Monday, March 16, 2015

எனக்குள் ஒருவன் : தவறவிடக்கூடாத தமிழ் படம்

முன் குறிப்பு 1: நீங்கள் இன்னும் எனக்குள் ஒருவன் பார்க்கவில்லை என்றால் தியேட்டருக்கு போய் பாருங்கள். ஒரு அற்புதமான அனுபவத்திற்கு நான் உத்திரவாதம்

மு.கு.2: இதன் ஒரிஜினலான கன்னட படம் "லூசியா"வை நான் பார்க்கவில்லை. என் பார்வை முழுக்க தமிழின் எனக்குள் ஒருவனைப் பற்றி மட்டுமே.

*****

கிறிஸ்டோஃபர் நோலன் உலகையே பிரமிப்பில் ஆழ்த்திய "இன்செப்ஷன்" படத்தில் ஒரு காட்சி வரும். கனவுக்குள் கனவு என நான்கு நிலைகளுக்கு செல்வதற்கு தகுந்த சரியான மயக்கமருந்து ஃபார்முலா தேடி ஒருவரிடம் செல்வார்கள். அவர் தன் மருந்தின் வீரியத்தை காட்ட ஒரு அறைக்கு அழைத்துச் செல்வார். அங்கே சுமார் 20 பேர் அந்த மருந்தை எடுத்துக்கொண்டு உறங்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களை அடித்தால் கூட எழமாட்டார்கள்.

அந்த கெமிஸ்ட் "இவர்கள் எல்லாரும் தினம் இங்கே வருவார்கள். காலை எழுந்து சென்றுவிட்டு, மீண்டும் சீக்கிரமாக இங்கே திரும்பி விடுவார்கள்" என்பான்

லியானார்டோ அவரிடம் "திரும்ப தூங்க இங்கே வருவார்களா?" எனக்கேட்க‌

அந்த கெமிஸ்ட் சொல்லும் பதில் "இல்லை, அவர்கள் இங்கே வருவது திரும்ப விழித்தெழ"

அதாவது, அந்த மனிதர்களைப் பொறுத்தவரை  இந்த புற உலகம் வேறு வழியில்லாமல் இருக்கும் இடம். அந்த கனவுலகம்தான் அவர்களைப் பொறுத்தவரை நிஜ வாழ்க்கை, அதைத்தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

"எனக்குள் ஒருவன்" படத்தின் அடிப்படை கதையின் ஒருவரி அந்த கெமிஸ்ட் சொல்லும் பதில்தான்

****

ஒரு தியேட்டரில் டிக்கெட்டில் டார்ச் அடித்து சீட் நெம்பர் பார்த்து சரியான சீட்டில் உக்காரவைக்கும் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் விக்கி என்ற கருப்பு சித்தார்த்திற்கு கிடைக்கும் அற்புத மாத்திரை லூசியா.

மருந்து கம்பெனி நடத்தி வரும் ஜான் விஜய் "இதை போட்டுகிட்டா உனக்கு கனவு வரும், அதுல நீ வாழ நினைச்ச மாதிரி எல்லாம் வாழலாம்" என்று சொல்லி கொடுக்கும் மாத்திரையை போட்டுக்கொண்டு தூங்க, கனவில் ஒரு பெரிய சினிமா ஸ்டாராக விக்னேஷ் என்ற வெள்ளை சித்தார்த். 

அதன்பின் கனவிலும் நிஜத்திலும் என்று பேரலலாக போகும் இரட்டை கதை, இரண்டிலும் ஒரே ஆட்கள் வேறு வேறு பாத்திரங்களாக என்று கடைசி வரை திரைக்கதையில் அதகளம்.

படத்தின் மேக்கிங் அற்புதம். அதிலும் கனவு கருப்பு வெள்ளையிலும் நிஜம் வண்ணத்திலும், அதற்கான காரணங்கள் என்று அசத்தியிருக்கிறார்கள்.

கதையின் மிகப்பெரிய பலமே க்ளைமாக்ஸ் காட்சிகள். படம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகியும் அதிலிருந்து இன்னும் நான் வெளிவரவில்லை.  

இதற்கு மேல் சொன்னால் ஸ்பாயிலர் ஆகிவிடும் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

"ஐ டோன்ட் சீ டமில் மூவிஸ்" என்று சொல்பவர்களும் பார்க்கவேண்டிய படம் இது. 

************

ஸ்பாயிலர் அலெர்ட்: படம் பார்க்காதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம்.

படம் பார்த்தவர்களுக்கு, படத்தோட க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் பிரமிப்பாக‌ இருந்திருக்கும். 

சில வருசங்களுக்கு முன்னால் அமெரிக்க வாழ் பதிவர் நண்பர் ஸ்ரீதர் நாராயணன் கதை வசனம் எழுதி நண்பர் கணேஷ் சந்திரா & அவர் நண்பர்கள் நடித்த ஒரு குறும்படம் "நிமித்தக்காரன்". சுமார் கால்மணிநேரம் ஓடும் இந்த குறும்படமும் கனவுகளைப் பற்றியே பேசுகிறது.

வசனம் அதிகம் இருந்தாலும் பொறுமையாக பார்த்தால், க்ளைமாக்ஸில் ஒரு வாவ் மொமென்ட் உண்டு, முக்கியமாக இதை எனக்குள் ஒருவனுடன் ரிலேட் செய்ய முடியும்.

பி.கு: எனக்குள் ஒருவனின் கன்னட ஒரிஜினலான லூசியா ரிலீஸ் ஆனது ஃபிப்ரவரி 2013. இந்த நிமித்தக்காரன் ரிலீஸ் ஆனது ஏப்ரல் 2011. அதாவது இரண்டு வருடங்களுக்கு முன்பே..





5 comments:

said...

வெண்பூ அண்ணாச்சி,

நினைவில் வைத்துக் கொண்டு இந்த குறும்படத்தைப் பற்றி குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி. நிறைய பழைய நினைவுகளை கிளறிவிட்டது உங்கள் பதிவு.

2009ம் வருடம் பதிவர் சர்வேசன் நடத்திய சிறுகதை போட்டிக்கு எழுதியதுதான் 'நிமித்தகாரன்' கதை. எழுதும்போதே குறும்படமாக எடுக்க வேண்டும் என்ற ஆவலுடன் ட்விட்டரில் எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தேன்.

இப்போது வெற்றிகரமாக முழுநீள படம் எடுத்து தன்னை நிரூபித்து காட்டிய நண்பர் 'கேபிள்' சங்கர் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்திருந்தார். ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை.

அதற்குள் சர்வேசன் கதை போட்டியில் இந்தக் கதை நல்ல கவனம் பெற்றிருந்தது. 'எஸ்ரா 100 சிறுகதைகள்' புகழ் சென்ஷி அண்ணாச்சி, கதையை மிகவும் பாராட்டியதோடு மட்டுமல்லாது அந்த சிறுகதை போட்டியின் நடுவராகவும் பொறுப்பேற்றுக்கொண்டு (இன்னும் இரண்டு நடுவர்களோடு) இந்தக் கதையை முதலாவதாக தேர்ந்தெடுத்தார்.

மற்றொரு நடுவரான வெட்டிப்பையல் பாலாஜி (கூடிய சீக்கிரம் பாலாஜி ஐஏஎஸ்ஸாகப் போகிறவர்), இந்தக் குறும்படமாக்க குழுவிலும் முக்கிய பங்காற்றினார்.

ஆங்கில புத்தாண்டு நிகழ்வையொட்டி, பதிவர் பத்மா அவர்களின் வீட்டில் நண்பர்களுடன் ஒன்று கூடியபோது இந்தக் கதையை குறும்படமாக எடுக்கலாம் என்று பேசினோம். அப்போது நண்பர் DJ குறும்படம் இயக்குவதற்கு தணியாத ஆர்வம் கொண்டிருந்தார். 'தமிழோவியம்' ஆசிரியர் கணேஷ் சந்திரா குறும்பட தயாரிப்பிற்கு முன்வந்தார். மேடை நாடகங்களில் பெரும் அனுபவம் பெற்றிருந்த நண்பர் 'மோகன் ராம்' தன்னுடைய நேரத்தை ஒதுக்கி நடித்துக் கொடுக்க முன்வந்தார். பின்னாளில் கலைஞர் தொலைகாட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் இதே நண்பர்கள் குழு பல குறும்படங்கள் எடுத்து வெளியிட்டிருந்தனர். மேலும் பல நண்பர்கள் நல்லாதரவு தந்து இந்த குறும்படமாக்க முயற்சியை ஊக்குவித்தனர்.

டெக்னிகல் சமாச்சாரங்கள் பலவற்றிலும் ஆரம்ப நிலையில் இருந்த குழுதான். பொறுமையாகவும் விடாமுயற்சியோடும் தொடர்ந்து முழுமையாக செய்தனர்.

பெரும் ஆரவாரத்துடன், இணையத்தில், கிழக்கு பதிப்பக எடிட்டரும், எழுத்தாளருமான பா. ராகவனின் (இப்போதைய 'வாணி ராணி' தொடர் மற்றும் பல்வேறு தொடர்களின் வசனகர்த்தா) அறிமுகத்தோடு யூட்யூபில் வெளியாகி நல்ல வீச்சு பெற்றது.

குறும்படமாக்கம் என்பது எப்பேர்ப்பட்ட கூட்டு முயற்சி என்பதை ஓரளவுக்காவது புரிந்து கொள்ள முடிந்தது.

மீண்டுமொரு நன்றி :-)

said...

ஸ்ரீதர் நாராயணன் அண்ணே,

செம.. இந்த விவரமெல்லாம் எனக்கு தெரியாது. கதை படிச்சிருக்கேன், குறும்படமும் பார்த்திருக்கேன். எனக்குள் ஒருவன் பாத்துட்டு வெளிய வந்ததுமே கூட வந்த நண்பர்ட்ட இந்த படத்தோட முடிவு நிமித்தக்காரனை நினைவுபடுத்துதுன்னு..

உங்க குறும்பட டீம் மொத்தத்துக்கும் பாராட்டுகள் சொல்லிடுங்க.

said...

venpu.. neenga purichikitathu sariya? :)

said...

நிச்சயம் சரியாவே புரிஞ்சிட்டு இருக்கேன்.. நீங்க சொல்ற விசயங்களை பதிவில் பேசுனா அது ஸ்பாயிலர். படம் பார்த்தவங்க மட்டுமே படிக்க முடியும், பாக்காதவங்களுக்கு சஸ்பென்ஸ் போயிடும். என் புரிதலில் பிரச்சினைன்னா தாரளாமா விவாதிக்கலாம்.. :)

said...

Sir. Nan padam parthen. Padam parama mokka. Neenga solra alavukellam padam kandippa illai. Padam padu slow. Kadhai nagarave matingudhu. Kannadathula epadi nu therla but tamil padattha sothappi eduthutanga.enakkul oruvan padu tholvi padam.