டவங்கள்ல இருந்து மொத மூணு பேரை தேர்ந்தெடுக்கப்போறேன்" அப்படின்னாரு..

எங்க மாமா வீட்டு லேத் பட்டறையில இரும்பை வெட்றதுக்கு வெட்டிரும்பை கம்பி மேல வெச்சி சம்மட்டியால ஓங்கி அடிப்பாங்க. அதை என் தலையில அடிச்ச மாதிரி இருந்திச்சி. பின்ன, நாம ஓட்டுனது எங்க அப்பாவுக்கு அவரோட அப்பா வாங்கி குடுத்த ஹீரோ சைக்கிளாச்சே.

மனசே கனத்து போச்சி.. ஆனா ஒரே சந்தோசம், ஜெயிச்ச மூணு பேருமே திறமைசாலிங்க அப்படின்றதுதான். அதுலயும் மொதோ பிரைஸ் வாங்குனவரு பயங்கரமா சைக்கிள் ஓட்டுவாரு. கைய விட்டுட்டு ஓட்டுறது, சைக்கிள் மேல நின்னுகிட்டு ஓட்டுறது, பின்னால திரும்பி பெடல் பண்ணுறதுன்னு ஒரே களேபரமா இருக்கும். அவர் எங்கியாவது சைக்கிள் ஓட்டுறார்னா ஓடிப்போய் பாக்குறவங்கள்ல நானும் ஒருத்தன். அதனால அவரை பாத்து கை குடுத்துட்டு பாராட்டிட்டு திரும்பி வந்துட்டோம்.

திரும்பி வர்றப்ப என் ஃப்ரெண்டு கேட்டான் "அவங்க மூணு பேரும் திறமைசாலிங்க, ப்ரைஸுக்கு தகுதியானவங்க அப்படின்றதுல எந்த சந்தேகமும் இல்லடா. ஆனா இந்த சைக்கிள் ஷாப் ஓனர் இப்படி பண்ணிட்டாறேடா! ரேஸ் எல்லாம் முடிஞ்சப்புறம் அட்லஸ் சைக்கிள் மட்டும்தான் போட்டிக்கு எடுத்துக்குவேன் அப்படின்னு சொல்லிட்டாரேடா! அட, நீ ப்ரைஸ் வாங்காதது பிரச்சினை இல்லை, ஆனா உன்னை ப்ரைஸுக்கு கன்ஸிடர் கூட பண்ணலியேடா! எதுக்கெடுத்தாலும் கத்துவ.. நீ ஏன்டா அங்கியே சத்தம் போடலை?" அப்படின்னான்.

அதுக்கு நான் அவன்கிட்ட சொன்னேன் "டேய், எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது அப்படின்றது நெஜந்தான். ஜெயிச்ச மூணு பேரும் எவ்ளோ சந்தோசமா இருக்காங்க பாத்தியா! அங்க நான் போய் ஏன் நீங்க இதை மொதல்லியே சொல்லலன்னு சத்தம் போட்டா ஜெயச்சவங்களோட கொண்டாட்டம் அப்படியே அடிபட்டு போயிடும். ரெண்டாவது, ரேஸ் நடத்துனதும், பரிசை கொடுத்ததும் பெரிய மனுசங்க. நாமெல்லாம் ஆவரேஜான இந்திய நடுத்தர வர்க்கத்த சேந்தவுங்க, இந்த மாதிரி நடந்தா மனசுக்குள்ளே அழுதுகிட்டு அடுத்த வேளை சோத்துக்கு வழிய பாக்க போகுறதுதான் நாம இத்தனை நாளா பண்ணிகிட்டு இருக்கோம். நானும் அதுக்கு விதிவிலக்கில்லடா!! ஏமாற்றம்லாம் நமக்கு புதுசா என்னா??"

பதிலுக்கு என்னை பாத்த பார்வைக்கு அவன் என்னை முறைச்சானா இல்லை பரிதாபப்பட்டானா அப்படின்றதுதான் எனக்கு இன்னிக்கு வரைக்கும் புரியவே இல்லை. ஒரு சிலது புரியாம இருக்குறதுதான் நல்லதோ..

*****

மேல சொன்ன கற்பனை கதைக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு நான் சொன்னா நீங்க நம்பவா போறீங்க!!!

Tuesday, September 2, 2008

காணாமல் போனவை: சைக்கிள், நண்பர்கள் அப்புறம் .... நேர்மை

"கால ஓட்டத்தில் காணாமல் போனவை" என்ற தலைப்பில் பதிவர் சுரேகா ஆரம்பித்த தொடரில் என்னையும் இணைத்த நண்பர் பரிசலுக்கு நன்றி.

கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் ஒவ்வொருவருக்குமே கால ஓட்டத்தில் காணாமல் போன ஒரு விசயமாவது நினைவுக்கு வரும் என்பதும் அது இல்லாமல் போனது குறித்த பெருமூச்சும் வெளிப்படுவது நடக்கக் கூடியதே. இந்த தொடருக்காக நான் திரும்பிப் பார்த்த போது என்னை பெருமூச்சு விட செய்த மூன்று விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.


சைக்கிள்:
என் பால்ய பருவத்தில் நாங்கள் இருந்தது பாப்பிரெட்டிபட்டி வனத்துறை க்வார்ட்டர்ஸில். அந்த கொஞ்சம் பெரிய கிராமத்தில் / சிறு நகரத்தில், மொத்தமாக ஒரு 3 ஏக்கர் பரப்பளவில் பெரிய க்வார்ட்டர்ஸ். அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக 7 வீடுகள். க்வார்ட்டர்ஸின் நட்ட நடுவில் பெரிய கட்டிடத்தில் வன அலுவலகம் என்று அற்புதமான சூழ்நிலை. அவ்வளவு பெரிய இடமுமே எங்களுக்கான விளையாட்டு மைதானம்தான். அதிலும் அப்போது அருகில் வாணியாறு அணை கட்டப்பட்டு வந்ததால் அங்கு வெட்டப்பட்ட சிறிய, பெரிய மரங்களும் (சில மரங்களின் விட்டம் 10 அடிக்கு மேல்) அங்கே அடுக்கப்பட்டிருக்கும். (டிராக் மாறி போறேனோ..)

அங்கேதான் நான் முதல் முதலாக சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தது. அப்பாவின் சைக்கிளை எடுத்துக் கொண்டு போய் குரங்கு பெடல் போட கற்றது, கீழே விழுந்து சிராய்த்துக் கொண்டது (எப்போதுமே கால் முட்டியில் ஒரு காயம் இருந்து கொண்டே இருக்கும்), பூட்டிய சைக்கிளின் பெடலை பின்னால் சுற்றி விரல் செயினில் மாட்டிக் கொண்டு அலறியது என்று மறக்க முடியாத நினைவுகள்

இப்போது நினைத்துப் பார்த்தால் இன்று எனக்கு பயணத்தின் மீது இருக்கும் நாட்டம் அப்போதே வெளிப்பட்டிருக்கிறது போல் தோன்றுகிறது.

அதன்பின் அங்கிருந்து இராசிபுரம் வந்து இரண்டு வருடங்களில் அப்பா டிவிஎஸ் 50 வாங்கிய பிறகு அவரது சைக்கிள் அண்ணனுக்கும் அண்ணனின் கொஞ்சம் குட்டையான சிவப்பு சைக்கிள் எனக்கும் வந்தது. அதை எடுத்துக்கொண்டு சில பல வருடங்களுக்கு நான் சுற்றாத இடமே இராசிபுரத்தில் இல்லை. எங்கு செல்வதென்றாலும் சைக்கிள்தான் (காலை கடனுக்கு மட்டும்தான் நடந்து, திரும்பி வரும்போது சைக்கிளில் உட்கார முடியாது என்பதால்)

அதன்பின் சேலத்தில் வேலையில் சேர்ந்தது, ஹைதரபாத் போய், முதல் வாகனமாக என் வருமானத்தில் ஸ்பெலன்டர் பைக் வாங்கி, அமெரிக்கா போனபோது ஃபோர்டு கார் வாங்கி, சென்னை திரும்பி வந்து என்று எல்லாமே நல்லவிதமாகவே நடந்தாலும் சைக்கிளை கண்டிப்பாக நான் மிஸ் செய்கிறேன்.

இதோ கடந்த வாரம் கொடைக்கானல் போனபோது அங்கே ஏரியை சுற்றி வர சைக்கிள் வாடகைக்கு எடுத்து முன்னால் என் குழந்தையை அமர வைத்து ஓட்டியபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. (என் தங்கமணியிடமும் அதே விளைவு என்பது நானே எதிர்பாராதது).

கண்டிப்பாக சொந்த வீட்டிற்கு மாறியவுடன் மீண்டும் சைக்கிள் வாங்கத்தான் போகிறேன்..


நண்பர்கள்:
கால ஓட்டத்தில் ஒவ்வொரு பகுதியுமே ஒரு இரயில் பயணம் போலதான். அதில் ஒரு சில நண்பர்கள் நெருங்கியவர்களாகவே இருந்தாலும் தொடர்பற்று போவது நடக்கும். அப்படிப்பட்ட தொடர்பறுந்த என் நண்பர்கள் இங்கே. இவர்களில் ஒருவராவது தொடர்பு கொண்டால் சந்தோசம‌டைவேன்.

சுபாஷ்: என் நினைவு தெரிந்து என் முதல் நண்பன். பாப்பிரெட்டிபட்டி செல்வதற்கு முன் என் 5 வயது வரை நாங்கள் சேலம் ஹவுசிங் போர்டில் குடியிருந்த போது இவன் என் நண்பன் (1982, 83 இருக்கும்). 25 வருடம் கழித்தும் இவனது முகம் நினைவில்லாத போதும் இவன் பெயர் நினைவிருப்பதே ஆச்சரியமாக இருக்கிறது.

குருபிரசாத்: பாப்பிரெட்டிபட்டியில் என்னுடன் துவக்கப்பள்ளியில் படித்தவன். அப்பா அங்கே டீக்கடை வைத்திருந்தார். பள்ளி இடைவேளைகளில் இவனது கடைக்கு சென்று பஜ்ஜி சாப்பிட்டது நன்றாக நினைவிருக்கிறது (இவனது முகம் சுமாராத்தான் ஞாபகத்துல இருக்குன்றது வேற விசயம்)

ராம்குமார்: என்னுடன் இராசிபுரத்தில் ஒன்பதாவது வரை படித்தவன். மிக நெருக்கமானவனாக இருந்தாலும், அதன்பின் அவன் கோவைக்கு இடம் பெயர்ந்த பிறகு தொடர்பற்று போய்விட்டது. அங்குள்ள பீளமேடு சர்வஜீன மேல்நிலைப்பள்ளியில் இவன் படித்ததாக நினைவு.

அதற்கு பிறகு என்னுடன் பழகியவர்களையெல்லாம் முடிந்தவரை தொடர்பில் வைத்திருக்கிறேன் என்பது நல்ல விஷயம்தான்.

திருட்டு விசிடி:
எனக்கு பிடிக்காத விஷயம் புதிய படங்களை திருட்டு விசிடியில் பார்ப்பது. மென்பொருள் துறையில் இருப்பதால் "பைரசி"யின் நஷ்டங்களையும் வேதனைகளையும் நன்கு அறிவேன். நான் சிடியில் படம் பார்க்கும் தருணங்கள்,

* அந்த படத்தை தியேட்டரில் பார்க்கத் தவறியிருப்பேன், வேறெங்கும் ஓடிக் கொண்டிருக்காது
* நீண்ட தூர பயணங்களில் பஸ்களில் ஒளிபரப்படும்போது (வேறு வழியில்லாமல் பார்க்க வேண்டியிருக்கும். எனக்கு அமைதியான இருட்டான சூழல் இல்லாவிட்டால் தூக்கம் வராது)

எனது இந்த பார்வை / செயல்பாடு கடந்த மூன்று வருடங்களில் மாறியிருக்கிறது என்பது கேவலமான உண்மை. அமெரிக்காவில் நாங்கள் இருந்த பஃபல்லோ நகருக்கு எந்த தமிழ் படமும் வராது. இந்தியன் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர்கள் தயவால் இந்தி படங்கள் மட்டுமே அவ்வப்போது ஓட்டப்படும். தங்கமணிக்கு இந்தி தெரியாததால் அதற்கும் போக முடியாது.

அதை விட்டால் 2 மணிநேரம் + 160 கி.மீ பயணம் செய்து டொரொன்டோ போக வேண்டும். போனாலும் கைக்குழந்தையுடன் படத்தை மனம் ஒன்றி பார்க்க முடியாது. கேஸினோ ராயல் படத்திற்கு சென்றுவிட்டு குழந்தை அழ ஆரம்பித்ததால் தங்கமணி முக்கால்வாசி படத்தை பார்க்க முடியாமல் வெளியே உட்கார்ந்த அனுபவத்திற்கு அப்புறம் ஆங்கில படமும் கட்.

அதனால் இணையத்தில் இருந்து டவுன்லோட் பண்ணி பார்க்க ஆரம்பித்தோம். காரணங்கள் சரியாக இருந்தததால் குற்ற உணர்வு இல்லை (அல்லது குறைவாக இருந்தது).

ஆனால் மிக சமீபத்தில் பலமுறை முயன்றும் தசாவதாரம் பார்க்க முடியவில்லை. (சத்யம் தியேட்டருக்கு சென்று டிக்கெட் இல்லாமல் திரும்பி வந்தது, பணம் செலுத்திய பிறகு இன்டெர்நெட் டிரான்ஸாக்ஷன் ஃபெய்லியர் ஆனது என்று பல தடங்கல்கள்). முடிவாக இன்டர்நெட்டில் தங்கமணி தேடிக் கொடுத்த முகவரியில் இருந்து படத்தை டவுன்லோட் செய்து சென்ற வார இறுதியில் பார்த்தோம்.

படத்தின் விமர்சனம் எப்படி இருந்தாலும் அந்த படத்திற்காக கமல் போட்டிருக்கும் உழைப்பு அபரிமிதமானது என்பது உணர முடிந்தது. நாங்கள் இருவரும் அந்த படத்தை இணையத்தில் பார்த்தததால் அவருக்கு பைசா பிரயோஜனமில்லை என்பதும் என்னை வேதனைப்படுத்தியது. ஸாரி கமல்.

அதனால்தான் படம் குறித்து எந்த பதிவையும் இடவில்லை. நான் ஏன் இப்படி மாறினேன் அல்லது எது இப்படி மாற்றியது என்று பதில் எனக்கு தெரியவில்லை.

பார்க்கலாம். இனி மேலாவது இது போன்ற நேர்மையற்ற செயல்களை நான் செய்யாமல் இருக்கிறேனா என்று. :(