Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Monday, March 16, 2015

எனக்குள் ஒருவன் : தவறவிடக்கூடாத தமிழ் படம்

முன் குறிப்பு 1: நீங்கள் இன்னும் எனக்குள் ஒருவன் பார்க்கவில்லை என்றால் தியேட்டருக்கு போய் பாருங்கள். ஒரு அற்புதமான அனுபவத்திற்கு நான் உத்திரவாதம்

மு.கு.2: இதன் ஒரிஜினலான கன்னட படம் "லூசியா"வை நான் பார்க்கவில்லை. என் பார்வை முழுக்க தமிழின் எனக்குள் ஒருவனைப் பற்றி மட்டுமே.

*****

கிறிஸ்டோஃபர் நோலன் உலகையே பிரமிப்பில் ஆழ்த்திய "இன்செப்ஷன்" படத்தில் ஒரு காட்சி வரும். கனவுக்குள் கனவு என நான்கு நிலைகளுக்கு செல்வதற்கு தகுந்த சரியான மயக்கமருந்து ஃபார்முலா தேடி ஒருவரிடம் செல்வார்கள். அவர் தன் மருந்தின் வீரியத்தை காட்ட ஒரு அறைக்கு அழைத்துச் செல்வார். அங்கே சுமார் 20 பேர் அந்த மருந்தை எடுத்துக்கொண்டு உறங்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களை அடித்தால் கூட எழமாட்டார்கள்.

அந்த கெமிஸ்ட் "இவர்கள் எல்லாரும் தினம் இங்கே வருவார்கள். காலை எழுந்து சென்றுவிட்டு, மீண்டும் சீக்கிரமாக இங்கே திரும்பி விடுவார்கள்" என்பான்

லியானார்டோ அவரிடம் "திரும்ப தூங்க இங்கே வருவார்களா?" எனக்கேட்க‌

அந்த கெமிஸ்ட் சொல்லும் பதில் "இல்லை, அவர்கள் இங்கே வருவது திரும்ப விழித்தெழ"

அதாவது, அந்த மனிதர்களைப் பொறுத்தவரை  இந்த புற உலகம் வேறு வழியில்லாமல் இருக்கும் இடம். அந்த கனவுலகம்தான் அவர்களைப் பொறுத்தவரை நிஜ வாழ்க்கை, அதைத்தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

"எனக்குள் ஒருவன்" படத்தின் அடிப்படை கதையின் ஒருவரி அந்த கெமிஸ்ட் சொல்லும் பதில்தான்

****

ஒரு தியேட்டரில் டிக்கெட்டில் டார்ச் அடித்து சீட் நெம்பர் பார்த்து சரியான சீட்டில் உக்காரவைக்கும் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் விக்கி என்ற கருப்பு சித்தார்த்திற்கு கிடைக்கும் அற்புத மாத்திரை லூசியா.

மருந்து கம்பெனி நடத்தி வரும் ஜான் விஜய் "இதை போட்டுகிட்டா உனக்கு கனவு வரும், அதுல நீ வாழ நினைச்ச மாதிரி எல்லாம் வாழலாம்" என்று சொல்லி கொடுக்கும் மாத்திரையை போட்டுக்கொண்டு தூங்க, கனவில் ஒரு பெரிய சினிமா ஸ்டாராக விக்னேஷ் என்ற வெள்ளை சித்தார்த். 

அதன்பின் கனவிலும் நிஜத்திலும் என்று பேரலலாக போகும் இரட்டை கதை, இரண்டிலும் ஒரே ஆட்கள் வேறு வேறு பாத்திரங்களாக என்று கடைசி வரை திரைக்கதையில் அதகளம்.

படத்தின் மேக்கிங் அற்புதம். அதிலும் கனவு கருப்பு வெள்ளையிலும் நிஜம் வண்ணத்திலும், அதற்கான காரணங்கள் என்று அசத்தியிருக்கிறார்கள்.

கதையின் மிகப்பெரிய பலமே க்ளைமாக்ஸ் காட்சிகள். படம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகியும் அதிலிருந்து இன்னும் நான் வெளிவரவில்லை.  

இதற்கு மேல் சொன்னால் ஸ்பாயிலர் ஆகிவிடும் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

"ஐ டோன்ட் சீ டமில் மூவிஸ்" என்று சொல்பவர்களும் பார்க்கவேண்டிய படம் இது. 

************

ஸ்பாயிலர் அலெர்ட்: படம் பார்க்காதவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம்.

படம் பார்த்தவர்களுக்கு, படத்தோட க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் பிரமிப்பாக‌ இருந்திருக்கும். 

சில வருசங்களுக்கு முன்னால் அமெரிக்க வாழ் பதிவர் நண்பர் ஸ்ரீதர் நாராயணன் கதை வசனம் எழுதி நண்பர் கணேஷ் சந்திரா & அவர் நண்பர்கள் நடித்த ஒரு குறும்படம் "நிமித்தக்காரன்". சுமார் கால்மணிநேரம் ஓடும் இந்த குறும்படமும் கனவுகளைப் பற்றியே பேசுகிறது.

வசனம் அதிகம் இருந்தாலும் பொறுமையாக பார்த்தால், க்ளைமாக்ஸில் ஒரு வாவ் மொமென்ட் உண்டு, முக்கியமாக இதை எனக்குள் ஒருவனுடன் ரிலேட் செய்ய முடியும்.

பி.கு: எனக்குள் ஒருவனின் கன்னட ஒரிஜினலான லூசியா ரிலீஸ் ஆனது ஃபிப்ரவரி 2013. இந்த நிமித்தக்காரன் ரிலீஸ் ஆனது ஏப்ரல் 2011. அதாவது இரண்டு வருடங்களுக்கு முன்பே..





Thursday, April 3, 2014

மனிதனுக்குள் ஒரு மிருகம் : The Purge (2013)

ஒரு வருசம் முழுக்க உங்களை மாடு மாதிரி வேலை வாங்கிட்டு அப்ரைசல் நடக்கும்போது "நீங்க இன்னும் நல்லா வேலை செய்யணும்"னு சொல்லி ப்ரோமோசன் குடுக்காத மேனேஜர் உங்களுக்கு இருந்திருக்காரா?

வீட்டுல ஒரு நல்லகாரியம் நடக்கும்போது எப்போதோ நடந்த பகையை அல்லது நீங்க நல்லா வாழ்றீங்கன்ற வெறுப்புல இல்லாத பொல்லாதை சொல்லி அந்த விழா மனநிலையவே கெடுக்குற ஒரு உறவினர் இருந்திருக்காரா?

தினம் தினம் தன் வீட்டு குப்பைகளை உங்க வீட்டு முன்னால கொட்டுற பக்கத்து வீட்டுக்காரர்? கொடுத்த பணத்துக்கு மீதி தராம, கேட்டா உங்களையே திட்டுற கண்டக்டர்? நாலு பேர் முன்னால உங்களை அசிங்கப்படுத்தின யாரோ ஒரு எக்ஸ் ஒய் இசட்?

இந்த மாதிரி ஆட்களைப் பாக்கும்போது உங்களுக்கு என்ன தோணும்? எனக்கு மட்டும் ஒரு வாய்ப்பு கிடைச்சா இவனுங்களை எல்லாம் கொலையே பண்ணிடுவேன்னு தோணுமில்லையா? உண்மையாவே அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சா என்ன செய்வீங்க, நிஜமாவே கொலை செய்வீங்களா?

சொன்னாலும் சொல்லாட்டாலும் நீங்களும் நானும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சா என்ன செய்வோம்னு யாருக்கும் தெரியாது. நமக்குள்ள இருக்குற மிருகத்தோட உண்மையான முகம் அப்பதான் தெரிய வரும். அந்த மிருகத்தோட வக்கிரம் நமக்கு இப்ப தெரியுமான்றதே சந்தேகம்தான்

"அடுத்த 12 மணிநேரத்துக்கு நீ என்ன வேணும்னாலும் செஞ்சிக்கலாம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு எல்லாமே. உன்மேல எந்த வழக்கும் போடப்படாது. போலீஸ், மருத்துவ உதவிகள் எதுவுமே அந்த 12 மணிநேரத்துக்கு வராது"ன்ற மாதிரியான ஒரு உத்தரவாதம் கிடைச்சா நம் ஆழ்மனசுல இருக்குற வக்கிரம் எல்லாத்தையும் நிறைவேத்திக்குவோம் இல்லையா?

அதுதான் 2013ல வந்த "The Purge" படத்தோட கதை





*****

வேலை இல்லா திண்டாட்டம், குற்றங்களின் எண்ணிக்கைன்னு அமெரிக்கா மிகப்பெரிய பிரச்சினைகளை சந்திக்குது. இதை சரி செய்ய அமெரிக்காவின் புதிய நிறுவனர்கள் (New Founding Fathers) ஒரு புதிய ஐடியாவை செயல்படுத்துறாங்க.

அதன்படி, வருசத்துல ஒருநாள் மாலை 7 மணிமுதல் அடுத்த நாள் காலை 7 மணி வரைக்கும் "பர்ஜ்" அப்படின்ற ஒரு நிகழ்வுக்காகன்னு ஒதுக்குறாங்க. இந்த 12 மணிநேரத்துல எந்த சட்டமும் கிடையாது. பெரிய அழிவை ஏற்படுத்துற பயங்கர ஆயுதங்கள் மற்றும் அரசின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களை தாக்க மட்டும் தடை. மற்றபடி துப்பாக்கி, கத்தி இதை வெச்சி யாரையும் கொல்லலாம், காயப்படுத்தலாம், கற்பழிக்கலாம், எதுவுமே தப்பில்லை.

இதன் மூலமா மக்கள் தங்கள் ஆழ்மன வக்கிரங்களை இறக்கி வெச்சிட்டு மற்ற 364 நாட்களிலும் வேலைகளில் கவனம் செலுத்துறதால வேலை இல்லா திண்டாட்டம், குற்றங்களின் எண்ணிக்கை எல்லாம் குறைஞ்சி, நாடே சுபிட்சமாகிடுது.

பெரும்பாலும் இதனால பாதிக்கப்படுறது அதிக வசதியில்லாத ஏழை எளிய மக்கள்ன்றதால "இது அப்படிப்பட்டவங்களை ஒழித்துக் கட்டுறதுக்காகவே நடத்தப்படுற விசயம்"னு ஏகப்பட்ட எதிர்ப்பு இருந்தாலும் வருடா வருடம் இது நடத்தப்படுது. நேரடி ஒளி/ஒலிபரப்பும் செய்யப்படுது

****


அப்படிப்பட்ட ஒரு பர்ஜ் இரவில் படத்தின் ஹீரோ ஜேம்ஸ், தன் மனைவி, மகன், மகளுடன் தன் வீட்டில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளே இந்த படத்தின் கதை.

ஜேம்ஸ், வீட்டிற்கான செக்யூரிட்டி சிஸ்டம்களை விற்கும் சேல்ஸ்மேன். பர்ஜ் இரவில் இருந்து உயிர் தப்பிக்க பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் செக்யூரிட்டி சிஸ்டம்களை பொருத்துவதால சில ஆண்டுகளிலேயே மிகப்பெரிய பணக்காரன் ஆனவன்.

பர்ஜ் இரவிற்காக உட்சபட்ச பாதுகாப்பு சாதனங்களை நிறுவி, தன் வீட்டிற்குள் பூட்டிக்கொண்டு இருக்கிறான், அப்போது வெளியே மற்றவர்களிடம் சிக்கி அடிபட்டு உயிர்தப்பிக்க ஓடி வரும் ஒருவனை ஜேம்ஸின் மகன் கதவைத் திறந்து வீட்டிற்குள் அனுமதிக்கிறான். கதவு மறுபடி மூடப்பட்டாலும், அந்த மனிதனை தேடி வரும் ஆயுதம் தாங்கிய குழு, அவனை ஒப்படைக்கா விட்டால் வீட்டில் எப்படியாவது நுழைந்து அந்த மூன்றாம் மனிதனையும், ஜேம்ஸ் குடும்பத்தாரையும் கொல்வோம் என்று கொக்கரிக்க, ஜேம்ஸ் அதை எப்படி எதிர் கொள்கிறான் என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

*****

வெறும் 3 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, விமர்சகர்களால் பெரிய அளவில் பாராட்டப்படா விட்டாலும், இந்த படம் சுமார் 90 மில்லியன் டாலர் அளவுக்கு வசூல் செய்திருப்பதே இதை மக்கள் விரும்பியதற்கு சாட்சி.

அதனாலேயே இதன் அடுத்த பாகம் ஜூலை 2014ல் வெளிவர இருக்கிறது.

ஆக்சன் / த்ரில்லர் பட ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம் இது.

http://en.wikipedia.org/wiki/The_Purge

Monday, October 20, 2008

போடுறா.. சினிமா தொடர் பதிவை...

ஏறத்தாழ தமிழ்பதிவு எழுதுற பதிவர்கள்ல 90% பேர் ஏற்கனவே எழுதிட்ட இந்த தமிழ் சினிமா தொடர் விளையாட்டுல என்னையும் அழைத்த பரிசல், நர்சிம் மற்றும் துக்ளக் மஹேஷ் மூணு பேருக்கும் நன்றி.

முடிஞ்ச வரைக்கும் எல்லா கேள்விக்குமான பதிலையும் ஷார்ட் & ஸ்வீட்டா (இதுக்கு தமிழ்ல என்னப்பா?) குடுக்க‌ முய‌ற்சி ப‌ண்றேன்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
என் சின்ன வயதில் நாங்கள் சேலம் அஸ்தம்பட்டியை அடுத்த ஹவுசிங் போர்டில் இருந்த போது அருகிலுருந்த பச்சியம்மாள் தியேட்டருக்கு சென்றது மங்கலாக நினைவில் இருக்கிறது. பெயருடன் நினைவில் நிற்கும் படம் என்றால் 20 வருடங்களுக்கு முன் பாப்பிரெட்டிபட்டியில் ஜெயஷ்ரீ திரையரைங்கில் பார்த்த "இளமைக் காலங்கள்". ஈரமான ரோஜாவே பாடல் மட்டும் இன்னும் நினைவில் இருக்கிறது. என்ன உணர்ந்தேன் என்று நினைவில்லை.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
என் மகனை வைத்துக் கொண்டு மூன்று மணிநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது முற்றிலும் முடியாத காரணம், அதனால் ஆசை இருந்தாலும் அதிகமாக தியேட்டரில் படம் பார்ப்பதில்லை. டிரைவ் இன் தியேட்டரை அரங்கு என்று சொல்லமுடியுமா என்று தெரியாது. சென்னை பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டரில் பார்த்த சந்தோஷ் சுப்பரமணியம். என் தங்கமணியின் நண்பி குடும்பத்துடன் இரவு காட்சிக்கு சென்றிருந்தோம். காருக்கு முன்னால் பெரிய பெட்ஷீட்டை விரித்து குழந்தையை தூங்க வைத்துவிட்டு நாங்களும் அவனுடனே படுத்துக்கொண்டு ஜாலியாக பார்த்த படம். படமும் பிடித்திருந்தது. ஒரு திருப்தியான ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியுடன் திரும்பினோம். அதற்கு முன்னால் பார்த்தது Die Hard 4 (சேலம் சங்கீத் தியேட்டரில்)

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
தசாவதாரம்.. இதுகுறித்து ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
தாக்கிய என்பதற்கு மிகவும் பிடித்த என்று எடுத்துக் கொள்ளலாம் என்றால் பல படங்களை சொல்ல முடியும், பாட்ஷா, உள்ளத்தை அள்ளித்தா, கேப்டன் பிரபாகரன், Armour of God, Independance Day, அபூர்வ சகோதரர்கள் என்று கலவையாக இருக்கும். ஜேம்ஸ்பாண்டாக பியர்ஸ் ப்ராஸ்னன் நடித்த நான்கு படங்களுமே மிகவும் பிடிக்கும்.

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
அட.. தமிழ் சினிமாவுக்கும் அரசியலுக்கும் இருக்கும் சம்பந்தமே என்னை ரொம்ப கடுப்பாக்கி தாக்குகிறது, இதில் எதை சொல்ல...

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
சமீபத்தில் தசாவதாரம் படத்தின் சில காட்சிகள். நிச்சயமாக ஹாலிவுட் அளவிற்கு சொல்ல முடியாதெனினும், கண்டிப்பாக தமிழ் சினிமாவை பொறுத்தவரை இது மிக அதிகம்தான். முக்கியமாக மருத்துவமனை காட்சி, அத்தனை கமல்கள் ஒரே நேரத்தில் காட்டப்படுவதில் ஒரு சிறு பிசிறும் இல்லாமல் இருக்கும். கே.எஸ். ரவிக்குமார் ஒரு பேட்டியில் அந்த காட்சியில் மட்டும் 27 லேயர் இருந்ததாக சொன்னார்.

அப்புறம், எந்த கிராமத்து காதலர்களா இருந்தாலும் டூயட் பாட எல்லா வெளிநாட்டுக்கும் போய்ட்டு பாட்டு முடிந்ததும் சரியா கிராமத்துக்கே திரும்பி வர்றது, அந்த தொழில்நுட்பம் என்னை ரொம்ப தாக்கிடுச்சி..

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
குமுதம், விகடன், வாரமலர், முரளிகண்ணன் இவ்வளவுதான் நம்ம சினிமா பத்தின வாசிப்பு. கிசுகிசுக்களை படிச்சி அது யாரை பத்தினதுன்னு டீ கோட் பண்றதுல இன்ட்ரெஸ்ட் அதிகம்.. ஹி..ஹி..

7.தமிழ்ச்சினிமா இசை?
என் ப்ரொஃபைலில் சொல்லியிருப்பேன், "ராசா இசைன்னா சோறு தண்ணி கூட வேண்டாம்" அப்படின்னு. இளையராஜாவின் இசையை ரொம்ப பிடிக்கும்னாலும் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களும் நல்லா இருந்தா ரசிப்பேன். மிக மிக பிடித்த குரல், ஆண்களில் எஸ் பி பி, பெண்களில் சுசிலா & சித்ரா. என்னோட டாப் 5:

1. இளைய நிலா பொழிகிறது : பயணங்கள் முடிவதில்லை : இளையராஜா : எஸ் பி பி
2. இது ஒரு பொன் மாலைப் பொழுது : நிழல்கள் : இளையராஜா : எஸ் பி பி
3. உதய கீதம் பாடுவேன் : உதயகீதம் : இளையராஜா : எஸ் பி பி
4. காதல் வந்தால் சொல்லியனுப்பு : இயற்கை : வித்யாசாகர் : திப்பு
5. காதல் ரோஜாவே : ரோஜா : ஏ ஆர் ரஹ்மான் : எஸ் பி பி

(அட அஞ்சுமே ஆண் குரல் சோலோ பாடல்கள்)

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
சின்ன வயதிலிருந்தே ஆங்கில படங்கள் பார்ப்பதுண்டு, ஜாக்கிசானை பிடிக்கும். ஹாலிவுட் படங்களில் நல்ல ஆக்சன் படங்களை விரும்பி பார்ப்பேன். மிக அரிதாக மற்றவகை ஆங்கிலப் படங்களையும் பார்ப்பதுண்டு. அப்படி மனதை கொள்ளை கொண்ட படம் "50 First Dates". ஏன் இன்னும் அதை தமிழில் யாரும் காப்பி அடிக்கவில்லை என்று தெரியவில்லை.

ஹைதராபாத்தில் 3 வருடம் இருந்ததால் கொஞ்சம் தெலுங்கு படங்களும் பார்த்ததுண்டு. ரசித்து பார்த்தது "சங்கர்தாதா எம்.பி.பி.எஸ்". வசூல்ராஜாவை விட பலமடங்கு நன்றாக இருந்ததாக எண்ணம்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இப்போதைக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இரண்டு வருடம் கழித்து இந்த கேள்விக்கான பதில் "ஆமாம். என் நண்பர்கள் பரிசல், லக்கிலுக், அதிஷா ஆகியோர் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்" என்பதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தொழில்நுட்ப ரீதியாக நல்ல வளர்ச்சி தெரிகிறது. ஆனால் 30 வருடத்திற்கு முன்பு இருந்ததைப் போல ஒரு சாதாரண மனிதனால் இந்த துறையில் இன்று நுழைய முடியாது என்ற உண்மைதான் முகத்தில் அறைகிறது. பணம், அரசியல் பின்புலம், பிரபலத்தின் வாரிசு என்ற மூன்றில் ஒன்றாவது இருந்தால்தான் சினிமாவில் நுழைய முடியும் என்பதுதான் தமிழ்சினிமாவின் வளர்ச்சியை சந்தேகப்பட வைக்கிறது.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
இந்த நினைப்பே வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து. சென்னையில் இருக்கும் நமக்கு பீச், தீம் பார்க் என்று பல பல பொழுது போக்குகள். ஆனால் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருக்கும் நடுத்தர, ஏழை மக்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சினிமா மட்டுமே. அதனால் அது இல்லாத தமிழகத்தை நினைத்துப் பார்ப்பது கூட கடினமாக இருக்கிறது.

*****

எனக்கு தெரிஞ்ச எல்லா பதிவர்களும் இந்த தொடர்ல ஏற்கனவே எழுதிட்டதால நான் யாரையும் கூப்பிட முடியல. தொடர் விளையாட்டுல லேட்டா பதிவு போட்டா இதுதான் பிரச்சினை. அதனால நான் யாரையும் கூப்பிடல. எல்லாரும் சந்தோசமா இருங்க.. :))))