Showing posts with label துணுக்ஸ். Show all posts
Showing posts with label துணுக்ஸ். Show all posts

Monday, October 8, 2012

ஹிஸ் நேம் ஈஸ் பாண்ட், ஜேம்ஸ் பாண்ட்

இந்தியர்களுக்கு நவம்பர் மத்தியில் தீபாவளி என்றால் உலகெங்கும் இருக்கும் ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களுக்கு நவம்பர் இரண்டாம் தேதியே தீபாவளி அட்வான்ஸாக வந்துவிடுகிறது.

கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டு, பின் படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, அதன் பின் மீண்டும் துவங்கப்பட்டு நவம்பர் 2ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள பாண்டின் அடுத்த படமான “ஸ்கைஃபால்”ஐ ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.

பாண்ட் மீது நடக்கும் கொலைமுயற்சி, அவர் இறந்துவிட்டதாக அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் போது அவர் மீண்டு வருவது என்று கதையின் ப்ரீல்யூடை ட்ரெய்லரில் காட்டி எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறார்கள். லண்டன் ஒலிம்பிக் துவக்க விழாவில் இங்கிலாந்து ராணியை பாண்ட் (டேனியல் க்ரைக்) அழைத்து வருவது போல் காட்டியது இந்த படத்திற்கான அட்டகாசமான விளம்பரம்.

இதன் அடுத்த கட்டமாக, இங்கிலாந்தின் புகழ்பெற்ற பாடகி Adele பாடியுள்ள Skyfall தீம் பாடல் வெளிவந்துள்ளது. வழக்கமான ஜேம்ஸ் பாண்ட் படங்களின் டைட்டில் பாடல்களை நினைவுபடுத்தும் அதேநேரம் நம் காதுகளுடன் மனதையும் குளிர்விக்கும் குரலில் அசத்தியிருக்கியிறார். யூ ட்யூபில் அதன் வரிகளுடன் கேட்டு மகிழுங்கள்.


*******

Monday, December 26, 2011

ஒரு காதல்கதையும் அடைய முடியாத நான்காம் இலக்கும்

படிக்க ஆரம்பிக்கும் முன் ஒரு கேள்வி: பெரிய விமான நிறுவனங்களில் விமானம் ஓட்டும் ஒரு பைலட்டின் ஆரம்ப சம்பளம் எவ்வளவு?

சென்ற வாரம் பொழுது போகாமல் ரீடரில் படிக்காமல் வைத்திருந்த பதிவுகளை படித்துக் கொண்டிருந்தபோது வினவின் பக்கங்களில் ஒரு பதிவின் தலைப்பே ஈர்த்தது. மைக்கேல் மூரின் “Capitalism - A Love Story" என்ற ஆவணப்படத்தைப் பற்றி பதிவு அது. ஏற்கனவே மைக்கேல் மூரின் ”ஃபாரன்ஹீட் 9/11” படம் பார்த்திருந்ததால் மைக்கேல் மூர் மீதிருந்த மரியாதையால் அந்த படத்தை டவுன்லோடி பார்க்க ஆரம்பித்தேன்.

ஒவ்வொரு முறை நம் அரசியல்வாதிகளை திட்டும் போதும் “அமெரிக்க அரசியல்வாதிங்கள பாருங்க, எவ்ளோ தொலைநோக்குப் பார்வை அவங்களுக்கு. எத்தனை போர்கள் எதுக்கு பண்ணுறானுங்க, அவங்க நாடு நல்லா இருக்கணும்னுதானே, அமெரிக்கர்கள் குடுத்து வெச்சவங்க” என்ற ரீதியில் பேசிக் கொண்டிருக்கிறோம்.

”ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். அமெரிக்க நிறுவனங்கள் எந்த அளவுக்கு அரசின் துணையுடன் மற்ற நாடுகளை சீரழிக்கின்றன, அதற்கு அவர்கள் கையாளும் தந்திரங்களும் மோசடிகளும் அதிர்ச்சி அடைய வைக்கும். ஆனால் அத்தனையும் தன் நாட்டு மக்களின் நலனுக்காக செய்யப்படுவது என்று நம்மை தேற்றிக் கொள்ளும்முன் பார்க்க வேண்டிய படம் “முதலாளித்துவம் - ஒரு காதல் கதை” என்ற மைக்கேல் மூரின் ஆவணப்படம்.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை எப்படி அமெரிக்க நிறுவனங்களும், வால் ஸ்ட்ரீடும் தன் சொந்த நாட்டு மக்களை சூறையாடுகின்றன, 99 சதவீத மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து 1 சதவீத உயர்தட்டு மக்களை காப்பாற்ற என்ன என்ன செய்கின்றன என்பதை ஆதாரங்களுடன் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக விளக்கிக் கொண்டே போகிறார்.

அதில் ஒன்றுதான் மேலே சொன்ன பைலட் சம்பளம். அமெரிக்காவிற்கு வேலைக்கு வரும் எந்த சாஃப்ட்வேர் ஆளும் குறைந்தது வருடத்திற்கு 40,000 டாலர்கள் சம்பளம் பெற முடியும். ஓரளவு திறமை இருந்தால் 60லிருந்து 70ம் தனியாக கன்சல்டண்ட்களாக மாறினால் 100 ஆயிரம் டாலர்களையும் சம்பாதிக்க முடியும். ஆனால் அமெரிக்காவின் பெரிய விமான நிறுவனங்களில் வேலை செய்யும் பைலட்களின் சம்ப்ளம் 15,000 டாலர்களில் மட்டுமே ஆரம்பிக்கிறது. 20,000 என்பது சராசரி. அதாவது மாதம் 1,500 டாலர் அளவிற்கு.

வேலையாட்களுக்கு குறைந்த சம்பளம் தருவதன் மூலம் கொள்ளை லாபம் அடிப்பது மட்டுமல்லாமல், தனியார் சிறைச்சாலை பலன் பெற நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்து சின்ன தவறு செய்யும் சிறுவர் சிறுமிகளையும் பல மாதங்கள் சிறையில் அடைப்பது, ஒவ்வொரு நிறுவனமும் தன் வேலையாட்களின் மீது அவர்களின் குடும்பங்களுக்கேத் தெரியாமல் இன்ஸ்யூரன்ஸ் எடுத்து அவர்களின் சாவிலும் பணம் பண்ணுவது, வீட்டுக்கடன் வட்டி கட்ட முடியாமல் வீட்டை விட்டு வெளியேறும் குடும்பத்தினரையே அந்த வீட்டை குறைந்த காசுக்கு சுத்தம் பண்ணித் தர சொல்வது, அமெரிக்க அதிபரைச் சுற்றி பெரும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களே இருப்பது, அவர்கள் எடுக்கும் முடிவுகளே நாடாளுமன்றத்தில் எப்படியாவது நிறைவேற்றப்படுவது என்று உச்சபட்ச கொடுமைகளை காட்டும்போது, நம்ம ஊரே பரவாயில்லடா என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

அமெரிக்காவின் இன்னொரு முகம் தெரிய அவசியம் பார்க்கப்படவேண்டிய படம் இது

*********

இந்த வாரம் நான் பார்த்த இன்னொரு படம் மேற்சொன்னதிற்கு முற்றிலும் மாறுபட்ட ஆக்சன் திரைப்படம். டாம் க்ரூஸின் பல படங்களைப் பார்த்திருப்பதாலும் இதற்கு முந்தைய மூன்று Mission Impossible படங்களும் திருப்தியான ஆக்சன் மசாலாவாக இருந்ததாலும் இதன் நான்காம் பாகத்தை தவறவிட வேண்டாம் என்று கடந்த சனிக்கிழமை சென்றிருந்தேன்.

டிஜிட்டல் ப்ரொஜெக்சன், டிடிஎஸ், டால்பி என்று சவுண்ட் எஃபக்ட் என்று கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும் சினிமா தொழில்நுட்பத்தின் தற்போதைய உச்சம் என்று IMAX தியேட்டர்களை சொல்லலாம். சுமார் 80 அடி உயரம் மற்றும் அகலத்துடன் மிகப்பெரிய ஏறத்தாழ சதுரமான திரை, 12 ஆயிரம் வாட்ஸ் சவுண்ட் சிஸ்டம், 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஸ்பீக்கர்கள் என்று படம் பார்ப்பதை முற்றிலும் புதிய அனுபவமாக மாற்றவல்லவை இந்த தியேட்டர்கள்.

அதனால் இந்த முறை படத்தை IMAXல் பார்க்கலாம் என்று முடிவு செய்து பார்த்தேன். படத்தின் முக்கிய காட்சிகளான துபாயில் நடக்கும் நிகழ்வுகள் பெரும்பாலும் IMAX கேமிராவிலேயே எடுக்கப்பட்டதால் படம் கலக்கலாக இருந்தது. படத்தின் மற்ற பகுதிகள் 70 எம் எம் ல் எடுக்கப்பட்டதால் மேலும் கீழும் இடம் விட்டு பாதி திரை அளவுக்கே தெரியும் காட்சிகள், ஸ்பெஷல் கேமிராவில் எடுக்கப்பட்ட காட்சிகள் வரும்போது முழுத்திரையிலும் விரியும்போது விசிலடிக்கத் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி பெங்களூர் சன் நெட்வொர்க் வளாகத்தில் எடுத்திருப்பதும், பெங்களூர் மந்த்ரி மால் வளாகம் முன் சில காட்சிகளும் வருவது நம் சினிமா மார்க்கெட்டிற்கு ஹாலிவுட் தர ஆரம்பித்திற்கும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

மசாலாப்பட ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம், உங்கள் ஊரில் IMAX இருந்தால் நிச்சயம் IMAXல் பார்க்கப்படவேண்டிய படம்.

Monday, February 22, 2010

கொஞ்சம் சினிமா, கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் கோபம்

கடந்த ஒரு மாதத்திற்குள் நான் பார்த்த இரண்டு தமிழ்ப்படங்கள் தமிழ் சினிமா ஒரு தேவையான திருப்பத்தைக் கடந்திருப்பதைக் காட்டுவதாகத் தோன்றியது. இரண்டிலும் பெரிய ஹீரோக்கள் இல்லை, ஆனாலும் பேசப்பட்ட படங்கள்.

முதலில் தமிழ்ப்படம். இத்தனை வருடங்களாக தமிழ் சினிமாவில் பார்த்து பார்த்து சலித்த அத்தனை விசயங்களையும் அழகாக ஒரு கதைக்குள் கோர்த்து மாலையாக்கி இருக்கிறார்கள். தாலி சென்டிமென்ட் மட்டும் மிஸ்ஸிங், எப்படி மிஸ் செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆச்சர்யமான விசயம் நம் மக்கள் அந்த படத்தை எதிர்கொண்ட விதம். தியேட்டருக்குள் நுழையும் ஒவ்வொருவரும் சிரிக்கத் தயாராக இருக்கிறார்கள், சிரிக்கிறார்கள், சிரிக்கிறார்கள், சிரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு பேராசியர் ஞான சம்பந்தன் குறித்து சுஜாதா சொன்னது நினைவுக்கு வருகிறது. அவர் பேச ஆரம்பித்தவுடன் நான்கைந்து ஜோக்குகளை சொல்லி தயார்படுத்தி விடுவார். அதன்பின் அவர் "இன்னிக்கு வெள்ளிக்கிழமை" என்று சொன்னாலும் நாம் சிரிப்போம் என்று சொல்வார். இந்த படமும் அதே வகைதான். ஹாட்ஸ் ஆஃப் அமுதன் & டீம்..


அடுத்த படம் நாணயம். தமிழ்ப்படத்திற்கு முற்றிலும் எதிர் வகையான சீரியஸ் டைப் படம். எஸ்.பி.பி தயாரிப்பில் வந்திருக்கும் இந்த படத்தின் ஹீரோ பிரசன்னா உலகின் பாதுகாப்பான வங்கி ஒன்றை வடிவமைக்க அவரை ப்ளாக்மெயில் செய்தே அந்த வங்கியை சிபி கொள்ளையடிக்க முயல்வதுதான் கதை. நல்ல திரைக்கதை, ஆங்காங்கே திடுக்கிடும் திருப்பங்கள் என்று நல்ல திரைப்படம்.

விளம்பரம் சரியாக இல்லாததும், அவ்வப்போது ஸ்பீட் ப்ரேக்கர் போடும் தேவையில்லாத அளவுக்கதிமான பாடல்களும் படத்தின் மைனஸ் பாயிண்ட்ஸ். ஜேம்ஸ் வசந்தன் இசையில் "நான் போகிறேன் மேலே மேலே" பாடல் கலக்கல் மெலடி, லேசான இளையராஜா டச்சுடன் இருக்கும் இந்த பாடலில் எஸ்.பி.பி.யின் குரல்.... ம்ம்ம்ம்... ரோஸ் ஈஸ் எ ரோஸ்..

***

சென்ற வார இறுதியில் வீட்டிற்கு வந்திருந்த உறவினர்களுடன் மாமல்ல‌புரம் சென்றிருந்தோம். உலகம் எல்லாம் ரிசஸனில் அடிபட்டாலும் ஈ.சி.ஆர்.ல் மட்டும் வளம் கொழிப்பது கொஞ்சமும் குறைந்ததாக தெரியவில்லை. பங்களாக்களும் பண்ணை வீடுகளும் மட்டுமல்ல, மாமல்ல‌புரம் சென்று சேர்ந்த ஒரு மணி நேர பயணத்தில் பார்த்த வாகனங்களில் பெரும்பாலானவை மெர்சிடிஸ், பி.எம்.டபிள்யூ, ஹையர் என்ட் ஹோண்டோ, டொயோட்டோ கார்கள்தான். ஒருவேளை ஈ.சி.ஆர்.க்கு மட்டும் ரிசஸன் இல்லையோ?

***

மாமல்ல‌புரத்தில் ஐந்து ரதம் பகுதிக்கு செல்ல நாங்கள் சென்றிருந்த அதே சமயம் (பிப்ரவரி 20 மதியம்) இரண்டு அரசுப் பள்ளிக்கூடங்களில் இருந்து மாணவ மாணவிகள் அழைத்து வரப்படிருந்தனர். நாங்கள் நுழைவுச்சீட்டு வாங்க வரிசையில் நின்றிருந்தபோது அவசர அவசரமாக வந்த இருவர் என்னையும் தாண்டிப் போய் கவுன்ட்டரில் டிக்கெட் வாங்க முற்பட்டனர். இருவரும் அந்த மாணவர்களுடன் வந்த ஆசிரியர்கள். கடுப்பான நான் "வரிசையில் வாங்க, நீங்க எல்லாம் டீச்சர்ஸ்தான, குழந்தைகளுக்கு நல்ல எக்ஸாம்பிள் செட் பண்ணுங்க" என்று கொஞ்சம் சத்தமாகவே திட்டினேன். என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

ஒருவர் மட்டும் பின்வாங்க இன்னொருவர் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆசிரியருக்கு உண்டான கடமை உணர்ச்சியில், மாணவர்களை வழிநடத்தணும் என்ற உங்க கடமைய ஆத்துலைன்னா கூட பரவாயில்ல, அடுத்தவன் திட்டுறானே என்ற உணர்ச்சி கூடவா இருக்காது? :(

இனிமேல் இங்கிலாந்தில் குடியுரிமை பெற விரும்பும் மற்ற நாட்டவர்கள் 'வரிசையில் நிற்பது' போன்ற இங்கிலாந்து நாட்டவர்களின் அடிப்படை ஒழுக்கங்களை பின்பற்ற வேண்டியது முக்கியம் என்று அந்த நாட்டு அரசு சென்ற வாரம் கூறியிருந்தது முற்றிலும் சரி.

டிக்கெட் வாங்கிக் கொண்டு சிற்பங்களைப் பார்க்கச் சென்றபோது அதைவிட பெரிய அதிர்ச்சி. அங்கே அரசு பள்ளி யூனிஃபார்மில் வந்திருந்த மாணவர்களுடன் பத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்களின் கைகளையும் பிடித்துக் கொண்டு கலர் உடையில் அவர்களின் குழந்தைகள். ஒரு ஆசிரியர் கூட மாணவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. இவர்கள் எல்லாம் வருவதே மாணவர்களை கவனித்துக் கொள்ளதான் என்பதுகூடவா தெரியாது இல்லை புரியாது.

அரசு அலுவலர்களுக்கே உண்டான அலட்சியம், அரசு பணத்தில் தங்கள் தேவைகளை கவனித்துக் கொள்வது எல்லாமே ஒரு கட்டத்தில் பழகி விட்டாலும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் மனப்பான்மை நான் படித்தபோது இருந்ததை விட இன்னும் மோசமாகி இருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. இது நல்லதல்ல என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை.

ஒன்று மட்டும் வெட்ட வெளிச்சம். எதிர்கால இந்தியாவின் எந்த நல்ல தூணும் அரசுப் பள்ளிகளில் இருந்து வரப்போவதில்லை, வர வாய்ப்பிருந்தாலும் இந்த மாதிரி ஆசிறியர்கள் விடப்போவதில்லை.

Monday, August 10, 2009

என்னவோ போங்க சார்!!!

ஏறத்தாழ ரெண்டு மாசமாகுது பதிவு போட்டு. ஜூலை மாசம் முழுசும் ஒரு பதிவு கூட போட முடியலை. முக்கியமான காரணம் ஆபிஸ்ல ப்ளாக்ஸை(Blogs) ப்ளாக்(block) பண்ணிட்டாங்க. ஹி..ஹி.. ரொம்ப ஓவராத்தான் ப்ளாக் படிச்சிருக்கேன் போல, கடுப்பாகிட்டாங்க. அதனால என்னோட ப்ளாக்கையே என்னால படிக்கமுடியல.

இருக்குற ஒரே வழி ரீடர்தான், அதிலயும் பதிவுகளை படிக்க மட்டும்தான் முடியும், பின்னூட்ட முடியாது. கஷ்டம்தான், வீட்டுல என்னோட பர்சனல் லேப்டாப்பும் என் பையன் கைவண்ணத்துல புட்டுகிச்சி, அதனாலதான் கொஞ்சம் லாங் கேப், அப்பப்போ பின்னூட்டம் மட்டும் போட்டுகிட்டு இருக்கேன். பாக்கலாம் மாசம் ஒரு பதிவாவது போட முடியுதான்னு. "போட்டுட்டாலும்...." அப்படின்றீங்களா?? என்னவோ போங்க சார்!!!

***************

பதிவர் முரளிகண்ணனை ரொம்ப நாளா காணோம், கண்டுபிடிச்சி குடுக்குறவங்களுக்கு என்ன பரிசு குடுக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன். :)

அதேபோல கொஞ்சம் அதிகமாவே மீள்பதிவுகள் போடுற நண்பர் கார்க்கிக்கு பப்ளிக்கா ஒரு குட்டு.

சமீபத்தில் நான் ரொம்ப ரசிச்ச பதிவு நையாண்டி நைனாவோட எதிர் கவுஜகள். தபூ சங்கர் பாணி நான்கு வரி காதல் கவிதைகளை கிண்டல் அடிச்சி இவர் போடுற பதிவுகள் முற்றிலும் புதிய வகை எதிர்க்கவுஜகள். படிச்சவுடனே வாய்விட்டு சிரிக்க வைக்குது. பாராட்டுகள் அவருக்கு.

அதேபோல் நண்பர் நர்சிம். திரட்டிகளில் இருந்து விலகுன பின்னால இவரோட படைப்புகள்ல ஒரு வேகம், வித்தியாசத்தைக் காட்டுற முனைப்பு எல்லாம் தெரியுது. நடந்த பிரச்சினைகளை ஏணிப்படியா உபயோகிச்சிகிட்ட அவரோட திறமைக்கு ஒரு சல்யூட். அதனால அவரை இனிமே திரட்டிகள் உள்ளாறயே விட வேணாம்னு சொல்றியாடான்னு கேக்குறீங்களா? என்னவோ போங்க சார்!!!

***************

நண்பர் ஓசை செல்லா புதுசா ப்ளாக்சாய் அப்படின்னு ஒரு தளம் ஆரம்பிச்சிருக்காரு. முதல் பார்வையில ஒரு வித்தியாசமான ப்ளாக் அக்ரிகேட்டர் மாதிரி தெரியுது. அவரது முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்.

அதுக்காக அவர் அனுப்பிய மெயிலில் தவறுதலாக எல்லா மெயில் ஐடிகளையும் டூ அட்ரஸிலேயே போட்டுவிட அதற்கு எல்லோரும் "ரிப்ளை டூ ஆல்" போட, அந்த அட்ரஸ்களை எடுத்து சிலர் அட்வர்டைஸ்மென்ட் அனுப்ப என்று ஒரே களேபரம். நான் போய் "ரிப்ளை டூ ஆல்" போடாதீங்க, அட்வர்டைஸ்மென்ட் அனுப்பாதீங்கன்னு சொன்னவுடனே "நீ என்ன பெரிய பில்கேட்ஸா?" என்ற ரீதியில் வந்த பதில்களில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை.

அந்த பதிலை அனுப்பிய புத்திசாலிகள் மன்னிக்கவும் அதிபுத்திசாலிகள் இருக்கும் இடத்தில் என்னை போன்ற கோயிந்துகளும் இருப்பார்கள் என்பது புரியாமல் "உன் டவுசரை அமுக்குவேன்" என்ற ரீதியிலான மின்னஞ்சல்கள் அனுப்பினால் நான் பயந்துவிட மாட்டேனா? அது கூடவா சார் உங்களுக்குத் தெரியாது? என்னவோ போங்க சார்!!!

****************

உரையாடல் போட்டியில் வென்ற அனைவருக்கும் வாழ்த்துகள். வெற்றி பெற்ற இருபது கதைகளையும் படிச்சிட்டேன், அதனால தைரியமா வாழ்த்துவேன். :)

எதிர்பார்த்தது போலவே முடிவில் சில ஆச்சர்யங்கள். கண்டிப்பாக பரிசு பெறும் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில கதைகள் பரிசு பெறாமல் போனது குறித்த விமர்சனங்கள் எழுகின்றன. நண்பர் ஜமால் அழகாக சொல்லியிருப்பதை இங்கே கோடிட்டுக் காட்டுகிறேன்.

//
நண்பர் பைத்தியக்காரன்-சுந்தரின் முடிவு அறிவிப்பில் குறிப்பிட்டதுபோல, இது ஒரு தேர்ந்தெடுப்பு. இது மதிப்பீடு அல்ல. இதில் குறைநிறைகள் இருக்கும். அது தேர்வாளர்களின் தனிப்பட்ட அனுபவம் மற்றும் பயிற்ச்சி சார்ந்தது.
//

இந்த முறை பரிசு பெற்ற கதைகளில் பொதுவான அம்சமாக எனக்குத் தென்படுவது "கட்டுடைப்பு". சரியா சுந்தர்ஜி & பைத்தியக்காரன்?

ஆமா உன் கதை என்னாச்சின்னு கேக்குறீங்களா? முதல்லயே நடுவர்கள் யாருன்னு தெரிஞ்சிருந்தாலாவது அவங்களை பாத்து "நானெல்லாம் இங்க சிறுகதை எழுத்தாளார்னு ஃபார்ம் ஆயிட்டேன்யா, என்னையும் ஜீப்புல ஏத்திக்குங்கய்யா"ன்னு கெஞ்சி கூத்தாடி ஜீப்ல ஏறியிருக்கலாம், கடைசி வரைக்கும் நடுவர்கள் யார்ன்றத சொல்லாமயே வெச்சிட்டாங்க நம்ம ஆளுங்க, என்னவோ போங்க சார்!!!

****************

ஆமா இது நீ வழக்கமா எழுதுற "துணுக்ஸ்"தானே, தலைப்பை மாத்தி வெச்சு ஏமாத்துறியாடான்னு கேக்குறீங்களா? என்னவோ போங்க சார்!!!