Showing posts with label 25ம் பதிவு. Show all posts
Showing posts with label 25ம் பதிவு. Show all posts

Tuesday, October 21, 2008

என் 25ம் பதிவு : சைக்கிள் ரேஸ் அனுபவங்கள்

இது என்னோட 25வது பதிவு. முதல்ல இத்தனை நாளா என் பதிவுகளையும் படிச்சி எனக்கு பின்னூட்டம் போட்டு என்னை ஊக்கப்படுத்தின உங்க எல்லாருக்கும் நன்றி. போன ஜீன் மாசம் எழுத ஆரம்பிச்சேன். இந்த அஞ்சு மாசத்துல மொத்தமாவே 25 பதிவுதான்னு சொன்னாலும் உங்க மனசுல நிக்குற மாதிரி எழுதியிருக்கேன்னுதான் நெனைக்கிறேன். அதனால எனக்கு நானே குடுத்துக்குறேன் ஒரு ஷொட்டு, அதேநேரம் பல காரணங்களால நீங்க எதிர்பார்க்கிற அளவுக்கு நெறய பதிவு போடுறதில்ல, அதுக்கு எனக்கு நானே குடுத்துக்குறேன் ஒரு குட்டு..

இந்த பதிவுல என்ன போடுறதுன்னு ரொம்ப யோசிச்சப்ப, அட அப்படின்னு சொல்லமுடியாட்டாலும் கொஞ்ச நாளா என் மனசை அரிச்சிட்டு இருக்குற ஒரு விசயத்த உங்க கூட பகிர்ந்துக்கலாம்னு நெனச்சேன். அதுதான் இங்க.. (படிச்சிட்டு திட்டாதீங்க)..

****

எங்க ஊர்ல ஐப்பசி மாச வாக்குல மாரியம்மன் பண்டிகை ரொம்ப விமர்சையா கொண்டாடுவோம். அதுக்காக ஒவ்வொரு நாளும் பாட்டு கச்சேரி, பட்டி மன்றம், விளையாட்டு போட்டின்னு களை கட்டும். இப்படிதான் கொஞ்ச வருசத்துக்கு முன்னால எங்க ஊர்ல இருக்குற ஒரு பெரிய மனுசன் சைக்கிள் ரேஸ் ஏற்பாடு பண்ணுனாரு. போட்டியில் கலந்துகிட்டு ஜெயிக்கிறவங்கள அனவுன்ஸ் பண்றதுக்கும் பரிசு குடுக்குறதுக்கும் எங்க ஊர்லயே பெரிய சைக்கிள் கடை வெச்சிருக்குற அண்ணாச்சியை கூப்புட்டிருந்தாங்க.

நானும் என் ஃப்ரண்ட்ஸும், ஆஹா ஊருக்குள்ள நம்மள ப்ரூஃப் பண்ண இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சிடுச்சே, இதை விடக்கூடாதுன்னு எங்க சைக்கிளுங்கள நல்லா சர்வீஸ் பண்ணி தெனமும் பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சோம். சின்ன ஊர் அப்படின்றதால யார் யாரெல்லாம் கலந்துக்குவாங்க, யாருக்கு ஜெயிக்கறத்துக்கு வாய்ப்பு இருக்கு அப்படின்னெல்லாம் ஓரளவுக்கு தெரியும். நானும் இது வரைக்கும் இப்படி ரேஸ்ல எல்லாம் கலந்துகிட்டதே இல்ல. இருந்தாலும் பரவாயில்லை நாமளும் ரவுடிதான்னு உலகம் எப்படி நம்பும்னு வடிவேலு கணக்கா ப்ளான் போட்டேன்.

போட்டி வித்தியாசமா இருந்திச்சி. ஏறத்தாழ‌ 30, 40 பேர் கலந்துகிட்டாங்க. எல்லாரையும் ஒரே டைம்ல விட்டா டிராஃபிக் ஜாம் ஆகும்னு, கொஞ்சம் கொஞ்சம் பேரா பிரிச்சி விட்டாங்க. கிளம்புற நேரத்தையும் போய் சேர்ற நேரத்தையும் தனித்தனியா நோட் பண்ணிகிட்டாங்க. இதுல என்ன பிரச்சினைன்னா, நாம ஃபர்ஸ்ட் ப்ரைஸா இல்லையான்னு நமக்கே தெரியாது. அவங்க சொல்ற வரைக்கும் வெய்ட் பண்ணனும்.

ஆனா ரேஸ் பாத்துகிட்டு இருந்த என் ஃப்ரண்ட்ஸ்லாம் "கண்டிப்பாக உனக்கு ப்ரைஸ் கிடைக்கும்டா, ரொம்ப நல்லா ஓட்டுன" அப்படின்னாங்க. ஒரே சந்தோசம். முதல் ப்ரைஸ் இல்லாட்டினாலும் மொத மூணு இடத்துல ஒருத்தனா வந்தா சந்தோசமுன்னு நானும் நெனச்சிகிட்டு இருந்தேன்.

சாயங்காலம் வரைக்கும் போட்டி நடந்தது. நாங்க எல்லாரும் சாயங்காலமே ஜெயிச்சவங்க பேர் சொல்லிடுவாங்கன்னு நெனச்சோம். ஆனா அவங்க ஒண்ணுமே சொல்லல. சரின்னு மறுநாளும் போய் பாத்தோம். அப்பவும் ஒண்ணும் சொல்லல. சரி, நாப்பது பேரு கலந்துகிட்டாங்க. அத்தனை பேரோட டைம் டீடெய்லயும் சரியா கணிச்சிதானு சொல்ல முடியும் அப்படின்னு நெனச்சோம். சோதனையா, அடுத்த ஒரு வாரத்துக்கு ஒண்ணுமே சொல்லல. எங்களுக்கா ரொம்ப கஷ்டமா போச்சி. "என்னடா இது? ரேஸ் ஆரம்பிக்கறதுக்கு ஒரு மாசம் முன்னாலயே அப்படி வெளம்பரம் பண்ணுனாங்க. இப்ப என்னடான்னா இப்படி இழுத்தடிக்கிறாங்களே"ன்னு பேசிக்குவோம்.

அப்படி, இப்படின்னு ஒரு மாசம் கழிச்சி, பண்டிகையெல்லாம் முடிஞ்சப்புறம் ஒருநாளு பக்கத்து ஊட்டு ஃப்ரெண்டு வந்து "டேய்.. இன்னிக்கு அங்க ரிசல்டு சொல்றாங்களாண்டா! வா, ஒனக்கு ப்ரைஸ் குடுக்கப் பேர் கூப்புடுறப்ப நீ இல்லைன்னா நல்லா இருக்காது" அப்படின்னு சொன்னான். ஆஹா.. அப்படின்னு விழுந்தடிச்சி ஓடுனேன் (அந்த வேகத்துலயும், போட்டோ எடுத்தா பளிச்சின்னு தெரியுறதுக்காக பவுடரை அப்பிட்டு ஓடுனது வேற கதை).

அங்க போனா ஒரு சின்ன மேடையில ஊர் பெரிய மனுசனுங்க எல்லாம் உக்காந்திருந்தாங்க. இத்தன பேருக்கு நடுவுல நம்ம பேரை சொல்லத்தான் போறாங்கன்னு அப்படியே இளிச்சிகிட்டே நின்னுகிட்டு இருந்தேன். சைக்கிள் ஷாப் ஓனர் கையில ஒரு லிஸ்ட் இருந்தது. அதை ஒரு தடவை படிச்சிட்டு அவர் மைக் முன்னால நின்னாரு..

"எல்லாருக்கும் வணக்கம். நீங்க எல்லாரும் இந்த சைக்கிள் ரேஸ்க்கு இவ்ளோ ஆதரவு தருவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. என் கையில உங்க எல்லோரோட டைம் டீடெய்லும் இருக்கு. இதுல மூணுபேருக்கு ப்ரைஸ் குடுக்கப் போறோம்."

அப்படின்னு நிறுத்தினாரு. எனக்கா தாங்கல. இந்த மனுசன் ஏன் இப்படி நீட்டி முழக்குறாரு. சொல்லவேண்டியதுதான அப்படின்னு நெனச்சிகிட்டே அவர் சொல்றத கேட்டுகிட்டு இருந்தேன்.

"ஆனா பாருங்க.. உலகத்துல எத்தனையோ சைக்கிள் இருக்குது, ஆனா நான் விக்குற அட்லஸ் சைக்கிள் மாதிரி வேற எதுவுமே கிடையாது. அதனால அட்லஸ் சைக்கிள் வெச்சி இந்த ரேஸ்ல கலந்துகிட்டவங்கள்ல இருந்து மொத மூணு பேரை தேர்ந்தெடுக்கப்போறேன்" அப்படின்னாரு..

எங்க மாமா வீட்டு லேத் பட்டறையில இரும்பை வெட்றதுக்கு வெட்டிரும்பை கம்பி மேல வெச்சி சம்மட்டியால ஓங்கி அடிப்பாங்க. அதை என் தலையில அடிச்ச மாதிரி இருந்திச்சி. பின்ன, நாம ஓட்டுனது எங்க அப்பாவுக்கு அவரோட அப்பா வாங்கி குடுத்த ஹீரோ சைக்கிளாச்சே.

மனசே கனத்து போச்சி.. ஆனா ஒரே சந்தோசம், ஜெயிச்ச மூணு பேருமே திறமைசாலிங்க அப்படின்றதுதான். அதுலயும் மொதோ பிரைஸ் வாங்குனவரு பயங்கரமா சைக்கிள் ஓட்டுவாரு. கைய விட்டுட்டு ஓட்டுறது, சைக்கிள் மேல நின்னுகிட்டு ஓட்டுறது, பின்னால திரும்பி பெடல் பண்ணுறதுன்னு ஒரே களேபரமா இருக்கும். அவர் எங்கியாவது சைக்கிள் ஓட்டுறார்னா ஓடிப்போய் பாக்குறவங்கள்ல நானும் ஒருத்தன். அதனால அவரை பாத்து கை குடுத்துட்டு பாராட்டிட்டு திரும்பி வந்துட்டோம்.

திரும்பி வர்றப்ப என் ஃப்ரெண்டு கேட்டான் "அவங்க மூணு பேரும் திறமைசாலிங்க, ப்ரைஸுக்கு தகுதியானவங்க அப்படின்றதுல எந்த சந்தேகமும் இல்லடா. ஆனா இந்த சைக்கிள் ஷாப் ஓனர் இப்படி பண்ணிட்டாறேடா! ரேஸ் எல்லாம் முடிஞ்சப்புறம் அட்லஸ் சைக்கிள் மட்டும்தான் போட்டிக்கு எடுத்துக்குவேன் அப்படின்னு சொல்லிட்டாரேடா! அட, நீ ப்ரைஸ் வாங்காதது பிரச்சினை இல்லை, ஆனா உன்னை ப்ரைஸுக்கு கன்ஸிடர் கூட பண்ணலியேடா! எதுக்கெடுத்தாலும் கத்துவ.. நீ ஏன்டா அங்கியே சத்தம் போடலை?" அப்படின்னான்.

அதுக்கு நான் அவன்கிட்ட சொன்னேன் "டேய், எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது அப்படின்றது நெஜந்தான். ஜெயிச்ச மூணு பேரும் எவ்ளோ சந்தோசமா இருக்காங்க பாத்தியா! அங்க நான் போய் ஏன் நீங்க இதை மொதல்லியே சொல்லலன்னு சத்தம் போட்டா ஜெயச்சவங்களோட கொண்டாட்டம் அப்படியே அடிபட்டு போயிடும். ரெண்டாவது, ரேஸ் நடத்துனதும், பரிசை கொடுத்ததும் பெரிய மனுசங்க. நாமெல்லாம் ஆவரேஜான இந்திய நடுத்தர வர்க்கத்த சேந்தவுங்க, இந்த மாதிரி நடந்தா மனசுக்குள்ளே அழுதுகிட்டு அடுத்த வேளை சோத்துக்கு வழிய பாக்க போகுறதுதான் நாம இத்தனை நாளா பண்ணிகிட்டு இருக்கோம். நானும் அதுக்கு விதிவிலக்கில்லடா!! ஏமாற்றம்லாம் நமக்கு புதுசா என்னா??"

பதிலுக்கு என்னை பாத்த பார்வைக்கு அவன் என்னை முறைச்சானா இல்லை பரிதாபப்பட்டானா அப்படின்றதுதான் எனக்கு இன்னிக்கு வரைக்கும் புரியவே இல்லை. ஒரு சிலது புரியாம இருக்குறதுதான் நல்லதோ..

*****

மேல சொன்ன கற்பனை கதைக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு நான் சொன்னா நீங்க நம்பவா போறீங்க!!!