Friday, October 21, 2011

துணுக்ஸ் - 2011/10/21

ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது, தமிழ் பதிவர்களுக்கு கூகுள் பஸ் சர்வீஸ் ஆரம்பித்ததும் பதிவுகளின் மீதான நாட்டம் அப்படியே குறைந்துவிட்டது. பஸ் ஆரம்பித்து ஏறத்தாழ ஒன்றரை வருடம் ஆகி இருக்கிறது. இதில் கடந்த ஒரு வருட காலத்தை திரும்பிப் பார்த்தால் மிகச்சில பதிவர்களைத் தவிர பெரும்பாலானோர் பதிவு எழுதுவதை வெகுவாக குறைத்துக் கொண்டனர் அல்லது அடியோடு நிறுத்தி விட்டனர். என் பதிவை எடுத்துப் பார்த்தால் ஏப்ரலுக்குப் பிறகு ஏறத்தாழ ஆறுமாத காலம் எந்த பதிவும் இல்லை.

ஆனால் இந்த காலகட்டத்தில் பஸ்ஸில் முழு வீச்சுடன் இயங்கிக் கொண்டிருந்திருக்கிறேன். என்னைப் போன்றே பலரை பஸ்ஸில் பார்க்க முடிகிறது. இதில் பிரச்சினை என்னவென்றால் பதிவைப் போன்று நீண்டகால சேமிப்பாக (படைப்பு, தகவல், மொக்கை எல்லாவற்றையும்) பஸ்ஸை கொள்ள முடியாது. மிகச்சிறந்த உதாரணம் குசும்பன். பஸ் வந்ததும் அவரது நகைச்சுவை உணர்வு எந்தவிதத்திலும் குறைந்து விடவில்லை, ஆனால் அதை எல்லாம் மீண்டும் பஸ்ஸில் படித்துப் பார்த்து ரசிக்க முடியுமா என்ன?

கார்க்கி, பரிசல்காரன் போன்றவர்கள் ட்விட்டரில் இணைந்து மொக்கை போட்டதும் இதே போன்றே. ரைட்டர் பேயோன் போன்று ட்விட்டர் மூலம் புகழ் பெற்று ட்விட் தொகுக்கப் பெறும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காது என்றே நினைக்கிறேன். முடிந்த வரை இனிமேல் பதிவிலும் அவ்வப்போது எழுதலாம் என்று இருக்கிறேன். மற்ற பதிவர்களும் பதிவுகளை எழுதினால் மகிழ்வேன்.

*******

”அமெரிக்காவுல எல்லாம் என்னா சுத்தம் தெரியுமா? நம்ம ஆளுங்களும் இருக்கானுங்களே, எங்க பாத்தாலும் குப்பை போட்டுகிட்டு.. இங்க பாரு எங்க போனாலும் பிச்சைக்காரனுங்க” என்ற ரீதியில் எவனாவது இனிமே பேசினால் அவன் குமட்டுலயே குத்தலாம்.

நான் இங்கே வந்து ஒரு மாதம் ஆகிறது. நம் ஆட்களே பரவாயில்லை எனும்படி இந்த ஊர் ஆட்களின் நடத்தை இருக்கிறது. தெருவில், சாலையில், நடைபாதையில் என்று அங்கிங்கெனாதபடி எங்கும் எந்த நெருடலும் இல்லாமல் எச்சில் துப்புகிறார்கள். பக்கத்தில் எவனாவது இருக்கிறானா இல்லையா என்ற கவலை இன்றி சிகரெட்டை புகைக்கிறார்கள். கொஞ்சம் விலை கம்மியான அபார்ட்மெண்ட்களுக்குச் சென்றால் வித்தியாசமான சிகரெட் நெடி மூக்கை அரிக்கிறது, சாலை ஓர கற்களுக்கு பீர்பாட்டில் அபிஷேகம் எல்லாம் சாதாரணம்.

எல்லாவற்றையும் விட மோசமான விசயம் பிச்சைக்காரர்கள். சாலையில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் “டூ யூ ஹேவ் அ டாலர்?” என்று கேட்பது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக இருக்கிறது, இத்தனைக்கும் அவனோ / அவளோ ஓரளவு நாகரிகமாக உடை உடுத்திக்கொண்டு, செல்ஃபோன் எல்லாம் வைத்திருக்கிறார்கள். ஒரே ஒரு முறை ஒருவன் கேட்டது காதில் விழாதது போல நான் நகர்ந்து போக அவன் கெட்ட வார்த்தைகளால் சத்தமாக திட்ட ஆரம்பித்துவிட்டான். நம்மை தாக்கக்கூட தயங்கமாட்டான்கள் என்பதால் இப்போதெல்லாம் ஒரு டாலர் நோட்டு சட்டைப்பையில் இல்லாமல் வெளியில் வருவதில்லை.

நான்கு வருடங்களுக்கு முன் பஃபல்லோவில் இருந்ததற்கும் இப்போது இங்கே நாஷ்வில்லில் இருப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாட்டை உணர முடிகிறது

அமெரிக்கா சார்.. அமெரிக்கா...

******

டென்னஸி மாகாணத்தின் தலைநகரான நாஸ்வில் நகரம் “ம்யூசிக் சிட்டி” என்றழைக்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றார்போல் திரும்பிய பக்கமெல்லாம் இசை, இசை, இசை.. கண்ட்ரி ம்யூசிக் என்று இவர்கள் அழைக்கும் இவர்களின் நாட்டுப்புற இசை இங்கே பிரபலம். இசைக்கான பெரிய ம்யூசியம், இசை மகான்கள் குறித்த குறிப்புகளுடன் “வாக் ஆஃப் ஃபேம்”, ஆங்காங்கே தெருவில் சின்ன சின்ன ஸ்பீக்கர்களை வைத்து எஃப் எம்மில் இசை ஒலிபரப்பு என்று அருமையான உணர்வைக் கொடுக்கிறார்கள்.

ஒருமுறை டாக்ஸியில் போய்க்கொண்டிருந்தபோது ட்ரைவரிடம் “எஃப் எம்ல உங்க கண்ட்ரி ம்யூசிக் போட முடியுமா?” என்று கேட்க, “தாரளமா, ஆனா உங்களுக்கு புடிக்காது” என்றார். “ஏன்”என்று கேட்க அவர் சொன்ன பதில் “நீங்க இந்தியர்கள்தானே, இந்த ம்யூசிக்ல பெரும்பாலும் ஒரு மாதிரி சோகமாவே இருக்கும், நாய் செத்து போச்சி, பொண்டாட்டி ஓடிப்போயிட்டா.. இப்படி, இந்தியர்களுக்கு இது அதிகமா புடிக்கறதில்லை” என்றார். சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஆனால் பாடலைக் கேட்டதும் அவர் சொன்னது சரி என்று உணர்ந்தாலும் அவர் சொன்ன காரணம் தவறென்று தோன்றியது. பின்ன என்னங்க? இங்கிலீஷ் படத்தை சப்டைட்டிலோட பாத்தாலே புரியாதவங்க நாம, வெள்ளைக்காரனோட மீட்டிங்ல பேசுறப்ப பாதி புரிஞ்சி பாதி புரியாம தலைய ஆட்டிட்டு வந்து ஆஃப்ஷோர் மக்களோட உசுர எடுக்குற நமக்கு அவனுங்க உச்சஸ்தாயில அதிரடி ம்யூசிக்குக்கு நடுவுல பாடுற பாட்டு புரிஞ்சிடுமா என்ன? :)

Thursday, October 20, 2011

நண்பன் (சிறுகதை)

"ம‌ச்சான், ஒரு குட் நியூஸ்டா" என்ற‌ குமாரின் குர‌லில் வ‌ழ‌க்க‌த்துக்கு மாறான‌ ஒரு உற்சாக‌ம் தெரிந்த‌து.

"என்ன‌டா.. ரொம்ப‌ ச‌ந்தோச‌மா இருக்குற‌ மாதிரி இருக்கு"

"இல்ல‌ ம‌கேஷ்... ஒரு ப‌ட்சி மாட்டிருக்குடா" என்ற‌வ‌னின் குர‌லில் லேசான‌ வெட்க‌ம்.

"என்ன‌து.. ல‌வ் ப‌ண்ண‌ ஆர‌ம்பிச்சிட்டியா?"

"டேய்.. நான் சொன்ன‌து வேற‌.. மேட்ட‌ருக்கு ஒரு ப‌ட்சி மாட்டிருக்குடா"

"தெளிவா சொல்லுடா, ஒண்ணும் புரிய‌லை"

"நீதான் திட்டுவியே, நான் நெட்ல‌ எப்ப‌ பாத்தாலும் சேட்ல‌ இருக்குறேன்னு, இப்ப‌ அதுமூல‌மா ஒரு கான்டாக்ட் கிடைச்சிருக்குடா.. இன்னிக்கு அவ‌ங்க‌ வீட்டுக்கு போறேன்"

"ச‌ரி"

"என்ன‌ ச‌ரி.. நான் சொல்ற‌து இன்ன‌மும் புரிய‌லையா.. ஒரு பொண்ணோட‌ கான்டாக்ட் கிடைச்சிருக்கு.. சேட்ல‌ இருந்து அப்ப‌டியே டெவ‌ல‌ப் ஆகி போன் எல்லாம் ப‌ண்ணி பேசி, இன்னிக்கு ம‌த்தியான‌ம் நான் அவ‌ வீட்டுக்கு போக‌ப்போறேன்டா.. எல்லாம் மேற்ப‌டி விச‌ய‌த்துக்குதான்"

"அட‌ப்பாவி.. உன‌க்குள்ள‌ இவ்ளோ பெரிய‌ திற‌மையா.. க‌ல‌க்கு" என்ற‌ ம‌கேஷின் குர‌லில் ச‌ந்தோச‌மா வ‌ருத்த‌மா என்று தெரியாத‌ ஒரு க‌ல‌வையான‌ உண‌ர்வு.

"ச‌ரி.. இந்த‌ விச‌ய‌ம் உன‌க்கு ம‌ட்டும்தான் சொல்லியிருக்கேன், பாத்து வேற‌ எவ‌னுக்கும் ப‌ர‌ப்பி விட்டுடாத‌"

"ச்சீ.. சொல்ல‌ மாட்டேன்.. ஆமா பொண்ணு எப்ப‌டி, மேட்ட‌ர் ம‌ட்டுமா, இல்ல‌ ல‌வ், க‌ல்யாண‌ம் எல்லாமுமா"

"ஹி..ஹி.. க‌ல்யாண‌மா.. அவ‌ ஏற்க‌ன‌வே க‌ல்யாண‌ம் ஆன‌வ‌டா"

"அட‌ப்பாவி, அப்புற‌ம் அவ‌ புருச‌ன் ச‌ந்தேக‌ப்ப‌ட‌ மாட்டானாடா?"

"அவ‌னுக்கு அவ‌ன் ஆபிஸை க‌ட்டிட்டு அழ‌வே நேர‌ம் ப‌த்த‌லை. ம‌னுச‌ன் ஊர் ஊரா சுத்துற‌ வேலை வேற‌ போல‌, இவ‌ளை அவ‌ன் ச‌ரியா க‌வ‌னிச்சிகிட்டா அவ‌ ஏன் என்னை கூப்பிட‌ப்போறா"

"ம்ம்ம்ம்.. ந‌ட‌க்க‌ட்டும் நட‌க்க‌ட்டும். அப்புற‌ம் ட்ரீட் எப்ப‌"

"இன்னிக்கு ம‌த்தியான‌ம் போயிட்டு வ‌ர்றேன், ராத்திரியே நாம‌ மீட் ப‌ண்ண‌லாமாடா?"

"நீ வேற‌டா.. ஆபிஸ்ல‌ வேலை கொல்லுறானுங்க‌.. போன‌ வார‌மே அம்மாவுக்கு உட‌ம்பு ச‌ரியில்லைன்னு மூணு நாள் லீவு போட்டுட்டு ஊருக்கு போன‌துல‌ வேலை சேந்து போச்சிடா, வ‌ர்ற‌ ச‌னிக்கிழ‌மை கூட‌ வேலை செய்ய‌ணும். என் பொண்டாட்டி தாளிச்சி எடுக்குறா.. ச்சே.. விடு ரெண்டு வார‌ம் க‌ழிச்சி பாக்க‌லாம்டா"

"ஓகே.. நீ வேலைய‌ பாரு ம‌கேஷ்.. உன்னை டிஸ்ட‌ர்ப் ப‌ண்ணிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன். நான் சாய‌ங்கால‌ம் கூப்பிடுறேன்.."

குமாரின் லைனை க‌ட் செய்துவிட்டு ஒரு சின்ன‌ புன்ன‌கையுட‌ன், மீண்டும் க‌ம்ப்யூட்ட‌ரில் இருந்த‌ அன்றைய‌ பென்டிங் வேலைக‌ளை பார்க்க‌ ஆர‌ம்பித்த ம‌கேஷ் இர‌ண்டு நிமிட‌ங்க‌ள் க‌ழித்து ஃபோனை எடுத்து "ஹ‌னி" என்று இருந்த‌ பெய‌ரை செல‌க்ட் செய்து ப‌ச்சை ப‌ட்ட‌னை அழுத்தினான். ம‌றுமுனையில் "தூது வ‌ருமா தூது வ‌ருமா" என்ற‌ பாட‌லுட‌ன் ரிங் போய் எடுத்த‌வுட‌ன்

"ஹேய் ஹ‌னி"

"ஹேய் என்ன‌ப்பா, வேலை நேர‌த்துல‌ என் ஞாப‌க‌ம் எல்லாம் கூட‌ வ‌ருதா உன‌க்கு" என்றாள் அவ‌ன் த‌ர்ம‌ப‌த்தினி..

"ஒண்ணுமில்ல‌டா, த‌லை கொஞ்ச‌ம் வ‌லிக்குது, இன்னிக்கு ஹாஃப் டே லீவு போட்டுட்டு வீட்டுக்கு வ‌ர்றேன், இன்னும் அரைம‌ணி நேர‌த்துல‌ வீட்டுல‌ இருப்பேன்" என்றான்.

********

Tuesday, October 18, 2011

தேவன் (அதீதம் சிறுகதை 1)

நண்பர்களே,

அதீதம் இதழில் வெளிவந்த என் சிறுகதைகளை என் பதிவில் தொகுக்கும் முயற்சியாக ஒவ்வொன்றாக என் பதிவில் வெளியிடுகிறேன்.

இந்த பதிவில் அதீதம் முதல் இதழில் (ஜனவரி 15 - 31, 2011) வெளிவந்த “தேவன்” சிறுகதை.

நன்றி

********

தேவன் - வெண்பூ வெங்கட்
-------------------------

"உம்பேர் என்ன‌?" உடுத்திக்கொண்டிருந்த‌வளிட‌ம் கேட்டேன்.

"விம‌லா" என்ற‌வ‌ளின் பெய‌ர் வேறு என்ன‌வோ என்று அவ‌ளின் புன்ன‌கை சொன்ன‌து.

"எவ்ளோ?" கேட்டேன், க‌ன‌த்த‌ ப‌ர்ஸை கையில் எடுத்த‌வாறே..

"முத்து சார் சொல்லியிருப்பாரே, ரெண்டாயிர‌ம் ரூபா" என்றாள் செய‌ற்கை சிரிப்புட‌ன்.

ப‌ண‌த்தை எடுத்து நீட்டினேன், ஐநூறு ரூபாய் நோட்டுக‌ள் ப‌த்தாவ‌து இருக்கும் என்று அறிந்த‌வ‌ள், ஆச்ச‌ர்ய‌மும் ஆயாச‌முமாய் என்னைப் பார்த்தாள்.

"இன்னொரு த‌ட‌வை வேணுமா?" என்றாள்."இல்லை, நீ கிள‌ம்பு.." என்றேன், அவ‌ள் க‌ண்க‌ளைப் பார்த்த‌வாறு. முக‌ம் நிறைந்த‌ ம‌கிழ்ச்சியுட‌ன் அவள் கிள‌ம்பிச் சென்ற‌வுட‌ன், எழுந்து சென்று க‌த‌வை தாளிட்டுவிட்டு வ‌ந்து ப‌டுக்கையில் சாய்ந்தேன். 'உன்னை ப‌ழிவாங்கிட்டேன்டி' என்று ச‌த்த‌மாய் க‌த்த‌வேண்டும் போல் இருந்த‌து எனக்கு. இர‌ண்டு ம‌ணிநேர‌த்திற்கு முன் அவ‌ள் வாங்கி வ‌ந்திருந்த‌ பிரியாணி பாதி சாப்பிட‌ப்ப‌டாம‌ல் டேபிள் மேல் இருந்த‌து. சாப்பிட‌த் தோன்றாம‌லும், தூக்கி எறிய‌த் தோன்றாம‌லும் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். 'எப்ப‌டி சாவ‌து?' இதுதான் என் முன்னால் இருந்த‌ மிக‌ப்பெரிய‌ கேள்வி.


தூக்குப் போட‌லாம், விஷ‌ம் சாப்பிட‌லாம் இது இர‌ண்டும்தான் பெரிய‌ அள‌வில் முய‌ற்சிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. வேற‌ எதாவ‌து வித்தியாச‌மாய்? என் உட‌ல்கூட‌ அவ‌ள் கையில் கிடைக்க‌க்கூடாது. ர‌யில் முன் பாய‌லாமா? வேறு என்ன செய்ய‌லாம், ரூமிற்கு உள்ளேயா, இல்ல‌ வெளியே ப‌ல‌ர் பார்க்க‌ செய்வ‌தா? என்ன‌ கொடுமை இது? ஏன் இவ்வ‌ள‌வு குழ‌ப்பம்.!

"ம‌ரண‌தேவா! என்ன‌ சொல்ற‌ நீ.?" என்று க‌த்தினேன்.

க‌ண்ணை மூட‌ எத்த‌னிக்கும்போது, க‌த‌வு த‌ட்ட‌ப்ப‌ட்ட‌து.

திற‌ந்தேன். ஒரு சிறுவ‌ன், ப‌த்து வ‌ய‌து இருக்க‌லாம், முக‌ம் கொள்ளா சிரிப்புட‌ன் நின்றிருந்தான்.

"யார் வேணும்?" என்றேன்

"நீங்க‌தான்"

"ரூம் மாறி வ‌ந்திருப்ப‌, யார் நீ?"

"நான்தான் ம‌ர‌ண‌தேவ‌ன், கூப்பிட்டீங்க‌ளே?" என்றான்.

"ச்சீ.. ப்போ, வெளையாடாத‌" என்று க‌த‌வை சாத்திவிட்டு வ‌ந்து க‌ட்டிலில் சாய்ந்தேன். கொஞ்ச‌ம் ச‌த்த‌மாக‌த்தான் க‌த்திவிட்டேன் போல‌. வெளியில் இருக்கும் அந்த‌ பைய‌னுக்கு கேட்டிருக்கிற‌து. நாளை காவ‌ல்துறையிட‌மும், ஊட‌க‌ங்க‌ளிட‌மும் "அவ‌ர் அப்ப‌டி ச‌த்த‌ம் போட்ட‌வே என‌க்கு மைல்டா ட‌வுட் ஆச்சி சார்" என்று அவ‌ன் சொல்லிக் கொண்டிருக்கும் காட்சியை ம‌ன‌திற்குள் ஓட்டிப் பார்த்து புன்ன‌கைத்துக் கொண்டேன்.

மீண்டும் க‌த‌வு த‌ட்ட‌ப்ப‌ட்ட‌து. அவ‌னேதான். எழ‌க்கூட‌ தோன்றாம‌ல் அப்ப‌டியே சாய்ந்து ப‌டுத்த‌வாறே க‌ண்க‌ளை மூடிக்கொண்டு அந்த‌ ச‌த்த‌த்தை உதாசீன‌ப்ப‌டுத்த‌ முய‌ன்றேன். க‌த‌வு த‌ட்டும் ச‌த்த‌ம் அதிக‌மாகிக் கொண்டே போன‌து, க‌த‌வு உடைந்து விடுவ‌தைப் போன்று அதிர‌ ஆர‌ம்பித்த‌து.

சென்று க‌த‌வை திற‌ந்தேன். அதே சிறுவ‌ன், அதே சிரிப்புட‌ன். கொஞ்ச‌ம் கூட‌ அந்த‌ சிறுவ‌னின் செய்கை என‌க்கு எரிச்ச‌ல் ஊட்டாத‌து ஆச்ச‌ர்ய‌மாக‌ இருந்த‌து. அந்த‌ க‌ட்ட‌ங்க‌ளை எல்லாம் தாண்டி விட்டேனோ?

"லூசாடா நீ, ஏன் க‌த‌வை ஒடைக்கிற‌?" என்று மெதுவான‌ குர‌லில் கேட்டேன்.

"நீங்க‌தானே என்னை கூப்பிட்டிங்க‌, இப்ப‌ வ‌ந்திருக்கேன், க‌த‌வை மூடிகிட்டா எப்ப‌டி?" என்றான்.

குழ‌ப்ப‌த்துட‌ன் அவ‌னைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று சுற்றுப்புற‌த்தில் ஏதோ வித்தியாச‌மாக‌ தோன்ற‌ சுற்றிப் பார்த்தேன். அறை இருந்த‌ விடுதியின் ஐந்தாவ‌து மாடியில் ந‌ட‌ந்து (அ) நின்று கொண்டிருந்த‌ யாரும் என் அறையைப் பார்த்துக் கொண்டிருக்க‌வில்லை. அவ‌ன் க‌த‌வைத் த‌ட்டிய‌ ச‌த்த‌த்திற்கு இந்நேர‌ம் விடுதி உரிமையாள‌ரே வ‌ந்திருக்க‌ வேண்டும். ஆனால் யாரும் க‌வ‌னிக்க‌வில்லையே.. ஏன்?

"அவ‌ங்க‌ளுக்கு எல்லாம் நான் தெரிய‌ மாட்டேன், நான் பேசுற‌தும், க‌த‌வு த‌ட்டுற‌தும் உங்க‌ளுக்கு ம‌ட்டும்தான் கேக்கும். ஏன்னா நீங்க‌தானே என்னைக் கூப்பிட்டிங்க‌" என்றான் என் ம‌ன‌தைப் ப‌டித்த‌வ‌னாக‌.

அதிர்ச்சியில் ப‌டாரென்று க‌தவை மூடி தாழிட்டு அந்த‌ க‌த‌வின் மீதே சாய்ந்து நின்று கொண்டிருந்தேன். என் இத‌ய‌ம் அடித்துக் கொள்ளும் ச‌த்த‌ம் என‌க்கே கேட்ட‌து. ஒரே விநாடியில் மீண்டும் விய‌ர்த்து வியர்வை என் வெற்றுட‌ம்பில் பாம்பாய் ஊறிய‌து. சுவாச‌ம் பெருமூச்சாய் இய‌ங்கிக் கொண்டிருந்த‌து.

என்ன‌ ந‌ட‌க்கிற‌து இங்கே? அவ‌ன் சொல்வ‌து உண்மையா, இல்லை என்னை குழ‌ப்ப‌ யாரோ திட்ட‌மிட்டு வேலை செய்கிறார்க‌ளா? ஏன் என‌க்கு ம‌ட்டும் இப்ப‌டி எல்லாம் ந‌ட‌க்கிற‌து? கேள்விக‌ள், கேள்விக‌ள், கேள்விக‌ள்..

மீண்டும் க‌த‌வு த‌ட்ட‌ப்ப‌ட்ட‌து. ஆனால் இம்முறை ச‌த்த‌ம் அறையின் உள்ளிருந்து கேட்ட‌து. ப‌ய‌த்துட‌ன் திரும்பினேன். குளிய‌ல‌றைக் க‌த‌வில் இருந்து ச‌த்த‌ம் வ‌ந்த‌து. ந‌க‌ர‌ ம‌றுத்த‌ கால்களை மிக‌ பிர‌ய‌த்த‌ன‌ப்ப‌ட்டு ஒவ்வொரு அடியாக‌ எடுத்து வைத்து ந‌டுங்கும் க‌ர‌ங்க‌ளால் குளிய‌ல‌றையைத் திற‌ந்தேன். அவ‌னேதான் நின்றிருந்தான்.

"எப்ப‌டி சாகுற‌துன்னு குழ‌ப்பமா, வா, நான் உன்னை க‌ட்டி புடிச்சிக்குறேன், நீ செத்துடுவ‌" என்று கைக‌ளை நீட்டினான்.

அடுத்த‌ வினாடி, என் மூளை ச‌ட‌ ச‌ட‌வென‌ க‌ட்ட‌ளைக‌ள் பிற‌ப்பிக்க‌ திரும்பி அறைக்க‌த‌வுக்கு ஓடினேன். தாழ்ப்பாளை நீக்கி க‌த‌வைத் திற‌ந்து வெளியே பாய்ந்த‌வ‌ன், அப்படியே உறைந்து நின்றேன். அறைக்கு எதிரில் தூணில் சாய்ந்தவாறே அவ‌ன்தான்.

ஓட‌ ஆர‌ம்பித்தேன். அதோ எதிரில் அறைக‌ளுக்கு முன்னால் இருந்த‌ மாடி வ‌ராண்டா திரும்பும் இட‌த்தில் அவ‌ன். ச‌ட்டென்று முடிவெடுத்து இட‌துபுற‌ம் திரும்பி ப‌டிக்க‌ட்டுக‌ளை நோக்கி தாவினேன். கீழ் செல்லும் ப‌டிக்க‌ட்டில் அவ‌ன் நின்று கைக‌ளை நீட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். மேலேறும் ப‌டிக‌ளில் ஓட‌ ஆர‌ம்பித்தேன். ஆறாவ‌து மாடி தாண்டி ஏழாவ‌து மாடிக்கு செல்லும் ப‌டிக‌ளில், ப‌டிக்க‌ட்டுக‌ள் 180 டிகிரி திரும்பும் இட‌த்தில் அவ‌ன்.

இம்முறை அவ‌ன் ஓர‌மாக‌ நின்றிருக்க‌ கிடைத்த‌ ச‌ந்தில் புகுந்து மேலே ஓட‌ ஆர‌ம்பித்தேன். ஏழு மாடிக‌ளைத் தாண்டி மேலே மொட்டை மாடிக்கு வ‌ந்தேன். இத‌ற்கு மேலும் அறைக‌ளைக் க‌ட்டுகிறார்க‌ள் போலும். செங்க‌ற்க‌ள், ச‌ர‌ளை, ம‌ண‌ல், க‌ம்பிக‌ள் என்று மாடி முழுதும் இறைந்து கிட‌ந்த‌ன‌. என் உட‌லில் விய‌ர்வை ஆறாய் ஊற்றிக் கொண்டிருந்த‌து. என் தாடையில் இருந்து நான்கைந்து சொட்டுக‌ள் கீழே ம‌ண‌லில் விழுந்த‌ன‌. பின்னால் தொண்டையை க‌னைக்கும் குர‌ல் கேட்ட‌து.

திரும்பிப் பார்க்க‌ திராணிய‌ற்று ஓட‌ ஆர‌ம்பித்தேன். எங்கே செல்வ‌து, எதாவ‌து வ‌ழி கிடைக்காதா என்று இட‌மும் வ‌ல‌மும் தேடிய‌வாறு ஓடிக்கொண்டிருந்தேன். காலில் எதுவோ த‌ட்ட‌, த‌டுமாறி விழுந்த‌வ‌ன் சுதாரிப்ப‌த‌ற்குள் வ‌ந்த‌ வேக‌த்தில் தேய்த்துக் கொண்டு மாடியின் விளிம்பிற்கு வெளியே உருண்டேன்.

எழுப‌த்தைந்து அடிக்கு கீழே சாலையில் நின்றுகொண்டிருந்த‌ ப‌ச்சை நிற‌ நீள‌மான காரின் மைய‌ப்ப‌குதியை குறிவைத்து புவிஈர்ப்பு என்னை இழுத்துக் கொண்டிருந்த‌து. சிரிக்க‌ ஆர‌ம்பித்தேன் "டேய், உன்கிட்ட‌ இருந்து த‌ப்பிச்சிட்டேன்டா" என்று சொல்ல‌ நினைத்தேன். தூர‌ம் குறைய‌ குறைய‌ முக‌த்தில் அடித்த‌ காற்றின் வேக‌த்தால் க‌ண்க‌ளில் நீர் நிறைய‌ ஆர‌ம்பித்த‌து. அந்த‌ நிலையிலும் அந்த‌ காரின் மேல் எதுவோ இருப்ப‌துபோல் தோன்ற‌ உற்றுப் பார்த்தேன். அவன்தான்.. முக‌ம் நிறைய‌ புன்ன‌கையுட‌ன் கைக‌ளை விரித்துக் கொண்டு மேல்நோக்கி பார்த்த‌வாறு என்னை ஆர‌த்த‌ழுவ‌ காத்திருந்தான்.

****

நன்றி: அதீதம் இதழ்