Monday, December 15, 2008

என் மதிப்பிற்குரிய தமிழ் வலையுலக நண்பர்களுக்கு

என் மதிப்பிற்குரிய தமிழ் வலையுலக நண்பர்களுக்கு,

கடந்த சில‌ வாரங்களாகவே என்னால் வலைப்பூ உலகில் முற்றிலுமாக இயங்க முடியவில்லை. நான் பதிவு எழுதி ஒன்றரை மாதங்கள் ஆனதே இதற்கு சாட்சி. சில வெளியில் சொல்ல இயலாத காரணங்களால் என்னால் கடந்த இரு வாரங்களாக சக பதிவர்களின் பதிவுகளை படிக்கக் கூட முடியவில்லை.

சிலர் என்னை மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் கேட்டதற்கும் என்னால் சரிவர பதில் சொல்ல முடியவில்லை அல்லது சொல்லத் தெரியவில்லை. தற்போதைய நிலை இன்னும் சில வாரங்களுக்காவது (மாதங்கள்?) தொடரும் என்பதால் என்னை நீங்கள் வலையுலகில் பார்ப்பது அரிதாகவே இருக்கும்.

ஏற்கனவே என்னுடன் மின்னஞ்சலிலும், தொலைபேசியிலும் தொடர்பிலிருக்கும் நண்பர்கள் அவ்வப்போது அழையுங்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் மறக்காமல் அனைவரின் பதிவுகளையும் படிப்பேன்.

சில நாட்கள் (அல்லது மாதங்கள்) கழித்து மீண்டும் பழைய வேகத்துடன் என்னால் திரும்பி வர முடியும் என்று நம்புகிறேன். அதனால் என் மொக்கையிலிருந்து உங்களுக்கு முழு விடுதலை கிடைத்துவிட்டதாக எண்ணி யாரும் மகிழ்ச்சியடைய வேண்டாம். :)))

சென்னையில் பதிவர் சந்திப்பு நடந்தால் கண்டிப்பாக எனக்கு தெரிவிக்கவும். வருவதற்கு முயற்சி செய்கிறேன்.

என் பதிவுகளை வாசித்து ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி.. நன்றி..

Monday, November 3, 2008

துணுக்ஸ்

சென்ற வாரத்தில் ஒருநாள் நானும் தங்கமணியும் உட்கார்ந்து தாமிராவின் தங்கமணி பற்றிய புலம்பல்களை படித்து சிரித்தபின் தங்கமணி கிச்சனுக்கு சென்றார். அதன்பின் நடந்த உரையாடல்..

தங்கமணி: என்னங்க?

நான் (ஹாலில் இருந்து சத்தமாக): என்னம்மா?

தங்கமணி: அடுத்தது நீங்க என்ன பதிவு போடப் போறீங்க?

நான்: ஒரு சிறுகதை போடலாம்னு இருக்கேன்.

தங்கமணி: என்ன? நீங்களும் என்னை வெச்சி எதுனா புலம்பப் போறீங்களா?

நான் (ச‌ரியாக‌ அவ‌ர் சொன்ன‌தை காதில் வாங்காம‌ல்): த‌லைப்பு "பேய் பிடித்த‌வ‌ன்" அப்ப‌டின்னு வெக்க‌லாம்னு இருக்கேன்.

"டிட‌ங்க்..." (ஹி..ஹி.. அவ‌ங்க‌ கையில‌ இருந்த‌ க‌ர‌ண்டி ஹால்ல‌ லேண்ட் ஆன‌ ச‌த்த‌ம் அது)

*******

பலமுறை நான் யோசித்ததுண்டு, பிரபலங்களை விளம்பரத்துக்கு உபயோகப்படுத்துவதால் எந்த அளவுக்கு மக்களை கவரமுடியும் என்று. இதுகுறித்து லக்கி கூட ஏற்கனவே ஒருமுறை பதிவெழுதியிருக்கிறார். ஆனால் சிலநாட்களுக்கு முன் எனக்கு பிராக்டிகலாக அதை உணரும் வாய்ப்பு கிடைத்தது.

என் பையனுக்கு இரண்டு வயது ஆவதால், அவனை ப்ளே ஸ்கூலில் சேர்க்கலாம் என்று முடிவெடுத்தோம். நாங்கள் இருக்கும் வீட்டிற்கு அருகில் அவனுக்கு விளையாட வேறு குழந்தைகள் இல்லை. மேலும் நாங்கள் குடியிருக்கும் ஏரியாவும் சிறிது மோசமாக இருப்பதால் அவ‌ன் அடிக்கடி நினைத்தபோதெல்லாம் வெளியே விளையாட‌ செல்ல முடிவதில்லை.

ஆனால் என் தங்கமணிக்கு இந்த ஏரியாவில் நல்ல ப்ளேஸ்கூல் கிடைக்காது என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை. அதற்காகவே மற்ற நல்ல பகுதிகளுக்கு வீடு மாற்றவேண்டும் என்று கூறிக்கொண்டிருப்பார். நெட்டில் தேடியபோது அருகில் ஒரு நல்ல ப்ளேஸ்கூல் செயின் இருப்பது தெரிந்தது. ஏற்கனவே நான் அந்த ப்ளேஸ்கூல் பெயரை அறிந்திருந்தேன். கொஞ்சம் பணம் அதிகம் என்றாலும் குழந்தைக்கு நல்ல இடமாக இருக்கும், மேலும் எனக்கும் ஆபிஸ் அருகில் என்பதால் அவனை கொண்டு விட, அழைத்து வர என்று சுலபமாக இருக்கும் என்பதால் அங்கேயே அவனை சேர்த்தோம்.

முதல் இரண்டு நாள் தங்கமணியும் அவனுடன் சென்று வந்தார். என்ன செய்வாங்க தெரியலயே? நாம பாத்துக்குறமாதிரியே பாத்துகுவாங்களா? என்ற கவலைகள் வேறு அவருக்கு.

இரண்டாம் நாள் திரும்பி வந்தவுடன் தங்கமணி என்னிடம் "என்னங்க.. உங்களுக்கு தெரியுமா? இந்த ஸ்கூல்லதான் ***** நடிகை கூட அவங்க குழந்தையை சேத்திருக்காங்க. இன்னிக்கு கூட்டிட்டு போக வந்திருந்தாங்க" என்று சின்னத்திரையில் கோலம் போடும் நாயகி பெயரை கூறினார்.

இப்போதெல்லாம் என் தங்கமணிக்கு அந்த ஸ்கூல் நல்லதா என்பது பற்றி எந்த சந்தேகமும் எழுவதில்லை. யாரிடமாவது பையனை ஸ்கூலுக்கு அனுப்பவதைப் பற்றி சொல்லும்போதும் "நல்ல ஸ்கூல்தான்.. ***** கூட அவங்க குழந்தையை அங்கதான் போட்டிருக்காங்க" என்கிறார்..

*******

என் அலுவலகத்தின் பார்க்கிங் லாட் அருகே புகைபிடிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. எப்போதுமே குறைந்தது ஐந்து பேராவது அங்கே நின்று ஊதிக்கொண்டு இருப்பார்கள். தடை வந்தவுடன் அலுவல வளாகம் முழுவதும் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

விடுவார்களா நம் ஆட்கள்!! அலுவலகத்தின் அருகில் இருந்த ஒரு முட்டுச்சந்து (20 அடி அகலம் இருக்கும்) உள்ளே ஒரு டீக்கடை இருக்கும். அங்கே சென்று தம் அடிக்க ஆரம்பித்தனர். மெயின் ரோடில் இருந்து கொஞ்சம் உள்வாங்கி இருப்பதால் அவ்வளவு சீக்கிரம் போலீஸார் கண்ணை ஈர்க்காது என்பதால் அங்கு எப்போதும் கூட்டம்தான்.

அங்கே டீ நன்றாக இருக்கும் என்பதால் அவ்வப்போது நானும் செல்வதுண்டு (டிஸ்கி: டீ மட்டும்தான்). சென்ற வாரத்தில் ஒருநாள் மாலை நேரம் அங்கே டீ குடித்துக் கொண்டிருந்தபோது மெயின் ரோடில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு கான்ஸ்டபிள் திரும்பி பார்த்துவிட்டு எங்களை நோக்கி வர ஆரம்பித்தார்.

அந்த நேரம் ஒரு 10 பேர் அங்கே தம் அடித்துக் கொண்டிருந்தார்கள். என்னைப் போல் சிலர் டீ மட்டும் குடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தோம். எனக்கா வயிற்றைக் கலக்குகிறது, வருகிறவன் இங்கிருக்கும் எல்லோரையும் பிடித்துக் கொண்டு போய்விட்டால் என் மானமும் கப்பலேறி விடுமே! ஒரு நல்ல டீ குடிக்க ஆசைப்பட்டது தப்பா!! என்று மனதிற்குள்ளேயே புலம்பல்.

தம் அடிப்பவன்களும் அதே மனநிலைதான் போல. எல்லோரும் 'தம்'மை வெளியே தெரியாதவாறு மறைத்துக்கொண்டு ஓரக்கண்ணால் அந்த கான்ஸை பார்த்துக்கொண்டிருந்தனர். வந்த கான்ஸ் சுற்றியும் பார்த்துவிட்டு கடைக்காரனை பார்த்து மெல்லிய குரலில் கேட்டார்.. "ஒரு கோல்ட் ஃப்ளேக் குடு"

*********

இரண்டு, மூன்று வாரத்திற்கு முன்னால் நானும் தங்கமணியும் வெளியே சென்றுவிட்டு மதியம் சாப்பாடு வெளியே சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். வீட்டில் தங்கமணியின் தம்பியும் இருந்ததால் பார்சல் வாங்க அந்த உயர்தர சைவ உணவகத்துக்கு சென்றோம். சென்னையில் மிக மிக பிரபலமான அந்த உணவகத்தில் பார்சல் ஆர்டர் செய்தோம். இரண்டு சாம்பார் சாதம், ஒரு தக்காளி சாதம், ஒரு தயிர் சாதம் என்று நான்கு ப்ளேட் ஆர்டர் செய்தால் பில் 130 ரூபாய் வந்தது.

அடப்பாவிகளா! இவ்ளோ காசா! ஆவரேஜா ஒரு ப்ளேட் விலை ரூபாய் 32.50 என்று மனதிற்குள் திட்டினாலும், சரி, பரவாயில்ல குவாலிட்டியும் டேஸ்டும்தான முக்கியம், அதுக்குதான தேடி புடிச்சி இங்க வரோம் என்று மனதை சமாதானப் படுத்திக் கொண்டு பார்சலை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.

வீட்டிற்கு வந்து பார்சலை பிரித்தப்புறம்தான் கிளைமேக்ஸே!!! படுபாவிகள், வைத்திருந்த சாப்பாட்டின் அளவு ஒவ்வொரு பாக்ஸிலும் இரண்டு கரண்டி அளவில்தான் இருந்தது. இரண்டு வயதாகும் என் மகனுக்கே கண்டிப்பாக அந்த அளவில் இரண்டு ப்ளேட் சாப்பாடு வேண்டும். நாங்களோ வெளியே சுற்றிவிட்டு பசியோடு வந்திருக்கிறோம்.

அந்த அளவு சாப்பாடு போடுவதுபோல் அளவாக பிளாஸ்டிக் டப்பா வேறு. தட்டில் அந்த சாப்பாட்டை கொட்டினால் இருக்கும் இடமே தெரியவில்லை. இதில் சாம்பார் சாதத்தில் இரண்டு பெரிய சைஸ் காய்கறி வேறு. அதை எடுத்துவிட்டால் ஒரு கரண்டி அளவுக்கு மட்டுமே சாப்பாடு இருந்தது.

வந்த கோபத்திற்கு என் வீட்டில் உட்கார்ந்து கொண்டே மானசீகமாக அவன்களை நன்றாக திட்டிவிட்டேன், சாபமிட்டேன் என்பது சாலப் பொருத்தமான வார்த்தை. ஒரு நாளைக்கு எத்தனை ஆயிரம் பேர் இது போல் பார்சல் வாங்கிப்போய் ஏமாந்து சாபமிடுவார்கள்!! அந்த உணவக அதிபருக்கு வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் போனது ஏன் என்று புரிந்தது.

Thursday, October 30, 2008

பேய் பிடித்தவன் (சிறுகதை)

எனக்கு அவனை பாத்தாலே பயமா இருக்கு. மந்திரவாதியாம், எதிர்ல சடைய விரிச்சி போட்டுகிட்டு நெத்தி நெறய விபூதியோட நடுவுல அம்மாம் பெரிய குங்கும பொட்டு.. அவன் அடிக்கிற உடுக்கை சத்தம் வேற காது டமாரமே கிழிஞ்சிடும் போல இருக்கு..

எனக்கு பேய் புடிச்சி இருக்காம். ஏன்டா.. பேய் உங்கள மாதிரி படிக்காதவனுங்களாதானடா புடிக்கும். நான் படிச்சவன்டா. எங்க ஊர்லயே மொத மொதலா காலேஜ் போய் எம்.எஸ்.சி பயோ டெக் படிச்சவன்டா நானு. என்னை எந்த பேய்டா புடிக்கப்போவுது? யார்றா இப்படி ஒரு புரளிய கெளப்புனது!!

இந்த இடமே ஒரு மாதிரி பயமாத்தான் இருக்கு. என் கைய வேற ரெண்டு பக்கமும் ரெண்டு பேரு இழுத்து புடிச்சிட்டு இருக்கானுங்க. அவனுங்கள பாத்தா இந்த‌ ம‌ந்திர‌வாதியோட‌ சிஷ்ய‌னுங்க‌ மாதிரி ரெண்டு பேர் இருக்கானுங்க‌. ம‌ந்திர‌வாதிக்கு கொஞ்ச‌மும் ச‌ம்ப‌ந்த‌மில்லாத‌ மாதிரி ரெண்டு பேர், அதுல‌ ஒருத்த‌ன் என்னை விட‌ வய‌சு க‌ம்மியா இருந்தான்.

ம‌ந்திர‌வாதி கேக்குற‌ எந்த‌ கேள்விக்கும் ப‌தில் சொல்ல‌க்கூடாது. இவ‌ன் ஏற்க‌ன‌வே என‌க்கு பேய் புடிச்சிருக்குன்னு சொல்லிட்டு இருக்கான். நான் பேசுனா அத‌ வெச்சி எதுனா த‌ப்பா புரிஞ்சிகிட்டாலும் புரிஞ்சிக்குவான்.

போன‌ வார‌ம் இப்ப‌டித்தான். டவுனுக்கு போனப்ப ப‌ண்ணையாரோட‌ பொண்ணை பாத்து பேசிட்டு இருந்தேன். சின்ன‌ வ‌ய‌சில‌ இருந்தே என்கூட‌ ப‌டிச்ச‌ பொண்ணு அது. சிரிச்ச‌ முக‌மா அழ‌கா இருக்கும். எங்க‌ பாத்தாலும் பேசிட்டுதான் போகும். எதோ க‌ம்ப்யூட்ட‌ர் சென்ட‌ருக்கு வ‌ந்த‌தாம். அவ‌ங்க‌ அப்பா தீவிர‌மா மாப்பிள்ளை பாத்துட்டு இருக்காராம். ரெண்டு பேரும் பேசிட்டு இருந்துட்டு ப‌க்க‌த்து க‌டையில‌ போய் ஐஸ்கிரீம் சாப்பிட்டோம்.

நாதாரிப்பயலுவ, எவனோ இத பாத்துட்டு தப்பா நெனச்சிட்டு பண்ணையார்கிட்டபோய் எதோ சொல்லிட்டான் போல. அந்த ஆளுக்காவது அறிவு வேணாம். ஒண்ணும் விசாரிக்காம கரும்பு காட்டுக்குள்ளாற போட்டு என்னை அடி அடின்னு அடிச்சிட்டானுங்க. மரண அடின்னு கேள்விப்பட்டு இருக்கேன். அன்னிக்குதான் அனுபவிச்சேன். ஊரை விட்டு ஓடிடலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்.

இன்னிக்கு என்னடான்னா இவன் எனக்கு பேய் புடிச்சிருக்குன்றான். பேய்ன்னு ஒண்ணு இல்லடா, அது மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் அப்படின்னு யார் இவனுங்களுக்கு புரிய வெக்கிறது. எங்க அப்பா அம்மா வேற எங்கன்னு தெரியல. எப்படி தப்பிக்கிறதுன்னும் தெரியலயே!!

அவன் கையில சாட்டையை எடுக்கிறான். அடப்பாவி! அந்த சாட்டையால என்னை அடிக்கப்போறீயா? போனவாரம் வாங்குன அடியே இன்னும் வலிக்குற மாதிரி இருக்கு. இதுல மறுபடியுமா? உடுக்கை சத்தம், சாம்பிராணி புகை, இவன் சொல்ற மந்திரம் இதுக்கு மேல சாட்டை அடியா? இது ஆகறதில்ல. முடிஞ்சவரைக்கும் திமிறி தப்பிக்கணும்.

கைய முறுக்கி, ஒரு கைய விடுவிச்சி, இன்னொரு கைய புடிச்சி இழுத்து, புடிச்சிட்டு இருந்தவனுங்கள விடுவிச்சிட்டு, பக்கத்துல இருந்த டேபிள் மேல காலை வெச்சி ஒரே ஜம்ப். நம்பவே முடியல. நானா இப்படி மேட்ரிக்ஸ் படம் மாதிரி ஜம்ப் பண்ணுறேன். மேல சீலிங் பேன்ல உக்காந்துட்டேன். கீழ பாத்தா யாரோ ஒரு சின்ன பையன எல்லாரும் புடிச்சிட்டு இருக்காங்க. அந்த மந்திரவாதி அந்த பையனை போட்டு அடிச்சிருப்பான் போல. அவனுக்கு விபூதி வெச்சிவிட்டு "இனிமே பிரச்சினை இல்லை" அப்படின்னு சொல்றான்.

என்னவோ! பைத்தியக்காரனுங்க. இனிமே இங்க இருக்கக்கூடாது. வேற எங்கியாவது போக வேண்டியதுதான். எங்க போறது? ஹலோ! உங்க வீட்டுல எனக்கு இடம் இருக்கா?

Tuesday, October 21, 2008

என் 25ம் பதிவு : சைக்கிள் ரேஸ் அனுபவங்கள்

இது என்னோட 25வது பதிவு. முதல்ல இத்தனை நாளா என் பதிவுகளையும் படிச்சி எனக்கு பின்னூட்டம் போட்டு என்னை ஊக்கப்படுத்தின உங்க எல்லாருக்கும் நன்றி. போன ஜீன் மாசம் எழுத ஆரம்பிச்சேன். இந்த அஞ்சு மாசத்துல மொத்தமாவே 25 பதிவுதான்னு சொன்னாலும் உங்க மனசுல நிக்குற மாதிரி எழுதியிருக்கேன்னுதான் நெனைக்கிறேன். அதனால எனக்கு நானே குடுத்துக்குறேன் ஒரு ஷொட்டு, அதேநேரம் பல காரணங்களால நீங்க எதிர்பார்க்கிற அளவுக்கு நெறய பதிவு போடுறதில்ல, அதுக்கு எனக்கு நானே குடுத்துக்குறேன் ஒரு குட்டு..

இந்த பதிவுல என்ன போடுறதுன்னு ரொம்ப யோசிச்சப்ப, அட அப்படின்னு சொல்லமுடியாட்டாலும் கொஞ்ச நாளா என் மனசை அரிச்சிட்டு இருக்குற ஒரு விசயத்த உங்க கூட பகிர்ந்துக்கலாம்னு நெனச்சேன். அதுதான் இங்க.. (படிச்சிட்டு திட்டாதீங்க)..

****

எங்க ஊர்ல ஐப்பசி மாச வாக்குல மாரியம்மன் பண்டிகை ரொம்ப விமர்சையா கொண்டாடுவோம். அதுக்காக ஒவ்வொரு நாளும் பாட்டு கச்சேரி, பட்டி மன்றம், விளையாட்டு போட்டின்னு களை கட்டும். இப்படிதான் கொஞ்ச வருசத்துக்கு முன்னால எங்க ஊர்ல இருக்குற ஒரு பெரிய மனுசன் சைக்கிள் ரேஸ் ஏற்பாடு பண்ணுனாரு. போட்டியில் கலந்துகிட்டு ஜெயிக்கிறவங்கள அனவுன்ஸ் பண்றதுக்கும் பரிசு குடுக்குறதுக்கும் எங்க ஊர்லயே பெரிய சைக்கிள் கடை வெச்சிருக்குற அண்ணாச்சியை கூப்புட்டிருந்தாங்க.

நானும் என் ஃப்ரண்ட்ஸும், ஆஹா ஊருக்குள்ள நம்மள ப்ரூஃப் பண்ண இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சிடுச்சே, இதை விடக்கூடாதுன்னு எங்க சைக்கிளுங்கள நல்லா சர்வீஸ் பண்ணி தெனமும் பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சோம். சின்ன ஊர் அப்படின்றதால யார் யாரெல்லாம் கலந்துக்குவாங்க, யாருக்கு ஜெயிக்கறத்துக்கு வாய்ப்பு இருக்கு அப்படின்னெல்லாம் ஓரளவுக்கு தெரியும். நானும் இது வரைக்கும் இப்படி ரேஸ்ல எல்லாம் கலந்துகிட்டதே இல்ல. இருந்தாலும் பரவாயில்லை நாமளும் ரவுடிதான்னு உலகம் எப்படி நம்பும்னு வடிவேலு கணக்கா ப்ளான் போட்டேன்.

போட்டி வித்தியாசமா இருந்திச்சி. ஏறத்தாழ‌ 30, 40 பேர் கலந்துகிட்டாங்க. எல்லாரையும் ஒரே டைம்ல விட்டா டிராஃபிக் ஜாம் ஆகும்னு, கொஞ்சம் கொஞ்சம் பேரா பிரிச்சி விட்டாங்க. கிளம்புற நேரத்தையும் போய் சேர்ற நேரத்தையும் தனித்தனியா நோட் பண்ணிகிட்டாங்க. இதுல என்ன பிரச்சினைன்னா, நாம ஃபர்ஸ்ட் ப்ரைஸா இல்லையான்னு நமக்கே தெரியாது. அவங்க சொல்ற வரைக்கும் வெய்ட் பண்ணனும்.

ஆனா ரேஸ் பாத்துகிட்டு இருந்த என் ஃப்ரண்ட்ஸ்லாம் "கண்டிப்பாக உனக்கு ப்ரைஸ் கிடைக்கும்டா, ரொம்ப நல்லா ஓட்டுன" அப்படின்னாங்க. ஒரே சந்தோசம். முதல் ப்ரைஸ் இல்லாட்டினாலும் மொத மூணு இடத்துல ஒருத்தனா வந்தா சந்தோசமுன்னு நானும் நெனச்சிகிட்டு இருந்தேன்.

சாயங்காலம் வரைக்கும் போட்டி நடந்தது. நாங்க எல்லாரும் சாயங்காலமே ஜெயிச்சவங்க பேர் சொல்லிடுவாங்கன்னு நெனச்சோம். ஆனா அவங்க ஒண்ணுமே சொல்லல. சரின்னு மறுநாளும் போய் பாத்தோம். அப்பவும் ஒண்ணும் சொல்லல. சரி, நாப்பது பேரு கலந்துகிட்டாங்க. அத்தனை பேரோட டைம் டீடெய்லயும் சரியா கணிச்சிதானு சொல்ல முடியும் அப்படின்னு நெனச்சோம். சோதனையா, அடுத்த ஒரு வாரத்துக்கு ஒண்ணுமே சொல்லல. எங்களுக்கா ரொம்ப கஷ்டமா போச்சி. "என்னடா இது? ரேஸ் ஆரம்பிக்கறதுக்கு ஒரு மாசம் முன்னாலயே அப்படி வெளம்பரம் பண்ணுனாங்க. இப்ப என்னடான்னா இப்படி இழுத்தடிக்கிறாங்களே"ன்னு பேசிக்குவோம்.

அப்படி, இப்படின்னு ஒரு மாசம் கழிச்சி, பண்டிகையெல்லாம் முடிஞ்சப்புறம் ஒருநாளு பக்கத்து ஊட்டு ஃப்ரெண்டு வந்து "டேய்.. இன்னிக்கு அங்க ரிசல்டு சொல்றாங்களாண்டா! வா, ஒனக்கு ப்ரைஸ் குடுக்கப் பேர் கூப்புடுறப்ப நீ இல்லைன்னா நல்லா இருக்காது" அப்படின்னு சொன்னான். ஆஹா.. அப்படின்னு விழுந்தடிச்சி ஓடுனேன் (அந்த வேகத்துலயும், போட்டோ எடுத்தா பளிச்சின்னு தெரியுறதுக்காக பவுடரை அப்பிட்டு ஓடுனது வேற கதை).

அங்க போனா ஒரு சின்ன மேடையில ஊர் பெரிய மனுசனுங்க எல்லாம் உக்காந்திருந்தாங்க. இத்தன பேருக்கு நடுவுல நம்ம பேரை சொல்லத்தான் போறாங்கன்னு அப்படியே இளிச்சிகிட்டே நின்னுகிட்டு இருந்தேன். சைக்கிள் ஷாப் ஓனர் கையில ஒரு லிஸ்ட் இருந்தது. அதை ஒரு தடவை படிச்சிட்டு அவர் மைக் முன்னால நின்னாரு..

"எல்லாருக்கும் வணக்கம். நீங்க எல்லாரும் இந்த சைக்கிள் ரேஸ்க்கு இவ்ளோ ஆதரவு தருவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. என் கையில உங்க எல்லோரோட டைம் டீடெய்லும் இருக்கு. இதுல மூணுபேருக்கு ப்ரைஸ் குடுக்கப் போறோம்."

அப்படின்னு நிறுத்தினாரு. எனக்கா தாங்கல. இந்த மனுசன் ஏன் இப்படி நீட்டி முழக்குறாரு. சொல்லவேண்டியதுதான அப்படின்னு நெனச்சிகிட்டே அவர் சொல்றத கேட்டுகிட்டு இருந்தேன்.

"ஆனா பாருங்க.. உலகத்துல எத்தனையோ சைக்கிள் இருக்குது, ஆனா நான் விக்குற அட்லஸ் சைக்கிள் மாதிரி வேற எதுவுமே கிடையாது. அதனால அட்லஸ் சைக்கிள் வெச்சி இந்த ரேஸ்ல கலந்துகிட்டவங்கள்ல இருந்து மொத மூணு பேரை தேர்ந்தெடுக்கப்போறேன்" அப்படின்னாரு..

எங்க மாமா வீட்டு லேத் பட்டறையில இரும்பை வெட்றதுக்கு வெட்டிரும்பை கம்பி மேல வெச்சி சம்மட்டியால ஓங்கி அடிப்பாங்க. அதை என் தலையில அடிச்ச மாதிரி இருந்திச்சி. பின்ன, நாம ஓட்டுனது எங்க அப்பாவுக்கு அவரோட அப்பா வாங்கி குடுத்த ஹீரோ சைக்கிளாச்சே.

மனசே கனத்து போச்சி.. ஆனா ஒரே சந்தோசம், ஜெயிச்ச மூணு பேருமே திறமைசாலிங்க அப்படின்றதுதான். அதுலயும் மொதோ பிரைஸ் வாங்குனவரு பயங்கரமா சைக்கிள் ஓட்டுவாரு. கைய விட்டுட்டு ஓட்டுறது, சைக்கிள் மேல நின்னுகிட்டு ஓட்டுறது, பின்னால திரும்பி பெடல் பண்ணுறதுன்னு ஒரே களேபரமா இருக்கும். அவர் எங்கியாவது சைக்கிள் ஓட்டுறார்னா ஓடிப்போய் பாக்குறவங்கள்ல நானும் ஒருத்தன். அதனால அவரை பாத்து கை குடுத்துட்டு பாராட்டிட்டு திரும்பி வந்துட்டோம்.

திரும்பி வர்றப்ப என் ஃப்ரெண்டு கேட்டான் "அவங்க மூணு பேரும் திறமைசாலிங்க, ப்ரைஸுக்கு தகுதியானவங்க அப்படின்றதுல எந்த சந்தேகமும் இல்லடா. ஆனா இந்த சைக்கிள் ஷாப் ஓனர் இப்படி பண்ணிட்டாறேடா! ரேஸ் எல்லாம் முடிஞ்சப்புறம் அட்லஸ் சைக்கிள் மட்டும்தான் போட்டிக்கு எடுத்துக்குவேன் அப்படின்னு சொல்லிட்டாரேடா! அட, நீ ப்ரைஸ் வாங்காதது பிரச்சினை இல்லை, ஆனா உன்னை ப்ரைஸுக்கு கன்ஸிடர் கூட பண்ணலியேடா! எதுக்கெடுத்தாலும் கத்துவ.. நீ ஏன்டா அங்கியே சத்தம் போடலை?" அப்படின்னான்.

அதுக்கு நான் அவன்கிட்ட சொன்னேன் "டேய், எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது அப்படின்றது நெஜந்தான். ஜெயிச்ச மூணு பேரும் எவ்ளோ சந்தோசமா இருக்காங்க பாத்தியா! அங்க நான் போய் ஏன் நீங்க இதை மொதல்லியே சொல்லலன்னு சத்தம் போட்டா ஜெயச்சவங்களோட கொண்டாட்டம் அப்படியே அடிபட்டு போயிடும். ரெண்டாவது, ரேஸ் நடத்துனதும், பரிசை கொடுத்ததும் பெரிய மனுசங்க. நாமெல்லாம் ஆவரேஜான இந்திய நடுத்தர வர்க்கத்த சேந்தவுங்க, இந்த மாதிரி நடந்தா மனசுக்குள்ளே அழுதுகிட்டு அடுத்த வேளை சோத்துக்கு வழிய பாக்க போகுறதுதான் நாம இத்தனை நாளா பண்ணிகிட்டு இருக்கோம். நானும் அதுக்கு விதிவிலக்கில்லடா!! ஏமாற்றம்லாம் நமக்கு புதுசா என்னா??"

பதிலுக்கு என்னை பாத்த பார்வைக்கு அவன் என்னை முறைச்சானா இல்லை பரிதாபப்பட்டானா அப்படின்றதுதான் எனக்கு இன்னிக்கு வரைக்கும் புரியவே இல்லை. ஒரு சிலது புரியாம இருக்குறதுதான் நல்லதோ..

*****

மேல சொன்ன கற்பனை கதைக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு நான் சொன்னா நீங்க நம்பவா போறீங்க!!!

Monday, October 20, 2008

போடுறா.. சினிமா தொடர் பதிவை...

ஏறத்தாழ தமிழ்பதிவு எழுதுற பதிவர்கள்ல 90% பேர் ஏற்கனவே எழுதிட்ட இந்த தமிழ் சினிமா தொடர் விளையாட்டுல என்னையும் அழைத்த பரிசல், நர்சிம் மற்றும் துக்ளக் மஹேஷ் மூணு பேருக்கும் நன்றி.

முடிஞ்ச வரைக்கும் எல்லா கேள்விக்குமான பதிலையும் ஷார்ட் & ஸ்வீட்டா (இதுக்கு தமிழ்ல என்னப்பா?) குடுக்க‌ முய‌ற்சி ப‌ண்றேன்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
என் சின்ன வயதில் நாங்கள் சேலம் அஸ்தம்பட்டியை அடுத்த ஹவுசிங் போர்டில் இருந்த போது அருகிலுருந்த பச்சியம்மாள் தியேட்டருக்கு சென்றது மங்கலாக நினைவில் இருக்கிறது. பெயருடன் நினைவில் நிற்கும் படம் என்றால் 20 வருடங்களுக்கு முன் பாப்பிரெட்டிபட்டியில் ஜெயஷ்ரீ திரையரைங்கில் பார்த்த "இளமைக் காலங்கள்". ஈரமான ரோஜாவே பாடல் மட்டும் இன்னும் நினைவில் இருக்கிறது. என்ன உணர்ந்தேன் என்று நினைவில்லை.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
என் மகனை வைத்துக் கொண்டு மூன்று மணிநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது முற்றிலும் முடியாத காரணம், அதனால் ஆசை இருந்தாலும் அதிகமாக தியேட்டரில் படம் பார்ப்பதில்லை. டிரைவ் இன் தியேட்டரை அரங்கு என்று சொல்லமுடியுமா என்று தெரியாது. சென்னை பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டரில் பார்த்த சந்தோஷ் சுப்பரமணியம். என் தங்கமணியின் நண்பி குடும்பத்துடன் இரவு காட்சிக்கு சென்றிருந்தோம். காருக்கு முன்னால் பெரிய பெட்ஷீட்டை விரித்து குழந்தையை தூங்க வைத்துவிட்டு நாங்களும் அவனுடனே படுத்துக்கொண்டு ஜாலியாக பார்த்த படம். படமும் பிடித்திருந்தது. ஒரு திருப்தியான ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியுடன் திரும்பினோம். அதற்கு முன்னால் பார்த்தது Die Hard 4 (சேலம் சங்கீத் தியேட்டரில்)

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
தசாவதாரம்.. இதுகுறித்து ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
தாக்கிய என்பதற்கு மிகவும் பிடித்த என்று எடுத்துக் கொள்ளலாம் என்றால் பல படங்களை சொல்ல முடியும், பாட்ஷா, உள்ளத்தை அள்ளித்தா, கேப்டன் பிரபாகரன், Armour of God, Independance Day, அபூர்வ சகோதரர்கள் என்று கலவையாக இருக்கும். ஜேம்ஸ்பாண்டாக பியர்ஸ் ப்ராஸ்னன் நடித்த நான்கு படங்களுமே மிகவும் பிடிக்கும்.

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
அட.. தமிழ் சினிமாவுக்கும் அரசியலுக்கும் இருக்கும் சம்பந்தமே என்னை ரொம்ப கடுப்பாக்கி தாக்குகிறது, இதில் எதை சொல்ல...

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
சமீபத்தில் தசாவதாரம் படத்தின் சில காட்சிகள். நிச்சயமாக ஹாலிவுட் அளவிற்கு சொல்ல முடியாதெனினும், கண்டிப்பாக தமிழ் சினிமாவை பொறுத்தவரை இது மிக அதிகம்தான். முக்கியமாக மருத்துவமனை காட்சி, அத்தனை கமல்கள் ஒரே நேரத்தில் காட்டப்படுவதில் ஒரு சிறு பிசிறும் இல்லாமல் இருக்கும். கே.எஸ். ரவிக்குமார் ஒரு பேட்டியில் அந்த காட்சியில் மட்டும் 27 லேயர் இருந்ததாக சொன்னார்.

அப்புறம், எந்த கிராமத்து காதலர்களா இருந்தாலும் டூயட் பாட எல்லா வெளிநாட்டுக்கும் போய்ட்டு பாட்டு முடிந்ததும் சரியா கிராமத்துக்கே திரும்பி வர்றது, அந்த தொழில்நுட்பம் என்னை ரொம்ப தாக்கிடுச்சி..

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
குமுதம், விகடன், வாரமலர், முரளிகண்ணன் இவ்வளவுதான் நம்ம சினிமா பத்தின வாசிப்பு. கிசுகிசுக்களை படிச்சி அது யாரை பத்தினதுன்னு டீ கோட் பண்றதுல இன்ட்ரெஸ்ட் அதிகம்.. ஹி..ஹி..

7.தமிழ்ச்சினிமா இசை?
என் ப்ரொஃபைலில் சொல்லியிருப்பேன், "ராசா இசைன்னா சோறு தண்ணி கூட வேண்டாம்" அப்படின்னு. இளையராஜாவின் இசையை ரொம்ப பிடிக்கும்னாலும் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களும் நல்லா இருந்தா ரசிப்பேன். மிக மிக பிடித்த குரல், ஆண்களில் எஸ் பி பி, பெண்களில் சுசிலா & சித்ரா. என்னோட டாப் 5:

1. இளைய நிலா பொழிகிறது : பயணங்கள் முடிவதில்லை : இளையராஜா : எஸ் பி பி
2. இது ஒரு பொன் மாலைப் பொழுது : நிழல்கள் : இளையராஜா : எஸ் பி பி
3. உதய கீதம் பாடுவேன் : உதயகீதம் : இளையராஜா : எஸ் பி பி
4. காதல் வந்தால் சொல்லியனுப்பு : இயற்கை : வித்யாசாகர் : திப்பு
5. காதல் ரோஜாவே : ரோஜா : ஏ ஆர் ரஹ்மான் : எஸ் பி பி

(அட அஞ்சுமே ஆண் குரல் சோலோ பாடல்கள்)

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
சின்ன வயதிலிருந்தே ஆங்கில படங்கள் பார்ப்பதுண்டு, ஜாக்கிசானை பிடிக்கும். ஹாலிவுட் படங்களில் நல்ல ஆக்சன் படங்களை விரும்பி பார்ப்பேன். மிக அரிதாக மற்றவகை ஆங்கிலப் படங்களையும் பார்ப்பதுண்டு. அப்படி மனதை கொள்ளை கொண்ட படம் "50 First Dates". ஏன் இன்னும் அதை தமிழில் யாரும் காப்பி அடிக்கவில்லை என்று தெரியவில்லை.

ஹைதராபாத்தில் 3 வருடம் இருந்ததால் கொஞ்சம் தெலுங்கு படங்களும் பார்த்ததுண்டு. ரசித்து பார்த்தது "சங்கர்தாதா எம்.பி.பி.எஸ்". வசூல்ராஜாவை விட பலமடங்கு நன்றாக இருந்ததாக எண்ணம்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இப்போதைக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இரண்டு வருடம் கழித்து இந்த கேள்விக்கான பதில் "ஆமாம். என் நண்பர்கள் பரிசல், லக்கிலுக், அதிஷா ஆகியோர் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்" என்பதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தொழில்நுட்ப ரீதியாக நல்ல வளர்ச்சி தெரிகிறது. ஆனால் 30 வருடத்திற்கு முன்பு இருந்ததைப் போல ஒரு சாதாரண மனிதனால் இந்த துறையில் இன்று நுழைய முடியாது என்ற உண்மைதான் முகத்தில் அறைகிறது. பணம், அரசியல் பின்புலம், பிரபலத்தின் வாரிசு என்ற மூன்றில் ஒன்றாவது இருந்தால்தான் சினிமாவில் நுழைய முடியும் என்பதுதான் தமிழ்சினிமாவின் வளர்ச்சியை சந்தேகப்பட வைக்கிறது.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
இந்த நினைப்பே வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து. சென்னையில் இருக்கும் நமக்கு பீச், தீம் பார்க் என்று பல பல பொழுது போக்குகள். ஆனால் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருக்கும் நடுத்தர, ஏழை மக்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சினிமா மட்டுமே. அதனால் அது இல்லாத தமிழகத்தை நினைத்துப் பார்ப்பது கூட கடினமாக இருக்கிறது.

*****

எனக்கு தெரிஞ்ச எல்லா பதிவர்களும் இந்த தொடர்ல ஏற்கனவே எழுதிட்டதால நான் யாரையும் கூப்பிட முடியல. தொடர் விளையாட்டுல லேட்டா பதிவு போட்டா இதுதான் பிரச்சினை. அதனால நான் யாரையும் கூப்பிடல. எல்லாரும் சந்தோசமா இருங்க.. :))))

Monday, October 13, 2008

சுழல் கதைகள் (5 இன் 1)

டிஸ்கி: இந்த பதிவுல மொத்தம் 5 சின்னக்கதைகள் இருக்கு. ஒவ்வொரு கதையும் தனித்தனி. அதனால போர் அடிச்சா அப்படியே மீதியை விட்டுட்டு பின்னூட்டம் போட போயிடலாம். ஒவ்வொரு கதையோட முடிவும் அடுத்த கதையோட ஆரம்பம் அப்படின்ற மாதிரி எழுதியிருக்கேன். நல்லாயிருக்கான்னு படிச்சிட்டு சொல்லுங்க.

***

இதயத்திற்குள் நுழைந்த துப்பாக்கி குண்டை கைகளால் அழுந்தியபடி சரிந்த சரவணபாண்டியன் நம்ப முடியாமல் எதிரில் இருந்தவனைப் பார்த்தான்.

"என்னடா பாக்குற? பி.ஏ.கிட்ட மினிஸ்டரு பணம் குடுத்துவிட்டதா சொன்னாரு, ஆனா இவன் சுட்டுட்டானேன்னா!! ஹா..ஹா..ஹா.. எதிர்க்கட்சியில இருந்து இங்க வந்து நீ சேந்ததே ஏதாவது ஆதாயம் கிடைக்குமுன்னுதான். அதே மாதிரி உன்னால என்ன ஆதாயம் கிடைக்குமுன்னு எங்க மினிஸ்டரும் யோசிக்க மாட்டாரா? நீ இங்க வந்து சேந்தது இப்ப மொத்த தமிழ்நாட்டுக்கும் தெரியும், இப்ப உன்னை கொன்னது எதிர்கட்சிக்காரன்னுதான் எல்லாரும் நெனப்பாங்க. அது எங்களுக்கு வரப்போற தேர்தல்ல உதவப்போகுது. வரட்டா?"

என்றவாறே கிளம்பி சென்றவனை பார்த்தவாறே கண்களை மூடினார் சரவணபாண்டியன்.

அமைச்சருக்காக அரைமணி நேரம் காத்திருந்து அவர் வந்தவுடன் நடந்ததை விளக்கி பணம் வாங்கிக் கொண்டு கிளம்பும்போது கதவு தட்டப்பட்டது. திற‌ந்த அமைச்சர் இன்ஸ்பெக்டரை பார்த்து அதிர்ந்தார்.

"ஆளுங்கட்சி பணம் கொடுத்து ஆளுங்களை இழுக்குறத நிரூபிக்கறதுக்காக எதிர்கட்சிக்காரங்க ஏற்பாடு பண்ணின ஸ்டிங் ஆபரேசன்தான் சரவணபாண்டியன் உங்க கட்சிக்கு வந்து சேர்ந்தது. நீங்க பணம் குடுக்குறத படம் புடிக்க உங்களுக்கே தெரியாம வெச்சிருந்த வீடியோ கேமிரால உங்க பி.ஏ. சுட்டதும், பேசுனதும் தெளிவா பதிவாயிடுச்சி. சி.எம் உங்களை அமைச்சர் போஸ்ட்ல இருந்தும், கட்சியில இருந்தும் நீக்கிட்டாரு. போலாமா சார்?"

என்றவாறே கை விலங்கை காட்டியவரை அதிர்ச்சியுடன் பார்த்தார் முன்னாள் அமைச்சர்.

******

கை விலங்குடன் அழைத்து வரப்பட்ட அவனை பயத்துடன் பார்த்தனர் கோர்ட் வளாகத்தில் இருந்த அனைவரும். அவன் பீட்டர் சக்திவேல். தென்னிந்தியாவின் மிகக் கொடூரமான தீவிரவாதி. 2003ல் முத்துநகர் எக்ஸ்பிரஸிலும், 2004ல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸிலும், 2005ல் சென்னை வடபழனி பேருந்திலும் நடந்த குண்டுவெடிப்புகளைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்குமே. அதன் சூத்திரதாரி.

கடந்த மாதம் அரிசிக் கடத்தலை தடுக்க நடந்த இரவு நேர சோதனையில் காவல்துறையே நம்பமுடியாத வகையில் மாட்டியவன். எதற்காக அவன் சென்னைக்கு வந்து கொண்டிருந்தான் என்பது புரியாமல் காவல்துறை பெருந்தலைகள் இல்லாத முடியை பிய்த்துக்கொண்டிருப்பது அறிந்ததே.

இதோ ஒரு வழக்கு விசாரணைக்காக மதுரை வந்துவிட்டு சென்னை திரும்பும் காவல் வாகனத்தில் 5 காவலர்கள் புடை சூழ வந்து கொண்டிருந்தவன் மனதிற்குள் சிரித்துக் கொண்டிருந்தான்.

'இன்னிக்கு மதுரையில அழகர் ஆத்துல இறங்கப்போறாரு. அந்த இடத்துல வெக்கிறதுக்காக நான் பாம் செஞ்சு குடுத்துட்டு வர்றப்பதான் என்னை புடிச்சிட்டீங்க. இதோ நான் மதுரையில இருந்து கிள‌ம்பிட்டேன். இன்னும் 2 ம‌ணி நேர‌த்துல‌ வெடிக்க‌ப்போகுது. போங்க‌டா போக்க‌த்த‌வ‌னுங்க‌ளா'

என்று நினைத்துக் கொண்டிருந்த‌ அதே வேளையில், அவ‌ன் போலீஸில் சிக்கிய‌தும், போலீஸுக்கு பயந்த அவன் கூட்டாளி வெடிகுண்டை ஒரு பப்ளிக் டாய்லெட்டில் வீசிவிட்டு சென்றதும், அடுத்த பத்து நிமிடத்தில் உணவகத்தில் நிற்கும்போது டாய்லெட் செல்லும் அவன் வெடித்து சிதறப்போவதும் தெரியாம‌ல் ச‌ந்தோச‌ப்ப‌டும் அவ‌னை நினைத்து அழ‌க‌ர் சிரித்துக் கொண்டிருந்தார்.

****

"ஐயா.. எதுக்குயா சிரிக்கிறீங்க?"

"என்னா சோலை.. வறட்சி நிவாரணம் பணம் முழுசும் உனக்கே குடுத்துட்டா அப்புறம் எங்களுக்கு நிவாரணம் யாரு குடுக்குறது? ஒனக்கு ஏக்கருக்கு ரெண்டாயிரம்னு மொத்தம் பத்தாயிரம் சாங்ஷன் ஆகியிருக்கு, வெளியில போயி முருகன் இருப்பான், அவன்கிட்ட ஆயிரம் ரூபா குடுத்துட்டு வா, ஒனக்கு நான் டோக்கன் குடுக்குறேன்"

வெளியில் வந்த சோலை "படுபாவிங்க, 6 மாசமா மழையே இல்லாம கடவுள்தான் கழுத்தறுக்குறாருன்னா, கவர்மென்டு குடுக்குற வறட்சி நிவாரணத்தைக் குடுக்குறதுக்கு இவனுங்களும் கழுத்தறுக்கிறானுங்க" என்று நினைத்தவாறே, கடன் வாங்கி வந்திருந்த ஆயிரம் ரூபாயை ஆபிசர் சொல்லியவனிடம் கொடுத்து, பின் டோக்கன் வாங்கி, வரிசையில் காத்திருந்து பணம் வாங்கிக் கொண்டு வெளியே வந்தான். சைக்கிளை எடுத்து மிதிக்க ஆரம்பித்தான்.

'இன்னும் அஞ்சு கிலோமீட்டர் போகணும். ஆண்டவனே! எவ்ளோ நல்லா விவசாயம் நடந்துட்டு இருந்த கிராமம். மழை சரியா பேஞ்சு முப்போகமும் வெளஞ்சி கிராமமே பச்சப் பசேல்னு இருக்குமே! கொஞ்சம் கொஞ்சமா மழை கொறஞ்சி இந்த வருசம் சுத்தமா இல்லாம போச்சே.. ஏன் எங்கள இப்படி சோதிக்கிற' என்று புலம்பியவாறே வறண்டு கிடந்த ஏரிக்குள் நுழைந்தான்.

லேசாக வானம் கறுக்க ஆரம்பித்திருந்தது, அவன் அணிந்திருந்த அழுக்கான மெல்லிய சட்டையைத் தாண்டி லேசான குளிர் தெரிய ஆரம்பித்தது. த‌லையைத் தூக்கி வான‌த்தைப் பார்த்த‌வ‌ன் ஆண்ட‌வ‌னை வேண்ட‌ ஆர‌ம்பித்தான்..

'ஆண்ட‌வா! இன்னும் ரெண்டு கிலோமீட்ட‌ர் ஊருக்கு போக‌ணும். இந்த பணத்தை நம்பிதான்யா எங்க எதிர்காலமே இருக்கு. ஏரியைத் தாண்டி வூட்டுக்கு போற‌ வ‌ரைக்கும் ம‌ழை வ‌ராம‌ நீதாம்பா காப்பாத்துணும்'

****

"என்னாது நான் உன்ன காப்பாதுறதா? நான் என்னைய‌ காப்பாத்திக்கவே போராடிட்டு இருக்கேன்" என்றான் மாணிக்கம்.

"அதில்ல மச்சான்.. உனக்குதான் தெரியுமே நான் அந்த சீட்டு கம்பெனியில வேலைக்கு சேந்தது. எங்க குப்பத்துல என்னைய எல்லாருக்கும் நல்லா தெரியும்ன்றதால எல்லார்கிட்டயும் பேசி சீட்டு சேத்து விட்டேன். எனக்கும் கமிஷன் கிடைச்சிது. அந்த நாதாரி இப்படி ஒரே நைட்ல எல்லா பணத்தையும் எடுத்துட்டு ஓடுவான்னு எனக்கென்னா தெரியும்?"

"சரி.. சரி.. அழுவாத.. அதுக்குதான் நான் மொதல்லயே சொன்னேன். இப்பல்லாம் ஏமாத்துறவனுங்க டைரக்டா செய்யுறதில்ல, இப்படி அந்த ஏரியாவுல நல்ல பேர் இருக்குறவனா பாத்து புடிச்சு போடுறானுங்க.. நீயும் அதுக்கு பலிகடா ஆயிட்ட"

"ஆமா மச்சான்"

"சரி.. ஒண்ணு பண்ணு.. சாப்டுட்டு போய் நம்ம போட்டாண்ட நில்லு, கபாலி வருவான், இன்னிக்கு அவன் மட்டும்தான் கடலுக்கு போறான். நீயும் அவன் கூட போயிட்டு வா. தரையில இருக்குறது ஒனக்கு இப்ப சேஃப் இல்ல"

ஒரு மணிநேரம் கழித்து கபாலி வந்தான். அவனிடம் விவரம் எதுவும் சொல்லாமல் ஒரு சிறிய பிரச்சினை என்று மட்டும் சொல்லி, அவனுடன் படகில் கிளம்பினான்.

கபாலியும், மச்சானும்தான் சேர்ந்து இந்த படகை வாங்கினார்கள். கபாலி ரொம்ப நல்லவன். 15 வருசமாக இருவரும் சேர்ந்து தொழில் செய்தாலும் இதுவரை தகராறு எதுவும் வந்ததில்லை. ஆனால் அவன் ஒரு வாயாடி.. பேசிக்கொண்டே வந்தான். 2 மணிநேரத்திற்கு பிறகு மெதுவாக கபாலி கேட்டான்..

"ஏன் முத்து.. நமக்கு தெரிஞ்ச ஆள் ஒருத்தர் புதுசா சீட்டு கம்பெனி ஆரம்பிச்சிருக்காரு.. நல்ல மனுசந்தான்.. நானே சேத்து உடறேன்.. நீ வேணா ஒரு அம்பதாயிரம் ரூபா சீட்டு போடேன்"

****

"என்னது? இன்னொரு சீட்டு போடுறதா? என்னடா விளையாடுறியா?" என்று மெதுவான குரலில் கேட்டான் கிருஷ். அவர்கள் இருந்தது நகரின் பிரபலமான காஸினோவின் ப்ளாக் ஜாக் டேபிளில்..

"விளையாண்டுட்டுதானேடா இருக்கோம்" சிரித்தான் சித்தார்த்.

"ஏற்கனவே 18 இருக்கு, இன்னும் கார்டு கேக்குற, ரெண்டு, மூணு இல்லை ஏஸ் வரலைன்னா நீ தோத்துடுவ"

"பரவாயில்ல, டிரை பண்ணுவோம், லைஃப்ல ரிஸ்க் எடுக்க பயப்படக் கூடாதுடா. அதுவும் இது என்னா சுண்டைக்கா, ரெண்டாயிரம் டாலர்தான, போயிட்டு போவுது"

அடுத்த சீட்டு 2 வந்தது. சித்தார்த் ஜெயித்தான். அவன், அமெரிக்க ராணுவத்திற்கு தளவாடம் சப்ளை செய்யும் மிக முக்கியமான நிறுவனத்தின் ஆர் & டி பிரிவின் மிக மிக முக்கியமான நபர். மறுநாள் ராணுவ உயர் அதிகாரிகளுக்கு நடக்க இருக்கும் ரகசிய டெமோவிற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு ரிலாக்ஸேஷனுக்காக காஸினோ வந்திருந்தனர்.

"என்னமோ போடா.. உன்னை பாராட்டுறதா திட்டுறதான்னு தெரியல. ஒரு விசயம், எல்லா நேரத்திலயும் அதிர்ஷ்டம் கை குடுக்காது. பாத்து நடந்துக்க"

"கம்முனு இருடா.. சும்மா பாட்டி மாதிரி புத்தி சொல்லிட்டு" சிரித்துக் கொண்டே காரை கிளப்பினான்.

மறுநாள், புதிதாக வடிவமைக்கப்பட்ட குறைந்த எடையுடைய ஆனால் அதி நவீன துப்பாக்கியிலிருந்து வரும் தோட்டாவையும் தடுக்கக்கூடிய கவச உடை டொமோ. கடந்த ஒரு மாதமாக எல்லா விதமாக டெஸ்டிங்கும் செய்து அறிக்கை அளித்திருந்த அவனது டீமிற்கு நன்றி சொல்லிவிட்டு டெமோ பீஸுடன் கான்ஃபரன்ஸ் ஹாலுக்குள் நுழைந்தான் சித்.

"ஹாய் சித்.. ஏன் இந்த டெமோவை வெளியில வெச்சிக்கக் கூடாது. ஏன்னா ரியல் டைம் டெமோவா இருக்கணும்னு பார்க்குறோம்"

"ஷ்யூர்.. வாங்க போகலாம்" வெளியே வந்தான். மே மாத வெயில் 98 டிகிரியில் கொளுத்திக்கொண்டிருந்தது. லேசாக வியர்க்க ஆரம்பித்தது.

"இப்போ நானே இதை போட்டுக்கிறேன்."

"ஏன் வேற யாராவது..."

"அப்படி பண்ணினா, இந்த ப்ராடக்ட் மேல எனக்கே நம்பிக்கை இல்லைன்னு அர்த்தம்" ட்ரேட் மார்க் சிரிப்பை உதிர்த்தான் சித்.

"நீங்க என் உடம்பை குறி பாத்து சுடுங்க ஜாக்.."

"நீங்க ரொம்ப ரிஸ்க் எடுக்குறீங்க சித்" என்று கூறியவாறே குறி பார்த்து சுட்டான் ஜாக்.

அவன் டிரிக்கரை அழுத்திய வினாடி, சித்தார்த்திற்கு முதல் நாள் டெஸ்ட் ரிப்போர்டில் படித்த ஃபெய்லியர் கேஸஸ் லிஸ்ட் நினைவுக்கு வந்தது.

'வெப்பநிலை 95 டிகிரிக்கு அதிகமாகவும் ஈரப்பதம் 30%க்கு அதிகமாகவும் செல்லும்போது கவச உடையில் உள்ள ஃபைபர் நெகிழ்ந்து துப்பாக்கி குண்டை தடுக்கும் சக்தியை இழக்கிறது. 116க்கு 1 முறை இந்த நிகழ்வு காணப்பட்டது'

வெப்பநிலை கிட்டதட்ட 100 இருக்கும். தன் வேர்வையில் ஏற்கனவே உடை முழுதும் நனைந்துள்ளது. அதிர்ந்து போய் பார்த்தான். துப்பாக்கி குண்டு அவன் நெஞ்சுக்கு நேராக வந்துகொண்டிருந்தது.

(இப்போ முதல் கதையை படிக்க ஆரம்பிங்க)

Thursday, October 2, 2008

சென்னையில் மாபெரும் பதிவர் மாநாடு

சென்னை, அக். 1:
சென்னையில் மாபெரும் பதிவர் மாநாடு நடக்க இருப்பதாக சென்னை பதிவர் சங்க தற்காலிக பொறுப்பாளர் அதிஷா தெரிவித்துள்ளார். இதன் விவரங்கள் பின்வருமாறு:

இன்று சென்னை பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த பதிவர் சங்க பொறுப்பாளர் அதிஷா, சென்னையில் கடந்த இரண்டு மாதங்களாக பதிவர்கள் சந்தித்து மொக்கை போடாமல் இருப்பதாக கடற்கரை சாலையில் கால்கடுக்க நின்றிருக்கும் காந்தியடிகள் கவலைப்பட்டுள்ளதாகவும், இதை முன்னிட்டு வரும் அக்டோபர் நான்காம் தேதி மாலை மாபெரும் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்க ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து கொண்டு தமிழ் வளர்த்து வரும் அண்ணன் பொட்"டீ"க்கடை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மாநாட்டின் நிகழ்ச்சி நிரலை லக்கிலுக் தலைமையிலான பதிவர் படை இறுதி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த மாநாடு டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா என்ற கேள்விக்கு பதிவர்களிடையே அரசியல் மிகுந்து இருப்பதாகவும் ஆனால் அந்த அரசியலால் ஒரு ஓட்டு கூட வாங்க முடியாது என்பதால் எந்த டிவியும் கண்டுகொள்ள போவதில்லை என்றும் தெரிவித்தார்.

சென்னையில் இருக்கும் அனைத்து தமிழ் பதிவர்களும் அலைகடலென திரண்டு வந்து இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், மாநாடு முடிந்தபின் டமாரு கொமாருவுடன் காண்டு கஜேந்திரனை சந்திக்க செல்வதாக முடிவு செய்திருப்பதாகக் கூறினார். இந்த செய்தியை அவர் சொன்னதற்கு காரணம் தாமிரா மற்றும் வால்பையனை வரவழைக்கவே என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்துள்ளன.

மாநாட்டிற்கான ஏற்பாடுகளில் பதிவர் முரளிகண்ணன் முழுவீச்சில் ஈடுபட்டிருப்பதால் பெரும் கூட்டம் கூடும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார்.

திருமணத்திற்கு பிறகு பதிவு எழுதுவதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்ட தல பாலபாரதிக்கு மாநாட்டில் கறுப்புக் கொடி காட்ட வெண்பூ உள்ளிட்ட பதிவர்கள் திட்டமிட்டுள்ளதாக வந்த செய்திகளை அடியோடு மறுத்த அவர் இது போன்ற செய்திகளுக்கு வெளிநாட்டு சதியே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேல் தகவல்கள்:

நாள்: அக்டோபர் 4, 2008 (சனிக்கிழமை)

நேரம்: மாலை 6 மணி

இடம்: சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை பின்புறம்

கலந்து கொள்பவர்கள்: சென்னைவாழ் பதிவர்கள் அனைவரும்

எதிர்ப்பார்க்கப்படுபவர்கள்: புதிய பதிவர்கள் மற்றும் இதுவரை பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளாத பதிவர்கள்

சிறப்பு அழைப்பாளர்: பொட்"டீ"க்கடை

மேலதிக விபரங்களுக்கு..
அதிஷா மின்னஞ்சல் முகவரி - dhoniv@gmail.com
அதிஷா அலைபேசி எண் - 9941611993

சந்திப்பு குறித்த மற்ற பதிவுகள்:
அதிஷா : சென்னை வலைப்பதிவர்சந்திப்பு - 04-10-2008
முரளிகண்ணன் : அக்டோபர் 4 - சென்னை பதிவர் சந்திப்பு

Saturday, September 20, 2008

என் அன்பு மகனே...



வீட்டிற்குள் நுழைந்ததும்
நாசியை நிறைக்கிறது
மணம்

எந்த அறைக்கு சென்றாலும்
தரையில் காண முடிகிறது
உன் திருவிளையாடலை

படுக்கையில் படுத்து
கண் திறந்தால்
பார்க்காமல் இருக்க‌
முடியவில்லை
நீ தீற்றிய ஓவியங்கள்

நான் அலுவலகம் சென்று
திரும்பும் வரை
நடந்ததெல்லாம்
இப்படி சொல்கிறது
நீ போன‌ உச்சா...


( டிஸ்கி 1: திட்டுவதற்கு முன் லேபிளை பார்க்கவும்.
டிஸ்கி 2: இந்த பதிவுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. எனவே விக்கியை யாரும் திட்டவேண்டாம் )

Friday, September 5, 2008

அதிஷாவிற்கு வாழ்த்துக்கள் (விகடனில் அவரது படைப்பு)

லக்கிலுக், குசும்பன், பரிசலை அடுத்து மற்றொரு பதிவரின் படைப்பு விகடனில் வந்துள்ளது.

கும்மி நண்பர் அதிஷாவின் "தமிழ் வாழ்க!" இன்று யூத்புல் விக‌ட‌னில் வ‌ந்துள்ளது. அவ‌ருக்கு வாழ்த்துக்க‌ள் ம‌ற்றும் பாராட்டுக்க‌ள்.

தொட‌ர்ந்து ப‌திவ‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வ‌ளித்துவ‌ரும் விக‌ட‌ன் குழும‌த்துக்கு ந‌ன்றிக‌ள் ப‌ல‌.

அவ‌ர‌து ப‌திவை வாசிக்க‌ இங்கே செல்ல‌வும்.

Link: http://youthful.vikatan.com/youth/tshirts.asp

பின்குறிப்பு: இந்த நல்ல செய்தியை என்னுடன் பகிர்ந்து கொண்ட பரிசலுக்கு நன்றி.

Tuesday, September 2, 2008

காணாமல் போனவை: சைக்கிள், நண்பர்கள் அப்புறம் .... நேர்மை

"கால ஓட்டத்தில் காணாமல் போனவை" என்ற தலைப்பில் பதிவர் சுரேகா ஆரம்பித்த தொடரில் என்னையும் இணைத்த நண்பர் பரிசலுக்கு நன்றி.

கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் ஒவ்வொருவருக்குமே கால ஓட்டத்தில் காணாமல் போன ஒரு விசயமாவது நினைவுக்கு வரும் என்பதும் அது இல்லாமல் போனது குறித்த பெருமூச்சும் வெளிப்படுவது நடக்கக் கூடியதே. இந்த தொடருக்காக நான் திரும்பிப் பார்த்த போது என்னை பெருமூச்சு விட செய்த மூன்று விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.


சைக்கிள்:
என் பால்ய பருவத்தில் நாங்கள் இருந்தது பாப்பிரெட்டிபட்டி வனத்துறை க்வார்ட்டர்ஸில். அந்த கொஞ்சம் பெரிய கிராமத்தில் / சிறு நகரத்தில், மொத்தமாக ஒரு 3 ஏக்கர் பரப்பளவில் பெரிய க்வார்ட்டர்ஸ். அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக 7 வீடுகள். க்வார்ட்டர்ஸின் நட்ட நடுவில் பெரிய கட்டிடத்தில் வன அலுவலகம் என்று அற்புதமான சூழ்நிலை. அவ்வளவு பெரிய இடமுமே எங்களுக்கான விளையாட்டு மைதானம்தான். அதிலும் அப்போது அருகில் வாணியாறு அணை கட்டப்பட்டு வந்ததால் அங்கு வெட்டப்பட்ட சிறிய, பெரிய மரங்களும் (சில மரங்களின் விட்டம் 10 அடிக்கு மேல்) அங்கே அடுக்கப்பட்டிருக்கும். (டிராக் மாறி போறேனோ..)

அங்கேதான் நான் முதல் முதலாக சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தது. அப்பாவின் சைக்கிளை எடுத்துக் கொண்டு போய் குரங்கு பெடல் போட கற்றது, கீழே விழுந்து சிராய்த்துக் கொண்டது (எப்போதுமே கால் முட்டியில் ஒரு காயம் இருந்து கொண்டே இருக்கும்), பூட்டிய சைக்கிளின் பெடலை பின்னால் சுற்றி விரல் செயினில் மாட்டிக் கொண்டு அலறியது என்று மறக்க முடியாத நினைவுகள்

இப்போது நினைத்துப் பார்த்தால் இன்று எனக்கு பயணத்தின் மீது இருக்கும் நாட்டம் அப்போதே வெளிப்பட்டிருக்கிறது போல் தோன்றுகிறது.

அதன்பின் அங்கிருந்து இராசிபுரம் வந்து இரண்டு வருடங்களில் அப்பா டிவிஎஸ் 50 வாங்கிய பிறகு அவரது சைக்கிள் அண்ணனுக்கும் அண்ணனின் கொஞ்சம் குட்டையான சிவப்பு சைக்கிள் எனக்கும் வந்தது. அதை எடுத்துக்கொண்டு சில பல வருடங்களுக்கு நான் சுற்றாத இடமே இராசிபுரத்தில் இல்லை. எங்கு செல்வதென்றாலும் சைக்கிள்தான் (காலை கடனுக்கு மட்டும்தான் நடந்து, திரும்பி வரும்போது சைக்கிளில் உட்கார முடியாது என்பதால்)

அதன்பின் சேலத்தில் வேலையில் சேர்ந்தது, ஹைதரபாத் போய், முதல் வாகனமாக என் வருமானத்தில் ஸ்பெலன்டர் பைக் வாங்கி, அமெரிக்கா போனபோது ஃபோர்டு கார் வாங்கி, சென்னை திரும்பி வந்து என்று எல்லாமே நல்லவிதமாகவே நடந்தாலும் சைக்கிளை கண்டிப்பாக நான் மிஸ் செய்கிறேன்.

இதோ கடந்த வாரம் கொடைக்கானல் போனபோது அங்கே ஏரியை சுற்றி வர சைக்கிள் வாடகைக்கு எடுத்து முன்னால் என் குழந்தையை அமர வைத்து ஓட்டியபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. (என் தங்கமணியிடமும் அதே விளைவு என்பது நானே எதிர்பாராதது).

கண்டிப்பாக சொந்த வீட்டிற்கு மாறியவுடன் மீண்டும் சைக்கிள் வாங்கத்தான் போகிறேன்..


நண்பர்கள்:
கால ஓட்டத்தில் ஒவ்வொரு பகுதியுமே ஒரு இரயில் பயணம் போலதான். அதில் ஒரு சில நண்பர்கள் நெருங்கியவர்களாகவே இருந்தாலும் தொடர்பற்று போவது நடக்கும். அப்படிப்பட்ட தொடர்பறுந்த என் நண்பர்கள் இங்கே. இவர்களில் ஒருவராவது தொடர்பு கொண்டால் சந்தோசம‌டைவேன்.

சுபாஷ்: என் நினைவு தெரிந்து என் முதல் நண்பன். பாப்பிரெட்டிபட்டி செல்வதற்கு முன் என் 5 வயது வரை நாங்கள் சேலம் ஹவுசிங் போர்டில் குடியிருந்த போது இவன் என் நண்பன் (1982, 83 இருக்கும்). 25 வருடம் கழித்தும் இவனது முகம் நினைவில்லாத போதும் இவன் பெயர் நினைவிருப்பதே ஆச்சரியமாக இருக்கிறது.

குருபிரசாத்: பாப்பிரெட்டிபட்டியில் என்னுடன் துவக்கப்பள்ளியில் படித்தவன். அப்பா அங்கே டீக்கடை வைத்திருந்தார். பள்ளி இடைவேளைகளில் இவனது கடைக்கு சென்று பஜ்ஜி சாப்பிட்டது நன்றாக நினைவிருக்கிறது (இவனது முகம் சுமாராத்தான் ஞாபகத்துல இருக்குன்றது வேற விசயம்)

ராம்குமார்: என்னுடன் இராசிபுரத்தில் ஒன்பதாவது வரை படித்தவன். மிக நெருக்கமானவனாக இருந்தாலும், அதன்பின் அவன் கோவைக்கு இடம் பெயர்ந்த பிறகு தொடர்பற்று போய்விட்டது. அங்குள்ள பீளமேடு சர்வஜீன மேல்நிலைப்பள்ளியில் இவன் படித்ததாக நினைவு.

அதற்கு பிறகு என்னுடன் பழகியவர்களையெல்லாம் முடிந்தவரை தொடர்பில் வைத்திருக்கிறேன் என்பது நல்ல விஷயம்தான்.

திருட்டு விசிடி:
எனக்கு பிடிக்காத விஷயம் புதிய படங்களை திருட்டு விசிடியில் பார்ப்பது. மென்பொருள் துறையில் இருப்பதால் "பைரசி"யின் நஷ்டங்களையும் வேதனைகளையும் நன்கு அறிவேன். நான் சிடியில் படம் பார்க்கும் தருணங்கள்,

* அந்த படத்தை தியேட்டரில் பார்க்கத் தவறியிருப்பேன், வேறெங்கும் ஓடிக் கொண்டிருக்காது
* நீண்ட தூர பயணங்களில் பஸ்களில் ஒளிபரப்படும்போது (வேறு வழியில்லாமல் பார்க்க வேண்டியிருக்கும். எனக்கு அமைதியான இருட்டான சூழல் இல்லாவிட்டால் தூக்கம் வராது)

எனது இந்த பார்வை / செயல்பாடு கடந்த மூன்று வருடங்களில் மாறியிருக்கிறது என்பது கேவலமான உண்மை. அமெரிக்காவில் நாங்கள் இருந்த பஃபல்லோ நகருக்கு எந்த தமிழ் படமும் வராது. இந்தியன் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர்கள் தயவால் இந்தி படங்கள் மட்டுமே அவ்வப்போது ஓட்டப்படும். தங்கமணிக்கு இந்தி தெரியாததால் அதற்கும் போக முடியாது.

அதை விட்டால் 2 மணிநேரம் + 160 கி.மீ பயணம் செய்து டொரொன்டோ போக வேண்டும். போனாலும் கைக்குழந்தையுடன் படத்தை மனம் ஒன்றி பார்க்க முடியாது. கேஸினோ ராயல் படத்திற்கு சென்றுவிட்டு குழந்தை அழ ஆரம்பித்ததால் தங்கமணி முக்கால்வாசி படத்தை பார்க்க முடியாமல் வெளியே உட்கார்ந்த அனுபவத்திற்கு அப்புறம் ஆங்கில படமும் கட்.

அதனால் இணையத்தில் இருந்து டவுன்லோட் பண்ணி பார்க்க ஆரம்பித்தோம். காரணங்கள் சரியாக இருந்தததால் குற்ற உணர்வு இல்லை (அல்லது குறைவாக இருந்தது).

ஆனால் மிக சமீபத்தில் பலமுறை முயன்றும் தசாவதாரம் பார்க்க முடியவில்லை. (சத்யம் தியேட்டருக்கு சென்று டிக்கெட் இல்லாமல் திரும்பி வந்தது, பணம் செலுத்திய பிறகு இன்டெர்நெட் டிரான்ஸாக்ஷன் ஃபெய்லியர் ஆனது என்று பல தடங்கல்கள்). முடிவாக இன்டர்நெட்டில் தங்கமணி தேடிக் கொடுத்த முகவரியில் இருந்து படத்தை டவுன்லோட் செய்து சென்ற வார இறுதியில் பார்த்தோம்.

படத்தின் விமர்சனம் எப்படி இருந்தாலும் அந்த படத்திற்காக கமல் போட்டிருக்கும் உழைப்பு அபரிமிதமானது என்பது உணர முடிந்தது. நாங்கள் இருவரும் அந்த படத்தை இணையத்தில் பார்த்தததால் அவருக்கு பைசா பிரயோஜனமில்லை என்பதும் என்னை வேதனைப்படுத்தியது. ஸாரி கமல்.

அதனால்தான் படம் குறித்து எந்த பதிவையும் இடவில்லை. நான் ஏன் இப்படி மாறினேன் அல்லது எது இப்படி மாற்றியது என்று பதில் எனக்கு தெரியவில்லை.

பார்க்கலாம். இனி மேலாவது இது போன்ற நேர்மையற்ற செயல்களை நான் செய்யாமல் இருக்கிறேனா என்று. :(

Wednesday, August 27, 2008

இன்று (ஆகஸ்ட் 27, 2008) என் செல்லத்தின் பிறந்தநாள்...

இன்று எங்கள் சந்தோசத்தின் மொத்த உருவம் பிறந்த நாள்.. நான் கணவன் என்ற வேலையில் அடிஷனலாக அப்பா என்ற பொறுப்பையும் சுமக்கத் துவங்கிய நாள்..

ஆம்.. எங்கள் வீட்டின் கொண்டாட்டம் ஆரம்பித்து இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகின்றன.

எங்கள் செல்லம் ஆதர்ஷ் இன்றோடு இரண்டு வயதை முடித்து மூன்றாவது வயதில் அடியெடுத்து வைக்கிறான்.

இதோ அவனது ஆல்பம்....















பின்குறிப்பு: இந்த முறை அவன் பிறந்த நாளுக்கு எங்களின் நான்கு நாட்களை அவனுக்கே அவனுக்காக பரிசளிக்க இருக்கிறோம். அலுவலக வேலை, வீட்டு வேலை, கணினி, இணையம், வலைப்பூ எல்லாவற்றிலிருந்தும் நான்கு நாட்கள் விலகி அவனுடன் கொடைக்கானலில் தங்கியிருக்கலாம் என்று திட்டம். இந்த பதிவுகூட சனிக்கிழமையே பதிவிடப் பட்டு 27ம் தேதி பப்ளிஷ் ஆவதுபோல் செட் செய்யப்பட்டுள்ளது.

அதனால்தான் இந்த வாரம் முழுவதும் என்னை நீங்கள் வலையில் பார்த்திருக்க மாட்டீர்கள். புரிதலுக்கு நன்றி.

Sunday, August 10, 2008

சென்னைப் பதிவர் சந்திப்பு 10.ஆகஸ்ட்.2008 (படங்களுடன்)


நாள்: ஆகஸ்ட் 10, 2008 ஞாயிற்றுக்கிழமை

இடம்: சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை பின்புறம், மரத்தடி மற்றும் டீக்கடை

நேரில் சிறப்பித்த பதிவர்கள்: அதிஷா, ஜிங்காரோ, பாலபாரதி, லக்கிலுக், டோண்டு ராகவன், வெண்பூ, ரமேஷ் வைத்யா, கடலையூர் செல்வம், முரளி கண்ணன், டாக்டர் புருனோ

போனில் சிறப்பித்தவர்கள்: வால்பையன், பரிசல்காரன்

எதிர்பாராத வருகை: மழை (பதிவர் இல்லை, நிஜ மழைதான்)

நடந்த நிகழ்வுகளும் போடப்பட்ட மொக்கைகளும்:
1. பதிவர்களின் வருகைக்காக காத்திருத்தல்
2. பதிவர்களின் வருகைக்காக காத்திருத்தல்
3. பதிவர்களின் வருகைக்காக காத்திருத்தல்

4. புதிய பதிவர்கள் அறிமுகம்
5. பாலபாரதிக்கு வாழ்த்துக்கள்
6. முரளிகண்ணன் வீட்டில் சொன்ன காரணம் குறித்த விளக்கம்
7. மழைக்கு மரத்தடி ஒதுங்கல்
8. பாலபாரதியின் புத்தகம் குறித்த விவாதம்
9. அதிஷா ஸ்பான்சரில் குல்பி ஐஸ்
10. வலைப்பதிவு மூலம் தமிழை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது எப்படி என்பது பற்றிய லக்கிலுக்கின் பேச்சு
11. தமிழ் வலைப்பதிவுலகின் வரலாறு குறித்து டோண்டு, புருனோ, லக்கிலுக் மற்றும் பாலபாரதியின் உரை
12. டோண்டு ராகவன் ஸ்பான்சரில் டீ மற்றும் பிஸ்கட்
13. விகடனின் புதிய வடிவம் குறித்த வருத்தங்கள்
14. நன்றி நவிலல்

பதிவர் சந்திப்புக்கு வந்த அனைவருக்கும் நன்றிகள். புகைப்படங்கள் கீழே...









Thursday, August 7, 2008

டிபிசிடி.. சென்னை பதிவர் சந்திப்பில் நடந்தது என்ன? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!!!

(சரோஜ் நாராயண்சாமி ஸ்டைலில் படிக்கவும்)

நேற்று 6.8.2008 புதன்கிழமை மாலை காந்தி சிலை அருகில் டிபிசிடி அவர்கள் சென்னைப் பதிவர்களை சந்தித்துள்ளார். அப்போது சில திடுக்கிடும் நிகழ்வுகள் நடந்ததாக தெரியவந்துள்ளது.

டிபிசிடியை அனைவரும் வரவேற்று பேசியபின், புதிய பதிவர் ஒருவர் அவரிடம் "உங்க சைட்ல புதசெவின்னு போட்டிருக்கீங்களே! அப்படின்னா என்னா? புரியலயே யவு செஞ்சி விளக்குங்க!!" என்று கேட்டு தனது செவுளில் பொளேர் என்று அடி வாங்கியதாகத் தெரிகிறது. அந்த பதிவர் "அப்படி நான் என்ன கேட்டுட்டேன்னு இவரு இப்படி அடிக்கிறாரு? நான் இனிமே பதிவே எழுத மாட்டான்டா!!" என்று புலம்பியவாறு அந்த இடத்தை விட்டு அகன்றுள்ளார். இது குறித்து நமது நிருபரிடம் பேசிய டிபிசிடி தமிழ் வலையுலகில் ஒரு மொக்கை பதிவர் குறைந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

அங்கிருந்த லக்கிலுக்கிடம் பிளீச்சிங் பவுடர் என்ற பதிவர் லக்கிலுக் தனது பின்னூட்டங்களை, முக்கியமாக கலைஞரை திட்டும் பின்னூட்டங்களை ஏன் வெளியிடுவதில்லை என்று கேட்டுள்ளார். தனக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 100 பின்னூட்டங்களாவது வருவதாகவும் அதில் ஒரு சிலது இப்படி தவறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் லக்கி தெரிவிக்க அதை ஒத்துக்கொள்ளாத பி.ப மேலும் ஏதோ கேட்க, கடுப்பான லக்கி "அதுதான் ஜெயலலிதாவ திட்டுறதுக்கு உடன்பிறப்பும், கருணாநிதிய திட்ட அதிமுககாரங்களும் சைட் வெச்சிருக்காங்கள்ள.. அங்க போய் திட்டுங்கடா.. என்னை விடுங்கடா.." என்று காட்டுக்கத்தல் கத்தியுள்ளார்.

அவரது கத்தலைக் கேட்டு அந்த பகுதியிலிருந்த அனைவரும் (சிலையாக இருந்த காந்தி உட்பட) லக்கியின் பக்கம் திரும்பிப் பார்த்துள்ளனர். இன்று காலையில் காந்தி சிலை ஏன் தலையை திருப்பிக் கொண்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருப்பது கூடுதல் செய்தியாகும்.

இதற்கிடையே அங்கு வந்த பைத்தியக்காரன் "நான் உன்னைக் கொலை பண்ணப்போறேன்டா" என்று கத்தியவாறே வேகமாக பாலபாரதியின் மீது பாய்ந்து அவருக்கு கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்துள்ளார். இதை சிறிதும் எதிர்பார்க்காத பாபா உடனியாக மயக்கம் அடைந்தார். அதிர்ச்சியடைந்த பதிவர்கள் அவருக்கு முதலுதவி செய்து 10 நிமிடம் கழித்து அவரை மயக்கம் தெளிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய பைத்தியக்காரன், தான் மூன்று நாட்களுக்கு முன்பே பல் விளக்கியதாகவும், ஏன் பாபா மயக்கமானார் என்பது தனக்குப் புரியவில்லை எனவும் தெரிவித்தார். அதிர்ச்சியிலிருந்து மீண்ட பதிவுலக சூப்பர் ஸ்டார் பாலபாரதி, தான் எழுதிய, எழுதப்போகும் எந்த புத்தகத்தையும் இனி யாருக்கும் ஓசியில் தரப்போவதில்லை என்றும் தான் இந்த சம்பவத்திலிருந்து ஒரு நல்ல பாடம் கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

அப்போது அங்கு வந்த அதிஷாவிடம் டிபிசிடி, நீங்க ஏன் தலையில ஸ்கார்ப் கட்டியிருக்கீங்க? என்று கேட்க, அதற்கு அவர் கவலையுடன் "வண்டி ஓட்டுறப்ப இருக்குற நாலு முடியும் பறந்துடக் கூடாதுல்ல?" என்று பதில் அளித்துள்ளார். இதைக் கேட்ட அனைவரும் 'கொல்' என சிரிக்க அதிர்ச்சியான அதிஷா, நான் உடனே தற்கொலை பண்ணிக்கப் போறேன் என்று கூறியவாறே லைட் ஹவுஸ் மீது ஏறியுள்ளார்.

ஆஹா.. பதிவு போட சூப்பர் மேட்டர் கிடைச்சிடிச்சிடா என்றவாறே கீழே கூடிய பதிவர்கள் எவ்வளவு கேட்டும் கீழே இறங்காத அதிஷா, அந்த பக்கம் காற்று வாங்க வந்த பத்து பத்து சோனாவை ஏரியல் வியூவில் பார்த்து விட்ட ஜொள்ளில் தானே வழுக்கி படிக்கட்டு வழியாக கீழே வந்து சேர்ந்துள்ளார்.

அவர் பாதுகாப்பாக கீழே வந்ததை சற்றும் எதிர்ப்பாக்காத பதிவர்கள், ஒரு சூடான பதிவு மிஸ்ஸான சோகத்தை காண்டு கஜேந்திரனை பார்த்து தணித்துக் கொள்ள வேளச்சேரி பக்கமாக வண்டிகளை கிளப்பிக் கொண்டு போனதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

******

ஹி...ஹி... நேத்து காந்தி சிலை பக்கமா போக முடியல.. அதனால அங்க என்ன நடந்திருக்கும்னு கற்பனையில யோசிச்சதுல..

Friday, August 1, 2008

கர்நாடக கண்டக்டரும் கவுண்ட பெல்லும்

காமெடி ந‌டிக‌ர் க‌வுண்ட‌ பெல் அவ‌ர‌து தோட்ட‌த்துக்கு த‌ண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கிறார். அப்போது அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ வ‌ருகிறார் உத‌வி இய‌க்குன‌ர்.

"அண்ணே! அண்ணே! ஒரு சின்ன‌ பிர‌ச்சினைனே!!!"

"என்ன‌டா நாயே?"

"அண்ணே! நீங்க‌ ந‌டிக்கிற‌ புதுப்ப‌ட‌த்துல‌ உங்க‌கிட்ட‌ அடிவாங்குற‌ கேர‌க்ட‌ர‌ ந‌டிக்கிற‌துக்கு செந்தேள் ஒத்துக்க‌ மாட்டேன்னு சொல்லிட்டாருணே"

"அந்த ப‌ச்சிலை புடுங்கி ஏண்டா ஒத்துக்க‌ல‌?"

"அண்ணே அவருக்கு உங்ககிட்ட அடி வாங்கி வாங்கி சலிச்சு போச்சாண்ணே. அதுனாலதான் வேற யாரைப் போடுறதுன்னு டைரக்டர் கேட்டுட்டு வரச் சொன்னாருன்னே"

"சரி. சிச்சுவேஷன சொல்லு. யாரைப் போடுறதுன்னு சொல்றேன்"

"கதைப்படி, உங்க ஊருக்கார பையன் ஒருத்தன் பஞ்சம் பொழக்கறதுக்காக பக்கத்து ஊருக்கு போறான். அங்க போயி வியாபாரம் பண்ணி பெரிய ஆளா ஆயிடுறான். கொஞ்ச நாள் கழிச்சி உங்க ஊருக்கும் அந்த ஊருக்கும் வாய்க்கால் தகறாரு ஆயிடுதுன்னே. அந்த பையன் என்னா பண்றான்னா தன் சொந்த ஊருன்னுக்கூட பாக்காம உங்க ஊரைக் கேவலமா பேசிடுறான்"

"அவன் செவுட்டுலயே அறைய வேண்டியதுதான"

"கரெக்டா சொன்னீங்கண்ணே... அதத்தான் நீங்க பண்ணீறீங்க. அவன் உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கலன்னா அவன் உங்க ஊருக்கு வியாபாரமே பண்ண வரக்கூடாதுன்னு சொல்றீங்க. அவனும் மூணாவதா ஒரு ஊருக்கு போயி அங்க இருந்து போன் பண்ணி மன்னிப்பு கேக்குறான்"

"ஏண்டா! அவன் கடை வச்சிருக்குற ஊர்காரனுங்க அவனை சும்மா விடுவானுங்களா?"

"அட அவனுங்க எல்லாம் சொரணை கெட்டவனுங்கண்ணே. இவன் மன்னிப்பு கேட்டுகிட்டு இருக்குறப்பவே அவன் கடையில பொருள் வாங்குறதுக்கு க்யூல நிப்பானுங்கண்ணே"

"அடப்பாவிகளா! அப்ப அவனுங்களத்தானு அப்பணும்"

"அது எல்லாம் நம்ம கதையில இல்லைண்ணே. எத்தனைப் பேரை அப்புவீங்க‌. இப்ப சொல்லுங்க. யாரை போடலாம் அந்த பையன் கேரக்டருக்கு"

"ம்ம்ம்ம்... அவனைப் போடுங்க" என்று ஒரு பெயரை சொல்கிறார்.

"அண்ணே! அவராண்ணே.. அவரு எவ்ளோ பெரிய ஆளு.. அவரு போயி எப்படிண்ணே?"

"டேய் இன்னிக்கு தேதிக்கு அந்த மாங்கா மண்டையன விட்டா இந்த கேரக்டர்ல நடிக்கிறதுக்கு இந்த இந்தியாவிலயே ஏன் உலகத்துலயே ஆளு கெடையாது. பணம் நிறையா குடுக்குறதா சொல்லு.. பன்னாடை பல்லு இளிச்சிட்டு வந்துடுவான்.. என்ன இருந்தாலும் அவனும் " அடுத்த வார்த்தைகளை முணுமுணுக்கிறார்.

"அண்ணே!! என்னண்ணே சொன்னீங்க?"

"அடங்கொய்யால.. அவனும் வியாபாரிதான அப்படின்னு சொன்னேன். உனக்கு வேற மாதிரி கேட்டா நான் ஒண்ணும் பண்ண முடியாது."

Wednesday, July 30, 2008

ஒரு பாடல் உருவாகிறது – பார்ட் 3

ஐயாக்களே..அம்மாக்களே... வலையுலக மகாஜனங்களே!! நான்பாட்டுக்கு ஏதோ எனக்கு இருக்குற அறிவை(?) வச்சி யோசிச்சி, யோசிச்சி(?) அறிவியல் கதையா எழுதி குமிச்சிட்டு(?) இருந்தா, ஒரு மனுசனுக்கு அது அடுக்கலை. நான் அந்த போட்டியில பரிசு வாங்கிட்டாம பண்ணிடனும்ன்றதுக்காக என்னை இந்த மொக்கையில இழுத்து விட்டுட்டு அவரு வேலையை பாத்துக்கிட்டு நல்ல புள்ளன்னு பேரு வாங்கிட்டு இருக்காரு.

அதனால இந்த மொக்கைக்காக திட்டறதா இருந்தா என்னை திட்டாதீங்க.. அவரை திட்டுங்க.. எல்லா புகழும் இறைவனுக்கே அப்படின்ற மாதிரி, எல்லா வசவும் பரிசலுக்கே!!! (சும்மானாச்சிக்கு பரிசல்...உல்லல்லாய்ய்ய்ய்..)

ந‌ம்ம‌ மேட்ட‌ருக்கு போவோம்..

*******

பார்ட் 1
பார்ட் 2

எல்லோரும் தலைதெறிக்க ஓடிவிட...வெண்பூ ஃபோனை எடுத்து எல்லா பதிவர்களுக்கும் கான்ஃப்ரன்ஸ் போடுகிறார்..

“எல்லாரும் மன்னிச்சிடுங்க. என்னையில்ல. பரிசல்காரனை. தெரியாம எழுதிட்டாரு. முடிஞ்சா நான் பார்ட் 3 ல கொஞ்சமாவது காமெடியா எழுதப்பாக்கறேன். ஆனா எப்ப எழுதுவேன்னு தெரியாது. எழுதுவேனா-ன்னே தெரியாது! பை.. பை...”

இனி......

"யாருய்யா இவன்.. நம்ம போனை நம்மள கேக்காம எடுத்து பேசுறான்.. லேண்ட்லைன்ல கான்ஃப்ரன்ஸ் கால்ன்றான்.." என்கிறார் டைரக்டர்.

மீஜிக்.. "அதுகூட பரவாயில்லங்க.. அந்த போன் 3 நாளா டெட். நானே டெலிபோன் டிபார்ட்மென்ட்டுக்கு போன் பண்ணி அலுத்துப் போயிட்டேன். அதுல எடுத்து பேசிட்டு போவுது பைத்தியம்"

"இப்பதான் புரியுது மீஜிக். இவன் எதுனா வலைப்பதிவரா இருப்பான். ஒருத்தருமே படிக்கலைன்னாலும் தினமும் 4 பதிவு போடுவானுங்க. யாருமே பின்னூட்டம் போடுலைன்னா அவனுங்களே அனானியா பின்னூட்டம் போட்டு ஹிட் கவுண்ட் ஏத்துவானுங்க. ரொம்ப முத்திப்போயி இப்படி டெட்டான போன்ல பேசுறான். இவன் பெரும்பதிவரா இருப்பான்னு நினைக்கிறேன்"

'டொக்..டொக்..'

"இவனை விடுங்க, கதவை யாரோ தட்டுறாங்க. யாருன்னு பாருங்க"

கதவைத் திறந்தவுடன் டைரக்டர் டெர்ரராகிறார்.. அங்கே நிற்பது..

கார்த்திக், எஸ்.ஜே.சூர்யாவுடன்..... ஜே.கே.ரித்தீஷ்..

டைரக்டர் மனதிற்குள் 'இன்னிக்கு காலையில ராசிபலன்ல எதிர்பாராத வரவுன்னு போட்டிருந்தப்பவே டவுட் ஆனேன். இப்படி மாட்டிகிட்டேனே' என்றவர் சத்தமா "வாங்க..வாங்க.. நீங்கல்லாம் வருவீங்கன்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை, என் பொண்டாட்டியோட சின்ன பாட்டி வயசுக்கு வந்துட்டாங்களாம். இப்பதான் போன் வந்தது.. மன்னிக்கணும் நான் உடனே கிளம்பியாகணும்" என்றவாறே எஸ்ஸாகிறார்.

தப்பிக்க வழியில்லாமல் மீஜிக் நடுங்கி கொண்டே உட்காருகிறார்.

கார்த்திக்: நாங்க.... இங்க... எதுக்கு... வந்தமுன்னா... இப்ப.. எனக்கு அரஷியல்ல... கொஷ்சம்.. ரெஸ்ட் கிடைச்சிருக்கு

மீஜிக் (மனதிற்குள்): 'அதுக்கு மறுபடியும் படத்துல‌ நடிக்கப் போறியா? வேணான்டா த‌மிழ்நாடு தாங்காது'

கார்த்திக்: நான் ஒரு படம்... ப்ரொட்யூஷ்... பண்ணப்போறேன்.. அதை ஸீர்யா டைர‌க்ட்.. பண்றாரு.. ரித்தீஷ் தம்பிதான் ஹீரோவா நடிக்கப்போறாரு..

மீஜிக் : 'உலகம் அழிஞ்சிரும்டா மக்கா' (ச‌த்த‌மாக‌) அதுக்கு...

எஸ்.ஜே: நீங்க‌தான் ம்யூஸிக் போட‌ணும்...

மீஜிக் : 'உன் ப‌ட‌த்துக்கு எதுக்குடா த‌னியா ம்யூசிக்..எதோ ரெண்டு பாரின் சி.டி.யிலருந்து சவுண்ட் எஃபக்ட் காப்பி பண்ணாபோதாதா'.. க‌ண்டிப்பா ப‌ண்ணிட‌லாம் சார்.

ரித்தீஷ்: ப‌ட‌த்துக்கு டைட்டில் "பாட்ஷா" அப்ப‌டின்னு வெச்சிக்க‌லாமா?

மீஜிக் : 'வாடா உன்னைத்தான் எதிர்பாத்துகிட்டு இருக்கேன்! கமல் முடிஞ்சது அடுத்தது ரஜினியா?' சார் டைட்டானிக் அப்ப‌டின்னு வேணும்னா வெக்க‌லாமே?

ரித்தீஷ்: ந‌ல்லாயிருக்கே.. இந்த‌ ப‌ட‌த்துக்கு அப்புற‌ம் ந‌டிக்க‌ப்போற‌ அடுத்த‌ ப‌ட‌த்துக்கு இந்த‌ பேரையே வெச்சிக்கிறேன்..

மீஜிக் : 'ஆஹா.. இன்னும் ஒரு ப‌ட‌மா... நானெல்லாம் இன்னும் கான‌ல் நீர் பாதிப்புல‌ இருந்தே வெளியில‌ வ‌ருல‌'

ரித்தீஷ்: சூர்யா சார்... இந்த‌ ப‌ட‌த்துக்காக‌ நான் எதுனா கெட்‍அப் சேஞ்ச் ப‌ண்ண‌னுமா?

மீஜிக் : 'ப‌ண்ணிட்டாலும்'

சூர்யா : ஆஆ.. அதெல்லாம் தேவையில்ல‌.. நான் ரொம்ப‌ இய‌ற்கையா எல்லாத்தையும் காட்டுவேன்..

மீஜிக் : 'ஆமா.. எல்லா நடிகைகளையும் இவரு ரொம்ப‌ இய‌ற்கையா காட்டுவாரு'

ரித்தீஷ்: இந்த படத்துக்கு எனக்கு ஆஸ்கார் அவார்டு கெடக்கணும். நீங்கதான் பொறுப்பு. என்னா செலவானாலும் பரவாயில்ல..

மீஜிக் : 'அட‌ப்பாவி! அது என்னா அர‌சாங்க‌ அவார்டா! ஆளுங்க‌ட்சி மேடையில‌ எதிர்க‌ட்சிகார‌னை கெட்ட‌வார்த்தையில‌ பேசுனா குடுக்குற‌துன்னு நென‌ச்சியா!'


கார்த்திக்கின் செல்போன் அடிக்கிறது.

கார்த்திக் போனை எடுத்து "ஷொல்லுங்க...நான் கட்சித்தலைவர்தான்... பேசுறேன்..என்னது கட்ஷியில.. சேரப்போறீங்களா..ஒரு நிமிஷம்.." என்றவர் மீஜிக் பக்கம் திரும்பி "என் கட்ஷி பேர் மறந்துட்டேன்.. உங்களுக்கு.. ஞாபகம் இருக்கா?" என்கிறார்.

மீஜிக்: 'உருப்பட்டாப்புலதான்.. எதாவது சொல்லுவோம்.. வெளங்காத வெண்ணை கட்சின்னு சொல்லுவோம்'.. வெ.வெ.க அப்படின்னு ஷொல்லுங்க..ச்சீ.. சொல்லுங்க..

கார்த்திக் போனில்.. "அப்படியா.. உடனே வர்றேன்.." என்றவர் மற்றவர்களிடம் "வாங்க ஸீர்யா..ரித்தீஷ் தம்பி.. போய் அவரை பாத்துட்டு அப்புறமா வரலாம்" என்றவாறு கிளம்புகிறார்.

எல்லாம் சென்றவுடன் "அப்பாடா!! எனக்கு நேரம் நல்லா இருக்கு!! வேற எவனுக்கோதான் சரியில்லன்னு நெனக்கிறேன்.. போன் பண்ணி தனக்கு தானே சூனியம் வெச்சிகிட்டான்" என்றாவாறு உட்கார,

'டொக்..டொக்..'

சென்று கதவைத் திறக்கிறவர் அதிர்ச்சியின் எல்லைக்கே போகிறார். அங்கே..

****

இந்த இடத்திலிருந்து திருப்பூர் தங்கம், நொய்யல் ஆற்றங்கரை நல்லவர், கொங்கு நாட்டு சிங்கம் அண்ணன் பரிசல் தொடர்வாராக...

Sunday, July 27, 2008

மாயா..மாயா..எல்லாம் மாயா.. (அறிவியல் சிறுகதை)

2008 ஆகஸ்ட் 15, நேரம் மாலை 6.45 மணி

தன்னைச் சுற்றிலும் இருந்த பெரிய பெரிய இரும்பு பெட்டிகளையும் அதற்குள்ளே செல்லும் பல‌வண்ண வயர்களையும் பார்த்து வியந்து நின்று கொண்டிருந்த நாதனின் தோளில் தட்டினான் கிருஷ்ணா.

"என்ன புரொபசர், திகைச்சி போய் நின்னுட்டீங்க போலிருக்கு"

"க‌ண்டிப்பா கிருஷ். நீ ஐ.ஐ.டி.ல‌ ப‌டிச்ச‌ப்ப‌ நான் உன்னோட‌ புரொப‌ச‌ர். ரொம்ப‌ ப்ரைட்டா இருந்த‌தால‌ எல்லாருக்கும் உன்னை ரொம்ப‌ பிடிக்கும். நீ உன்னோட‌ பி.எச்.டிக்கு என்னை கைடா செல‌க்ட் ப‌ண்ணின‌துக்கு உன்னை விட‌ நான் ரொம்ப‌ ச‌ந்தோச‌ப்ப‌ட்டேன். இதோ 13 வ‌ருச‌ம் க‌ழிச்சி இப்ப‌ உன்னை ஏர்போர்ட்ல‌ பாத்தப்ப‌ என‌க்கே உன்னை அடையாள‌ம் தெரிய‌ல‌. என்னை பாத்த‌வுட‌னே சின்ன‌க்குழ‌ந்தை மாதிரி என்னை க‌ட்டிபிடிச்சி சீன் கிரியேட் ப‌ண்ணிட்டே. உன்கூட‌ வ‌ந்தே ஆக‌ணும்னு ஒரே அட‌ம்பிடிச்சி என்னை இங்க கூட்டிட்டு வந்தே. இங்க வந்து பாத்தா இந்த லேப் என்னோட கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்டதா இருக்கு. என்ன பண்ணிட்டு இருக்க நீ கிருஷ்?"

"புரொபசர், உங்களுக்கே தெரியும்.. எனக்கு கம்ப்யூட்டர்னா உயிர்னு. அதனாலதான் சூப்பர் கம்ப்யூட்டர் பத்தி பி.எச்.டி. பண்ணினேன். அது முடிஞ்சதும் அமெரிக்காவில வேலை கிடைச்சி போனதும் உங்களுக்குத் தெரியும். அங்க போயி கொஞ்ச நாள்லயே எனக்கு அது போரடிக்க ஆரம்பிச்சிடுச்சி. அதனாலதான் இந்தியா திரும்பி வந்து இந்த லேப் ஆரம்பிச்சேன்"

"அதுவும் எனக்கு தெரியும் கிருஷ். உன்னைப் பத்திதான் எல்லா மீடியாவும் பேசிட்டிருக்கே"

"நான் உங்களை இங்க கூட்டிட்டு வந்தது என்னோட புது கண்டுபிடிப்பைப் பத்தி உங்களுக்கு சொல்றதுக்காகதான். இதுபத்தி இன்னும் யாருக்கும் சொல்லவேயில்லை. நீங்கதான் முதல்ல தெரிஞ்சிக்கப் போறீங்க"

"சொல்லு கிருஷ்" என்றார் நாதன் சிறிதும் கலப்படமில்லாத நிஜமான ஆர்வத்துடன்.

"இப்ப இருக்கிறதுலயே அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் எதுன்னு சொல்லுங்க"

"ஐ.பி.எம். மூணு மாசத்துக்கு முன்னால அறிவிச்ச ரோடுரன்னர் (IBM RoadRunner). சரியா? அதோட வேகம் கூட 1 பீட்டா ஃப்ளாப்க்கு (Peta Flops - Floting Point Operations Per Second) மேலன்னு ஞாபகம்"

"ரொம்ப சரி புரொபசர். சாதாரண கம்ப்யூட்டரோட வேகம் சில மெகா ஃப்ளாப்ல இருக்குறப்ப இந்த ரோடுரன்னர் அதை விட லட்சக்கணக்கான மடங்கு வேகத்துல செயல்படுது"

"ரொம்ப சரி கிருஷ். அவங்க அடுத்த ப்ராஜக்ட் கூட ஆரம்பிச்சிட்டதா கேள்விப்பட்டேன். அது இதை விட ரெண்டு அல்லது மூணு மடங்கு வேகம் கொண்டதா இருக்கும்னும் அது 2010ல வந்துடும்னும் பேசிக்கிறாங்க"

பதில் சொல்லாமல் லேசான புன்னைகையுடன் தீர்க்கமாக பார்த்தான் கிருஷ்ணா.

"என்ன கிருஷ்.. அப்படி பாக்குற?"

"நீங்க நம்பமாட்டீங்க புரொபசர். நான் அதை விட பல மடங்கு சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கிட்டேன்"

"என்னப்பா சொல்றே?" ஆச்சரியம் + அதிர்ச்சியுடன் கேட்டார் நாதன்.

"ஆமா சார். நீங்க இப்ப அதுக்கு நடுவுலதான் நிக்கிறீங்க"

ஆச்சரியம் விலகாமல் சுற்றி இருந்த அனைத்தையும் பார்த்தார் நாதன்.

"எங்கப்பா எனக்காக விட்டுட்டு போன ஆயிரக்கணக்கான கோடிகள்ல பாதிக்கும் மேல விழுங்கிட்டு இதோ இங்க 8 ஏக்கர் பரப்பளவில நிக்குதே இதுதான் என்னோட கண்டுபிடிப்பு. இதோட ஸ்பெசிஃபிகேஷன் சொல்றேன் கேக்குறீங்களா புரொபசர்?

மொத்தம் இதுல 2048 சப்சிஸ்டம் (sub-system) இருக்கு. ஒவ்வொரு சப்சிஸ்டத்திலயும் 1024 யூனிட், ஒவ்வொரு யூனிட்லயும் 64 க்வாட் கோர் ப்ராசஸர் (quad core processor). மொத்தம் 2048 * 1024 * 64 = 134 மில்லியன் ப்ராசஸர்ஸ் இருக்கு. நம்ப முடியல இல்லை. அது மட்டுமில்ல. இந்த எல்லா சப்சிஸ்டமும் அதி நவீன ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலமா இணைக்கப்பட்டிருக்கு. இதுல இருக்குற மொத்த மெமரி பவர், கூகுள் கம்பெனி வெச்சிருக்கிற எல்லா சர்வர்கள்லயும் இருக்குறத விட அதிகம்."

"வாவ்"

"இன்னிக்கு உலகத்தில பயன்பாட்டில இருக்கிற அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரைவிட இது ஏறத்தாழ‌ 3,000 மடங்கு சக்தி வாய்ந்தது. என்ன ஒண்ணு, சின்ன நகரத்துக்கு ஒரு மாசத்துக்குத் தேவைப்படுற மின்சாரம் இதுக்கு ஒவ்வொரு நாளும் தேவை"

"நீ சொன்னது நிஜம்தான் கிருஷ்.. என்னால நம்பவே முடியல"

சிரித்தான் கிருஷ்ணா.

"ஆனா உன்னை நான் பாராட்டணும் கிருஷ். உனக்குள்ள இருந்த அந்த வேகம் வெறியா மாறிடுச்சின்னுதான் சொல்லுவேன். ஆனா அதை நீ சரியான திசையில செலுத்தியிருக்க. அதுதான் இன்னிக்கு இப்படி உருமாறி நிக்குது"

"நன்றி புரொபசர்"

"ஆமா இதை எதுக்காக உபயோகப்படுத்தப் போற?"

"சாதரணமா சூப்பர் கம்யூட்டர்கள் ஒரு சில குறிப்பிட்ட வேலைகளுக்குத்தான் உபயோகப்படுத்தப்படுது. உதாரணமா காலநிலை மாற்றங்கள், அணுகுண்டு ஆராய்ச்சி இப்படி. நான் செய்யப் போறது முற்றிலும் வேற மாதிரி"

"என்ன கிருஷ்?"

"இந்த உலகத்தில முதல் முதல்ல உயிரினம் எப்படி தோன்றிச்சி அப்படின்றதப் பத்திதான் என்னோட இந்த குழந்தை ஆராய்ச்சி பண்ணப் போகுது"

"எப்படி?"

"அணுகுண்டுகளை வெடிக்காம ஆனா அதே நேரத்தில அது வெடிச்சா எப்படி இருக்கும் அப்படின்றத பத்திதான் இன்னிக்கு பெரும்பாலான சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கு. என்ன பண்ணுவாங்கன்னா அணுகுண்டு வெடிக்கிறதுக்கு முன்னால இருக்குற எல்லா விசயங்களையும் சூப்பர் கம்ப்யூட்டர்ல ஏத்திடுவாங்க. அதுக்கப்புறம் தன்னோட ப்ராசஸிங் பவரை வெச்சி குண்டு வெடிச்சா என்ன ஆகும், எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும், கதிர்வீச்சு எந்த அளவில இருக்கும் அப்படின்றத சூப்பர் கம்ப்யூட்டர் கணக்கிடும்.

நான் அதேமாதிரி, இந்த பூமி உருவானப்ப எப்படி இருந்தது, அதோட இயல்புகள் என்ன அப்படின்றத என்னோட கம்ப்யூட்டர்ல ஏத்திட்டு இருக்கேன். அது முடிஞ்சதும் என்னோட கம்ப்யூட்டர் எப்படி உயிர்கள் தோன்றியது அப்படின்னு கணக்கிடப் போகுது. இதுக்குப் பேர் சிமுலேசன் (Simulation).

எல்லாம் சரியா நடந்தா மனுசன் எப்படி உருவானான் அப்படின்ற குழப்பமான கேள்விக்கும் கூட விடை தெரிய வாய்ப்பு இருக்கு புரொஃபசர்"

"அற்புதம் கிருஷ். நீ எது செஞ்சாலும் அதுல வெற்றியடையத்தான் போற. எனக்கு இன்னும் ஒரு சில டீடெய்ல்ஸ் தெரிஞ்சிக்கணும்"

***

கி.பி.2908 ஆகஸ்ட் 15, மாலை 7.00 மணி

"மிஸ்டர் கே89. என்னை எதுக்காக அவசரமா கூப்பிட்டீங்க?"

"இதோ இதைப் பாருங்க" என்றவாறே எதிரில் இருந்த 30 அடி நீள சுவர் மீதிருந்த மானிட்டரைத் தொட்டான். அது உலக வரைபடத்தைக் காட்ட அதில் இந்தியாவை தொட அது இந்தியாவை மட்டும் பெரிதாக்கிக் காட்டியது. அப்படியே தொடர்ந்து நான்கைந்து தொடல்களுக்குப் பிறகு நாதனையும், கிருஷ்ணாவையும் காட்டியது.

"அவங்க பேசுறதை கேளுங்க ஜே40"

இருவரும் பேசிக் கொள்வது தெள்ளத் தெளிவாகக் கேட்டது.

சரியாக 30 நிமிடங்களில் அவர்கள் ஒரு அறையில் குழுமியிருந்தார்கள். நாட்டின் அதிபர், முக்கிய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அமர்ந்திருக்க ஜே40 பேச ஆரம்பித்தார்.

"அதிவேக கம்ப்யூட்டர்கள் மூலமா இந்த சிமுலேசன் ஆரம்பிக்கப்பட்டு இன்னியோட 140 வருசம் ஆச்சு. இந்த உலகத்துல முதல் ஒரு செல் உயிரினம் தோன்றுனதுல இருந்து பரிணாமத்தோட ஒவ்வொரு கட்டத்தையும் இந்த சிமுலேசன் மூலமா நாம தெரிஞ்சிட்டு வந்திருக்குறோம். மனுசன் எப்படி தோன்றுனான் அப்படின்றது உட்பட பல விடை தெரியாத கேள்விகளுக்கு நமக்கு இந்த ப்ராஜக்ட் விடை தந்திருக்கு.

இப்ப இந்த சிமுலேசனோட முக்கியமான கட்டத்துல இருக்கோம். கோடிக்கணக்கான வருசத்தப் பத்தி தெரிஞ்சிட்ட நாம இப்ப கி.பி.2008ம் வருசத்துல இருக்கோம். இன்னும் அடுத்து வரப்போற 400 வருசங்களைப் பத்தியும் தெரிஞ்சிட்டாதான் இன்னிக்கு உலகத்துல நாம எதிர்கொண்டிருக்குற கடுமையான வியாதிகள், காலநிலை மாறுபாடுகள் மாதிரியான‌ பல விதமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

ஆனா இப்ப நாம பாக்கிற இந்த கிருஷ்ணான்ற‌ என்டிட்டி (Entity) சூப்பர் கம்ப்யூட்டரை கண்டுபிடிச்சியிருக்குறதாகவும், அது மூலமா சிமுலேசனை ஆரம்பிக்கப் போறதாகவும் சொல்லுது. இது நமக்கு தலைவலிதான்.

ஏன்னா, ஏற்கனவே இவங்க இருக்கிறது சிமுலேசன்ல. அதுல இருந்து இன்னொரு சிமுலேசன் ரிகர்ஸிவா (recursive) ஆரம்பிக்கறதுன்றது தேவையில்லாதது மட்டுமில்ல, நிறைய எனர்ஜி மற்றும் ரிசோர்ஸ் தேவைப்படுற ஒண்ணு.

இதனால நம்ம இப்ப எதிர்பார்க்கறமாதிரி 2923ம் வருசத்துக்குள்ள கி.பி.2500ம் வருசத்த தொட முடியாமக் கூட போகலாம்."

சிறிது நேரம் அந்த அறையில் மயான அமைதி நிலவியது.

"சரி..இப்ப என்ன பண்ணலாம்னு சொல்றீங்க ஜே40?" என்றார் அதிபர்.

*******

2008 ஆகஸ்ட் 16, நேரம் காலை 7.00 மணி

டி.வி.யில் அழகான அந்த பெண் செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தாள்.

"இந்தியாவின் பிரபல கணிப்பொறி விஞ்ஞானி கிருஷ்ணா நேற்று இரவு அவரது ஆராய்ச்சிக்கூடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி மரணமடைந்தார். மின்கசிவின் காரணமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்தில் அவரது கல்லூரி விரிவுரையாளார் நாதன் உள்ளிட்ட மேலும் ஆறு பேரும் பலியானர்கள் என்றும் மருத்துவமனையில் படுகாயத்துடன் பலர் அனுமதிக்கப்பட்டிருப்பதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாகவும் ஏஜன்சி செய்திகள் தெரிவிக்கின்றன"

*** சிறில் அலெக்ஸின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்கான மூன்றாவது இடுகை ***

Wednesday, July 23, 2008

புது ப்ராஜக்ட் (சின்னக் கதைகள் - 1)

"உங்களையெல்லாம் நான் எதுக்கு கான்ஃப்ரன்ஸ் ரூமுக்கு கூப்டிருக்கன்னா, ஒரு புது ப்ராஜக்ட் வருது, ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான ப்ராஜக்ட், டெக்னிகலி சேலஞ்சிங்..

அதுக்காக கம்பெனியில இருக்குற உங்களை மாதிரி திறமையான ஆளுங்களை எல்லாம் அசைன் பண்ண சொல்லி மேலிடத்துல இருந்து ஆர்டர். உங்களுக்கெல்லாம் சந்தோசம்ன்றது உங்க முகத்துல இருந்தே தெரியுது..

பல‌ வருசம் போகபோற இந்த ப்ராஜக்டுக்கு வருசத்துக்கு 10 மில்லியன் டாலர்னு கான்ட்ராக்ட் சைன் ஆகியிருக்கு..

சொல்றேன்..சொல்றேன்.. நம்ப மாட்டீங்க.. இந்த ப்ராஜக்ட் சித்திரகுப்தனோட பிரம்மச்சுவடிய மேனேஜ் பண்ண வேண்டிய 'சொர்க்கலோகம் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்' ப்ராஜக்ட்தான். நேத்துதான் சித்திரகுப்தன் வந்து நம்ம மார்க்கெட்டிங் ஹெட் கூட பேசி ஆர்டர் கன்ஃபர்ம் பண்ணிட்டு போயிருக்காரு..

குட்.. ரொம்பவும் ரியல் டைம் டேட்டா இருக்கப்போறதால செக்யூர்டாவும் அதே நேரம் டைம் கிரிட்டிகலா இருக்கறதுனால பெர்ஃபார்மென்ஸும் நல்லா இருக்கணும்...

ஓகே.. இப்ப ரொம்ப முக்கியமான விசயம்.. போன அப்ரைசல்ல யாரெல்லாம் ஆன்சைட் வேணும்னு கேட்டீங்க?"

Monday, July 14, 2008

நீங்கள் ஒரு பின்நவீனத்துவவாதியா? ஒரு சிறு தேர்வு

வெகுநாட்களாக தமிழ்மணத்தில் சுற்றிவரும் நீங்கள் பின்நவீனத்துவவாதியா என்று ஒரு கேள்வி இருந்தால், கீழ்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்கவும்.

1. பின்நவீனத்துவம் என்றால் நவீன முறையில் 'பின் ஊக்கு' தயாரிக்கும் முறை என்று நினைக்கிறீர்களா?

2. சில பதிவுகளைப் படித்தபின், சுத்தமான தமிழில் எழுதியிருக்கிறார்கள் என்பது தெரிந்தாலும் அதில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று புரியாமல் குழம்பியிருக்கிறீர்களா?

3. அப்படிப்பட்ட பதிவுகளுக்குப் போடப்படும் பின்னூட்டங்களும் உங்களுக்குப் புரிவதில்லையா?

4. ஒரு கவிதைக்கான பின்னூட்டத்தில் 'கவுஜ' என்று எழுதி மறு பின்னூட்டத்தில் திட்டு வாங்கியிருக்கிறீர்களா?

5. இருபது வரியில் இடுகை போடவே நாக்கு தள்ளும்போது இவர்களெல்லாம் எப்படி இரண்டாயிரம் வரியில் பதிவிடுகிறார்கள் என்று வியந்ததுண்டா?

6. இயல்பியல் என்ற சொல்லை Physics என்று மொழி பெயர்க்கிறீர்களா?

7. ஒரு சில பதிவர்களில் கீ போர்டில் iyal, isam என்ற எழுத்துகள் மட்டும் அடிக்கடி பழுதடைவது ஏன் என்று தங்களுக்கு புரியாமல் விழித்ததுண்டா?

8. சுப்பிரமணியபுரம் போன்ற படங்களை பார்த்தபின் "கலையியலின் பகுதியான திரையியலின் படைப்பாக வெளியாகியிருக்கும் சுப்பிரமணியபுரத்தில் அதன் படைப்பாளி பொருளாதாரவியலை அடிப்படையாகக் கொண்ட சமூகவியலின் பேதங்களை சாடுவது நம்..." என்று எழுதாமல் "இயக்குநர் இயல்பாக கதையை நகர்த்துகிறார்" என்று எழுதுகிறீர்களா?

9. முற்றுப்புள்ளியே இல்லாமல் ஐநூறு வார்த்தைகளுடன் ஒரு வாக்கியம் எழுதுவது சாத்தியமே இல்லை என்று சத்தியமாக நம்புகிறீர்களா?

10. "இயல்பாக" என்ற வார்த்தையைத் தவிர வேறு எங்கும் "இயல்" என்ற சொல்லையும், "இசக்கிமுத்து" என்ற வார்த்தையைத் தவிர வேறு எங்கும் "இச" என்ற எழுத்துகளையும் உபயோகிப்பதில்லையா?

தேர்வு முடிவுகள்:
நீங்கள் ஏழுக்கும் மேல் 'ஆம்' என்று பதில் சொல்லியிருந்தால், பொழச்சி போங்க. உங்கள இன்னும் பின்நவீனத்துவ கிருமி கடிக்கவே இல்லை.

நீங்கள் மூன்றிலிருந்து ஆறு கேள்விகளுக்கு 'ஆம்' என்று பதில் சொல்லியிருந்தால், நீங்கள் பின்நவீனத்துவவாதியாக ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம். தடுப்பு மருந்தாக தமிழ்மணத்தில் நகைச்சுவை, மொக்கை என்ற லேபிளுடன் வரும் இடுகைகளை ஒரு மண்டலத்திற்கு படித்து வரவும்.

மூன்றிற்கும் குறைவாக என்றால் உங்களுக்குச் சொல்லிக் கொள்வது ஒன்றுதான்..."இருத்தலியலின் முக்கியப் பகுதியான நகைச்சுவையியல் மற்றும் பகடியிசத்தின் இலக்கியமாக இந்த இடுகை தமிழ் வலையுலகில் பதியப்படுகிறது என்பது தங்கள் புரிதலியலுக்கு...
...
...
முடியலடா சாமி...
"

பின்குறிப்பு: மேலும் கேள்விகள் பின்னூட்டத்தில் வரவேற்கப்படுகின்றன.

Saturday, July 12, 2008

ஒரு ஆங்கில வலைத்திரட்டி அலுவலகத்தில்...

டிஸ்கி 1: இந்த இடுகையில் வரும் எல்லா பாத்திரங்களும் கற்பனையே. கண்டிப்பாக உண்மையில்லை

டிஸ்கி 2:....

டிஸ்கி 3:...

டிஸ்கி 4: இடுகையின் தலைப்பிலோ அல்லது முதல் 3 வரிகளிலோ சாமம், சட்டி போன்ற தவிர்க்கப்படவேண்டிய போன்ற வார்த்தைகள் வரவில்லை.

இனி இடுகைக்குப் போவோம்..

அது ஒரு ஆங்கில வலைத்திரட்டி அலுவலகம். வடிவேலு அமர்ந்திருக்க வேக வேகமாக ஓடி வருகிறார் ஒரு அடிப்பொடி.

"அண்ணே, அண்ணே, அந்த ஜ்யோலட்சுமண கந்தர் மறுபடியும் சாமக்கதைகள போட்டிருக்காரு"

விருட்டென எழுகிறார் வடிவேலு.

"அந்த சைடுநவீனத்துவ கும்பலுக்கு இதுவே வேலயா போச்சி, உடனே கிளம்புறேன்"

வழியில் பார்க்கும் ஒருவர்....

"கால்புள்ள கோவமா கிளம்பிட்டான் போல இருக்கு, இன்னிக்கு எத்தன பதிவர்கள் தலை உருளப்போவுதோ?"

வடிவேலு வருகிறார். அங்கே ஜ்யோலட்சுமண கந்தர், பைத்தியம் தெளிந்தவன், களர், லக்கியில்லாத லுக் எல்லாம் நிற்கின்றனர்.

"டாய் கந்தர்...எதுக்குடா அதைப் போட்ட?"

"ம்ம்ம்ம்ம்ம்... என்ன சொல்றன்னு புரியல... உன் டெர்ம்ஸ் அன்ட் கண்டிஷன் ரொம்ப சின்ன எழுத்துல இருக்கு.. கொஞ்சம் பெரிய ஃபான்ட்ல போடு"

"டாய் கந்தர், நீ ஒரு கீ போர்டுல டைப் பண்ற ஆளா இருந்தா இன்னொரு இடுகை போடுறா பாக்கலாம்"

அதற்குள் லக்கியில்லாத லுக் "சட்டி சுட்டதடா, கை விட்டதடா" என்று ஒரு பதிவிடுகிறார்.

"ஒத்துக்கறேன்.. நீங்க எல்லாம் ஒரே கீ போர்டுல டைப் பண்றவங்கன்றதான்கறத‌ ஒத்துக்குறேன்.. நெக்ஸ்ட் மீட் பண்றேன்"

திரும்பி நடக்கிறார். எல்லோரும் சுற்றி நிற்கிறார்கள்.

"உங்களையெல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு. இதுவரைக்கும் யாரும் என்னை கும்முனதில்ல"

"போன மாசம்தான ஆங்கிலச்சி விசயத்துல உன் டவுசர கிழிச்சோம்"

"அது போன மாசம் நான் சொன்னது இந்த மாசம்..."

பைத்தியம் தெளிந்தவர் ஒரு பதிவிடுகிறார் "ஆங்கில ஸ்மெல்லுக்கு ஒரு விண்ணப்பம்" என்ற தலைப்பில்.

"வேணாம்"

லக்கியில்லாத லுக் "ஆங்கில ஸ்மெல்லுக்கு ஒரு அவசர கடிதம்" என்ற தலைப்பில் அடுத்த பதிவிடுகிறார்.

"வலிக்குது"

எல்லோரும் பின்னூட்டமிட ஆரம்பிக்க,

"அழுதுடுவேன்... அழுதுடுவேன்..."

அங்கே இருப்பவர்கள் மட்டுமில்லாமல் எல்லாரும் வரிசையாக பின்னூட்ட கும்மியை ஆரம்பிக்கிறார்கள்.

Wednesday, July 2, 2008

கடைசி ஆசை

கி.பி. 2058 ல் ஒருநாள். அவன் இருந்தது சென்னை அதி பாதுகாப்பு சிறைச்சாலையின் தலைமை பொறுப்பாளருடன்.

"நண்பரே, உங்கள் கடைசி ஆசையை நிறைவேற்றுவதில் நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார் த.பொ. அவனிடம். அவன் மரணதண்டனைக் கைதி. அவன் செய்த குற்றம் நமது கதைக்கு தேவையற்றது என்பதால் நேரடியாக அவனது கடைசி ஆசைக்கு செல்வோம்.

"அரசிடம் இருந்து ஒப்புதல் வந்துவிட்டதா?" என்றான் அவன்.

"ஆம் நண்பரே, இன்னும் 1 மணிநேரத்தில் தங்களது தண்டனை நிறைவேற்றப்படப் போகிறது. எனவே உங்கள் கடைசி ஆசையை நிறைவேற்றச் செல்வோமா?"

"கண்டிப்பாக" என்றான் மனதெங்கு‍‍‍ம் மகிழ்ச்சியுடன்.

*********

அடுத்த அறையில்...

"நண்பரே, இதுதான் கால இயந்திரம். உங்கள் கடைசி ஆசையின்படி நீங்கள் இதில் பயணம் செய்யப்போகிறீர்கள்...ஆனால் ஒரு சில நிபந்தனைகளுடன்"

அவன் அமைதியாக இருந்தான்.

"முதலில், நீங்கள் இறந்த காலத்திற்குத்தான் செல்ல முடியும், எதிர்காலத்திற்கு அல்ல, நீங்கள் மரணதண்டனை குற்றவாளி என்பதால். அடுத்தது உங்களுக்கு கொடுக்கப்படும் நேரம் 55 நிமிடங்கள் மட்டுமே, அதன்பின் நீங்களாகவே திரும்பிவிட வேண்டும், 1 நிமிட தாமதம் கூட பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது. மூன்றாவது ஏதேனும் ஒரே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத்தான் செல்ல முடியும், அங்கேயிருந்து வேறு ஒரு காலத்திற்கு உங்களால் செல்ல முடியாது, திரும்பி இங்கே வருவது மட்டுமே சாத்தியம். புரிகிறதா?"

"புரிகிறது"

"எந்த காலகட்டத்திற்கு செல்ல விரும்புகிறீர்கள்?"

"நூறு ஆண்டுகளுக்கு முன்னால்"

"நல்ல தேர்வு, மாசுபடாத காற்று, சுத்தமான நீர், அபரிமிதமான இயற்கை வளம் எல்லாம் அனுபவிக்க முடியும்."

மறுபுறம் திரும்பி அங்கே இருந்த க்வான்டம் கணினியில் ஒரு சில உள்ளீடுகளைச் செய்தார்.

"உலகின் எந்த பகுதிக்கு செல்ல விரும்புகிறீர்கள்? இந்தியாவின் ஏதோ ஒரு பகுதிக்கா? கிழக்கு அல்லது மேற்கு பகுதிக்கா?"

அவன் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவன். காதலியுடன் ஐரோப்பா முழுவதையும் ரசித்தவன். எனவே

"கிழக்காசிய நாடுகளில் ஏதேனும் ஒன்று"

"கண்டிப்பாக ந‌ண்ப‌ரே"

மீண்டும் ஏதோ உள்ளீடுகளைச் செய்தார்.

"அனைத்தும் தயார். இதை அணிந்து கொள்ளுங்கள். இது இன்னும் எத்தனை நிமிடங்கள் மீதி உள்ளன என்று காட்டும். இதோ இந்த கதவில் உள்ளே செல்லுங்கள். கடைசியாக சில அறிவுரைகள், நீங்கள் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்துக்குச் செல்லப் போகிறீர்கள். இந்த கால இயந்திரம் நவீன க்வாண்டம் கணிணியின் உதவியுடன் உங்களை குறிப்பிட்ட காலத்திற்கு அனுப்ப உதவும். சரியாக கிளம்பிய 55 நிமிடத்தில் நீங்கள் மீண்டும் இதற்குள் வந்து இந்த சிவப்புப் பொத்தானை அழுத்தினால் நீங்கள் இங்கேயே திரும்பி வந்து சேருவீர்கள். மீண்டும் சொல்கிறேன். கால தாமதம் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று. மேலும் இது 16 மெகா பிட் நீளமுள்ள பாதுகாப்புத் தகவலுடன் இயங்குகிறது, தற்போதுள்ள அதிவேக க்வாண்டம் கணினியால் இதை உடைக்கவே 16 பில்லியன் ஆண்டுகள் ஆகும். எனவே உங்களுக்கு இருக்கும் 55 நிமிடத்தில் முயற்சி செய்யாதீர்கள்."

"நான் தயார்" என்றான் அவன்.

"உற்சாகமான பயணத்திற்கு வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்போம்."

த‌.பொ. மீண்டும் அனைத்தையும் சரி பார்த்த பின் பச்சை நிறத்தில் இருந்த ஒரு பொத்தானை அழுத்தினார்.


********

அவன் சடாரென உள்ளிழுக்கப்பட்டான் அல்லது பட்டதாக உணர்ந்தான். அடுத்த வினாடி அவனது கால் மற்றும் கை விரல்களில் ஆரம்பித்த வலி உடலெங்கும் பரவ ஆரம்பித்தது. அவன் உடல் வெப்பநிலை திடீரென்று உயர்ந்தது.

'என்ன இது.. நான் ஏமாற்றப்பட்டேனா? எனது மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறதா?'

அவன் வலியால் கத்த ஆரம்பித்த நேரம் அவன் பனி வெள்ளத்திற்குள் விழுந்தது போல் உணர்ந்தான். வலி முற்றிலும் இல்லாமல் காற்றில்லா தளத்தில் மிதப்பது போல். அவன் மனதை அதுவரை அவன் கடந்த மகிழ்ச்சியான தருணங்களால் நிரப்பினான்.

பத்து வயது சிறுவனாக அம்மா மடியில் தலை வைத்து படுத்தான். பதினைந்து வயதில் சக தோழியிடம் இருந்து முதல் முத்தம் பெற்றான். கைத்தட்டல்களுக்கு நடுவே பல்கலை கழகத்தின் மேடையில் தங்கப்பதக்கம் பெற்றான். காதலியுடன் ஐரோப்பிய தங்கும் அறைகளில் கட்டிப் புரண்டான்.

அவன் நினைவு தடைபட்டது. எதன் மீதோ மோதி பிடிமானமில்லாமல் விழுந்தான். மெல்ல கண்களைத் திறந்து, சுற்றும் முற்றும் பார்த்தான். எல்லாம் அதனதன் இடத்தில் இருந்தன. கால இயந்திரம் ஏதோ ஒரு அழகான பூங்காவின் பச்சைப் புல்வெளியில் நின்றிருந்தது.

மணிக்கட்டைப் பார்த்தான். இன்னும் 54 நிமிடங்கள் இருப்பதாகக் காட்டியது. கதவைத் திறந்து வெளியே வந்து சுதந்திரக்காற்றை சுவாசித்தான்.

'இதோ இங்கே இரண்டாயிரம் காவலர்களின் பாதுகாப்பு இல்லை. கதவுகளைத் திறக்க இருநூற்று ஐம்பத்தாறு எழுத்துகளை அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. எட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை உணவு மாத்திரைகள் இல்லை. தப்பிச் செல்லாமல் இருக்க பதினாறு வளைய சுற்றுச் சுவர்கள் இல்லை. வான் வழித் தப்புதலைத் தடுக்க கண்ணிற்குத் தெரியாத லேசர் படலங்கள் இல்லை. சுரங்கம் தோண்டி அதன் வழியாக தப்பிக்க நினைப்போரை பொடிப் பொடியாக்கிக் கரைக்கும் அமிலக் குழாய்கள் இல்லை.

நினைக்கும் போதெல்லாம் நாவிற்கு சுவையான உணவு, சுதந்திரமான சுற்றுப்புறம், அபரிமிதமான பெட்ரோல், அழகான பெண்கள்.

இல்லை. நான் திரும்பிப் போவது இல்லை. இங்கேயே நிரந்தரமாக தங்கப் போகிறேன். முதலில் இங்கேயிருந்து தொலைவில் செல்ல வேண்டும், மக்கள் அதிகம் கூடும் இடத்திற்கு. ஒருவேளை அவர்கள் என்னைத் தேடி வந்தாலும், என்னைப் பிடிப்பது அவர்களுக்கு சுலபமாக இருக்கக் கூடாது. திரும்பிச் சென்றால் உடனடியாக நான் லேசர் அறைக்குள் அனுப்பப்பட்டு என் சாம்பல் கடலில் கரைக்கப்படும். இங்கேயே இருப்பதன் மூலம் அவர்கள் வந்து என்னைப் பிடித்தாலும் குறைந்தது எனது ஆயுள் ஒரு மணிநேரமாவது நீட்டிக்கப்படும்.

ஒருவேளை அவர்கள் வராமலே போனால் புதிய வாழ்க்கையை தொடங்குவேன். ஆம் அதுதான் சரி'

நினைத்துக்கொண்டே கால இயந்திரத்தை விட்டு நகரம் தெரிந்த திசையை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

******

அங்கே....

"இவர் திரும்பி வருவார் என்று நம்புகிறீர்களா?" என்றார் உதவிக்காவலர்.

பதில் சொல்லாமல் புன்னகைத்தார் த.பொ.

******

அது ஒரு அற்புதமான காலை நேரம். சூரியன் லேசாக மேலே எழும்பிக் கொண்டிருந்தது. வழியில் பார்த்த எல்லா முகங்களும் ஒரே மாதிரி இருப்பதாக பட்டது அவனுக்கு. எல்லோரும் அவரவர் வேலைகளில் மும்முரமாக இருந்தனர்; தெருவை சுத்தப்படுத்திக் கொண்டும், பள்ளிக்கு சென்று கொண்டும், தினப் பத்திரிக்கைகளை விற்றுக் கொண்டும், இரு சக்கர மிதிவண்டிகளில் அலுவலகங்களுக்குப் போய்க் கொண்டும்....

'ம்ம்ம்ம் நூறு ஆண்டுகளில் உலகம் எவ்வளவுதான் மாறிவிட்டது'

அவனுக்கு அப்பொழுது ஒரே பிரச்சினை, தான் எங்கே இருக்கிறேன், எந்த தேதியில் இருக்கிறேன் என்று தெரியாதது. எல்லா அறிவிப்புப் பலகைகளிலும் சித்திர எழுத்துகளே பிரதானமாக இருந்தது. எந்த நாடு என்பதைக் கூட யூகிக்க முடியவில்லை.

எதிப்பட்டவர்களிடம் "இங்கிலீஷ்" என்றான். எல்லோரும் அவனை ஒருமாதிரி பார்த்துவிட்டு தலையை இட வலமாக அசைத்தனர்.அரை மணி நேர நடைக்குப் பின்னர் நகரத்தின் முக்கிய வீதியை வந்தடைந்தான். மற்ற இடங்களை விட இது பரபரப்பாக இருந்தது. மணிக்கட்டை பார்த்தான் 22 என்று காட்டியது.

வீதியில் நடக்க ஆரம்பித்தான். வழியிலிருந்த தண்ணீர் குழாயில் குளிர்ந்த நீரை உடலெல்லாம் வழிய வயிறு முட்டக் குடித்தான். சின்ன சின்னதாக கால்களை ஆட்டியவாறு நடைபாதையிலேயே குட்டி ஆட்டம் ஆடினான்.

எதிர்ப்பட்டவர்களிடம் ஆட்களைத் தேர்ந்தெடுத்து "இங்கிலீஷ்" என்றான், வெகு நேரத்திற்கு வெற்றி இல்லாமல். கடைசியாக ஒருவன் "யெஸ்" என்றான்.

மனம் நிறைந்த மகிழ்வுடன் ஆங்கிலத்தில் உரையாட ஆரம்பித்தான்.

"இது எந்த நாடு?"

"ஆச்சரியமான கேள்வி. நீங்கள் என்னை சோதிக்கிறீர்களா? நீங்கள் இருப்பது எம்பயர் ஆஃப் ஜப்பான்"

'அற்புதம், சரியான இடத்தில்தான் இருக்கிறேன். ஜப்பானின் வேகமான வளர்ச்சியில் நானும் பங்கு கொள்ளப் போகிறேன், தொண்ணூறுகளில் பொருளாதார தாழ்நிலை ஏற்படும்போது நான் இயற்கையாகவே மரித்திருப்பேன்'

*******

அங்கே....

"இன்னும் 2 நிமிடங்கள்தான் இருக்கின்றது" என்றார் உதவிக்காவலர் தவிப்புடன்.

"காத்திருப்போம்" என்றார் த.பொ.

*******

"நீங்கள் எப்படி ஆங்கிலம் பேசுகிறீர்கள்?"

"என் பணி நிமித்தமாக நான் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. அதனால்தான். நீங்கள்?"

"நான் அமெரிக்காவில் படித்தவன்"

அவர் முகம் மாறியது.

"இந்தியன். ஆனால் படித்தது மட்டும் அமெரிக்காவில். இனி பிழைக்கப் போவது இந்த ஜப்பானில்"

அவர் சிரித்துக் கொண்டே "நல்வரவு" என்றார்.

*******

அங்கே...

உதவிக்காவலர் பதறினார் "55 நிமிடங்களிக்கு மேலே 15 வினாடிகள் ஆகிவிட்டன. அவர் திரும்பி வருவதாகத் தெரியவில்லை. இன்னும் கால இயந்திரம் திரும்புவதற்காக ஆரம்பிக்கப்படவே இல்லை. அவர் திரும்பி வரப் போவதில்லை"

த‌.பொ. எந்த உணர்ச்சியும் காட்டாமல் எழுந்து சுவரிலிருந்த தகவல் பலகைக்குப் போனார். அங்கே அவன் புகைப்படத்திற்கு நேராக இருந்த 'தண்டனை நிறைவேற்றப்பட்டது' என்ற பொத்தானை அழுத்தினார்.

*******

அவன் உற்சாகமாக அவரிடம் பேசிக் கொண்டிருந்தான்.

"இன்றைய தேதி என்ன?"

"ஹா..ஹா..ஹா..நீங்கள் என்னவோ வேறு கிரகத்தில் இருந்து வந்தவரைப் போல் கேட்கிறீர்கள். இருந்தாலும் சொல்கிறேன். இன்று திங்கட்கிழமை ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி, 1945ம் வருடம், நேரம் காலை 8.14 மணி. நீங்கள் நின்று கொண்டிருப்பது நகரின் பிரபலமான‌ ஷிமா மருத்துவமனை வாசலில். போதுமா தகவல்கள்?"

ஏதோ நெருடியது...'06 ஆகஸ்ட் 1945, காலை 8.14 மணி'

நடுங்கும் குரலில் கேட்டான் "இது என்ன நகரம்?"

அவர் உற்சாகமாக பதிலளித்தார் "ஹிரோஷிமா"

32,000 அடி உயரத்தில் விமானம் பறக்கும் ஓசை அவன் காதில் கேட்டது.


*** சிறில் அலெக்ஸின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்கான இரண்டாவது இடுகை ***

Sunday, June 29, 2008

இரண்டாவது மூளை

"சொல்லுங்க மாமா. நீங்க என்ன சொன்னாலும் கேட்குறேன். இந்த போட்டித்தேர்வில நான் முதல் 3 இடத்துகுள்ள வரணும்" என்றேன் நான்.

என்னால் மாமா என்றழைக்கப்பட்ட மருதமூர்த்தி அறுபதுகளின் தொடக்கத்தில் இருந்தார். என் அப்பாவும் அவரும் பால்ய காலத்து நண்பர்கள் என்பதாலும், என் அப்பா அகால மரணமடைந்த பின்னர் தாயும் இல்லாமல் தனி மரமாக நான் நின்ற போது என் படிப்பிற்கான முழு செலவையும் செய்தவர் அவர் என்பதாலும் அவர் மீது எனக்கு முழு மரியாதை உண்டு. மற்றவர்கள் அவரை அங்கிள் என்று விளித்தபோதும் மாமா என்று கூப்பிடுவது என்னவோ எனக்கு அவரை மிக நெருக்கமாக உணர்த்தியதால் எனக்கு மாற்றத் தோன்றவில்லை.

மருதமூர்த்தி மாமா ஒரு சராசரி அறிவியல் ஆராய்ச்சியாளனுக்குரிய எல்லா இயல்புகளையும் கொண்டிருந்தார்; சரியான உடை உடுத்தாதது, முக்கியமான விசயங்களை மறந்து போவது என்று. அவரது சகா கிருஷ்ணகுமாருடன் இணைந்து ஏதோ ஒரு ராணுவ தளவாடங்களைக் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார் என்பதாக நினைவு. கிருஷ்ணகுமார் அங்கிளும் அப்பாவின் நண்பர்தான்.

நான் மருதமூர்த்தி மாமாவிடம் பேசிக் கொண்டிருந்தது அடுத்த வாரம் நடக்க இருக்கும் முக்கியமான போட்டித் தேர்வைப் பற்றி. அதில் வெற்றி பெற்றால் எனக்கு மேற்படிப்புக்கான அமெரிக்க நுழைவு சுலபமாக இருக்கும், அதன்பின் என் கனவான நாசாவில் நுழைவதற்கு எனக்கு எந்த தடையும் இருக்காது. ஆனால் அந்த தேர்வுக்கு நான் படித்த முதுகலை இன்சினியரிங் மிகக் குறைந்த அளவே உதவப் போகிறது. அது பற்றி ஏற்கனவே அவரிடம் சொல்லியிருக்க, அது பற்றி பேச என்னை பார்க்கிற்கு அழைத்திருந்தார்.

"ஒரு வழி இருக்குப்பா. ஆனா அது 100% இல்லீகல்" என்றார்.

"என்ன வழி மாமா?" அவ‌ரை அவ‌ச‌ர‌ப்ப‌டுத்தினேன்.

"நான் என்ன‌ ஆராய்ச்சி ப‌ண்ணிட்டு இருக்கேன்னு உன‌க்குத் தெரியுமா?"

"ஏதோ ராணுவத்துக்காக‌ அதிந‌வீன‌ க‌ருவிக‌ள் ச‌ம்ப‌ந்த‌மான்ற‌ அள‌வுக்கு தெரியும் மாமா. ராணுவ‌ம் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌தா இருக்குற‌தால‌ நான் இதைப்ப‌த்தி மீரா கிட்ட‌க் கூட‌ எதுவும் கேட்கிற‌தில்லை" மீரா அவ‌ர‌து அழ‌கான‌ திரும‌ணமாகாத‌ மகள். என் சிறுவ‌ய‌துத் தோழி. அவ‌ள்தான் ஆராய்ச்சியாள‌ர்க‌ள் இருவ‌ருக்குமான‌ ஒரே உத‌வியாளினி. நான் அவ‌ரை மாமா என்ற‌ழைப்ப‌த‌ற்கு அவ‌ளும் ஒரு கார‌ண‌ம்.

"அந்த‌ ஆராய்ச்சி நான், கே.கே.கூட‌ சேர்ந்து ப‌ண்ற‌து. அடிப்ப‌டையில‌ நான் உயிரிய‌ல் விஞ்ஞானின்ற‌தால‌ மூளையைப் ப‌த்தியும் ஆராய்ச்சிப் ப‌ண்ணிட்டிருக்கேன். இது வெளிய‌ யாருக்கும் தெரியாது. கே.கே.க்குக் கூட‌ முழு விவ‌ர‌ம் தெரியாது"

"ஓ.."

"ஒரு மனுசனோட மூளையோட திறனை அதிகரிக்கறது எப்படின்றதுதான் என்னோட ஆராய்ச்சி, மூளைக்கு ரெண்டு விதமான திறமைகள் இருக்கு, கம்ப்யூட்டர் மாதிரியே, ஒண்ணு தகவல்களை சேமிச்சிக்குற மெமரி பவர், இன்னொன்னு சேமிச்சத் தகவல்கள தேடற ப்ராசசிங் பவர், கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் மாதிரின்னு வெச்சிக்கேன்"

"ம்"

"என்னோட ஆராய்ச்சியின் மூலமா நான் இது ரெண்டையுமே அதிகப்படுத்தறதுல வெற்றியடைஞ்சிட்டேன்னுதான் சொல்லணும்"

"வாவ்...க்ரேட்"

"இத வெளிய சொல்றதா வேணாமான்னு இன்னும் முடிவு பண்ணல. ஏன்னா இது எவ்வளவுக்கு எவ்வளவு நல்லதோ அவ்வளவுக்கு அவ்வளவு கெட்டதும் கூட"

அமைதியாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

"நீ படிச்சி முடிச்ச உடனே என்கூட என் ஆராய்ச்சியில சேர்ந்துடுவன்னு நெனச்சேன். ஆனா உன்னோட லட்சியம் வேறயா இருக்கு. பரவாயில்ல. இந்த புதுகருவியின் மூலமா உனக்கு நல்லது நடந்தா எனக்கு சந்தோசம்தான். ஆனா நீ ஒரு விசயத்தை மறந்துடக்கூடாது"

கேள்விக்குறியுடன் அவரைப் பார்த்தேன்.

"என்னோட இந்தக் கருவி இப்போதைக்கு 100% சரியா வேலை செய்யுது. ஆனா இதுவரைக்கும் நான் மனுசங்ககிட்ட உபயோகிச்சதில்லை. குரங்குகள்கிட்ட மட்டும்தான் உபயோகிச்சிருக்கேன். அதனால நான் என்னோட ஆராய்ச்சிக்கு உன்னை பயன்படுத்திக்கிறேன்னு நினைச்சிடக் கூடாது."

"புரியுது மாமா. நான் இந்த விசயத்துல எந்த அளவுக்கும் ரிஸ்க் எடுக்கத் தயாரா இருக்கேன். இது எப்படி வேலை செய்யுது மாமா?"

"நான் இந்த கருவியை உன் தலைக்குள்ள ஆபரேசன் பண்ணி பொருத்திடுவேன். இது தனியா செயல்படுற சின்ன கம்ப்யூட்டர் மாதிரின்றதால வெளிய இருந்து எந்த சிக்னலும் இதுக்குத் தேவை இல்ல. இதோட அளவும் ரொம்ப சின்னதா இருக்குறதால ஸ்கல்ல ஓபன் பண்ண வேண்டிய அவசியமே இல்லை. சின்னதா ஒரு ஓட்டையிலயே வேலை முடிஞ்சிடும், ஒரு மணி நேர ரெஸ்ட்க்கு பின்னால நீ எல்லா வேலையும் செய்யலாம். இதுல 6 GB அளவுக்கு மெமரி இருக்கு அது மட்டும் இல்லாம ஒரு சின்ன ப்ரோகிராமும் இருக்கு. டெஸ்ட்டுக்கு முதல் நாள் நான் இதை உன் தலையில வெச்சிடுவேன், உன் டெஸ்ட்டுக்குத் தேவையான எல்லா விசயங்களோட‌."

"அது மறுபடியும் எப்ப எடுப்பீங்க மாமா?"

"தேவையே இல்லை. இது சரியா 24 மணிநேரம்தான் வேலை செய்யும், அதுக்கப்புறம் தானா கரைஞ்சிடும், கரையாத பாகங்கள் எல்லாம் உன்னோட கழிவுகள் வழியா வெளியேறிடும். அதுக்கப்புறம் நீயே சத்தியம் பண்ணி சொன்னாலும் எந்த கொம்பனாலயும் நிரூபிக்க முடியாது"

"அட்டகாசம் மாமா. என்னால நம்பவே முடியலை"

அமைதியா சிரித்தார் மருதமூர்த்தி மாமா.

"மாமா, நான் ஒரு விசயம் சொல்லணும். உங்க கூட இருக்குற எங்களுக்குத்தான் தெரியும் நீங்க எவ்வளவு உழைக்கிறீங்க, எவ்வளவு திறமையானவர்னு. ஆனா உங்களோட பல வெற்றிகள் கே.கே. அங்கிளுக்குத்தான் போகுது. நீங்க வேலை செய்றீங்க ஆனா அவர் பேர் தட்டிட்டுப் போறாரு. "

மாமாவின் முகம் மாறியது, கண்டிப்பாக அவர் இதை எதிர்ப்பார்க்கவில்லை என்பது அவர் முகத்தில் இருந்தே தெரிந்தது.

"மன்னிக்கணும் மாமா. அப்பா இருந்தவரைக்கும் பலதடவை இதைப்பத்திப் பேசியிருக்காரு, நீங்க ரெண்டு பேருமே அவருக்கு நல்ல நண்பர்களா இருந்தாலும். ஏதோ சொல்லணும்னு தோணுனது அவ்வளவுதான் மாமா"

"ஹே..மை பாய்... இதெல்லாம் பத்திக் கவலைப்படாதே. வர வியாழக்கிழமை சாயங்காலம் என் ஆய்வுக்கூடத்துக்கு வந்துடு. அதுக்கு முன்னால இன்னிக்கு வீட்டுக்குப் போன உடனே எனக்கு உன்னோட ஸ்டடி மெட்டீரியல் எல்லாத்தையும் மெயில் அனுப்பிடு"

"கண்டிப்பா மாமா. மீராவை கேட்டதா சொல்லுங்க. பை"

எல்லாம் எதிர்பார்த்தபடி சென்றது. எந்த பிரச்சினையும் இல்லாமல் ஆபரேசன் முடிந்தது. அங்கேயே ஒருமுறை சாம்பிள் டெஸ்ட் எழுத எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் வந்து விழுந்தது, மந்திரத்தில் மாங்காய் விளைந்தது போல.

மறுநாள் போட்டித்தேர்விலும் அட்டகாசமாக எழுதினேன். கண்டிப்பாக முதல் இடம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வெளியே வந்து முதல் வேலையாக மாமாவிற்கு போன் செய்தேன். மாலை வந்து பார்க்குமாறு கூறினார்.

சந்தோசமாக வந்து பைக்கை எடுத்த போது கண்கள் இருண்டது.. எல்லாமே இருட்டாக மயங்கி விழ ஆரம்பித்தேன்.

******

கண் விழித்த போது ஏதோ ஒரு அழுக்கான எட்டுக்கு எட்டு அறையின் கட்டாந்தரையில் மல்லாந்து இருந்தேன். ஒன்றும் புரியாமல் சுற்றும் முற்றும் பார்க்க அதிர்ந்தேன். அது ஒரு லாக்‍‍ அப்.

தட்டுத் தடுமாறி எழுந்து அமர, கம்பிக்கு வெளியே வந்து நின்ற கான்ஸ்டபிள்

"ங்கொய்யா... உன்னப் பத்திதான்டா இன்னிக்கு பேப்பர்ல முதல் பக்கத்துல போட்டிருக்கு. படி. ஒழுங்கு மரியாதையா ஏன் பண்ணினன்னு சொல்லு"

என்றவாறே அன்றைய நாளிதழை எறிந்தார். நடுங்கும் விரல்களால் அதை பிரிக்க, அதில் இருந்த உண்மை முகத்தில் அறைந்தது.

"கல்லூரி மாணவனால் விஞ்ஞானி கிருஷ்ணக்குமார் கொலை: கொலைக்கான காரணத்தைப் போலீஸ் துப்புத் துலக்குகிறது"


*** சிறில் அலெக்ஸின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்கான முதல் இடுகை ***

Saturday, June 28, 2008

வெறும்பயல் விமர்சனங்கள் (2)

செய்தி: ஜெய்ப்பூரில் இருந்து மும்பை வந்த விமானத்தில் பைலட்கள் தூங்கியதால் பரபரப்பு.

வெறும்பயல்: அதுக்குதான் ஃப்ளைட்ல 'குருவி' படம் போடாதீங்கன்னு சொன்னேன். கேட்டாங்களா!!

--------

செய்தி: பூரண மதுவிலக்கை கொண்டுவரக் கோரி பா.ம.க.வினர் டாஸ்மாக் கடைகளின் முன் ஆர்பாட்டம் நடத்துவார்கள்.

வெறும்பயல்: கலந்துக்குற தொண்டர்களுக்கு பிரியாணி கிடைக்குதோ இல்லையோ குவாட்டர் பாட்டில் கிடைக்கிறதுல பிரச்சினை இருக்காது

--------

செய்தி: விலைவாசி உயர்வுப் பிரச்சினையில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசிப்பதற்காக கூடிய கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ முடிவெடுக்காமல் கலைந்தது. மீண்டும் 29ம் தேதி கூடப் போவதாக அறிவிப்பு.

வெறும்பயல்:கண்டிப்பா 29ம் தேதி முடிவை அறிவிச்சிடுவாங்க - மறுபடியும் எப்ப பொலிட் பீரோவ கூட்டறதுன்ற முடிவை !!

-------

செய்தி: பணவீக்கம் இன்னும் அதிகரித்துள்ளது. சில வாரங்களுக்குத் தொடரும் என நிபுணர்கள் கருத்து

வெறும்பயல்: மொத்தத்துல பர்ஸ் வீக்கம் இன்னும் கம்மியாயிடும்ன்றீங்க. சரிதான். ஏற்கனவே ஆரஞ்சு மாதிரி இருந்த பர்ஸ் இப்ப சுருங்கி எலுமிச்சம்பழம் ரேஞ்க்கு ஆயிடுச்சி. அத எலந்த பழம் ரேஞ்சுக்கு கொண்டு வந்துடுவீங்க போல.

----------

அமெரிக்க துணைத் தூதர்: உயர் படிப்பிற்காக இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

வெறும்பயல்: நம்ம ஊர் மெடிக்கல் காலேஜ்லயும் இஞ்சினியரிங் காலேஜ்லயும் கேக்கற டொனேசன விட அமெரிக்கா போய் படிக்க கம்மியாத்தான் செலவாவுன்றது படிக்கற பசங்களுக்குத் தெரியாதா என்ன?

Sunday, June 22, 2008

வலைப்பதிவர்களுடன் விஜயகாந்த்

டிஸ்கி: இந்த பதிவில் ஒரு சில மிகச்சிறந்த பதிவர்களின் பெயர்களை உபயோகப்படுத்தி உள்ளேன். சம்பந்தப்பட்டவர்கள் கோபப் பட மாட்டார்கள் என நினைக்கிறேன். அவர்களின் பெயர்களை நான் சொல்லவில்லை. நீங்கள் கண்டுபிடிக்க முடிந்தாலே எனக்கு வெற்றிதான்.

மதுரை செல்லும் டெக்கான் ஏர்வேஸ் விமானத்துக்குள் ஏறுகிறார் விஜயகாந்த். "வெல்கம் சார்" என்ற விமானப் பணிப்பெண்ணிடம் "ஏதாவது அரசியல்வாதிகள் இருக்காங்களா?" என்று செக் செய்து கொள்கிறார். பணிப்பெண் "இருக்காங்க சார், அது மட்டும் இல்ல, இந்த தடவை வலைப்பதிவர் மாநாடு மதுரையில நடக்குதாம். அதனால கொஞ்சம் வலைப்பதிவர்களும் இருக்காங்க" என்கிறார். "அவங்களால நமக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை" என்று நினைத்துக் கொண்டே சென்று காலியான ஒரு சீட்டில் உட்கார்கிறார் விஜயகாந்த் வரவிருக்கும் பிரச்சினைகள் குறித்து தெரியாமல்.

அருகில் இருப்பவர் "வணக்கம் சார்" என்கிறார், பார்த்தால் பண்ருட்டி ராமச்சந்திரன்.

வி: நீங்க எப்படி சார் இங்க?

ப.ரா: நீங்க வரதா சொன்னாங்க, அதுதான் நானும் ஒரு டிக்கெட் போட்டுட்டேன். ஒரு முக்கியமான விசயம். 2011ல் நம்ம ஜெயிச்ச உடனே துணை முதலமைச்சர்னு ஒரு பதவிய ஏற்படுத்தி, அதுல ஒங்க கூடவே இருக்குற ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிய போடுங்க, அது உங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்

வி: (மனதுக்குள்) நானே ராமு வசந்தன கழட்டி விட்டுட்டு நெம்பர் 2 இடத்துல சுதீஷ ஒக்கார வெக்க படாத பாடு பட்டுட்டு இருக்கேன். இதுல இவரு வேற (சத்தமாக) இந்த சீட் செரியில்ல, நான் பின்னால உக்காந்துக்கிறேன்..

எழுந்து பின்னால் அமர்கிறார், அருகில் பார்த்தால் சுதீஷ்..

சு: மாமா 2011 நம்ம ஜெயிச்ச உடனே பதவியேற்பு விழாவ எங்க வெச்சுக்கலாம்? மெட்றாஸ் யுனிவர்சிட்டி ஆடிட்டோரியத்திலயா? இல்ல நேரு ஸ்டேடியத்திலயா?

வி: (மனதுக்குள்) இப்பதான் குழந்தை பொறந்து தவழவே ஆரம்பிச்சிருக்கு, அதுக்குள்ள வயசுக்கு வர சடங்குக்கு வளையல் என்ன டிசைன்ல போடறதுன்னு இவனுக்கு கவலை. திட்டவும் முடியாது, உடனே அவங்க அக்காட்ட வத்தி வெச்சுடுவான் (சத்தமாக) எது நல்லா பெருசா இருக்கோ அதிலயே வெச்சுக்கலாம் மாப்ளே.

எழுந்து வேறு ஒரு சீட்டில் அமர்கிறார். அருகில் வெள்ளை வேட்டி சட்டையில் இருப்பவர் திரும்புகிறார்...ஓ.பி.எஸ். விஜயகாந்த் சுதாரித்து எழுவதற்குள் ஓ.பி.எஸ் விஜயகாந்த் கையை பிடித்துக்கொண்டு தனது துண்டை எடுத்து இருவரின் கையயும் மூடுகிறார்.

வி: சார்... சார்... என்ன பண்றீங்க? ஏன் என்னோட ஒரு விரல மட்டும் புடிச்சி இந்த அழுத்து அழுத்துறீங்க?

ஓ.பி.எஸ்: உஷ்.. கூட்டணி பத்தி பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்குறப்ப சத்தம் போடாதீங்க. இதுக்கு ஒத்துக்குறீங்களா இல்லயா?

வி: (மனதுக்குள்) ஒத்துக்கலன்னா விட மாட்டான் போல இருக்கே இந்த ஆளு, கை வேற இந்த வலி வலிக்குதே (சத்தமாக) ஒத்துக்கிறேன் சார், கைய விடுங்க.

கையை விடுகிறார் ஓ.பி.எஸ்.
சிரித்துக்கொண்டே ஓ.பி.எஸ்.: அப்பாடா வர்ற நாடாளுமன்ற தேர்தல்ல ஒரு தொகுதிக்கே ஒத்துகிட்டீங்க. நான் அம்மாட்ட பேசிடறேன், உங்களுக்கு பொட்டி வந்துரும். எந்த தொகுதின்னு முடிவு பண்ணி அம்மா சொல்வாங்க, நீங்க உடனே தமிழகம் முழுசும் சூறாவளி சுற்றுப்பயணம் ஆரம்பிச்சிடுங்க.. அனேகமா உங்களுக்கு பாண்டிச்சேரி தொகுதிய அம்மா கொடுப்பாங்கன்னு நினக்கிறேன்...

விஜயகாந்த் டெரர்ராகி வேறு சீட்டில் அமர்கிறார். அருகில் இருப்பவர் புதிய முகமாக ஜெர்மானிய புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்க தைரியமாக பேச ஆரம்பிக்கிறார்.

வி: வணக்கம் சார். அரசியல்வாதிங்கள பாத்தாலே பயமா இருக்கு.

அவர்: கவலையே படாதீங்க. வரலாறுல எல்லாருக்கும் இந்த மாதிரி ஒரு நிலம வரும். இப்படித்தான் 1972ல இஸ்ரேலுக்கு ஒரு பிரச்சின வந்தது, உடனே அவங்க அமெரிக்காகிட்ட ஆலோசனை கேட்டாங்க. அதே மாதிரி நீங்களும் என்கூட வாங்க "சோ" சார்கிட்ட போய் ஆலோசனை கேப்போம். என்ன சொல்றீங்க?

வி: (என்னாது சோ கிட்ட போய் ஆலோசனையா? விளங்குனா மாதிரிதான்) பரவாயில்ல சார், நான் அந்த சீட்ல போய் உக்காந்துக்கிறேன்.

உட்கார்ந்த பின்புதான் கவனிக்கிறார், அருகில் சுப்பிரமணிய சாமி.

சு.சாமி: இங்க பாருங்கோ.. நான் ஜெயலலிதாட்ட பேசிட்டேன், அவா உங்களுக்கு 2 சீட் தர சம்மதிச்சுட்டா. இப்படியே நாம கோயமுத்தூர் போயி அங்க இருந்து கார்ல கொடநாடு போயிறலாம். ஃப்ளைட் மதுரைக்கு போகுதேன்னு கவலப்படாதேள், இந்த ஏர் டெக்கான் பைலட் ஜெட் ஏர்வேஸ்ல இன்டர்வியூ அட்டென்ட் பண்ணினதோட சி.டி. எங்கிட்ட இருக்கு, அதை சொல்லி அவாள மிரட்டி கோயமுத்தூருக்கு போக சொல்லலாம்.

வி: நான் யோசிச்சி சொல்றேன்

சு.சாமி: இதுக்கு நீங்க ஒத்துக்கலேன்னா, ஒபாமாவ தோக்கடிக்கறது எப்படின்னு உங்க மச்சான் சுதீஷ், பி.ஜே.பி வட்டச் செயலாளர்கிட்ட பேசிட்டு இருந்த சி.டி. இருக்கு, ஆதாரத்தோட வெளிய விட்டுடுவேன், பாத்துகோங்க.

(கொல்றானுங்களே) என்று நினைத்துக் கொண்டு வேறு சீட்டில் அமர்கிறார்.

அருகிலிருப்பவர்: நீங்க என்கிட்டதான் வருவீங்கன்னு தெரியும். மதுரை போனதும் அஞ்சா நெஞ்சன போயி பாத்துடுவோம். அப்படியே கிளம்பி சென்னை வந்தீங்கன்னா, மடிப்பாக்கத்துல ஒங்களுக்கு ஒரு வார்டு கவுன்சிலர் பதவி உறுதி. தேர்தல்ல நான், நம்ம உடன்பிறப்புங்க எல்லாம் உங்களுக்கு வேலை செய்றோம். உண்மைத்தமிழன்ட மட்டும் போயிடாதீங்க, அவரு அம்மா கட்சிக்காரரு..

வி: (என்னது வார்டு கவுன்சிலரா? இதுக்கு அவனுங்களே பரவாயில்லயே) ஆமா யாரு நீங்க?

அருகிலிருப்பவர்: கட்சியல உப்புமா போஸ்ட்ல இருக்குறானே இவன் வந்து கூட்டணி பத்தி பேசுறானேன்னு நினைக்காதிங்க. நான் மடிப்பாக்கத்துலயே ரொம்ப லக்கியான ஆளு..

வி: யேய் அவனா நீயி....

அலறியடித்துக் கொண்டு போய் வேறு சீட்டில் அமர்கிறார். அருகில் அ.இ.நா.ம.க கார்த்திக். (ஆஃப் ஆன லேப்டாப்பையே கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டு முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்)

கா: அது.. வந்து... நீங்களும்... நானும்... கூட்டணி வெஷ்ஷா...நாமதான் ஜெயிப்போம்... என்...கட்சிக்காரங்க 190... தொகுதியில நிக்கறதுக்கு....ரெடியா இருக்காங்க...மீதியில ... உங்க ஆளுங்கள....நிறுத்துங்க...

வி: அது என்னா 190 கணக்கு?

கா: அது... வந்து.. கட்ஷியில... இது...வரைக்கும்... 190.... பேர்தான்.... சேர்ந்திருக்காங்க. அதுதான்....

வி: (இன்னிக்கு யார் மொகத்துல முழிச்சேன்னே தெரியலயே)

ஃப்ளைட் முழுக்கத் தேடி சாந்தமான ஒருவர் அருகில் அமர்கிறார்.

அவர்: நீங்க யாரு?

வி: (லேசான ஏமாற்றத்துடன்) நாந்தான் விஜயகாந்த், நல்லா ஆக்சன் படம்லாம் நடிப்பேன், இப்பதான் கட்சி ஆரம்பிச்சிருக்கேன். நீங்க?

அவர்: நான் ஒரு வாத்தியார், ரொம்ப நாளா நம்ம பசங்களுக்கு பாடம் எடுத்துட்டு இருக்கேன். என் கையில பிரம்பு எல்லாம் இல்ல. அடிச்சு சொல்லிக் குடுக்காம அன்பா சொல்லிக் கொடுப்பேன். ஆமா இன்னும் 3 வருசத்தில நீங்க என்னாவா ஆகப் போறீங்கன்னு உங்களுக்குத் தெரியுமா?

வி: (இவரும் அதயே நோண்டுராறே) அது வந்து..நான் சி.எம்.மா இருப்பேன்

அவர்: அது எப்படி நீங்க சொல்றீங்க? உங்க ஜாதகத்தைப் பாத்தீங்களா?

வி: அத எதுக்கு நான் பார்க்கணும்?

அவர்: எல்லாருமே அவங்கவங்க ஜாதகத்தை நல்லா மனப்பாடம் பண்ணிக்கனும். ஜோசியம் அப்படின்றது ஒரு கடல் மாதிரி, நான் அதுல உங்கள ஒரு பயணம் அழைச்சிட்ட்டுப் போறேன்.

வி: நீங்க எதுக்கு என்னை அழைச்சிட்டுப் போறீங்க?

அவர்: உங்களுக்கு விருப்பமில்லேன்னா வேண்டாம், கரையிலயே நின்னுக்கங்க, விருப்பம் இருக்கறவங்க மட்டும் வந்தா போதும். அலோ எங்க போறீங்க?

வி: அது... எல்லார்கிட்டயும் பேசுனதுல எனக்கு வயித்த கலக்குது, நான் பாத்ரூம் போயிட்டு வந்துர்றேன்.

வேக வேகமாக நடக்கிறார். பக்கத்திலிருந்து ஒரு குரல்

அவர்: வாங்க கேப்டன் வந்து என் பக்கத்தில உக்காரதுக்கு நன்றி

வி: நாந்தான் உங்க பக்கத்திலேயே உக்காரவே இல்லயே

அவர்: ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. நானே ஒரு சின்னப் பையன்ங்க. இப்பிடியே பின்னூட்டம் போட்டு போட்டு பழக்கமாயிடுச்சி. வருத்தப்படாதீங்க

"ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டேடேய்" என்று ஒரு ஐம்பது, அறுபது குரல்கள் கேட்க திடுக்கிடுகிறார்,

வி: என்னங்க இப்படி கத்துறாங்க?

அவர்: அவங்கள்லாம் என்னோட கருத்த வழிமொழியுறாங்களாம், இதெல்லாம் உங்களுக்கு புரியாது. விடுங்க.

வி: (எனக்கு இன்னிக்கு சனி உச்சத்துல இருக்குன்னு நெனக்கிறேன்)

பாத்ரூம் அருகில் இருவர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒருவர்: கவலப்படாதீங்க அய்யா. அந்த ஆளூ இந்த வண்டியிலதான் வராரு. ஏரோப்ளேன் ஸ்டேன்ட்லயே அவனைத் தூக்குறோம்.

மற்றவர்: என்ன சொல்ற குரு, ஏரோப்ளேன் ஸ்டேன்டா?

முதலாமவர்: ஆமாங்கய்யா, பஸ் நிக்கற இடம் பஸ் ஸ்டேன்ட். அதே மாதிரி ஏரோப்ளேன் நிக்கற எடம் ஏரோப்ளேன் ஸ்டேன்ட்தான. அங்கதான் நம்ம பசங்க சுமோவோட நிக்கறாங்க. தூக்கிட்டு தோட்டத்துக்கு கொண்டாந்துறோம்.

"எங்க போனாலும் விட மாட்டேன்றானுங்களே" என்று புலம்பியபடி பயத்துடன் கதவைத் திறக்கிறார் விஜயகாந்த். அது பாத்ரூம் இல்லை, பாராசூட் ரேம்ப்.

"ஆகா, இதுதான்டா இவங்க எல்லார்கிட்ட இருந்து தப்பிக்க நல்ல வழி. கீழப்போயி ஒரு லாரியோ, ஷேர் ஆட்டோவோ புடிச்சி மதுரைக்கு போயிட வேண்டியதுதான்" என்று நினைத்துக் கொண்டு ஒரு பாராசூட்டை எடுக்கிறார்.

அப்போது பின்னாலிருந்து ஒரு குரல்,

"எங்க கூட கூட்டணி வெச்சீங்கன்னா நாம கண்டிப்பா ஜெயிக்கறோம். நீங்கதான் துணை முதலமைச்சர்"

"ஆகா, காலையில இருந்து இப்பதான் ஒரு நல்ல வார்த்தையை காதில் கேக்குறேன்" என்று நினைத்தவாறு திரும்புகிறவர் அதிர்ச்சியில் சிலையாகிறார்.

அங்கே நிற்பது விஜய டி.ராஜேந்தர்..

"நீ வேணான்ற தி.மு.க
உன்ன வேணான்னுது அ.தி.மு.க.
ஆனா உனக்காகவே காத்திருக்குயா ல.தி.மு.க

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
சிம்பு செட் பண்றான்டா ட்ரெண்ட்

எல்லா கம்பெனியிலயும் இருப்பாங்க ஜி.எம்.மு
என் கூட நீ கூட்டணி வெச்சா நாந்தாங்க சி.எம்.மு"

விஜயகாந்த்: என்னா சொன்னீங்க?

டி.ஆர்: 2011ல நாந்தாங்க சி.எம்.மு

விஜயகாந்த்: (அழுகிற குரலில்) இன்னொரு தபா சொல்லுங்க?

டி.ஆர்: (தலையை ஸ்டைலாகக் கோதியபடி) 2011ல நாந்தாங்க சி.எம்.மு

விஜயகாந்த் பாராசூட் இல்லாமலேயே வெளியே குதிக்கிறார்.