Monday, December 28, 2009

துணுக்ஸ் - 2009/12/28

ஏறத்தாழ ரெண்டு மாசமாச்சி பதிவு போட்டு.. ஆபிஸ்ல ப்ளாக்கர்க்கு ஆப்பு, வார நாட்களில் வீட்டுக்கு திரும்பி வரவே 11 மணி, வார இறுதிகளில் வெளியூர் பயணங்கள் என்று பதிவு போடவே முடியவில்லை. இந்த வாரத்துல ரெண்டு பதிவாவது போடமுடியும்னு நெனக்கிறேன். இப்ப மட்டும் எப்படி உனக்கு நேரம் கிடைச்சதுன்னு கேக்குறவங்களுக்கு, பதில் கடைசியில..

*****

கொங்கு நாட்டு பதிவர்களுக்கு பாராட்டுகள், சிறப்பாக ஒரு பதிவர் சந்திப்பை ஏற்பாடு செஞ்சு, வெளியூர் பதிவர்களை அதில் கலந்துக்க வெச்சி கலக்கிட்டாங்க, ரொம்ப நாளா சென்னைப் பதிவர்கள் செய்யணும்னு பேசிகிட்டு இருந்த விசயம், அவங்க உயிர் கொடுத்திருக்காங்க.. அவங்களுக்கு ஒரு சல்யூட்..

*****

தெலுங்கானா பிரச்சினையில மத்தியில இருக்குற காங்கிரஸ் அரசோட முடிவெடுக்கிற திறமைய பாத்து எனக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். முதல்ல தெலுங்கானா கிடையாதுன்னாங்க, கே.சி.ஆர் உண்ணாவிரதம் இருந்தாரு, உடனே சரி குடுத்துடறோம்னாங்க, அடுத்ததா கடலோரா ஆந்திராவும், ராயலசீமாவும் எதிர்ப்பு தெரிவிச்சாங்க, இப்ப தெலுங்கானா முடிவை மறுபரிசீலனை செய்யுறோம்ன்றாங்க, உடனே தெலுங்கானாவே பத்தி எரியுது..

ஒரு முடிவை எடுக்கும் முன்னால எல்லா விசயங்களையும் யோசிச்சி, என்ன விதமான பின்விளைவுகள் ஏற்படும் இதையெல்லாம் யோசிக்காம, எடுத்த முடிவுல உறுதியா இல்லாம அவனவன் இழுத்த இழுப்பெக்கெல்லாம் போற அரசாங்கத்தை எக்ஸ் ரே எடுத்தா இப்படித்தான் இருக்குமோ என்னமோ?? :(((



*****

ஜூனியருக்கு எல்.கே.ஜி அட்மிஷன் வாங்க கடந்த ஒரு மாசமா அலைஞ்சதுல ஒரு விசயம் நல்லா புரிஞ்சது. ஒரு நல்ல ஸ்கூல்ல எல்.கே.ஜி அட்மிஷன் வாங்கணும்னா தரவேண்டிய டொனேஷன், நான் எல்.கே.ஜி ஆரம்பிச்சி எம்.சி.ஏ முடிக்கிறவரைக்கும் ஆன மொத்த செலவை விட அதிகம். அதே போல் அரசு பள்ளிகளோட தரம் எந்த அளவுக்கு இருக்குன்றதும் பெரிய கேள்விக்குறி.

20 வருடங்களுக்கு முன்னால நான் ஆரம்பப் பள்ளிகள் படிச்சிட்டு இருந்தப்ப அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகளை விட அதிக எண்ணிக்கையில இருந்தது ஆனால் இப்போது தெருவுக்கு தெரு தனியார் பள்ளிக்கூடங்கள். ஊருக்கு ஊர் இன்ஜினியரிங் காலேஜ். ஒவ்வொன்றிலும் கேப்பிடேஷன் ஃபீஸ் என்ற பெயரில் பல ஆயிரங்களில் இருந்து சில லட்சங்கள். இதே ரீதியில் போனா இன்னும் சில வருசங்களில் படிப்புன்ற விஷயம் நடுத்தர வர்க்கத்திற்கு எட்டாக்கனியாகிடும்ன்றப்ப ஏழைகள் நிலைமை??

*****

பதிவர்கள் எல்லாரும் வேட்டைக்காரனை அடிச்சி துவைச்சு பிரிச்சி மேஞ்சிட்டாங்க. எல்லாரும் சொல்ற ஒரே விசயம் இந்த படமும் டிபிக்கல் விஜய் ஃபார்முலான்றதுதான். மூணு வருசத்துக்கு முன்னால் போக்கிரி வந்த புதுல விஜய் டிவியில லொள்ளு சபா செஞ்ச காமெடி ஷோல இதே விசயத்தை கண்டபடி கிண்டலடிச்சிருப்பாங்க. இப்பவும் அது அப்படியே பொருந்துதுன்றது விஜய்யைப் பொறுத்தவரை வேட்டைக்காரனை விட பெரிய தோல்வி.

அந்த லொள்ளுசபாவை நீங்களும் பார்த்து ரசியுங்க..

Lollu sabha - Bakery - Part 1
Lollu sabha - Bakery - Part 2
Lollu sabha - Bakery - Part 3

இந்த நிகழ்ச்சி பண்ணினதற்காக பயங்கரமா எதிர்ப்பு தெரிவிச்சி, அவங்களை அடுத்த வாரமே மன்னிப்பு கேக்க வெச்சதெல்லாம் நடந்தது. விஜயும் அவரது ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவிக்க காட்டுற முனைப்புல கொஞ்சமாவது கதை தேர்வுல காட்டலாம்.

*****

ரெண்டு மாசமா பதிவே போடாமா இருந்துட்டு இப்ப பதிவு போடுறதுக்கு காரணம் சனிக்கிழமை அன்னிக்கு தங்கமணி ஊருக்கு போய்ட்டாங்கன்றதும், இன்னும் 10 நாள் கழிச்சிதான் திரும்பி வருவாங்கன்றதும்தான் அப்படின்னு நீங்களா முடிவு பண்ணிகிட்டா அதுக்கு கம்பேனி பொறுப்பேற்காது..ஹி..ஹி..

Thursday, October 29, 2009

உங்களுக்கு துப்பறியும் கதைகள் பிடிக்குமா?

இந்த இடுகையை நீங்கள் படிக்கிறீர்கள் என்றால் தலைப்பில் இருக்கும் கேள்விக்கான பதில் "ஆமாம்" என்பதாகவே 99 சதவீதம் இருக்கும். "இல்லை" என்பவர்களும் தொடர்ந்து படிக்கலாம். :)

ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளின் இறுதியில் அல்லது தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தங்களின் பதின்ம வயதுகளை (டீன் ஏஜ்) கடந்தவர்களில் பெரும்பாலானோர் ராஜேஷ்குமார், சுபா மற்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோரின் துப்பறியும் நாவல்களில் மனதை பறிகொடுத்திருப்பீர்கள் (அ) பறிகொடுத்திருக்கிறோம்.

விவேக், ரூபலா, நரேந்திரன், வைஜெயந்தி, பரத், சுசிலா இவர்களோடு வயது வித்தியாசம் இல்லாமல் விஷ்ணு, செல்வா, முருகேசன், ராமதாஸ் (அவரு இல்லீங்க), ஜான்சுந்தர், அனிதா என்று அனைவரும் நமக்கு நெடுநாள் நண்பர்கள் என்றால் அது மிகையல்ல.

இவர்கள் அனைவருக்கும் முன்னோடி அல்லது எழுத்துலகின் முதல் பிரபல துப்பறியும் ஹீரோ என்றால் அது ஷெர்லாக் ஹோம்ஸ் என்பது ஒத்துக்கொள்ளப்பட்ட உண்மை. ஆங்கிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகி சக்கை போடு போட்ட இந்த மனிதரைப் படைத்தவர் ஆர்தர் கோனன் டாயில்.

ஒரு கற்பனை கதாபாத்திரத்தின் வெற்றியே வாசகர்கள் அவரை நிஜம் என்று நினைப்பதும், அவரை பின்பற்ற நினைப்பதுமே. உதாரணமாக நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பல வசனங்களை நாம் நம்மை அறியாமலேயே நம் அன்றாட உரையாடல்களில் பயன்படுத்துகிறோம் என்பதே அவரின் வெற்றியாகக் கருத முடியும். அந்த வகையில் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் வெளிவந்து வெற்றியடைந்த காலகட்டத்தில் கதைகளில் வரும் அவரது முகவரியான "221 பி, பேக்கர்ஸ் தெரு, லண்டன்" என்ற முகவரிக்கு கடிதங்கள் எழுதும் அளவுக்கு அவரை உண்மையான மனிதராக வாசகர்கள் நினைத்தார்கள் என்றால் அவரது வீச்சினைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் அவரது கதைகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பதால் தமிழர்களிடையே அவர் அவ்வளவு பிரபலம் ஆகவில்லை. ஆனால் அவரது பெயரை எங்காவது எப்பொழுதாவது கேட்டிருக்கும் நமக்கு அவரது கதைகளைப் படிக்க அவ்வளவாக வாய்ப்புகள் இல்லாமலே இருந்தது.

இந்த குறையைப் போக்க தமிழில் எடுக்கப்பட்டிருக்கும் முதல் முயற்சியாகவே கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் "ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறிகிறார்!" வரிசையின் முதல் புத்தகமான "ஒரு மோதிரம் இரு கொலைகள்!" அமைந்திருக்கிறது. தமிழில் இதை மொழி பெயர்த்திருப்பவர் நம் பதிவர்களிடையே நன்கு அறிமுகமான "பத்ரி சேஷாத்ரி".

ஹோம்ஸை வைத்து ஆர்தர் எழுதிய முதல் கதையான A Study in Scarlet என்ற கதையையே முதல் கதையாக மொழிபெயர்த்திருப்பது ஹோம்ஸை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நல்ல உத்தியாக இருக்கிறது. ஹோம்ஸ் யார், அவரது தோற்றம், இயல்புகள், அவருக்குத் தெரிந்தது, தெரியாதது என்று அனைத்தையும் நம்மால் இந்த முதல் கதையிலேயே அறிந்து கொள்ள முடிவது இந்த புத்தகத்தின் சிறப்பு.

இலக்கியத்தனமாக இல்லாமல் நாம் ஏற்கனவே விரும்பி படிக்கும் தமிழ் துப்பறியும் நாவல்களின் மொழியிலேயே ஓரளவுக்கு இந்த புத்தகமும் வந்திருப்பது படிப்பதற்கு இதமாக இருக்கிறது. மேலும், எழுத்தாளர் ஆர்தர் டாயில் குறித்தும், ஹோம்ஸ் குறித்தும் பத்ரி கொடுத்திருக்கும் முன்னுரைகள் கதை படிக்கும் முன்பு நம்மை அழகாக தயார் செய்கின்றன. என்னைப் பொறுத்தவரை இந்த புத்தகம் மிகச் சிறப்பாக வெளிவந்திருக்கிறது என்றே சொல்வேன்.

இனி, கதைக்குச் செல்வோம். ஷெர்லாக் ஹோம்ஸின் கதைகள் எல்லாமே அவரது நண்பரான டாக்டர் வாட்சன் என்பவரது பார்வையிலேயே செல்லும். கதைகளை எழுதிய ஆர்தர் டாயில் ஒரு மருத்துவர் என்பதால் தன்னை வாட்சன் இடத்தில் வைத்து எழுத இந்த நடை அவருக்கு சுலபமாக இருந்திருக்கலாம். கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளியான இந்த கதைகளின் களம் 19ம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து இங்கிலாந்து திரும்பும் டாக்டர் வாட்ஸன் தன் நண்பர் மூலம் ஷெர்லாக் ஹோம்ஸுடன் அறையில் தங்குகிறார். ஹோம்ஸின் வித்தியாசமான நடவடிக்கைகளால் அவர் என்ன தொழில் செய்கிறார் என்பது தெரியாமல் சில நாட்கள் குழம்பும் வாட்ஸன், பின்னர் அவர் ஒரு துப்பறியும் நிபுணர் என்பதும், காவல்துறையினர் கண்டுபிடிக்கவே திணறும் சில வழக்குகளில் அவர்களுக்கு உதவுகிறார் என்பதையும் தெரிந்து கொள்கிறார்.

லண்டன் நகரில் கொல்லப்படும் அமெரிக்கப் பிரஜை ஒருவரது கொலைக்கான காரணத்தைத் தேடும் இரு ஸ்காட்லாண்ட் யார்டு அதிகாரிகளுக்கு உதவ ஹோம்ஸ் செல்ல அவருடன் தொடரும் வாட்ஸன், கொலை நடக்கும் இடத்தில் இருக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன விசயங்களை வைத்து ஹோம்ஸ் எப்படி கொலைகாரனை கண்டுபிடிக்கிறார் என்பதை விவரிக்கிறார். கதையின் முதல் பாதியில் கொலைகாரன் கண்டுபிடிக்கப்பட, கொலைக்கான காரணம் கதையின் இரண்டாவது பாதியில் விரிகிறது.

இரண்டாவது பாதியில் விவரிக்கப்படும் அமெரிக்காவின் யுடா மாகாண குடியமர்தலும் அந்த மக்களின் வாழ்க்கை முறையும், அவர்களின் மூடப் பழக்க வழக்கங்களும், அதனால் பாதிக்கப்படும் சாமான்யர்களும் என்று முதல் பாதி கதைக்கு முற்றிலும் வேறான‌ தளத்தில் கதை பயணிப்பது ஒரு நல்ல வாசிப்பனுபவத்தைக் கொடுக்கிறது.

கதையின் முடிவில், தான் கொலைகாரனை கண்டுபிடித்தது எப்படி என்பதை ஷெர்லாக் ஹோம்ஸ் விவரிக்கும்போது அவரது துப்பறியும் திறமை நம்மை வியப்பில் ஆழ்த்துவது உண்மை. ஏன் ஷெர்லாக் ஹோம்ஸ் இவ்வளவு பிரபலம் என்பதற்கு சரியான விளக்கமே அந்த கடைசி அத்தியாயம் என்பதே என் கருத்து.

துப்பறியும் நாவல் பிரியர்கள் கண்டிப்பாக படிக்கவேண்டிய புத்தகமான இது மற்றவர்களுக்கு ஒரு வித்தியாசமான வாசிப்பனுபத்தைத் தரும் என்பதற்கு நான் உத்தரவாதம்.


பதிப்பாளர்கள்: கிழக்குப் பதிப்பகம்
புத்தகத் தொடர்: ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறிகிறார்!
புத்தகம்: 1. ஒரு மோதிரம் இரு கொலைகள்!
எழுதியவர்: ஆர்தர் கோனன் டாயில்
தமிழில்: பத்ரி சேஷாத்ரி

மேலதிக தகவல்கள் மற்றும் ஆன்லைனில் புத்தகம் வாங்க இங்கே செல்லவும்.

Monday, October 26, 2009

ஒரு சட்டப்பூர்வமான கொடிய தண்டனை

ஒரு குற்றவாளிக்கு தரப்படக்கூடிய அதிகபட்ச தண்டனை எது? இந்த கேள்விக்கு எல்லா நாடுகளிலும் ஒரே பதில் "மரண தண்டனை" என்பதே. சில நாடுகளில் தூக்கு, சில நாடுகளில் மின்சார இருக்கை, சில நாடுகளில் கல்லால் அடித்துக் கொலை என்று தண்டனையை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதில் மாற்றம் இருந்தாலும் மரணதண்டனைக்கு மிஞ்சிய தண்டனை இல்லை என்றுதான் எல்லா நாட்டு சட்டங்களும் சொல்கின்றன.

அந்த குறிப்பிட்ட நாட்டில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவது விஷ ஊசியின் மூலம், காரணம் மற்ற முறைகளை விட விஷ ஊசி முறையில்தான் சாவதற்கான உடல் வேதனை குறைவு என்பது அவர்கள் வாதம். சுமார் 25 வருடங்களுக்கு முன்பு 1984ல் ஒரு 14 வயது சிறுமியைக் கடத்தி, கற்பழித்துக் கொன்ற அந்த குற்றவாளிக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. நமது நாடு போல் தீர்ப்பு வந்தது 10 வருடம் கழித்தல்ல, ஒரு வருடத்திற்குள்ளாகவே. ஆனால் அதை நிறைவேற்றுவதில் சில பிரச்சினைகள்: மரணதண்டனை வேண்டுமா, வேண்டாமா என்று நம் நாட்டைப் போலவே அங்கும் விவாதம், தண்டனை நிறைவேற்ற போதுமான பணம் ஒதுக்காதது போன்ற காரணங்களினால் ஏற்கனவே மரண தண்டனை பெற்று விஷ ஊசிக்கு காத்திருப்பவர்கள் வரிசையில் அவனும் சேர்க்கப்படுகிறான்.

பாதுகாப்பான சிறையில் பரோலில் வெளிவர முடியாத கைதியாக சாவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறான். என்றாவது ஒரு நாள் காவல் அதிகாரி வந்து "அடுத்த வாரம் உனக்கு தண்டனை நிறைவேற்றப்படும்" என்று சொல்வார் என்ற நிலை. இப்படி அவன் காத்திருந்தது ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, 25 வருடங்கள். எந்த நிமிடமும் தன் தண்டனை நிறைவேற்றப்படும் என்ற நிலையில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்த அவனது மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பது மரணதண்டனையை விட கொடிய ஒன்று என்பது மறுக்க முடியாத உண்மை.

முடிவாக, செப்டம்பர் 15, 2009ல் அவனது தண்டனையை நிறைவேற்றலாம் என்று முடிவு செய்கிறார்கள் சிறைத்துறையினர். விடுதலையை விட அதிக மகிழ்ச்சியை அவன் அடைந்திருப்பான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் விதி வேறு வடிவத்தில் விளையாடும் என்பதை அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான்.

மதியம் இரண்டு மணிக்கு அவன் மரண தண்டனை நிறைவேற்றும் அறைக்குள் அழைத்துச் செல்லப்படுகிறான். கண்ணாடித் தடுப்புக்கு வெளியே இருபதிற்கும் அதிகமான மனிதர்கள் (அ) சாட்சிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவன் இருக்கையுடன் சேர்த்துக் கட்டப்படுகிறான். மயக்க மருந்து எதுவும் கொடுக்கப்படுவதில்லை, நேரடியாக விஷ ஊசிமட்டுமே. ஊசி போடப்பட்ட சில நிமிடங்களில் வலி, வேதனை இல்லாமல் உயிர் பிரிவது வாடிக்கை.

இதற்கெனவே பயிற்சி பெற்ற மருத்துவர்கள் ஊசி மற்றும் விஷத்திற்கான ரசாயனங்களுடன் அறைக்குள் செல்கின்றனர். எல்லாம் தயார் என்ற நிலையில்தான் எதிர்பாராத, இதுவரை வரலாற்றில் நிகழாத அந்த விஷயம் நடக்கிறது. விஷ ஊசியைப் போடுவதற்கான இரத்தக் குழாயை அந்த மருத்துவப் பணியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டு கைகளில் கண்டுபிடிக்க முடியாவிட்டால், காலில் அல்லது தொடையில் ஊசி போடப்படும். என்ன காரணமோ அவனது உடலில் எந்த பகுதியிலும் இரத்தக்குழாய்களை அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

இப்படி அவர்கள் அவன் உடல் முழுவதும் இரத்தக் குழாய்களை தேடிக்கொண்டிருந்தது ஐந்து நிமிடமோ பத்து நிமிடமோ அல்ல, முழுதாக இரண்டு மணிநேரம். இரண்டு மணிநேரம் கழித்து தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே மரணதண்டனை நிறைவேற்றப்பட முடியவில்லை என்று கூறி அவன் சிறைக்கு திருப்பி அனுப்பப்படுகிறான்.

அவன் செய்த ஒரு கொலைக்கு இன்றோ நாளையோ என்ற நிலையில் இருபத்தைந்து வருடங்கள் சிறையில் வைத்திருந்து, மரணத்தின் வாசலுக்கு கொண்டு சென்று இரண்டு மணிநேரம் வைத்திருந்து, அவனை சிறைக்குத் திருப்பி அனுப்பி மறுபடியும் இன்றோ நாளையோ என்ற நிலையில் வைத்திருக்கும் அந்த நாடு, உலகுக்கே நாட்டாமை பண்ணிக் கொண்டிருக்கும் அமெரிக்கா. இந்த நரக வேதனைக்கு அவன் பிடிபட்ட அன்றே என்கவுன்ட்டரில் கொன்றிருந்தாலும் பரவாயில்லை என்பதே உண்மை.

சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

1. இந்த ஒரு குற்றவாளியைப் போன்றே அமெரிக்கச் சிறைகளில் ஆயிரக்கணக்கானோர் இன்னும் விஷ ஊசிக்குக் காத்திருக்கிறார்கள். இன்னும் எத்தனை வருடங்கள் அவர்களை இப்படி வைத்திருக்கப்போகிறார்கள்?
2. நமது நாடு போல அரசியல் காரணங்கள் இல்லாமல் மரணதண்டனை கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றால் உடனடியாக நிதி ஒதுக்கி அவர்களின் தண்டனையை நிறைவேற்றலாமே, தண்டனையை நிறைவேற்றும் முறையில் கூட வலியும் வேதனையும் இருக்கக் கூடாது என்று நினைப்பவர்கள், டெத் ரோ (Death Row) எனப்படும் மரண வரிசையில் காத்திருப்பவர்களின் மனதளவில் ஏற்படும் வலியையும் வேதனையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாதது ஏன்?
3. அமெரிக்காவின் சில மாநிலங்களில் மரணதண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் இன்னும் நடைமுறையில் உள்ளது. ஒரே நாட்டின் குடிமக்களிடையே ஏன் இந்த வேறுபாடு?

சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த செய்தி இது. இது குறித்த முழு விவரமும் இங்கே.

Monday, October 19, 2009

இரண்டு புத்தகங்கள் + இரண்டு திரைப்படங்கள் + ஒரு தத்துவம்

புத்தகம் 1: எரியும் பனிக்காடு:
நாம் தினமும் குடிக்கும் தேநீரின் பின்னால் இருக்கும் கறுப்பு சரித்திரத்தை சொல்லும் ரெட் டீ (Red Tea) என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழ் வடிவம்தான் இந்த புத்தகம். ஆங்கிலத்தில் பி.எச்.டேனியல் அவர்களால் எழுதப்பட்டு, தமிழில் இரா.முருகவேள் அவர்களால் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த புத்தகம், 1920களில் மலைப்பகுதிகளில் தேயிலைத் தோட்டம் அமைக்க இந்திய ஏழைகளின் வாழ்க்கையை சூறையாடிய வெள்ளையர்கள் + இந்தியர்களின் வாழ்க்கையை சொல்லும் இரத்தம் தோய்ந்த வரலாறு.

தமிழகத்தில் நடக்கும் கதை, ஆங்கிலத்தில் எழுதப்பட்டு மீண்டும் தமிழில் மொழிபெயர்ப்பது சவாலான விசயம். அந்த பகுதி மக்கள் அந்த காலகட்டத்தில் பேசிய மொழியை எழுத்தில் கொண்டுவந்திருக்கும் முருகவேள் பாராட்டப்பட வேண்டியவர்.

அவசியம் படிக்கப்பட வேண்டிய புத்தகங்களின் வரிசையில் முதல் சில இடங்களில் இருக்கும் புத்தகம் இது என்று சொன்னால் அது மிகையில்லை.

இந்த புத்தகம் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் விமர்சனம் இங்கே.

திரைப்படம் 1: Hangover:
சமீபத்தில் நான் பார்த்து ரசித்த சிறந்த பொழுதுபோக்கு படங்களில் ஒன்று. படத்தின் நான்கு ஹீரோக்களில் ஒருவனது பேச்சிலர் பார்ட்டியை கொண்டாட லாஸ் வேகாஸ் நகருக்கு செல்பவர்கள், தாங்கள் தங்கும் ஹோட்டலின் மொட்டைமாடியில் உட்கார்ந்து தண்ணியடிக்க ஆரம்பிக்கிறார்கள். காலையில் தங்கள் அறையில் விழித்து எழுந்தால் முதல் நாள் நடந்தது எதுவும் நினைவில் இல்லை என்ற நிலையில், அறையில் பாத்ரூமில் ஒரு புலி உறும, கப்போர்டில் குழந்தை அழ, இவர்கள் கார் என்று ஒரு போலீஸ் காரை கொண்டு வந்து ஹோட்டல் சிப்பந்தி நிறுத்த என்று குழப்பத்தின் மேல் குழப்பமாக ஆரம்பித்து அனைத்தும் சுபமாக முடிவதுதான் கதை.

தமிழில் உல்டா பண்ண அருமையான திரைக்கதை. யார் செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

எனக்கு இந்த படத்தை அறிமுகப்படுத்திய கேபிள் சங்கரின் விமர்சனம் இங்கே.

புத்தகம் 2: Pirate Latitudes:
ஜுராஸிக் பார்க் எழுதிய மைக்கேல் கிரிக்டன் போன வருடம் இறந்த பிறகு அவரது கணிணியை நோண்டிக் கொண்டிருந்த அவரது உதவியாளர் கண்டுபிடித்த இதுவரை வெளிவராத இரண்டு நாவல்களில் ஒன்று "பைரேட் லாட்டிட்யூட்ஸ்". கிரிக்டனால் முழுவதுமாக‌ எழுதி முடிக்கப்பட்டிருந்த இந்த நாவல் நவம்பர் இறுதியில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர கிடைத்துள்ள இன்னொரு முடிக்கப்படாத நாவலை எழுதி முடிக்க எழுத்தாளரை தேடிக்கொண்டிருக்கிறாராம் பதிப்பாளர். ஒரு அப்ளிகேஷன் போடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். :)

சுஜாதாவோட கணிணியையும் யாராவது நோண்டுங்கப்பா, உங்களுக்கு புண்ணியமா போகட்டும்.

திரைப்படம் 2: 2012:
உலகின் மிகப்பெரிய அழிவு எது நடந்தாலும் அல்லது நடக்கப்போவதாக தெரிந்தாலும் அதை படமாக்குவது ஹாலிவுட் இயக்குனர்களுக்குக் கை வந்த கலை. டைட்டானிக், 9/11, உலகப்போர்கள் என்ற பெரிய அழிவுகளை வெற்றிப்படங்களாக்கியவர்கள் அவர்கள். இன்டிபென்டன்ஸ் டே, காட்ஸில்லா, டே ஆஃப்டர் டுமாரோ ஃபேன்டஸி படங்களின் இயக்குனர் ரோலன்ட் எம்மரிக் இயக்கி நவம்பர் 13ல் வெளிவர இருக்கும் 2012 படம், 2012ல் உலகம் அழியும் என்ற கருத்தை ஒட்டி எடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனரின் முந்தைய படங்களைப் போலவே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தின் ட்ரைலரே மிரட்டுகிறது. சும்மாவா பின்ன, 260 மில்லியன் டாலர் பட்ஜெட்டாச்சே (சுமாராக 1300 கோடி ரூபாய்). ஏறத்தாழ தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியின் ஐந்து வருட பட்ஜெட்டை விட இந்த ஒரு படத்தின் பட்ஜெட் கொஞ்சம் அதிகம்தான்.

நான் அதிகம் எதிர்பார்க்கும் படம் இது.

தத்துவம்:
நான் தற்போது படித்துக்கொண்டிருக்கும் சன்ஸ் ஆஃப் ஃபார்சூன் (Sons Of Fortune) கதையில் எழுத்தாளர் ஜெஃப்ரி ஆர்ச்சர் (Jeffrey Archer) கொடுத்திருக்கும் ஆலிவர் ஹோம்ஸ்(Oliver Wendell Homes)ன் ஒரு தத்துவம் இன்றைய பதிவுலகத்திற்கு பொருத்தமாக தோன்றியது.

'Beat a man with the strength of your argument, not the strength of your arm'

Thursday, October 8, 2009

இணையம் இல்லா எட்டு நாட்களும், கற்பிழந்த மலைகளின் ராணியும்

ஆகஸ்ட் நடுவுல இருந்து செப்டம்பர் வரைக்கும் ஏறத்தாழ ஒரு மாசமாவே நான் வலையுலகில் அதிகம் செயல்படவில்லை. ஏற்கனவே சொன்ன மாதிரி அலுவலகத்தில் வலைப்பூக்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டதால் என்னால் வலையுலகில் பதிவுகளை முழுவதுமாக படிக்கவோ பின்னூட்டமிடவோ முடியவில்லை. அது மட்டுமின்றி செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் ஒரு வாரம் எங்காவது குடும்பத்துடன் சுற்றுலா செல்லலாம் என்று முடிவு செய்திருந்ததும் காரணம். ஒரு வார விடுமுறைக்கு முன்னால் முடிக்கவேண்டிய பணிகளும், விடுப்பு முடிந்து வந்ததும் சேர்ந்து போன ஆணிகளை பிடுங்கிய வகையிலும் ஏறத்தாழ ஒரு மாதமே ஆகிவிட்டது.

சென்ற வருடம் இதே நேரத்தில் நாங்கள் ஐந்து நாட்கள் கொடைக்கானல் சென்றிருந்தோம். அந்த பயணம் அருமையாக இருந்ததால் இந்த வருடம் அதே போல் ஊட்டி செல்லலாம் என்று முடிவு செய்திருந்தோம். சென்ற வருடம் போலவே, கணிணி, இணையம், அலுவலக வேலைகள் என்று எல்லாவற்றுக்கும் ஒரு வாரம் மொத்தமாக லீவ்.

எனக்கென்னவோ கொடைக்கானலைப் போல் ஊட்டி வசீகரிக்கவில்லை. முதல் காரணம் ஊரே முற்றிலும் வணிகமயமாக்கப்பட்டிருப்பதுதான். எங்கெங்கு திரும்பினாலும் கடைகள், கடைகள், கடைகள். மக்கள் நடமாட்டமும் மிக அதிகம். சீசனே இல்லாத இந்த சமயத்திலே இப்படி என்றால் சீசன் சமயத்தில் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

வெள்ளையன் கண்டுபிடித்து ஆரம்பித்த ஒரு இயற்கையான மலைப்பிரதேசத்தை எந்த அளவுக்கு சீரழிக்க முடியுமோ அந்த அளவுக்கு நாம் சீரழித்து இருக்கிறோம். மிகச்சிறந்த உதாரணம் ஏரி. கூவத்தின் மறுபதிப்புதான் அந்த மலைவாசஸ்தலத்தின் ஏரி. மலைரயில் ஊட்டியைத் தொடும்போதே தெரியும் கழிவுநீர்க் கால்வாயும், நம் நாசியை நிறைக்கும் கெட்ட வாடையும் இந்த முறை எங்கள் தேர்வு தவறு என்று சத்தியம் செய்து சொன்னதாகவே தோன்றியது.

ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து சென்ற மலைரயில் பயணமும் அவ்வளவு இனிதாக இல்லை. கால் வைக்கவே இடம் இல்லாத அளவுக்கு சின்ன இடத்தில் ஐந்து மணிநேரப் பயணம் கொஞ்சம் கடுப்படித்தது. டார்ஜிலுங் மலை ரயில் குறித்து படித்தபோது இதை விட சிறிய ட்ராக்கில் ஓடினாலும் முதல் வகுப்பு என்று தனியாக ஒன்று உண்டு என்பது தெரிந்தது. அதுபோல் எதாவது மாற்றம் செய்தால் சிரமம் இல்லாமல் பயணம் செய்யலாம்.

அதையும் தாண்டி பயணத்தில் கண்ட‌ சில நல்ல விசயங்கள்:
1. சாப்பாடு பிரச்சினையே இல்லை. நாங்கள் சேரிங்கிராஸ் அருகே தங்கியிருந்த ப்ரீதி பேலஸ் ஹோட்டலின் வெஜிடேரியன் ரெஸ்டாரண்ட் அருமை. அதிலும் அங்கே சாப்பிட்ட ஆனியன் ஊத்தப்பம்.....ம்ம்ம்ம்ம்ம்ம். மறக்காமல் முயற்சிக்கவும். அது மட்டும் இல்லாமல் பல தரமான உணவகங்களைக் காணமுடிந்தது. ஒரு சுற்றுலா பிரதேசத்தில் உணவுப் பிரச்சினை இல்லாமல் இருப்பது ஒரு ப்ளஸ் பாய்ண்ட்.
2. ஊட்டியின் க்ளைமேட். அற்புதம், வேறென்ன சொல்ல‌??
3. கொடநாடு வ்யூபாய்ண்ட்: கொஞ்சம் தூரம்தான் என்றாலும் (ஊட்டியில் இருந்து 50 கி.மீ. கோத்தகிரியில் இருந்து சுமார் 20 கி.மீ). மிஸ் பண்ணக்கூடாத இடம். மற்ற வ்யூபாய்ண்ட்கள் போலில்லாமல் தூரத்தில் தெரியும் பரந்து விரிந்த சத்தியமங்கலம் காடுகளும், ஒரு கோடு போல் தெரியும் பவானி ஆறும், தூரத்தே தெரியும் பவானி சாகர் நீர்த்தேக்கமும் முற்றிலும் வித்தியாசமான அனுபவம். கொடநாடு எஸ்டேட்டின் விஸ்தீரணத்தையும் வழியில் பார்க்கமுடிவது ஒரு ப்ளஸ். :)
4. திரும்பும் நாளன்று எதேச்சையாக கோத்தகிரியில் ஏற்பட்ட பதிவர் லதானந்த் அவர்களுடனான சந்திப்பு ஒரு கூடுதல் ஆச்சர்யம்.

Monday, October 5, 2009

மரண மொக்கை ஃப்ரம் டான் பிரவுன்

டான் பிரவுன் (DAN BROWN)... பெயரைச் சொன்னவுடனே நம் நினைவுக்கு வரும் டாவின்சி கோட் மற்றும் ஏஞ்சல்ஸ் & டீமன்ஸ் நாவல்கள். அதைத்தவிர‌ அவர் இன்னும் இரண்டு நாவல்கள் (டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ் மற்றும் டிசப்ஷன் பாய்ண்ட்) எழுதியிருந்தாலும் அவரை உலகப்புகழ்ப் பெற வைத்தது டாவின்சி கோட் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி.

டாவின்சி கோட் வெளிவந்து ஏறத்தாழ ஆறு வருடங்கள் கழித்து வெளிவந்திருக்கும் அவரது அடுத்த நாவல் இன்னும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல. சுமார் ஐந்து வருடங்கள் டான் பிரவுன் ஆராய்ச்சி செய்து "தி சாலமன் கீ" என்ற பெயரில் எழுத ஆரம்பித்த இந்த நாவல் "தி லாஸ்ட் சிம்பல் (The Lost Symbol)" என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

டான் பிரவுனின் எழுத்துகளின் பலமே வரலாறின் மறைக்கப்பட்ட பக்கங்க‌ளை ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் மூலம் வெளிக்கொண்டு வருவதுதான். ஏஞ்சல்ஸ் & டீமன்ஸில் நாம் அதிகம் அறிந்திராத சர்ச் வெர்சஸ் சயின்ஸ் (Church Vs Science) பற்றியும், டாவின்சி கோடில் ஏசுநாதர் திருமாணமானவர் என்பது பற்றியும் எழுதியிருந்ததும் அந்த நாவல்கள் பெருமளவு பேசப்படக் காரணமாக அமைந்தன.

லாஸ்ட் சிம்பல் கதையிலும் ஹீரோ முதல் சொன்ன இரண்டு கதைகளில் வந்த ராபர்ட் லாங்டன் (Robert Longdon). ஹார்வேர்ட் பல்கலைகழகத்தில் ப்ரொஃபசராக இருக்கும் புகழ் பெற்ற சிம்பாலஜிஸ்ட். தன் பணக்கார நண்பரான பீட்டர் சாலமன் அழைப்பின் பேரில் வாஷிங்டனில் ஒரு உரை நிகழ்த்தச் செல்லும் லாங்டன் அங்கு சென்றபின் அந்த அழைப்பே ஒரு பொய் என்பதை அறிகிறார்.

ஃப்ரீமேசன்ஸ் (Freemasons) என்ற அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருக்கும் அவரது நண்பரை கடத்தியிருக்கும் வில்லன், ஃப்ரீமேசன்ஸ் நூற்றாண்டுகளாக பாதுகாத்து வரும் ரகசியத்தை கண்டுபிடிக்க லாங்டன் உதவி செய்தால் அவரை விடுவிப்பதாகச் சொல்கிறான். இதற்கிடையே அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் அதற்கு உதவ வேண்டும் என்றும் கூறிக்கொண்டு சி.ஐ.ஏ.வின் முக்கிய அதிகாரி ஒருவரும் லாங்டனை நெருக்க, அவர்களிடமிருந்து தப்பிக்க, சி.ஐ.ஏ.வின் துரத்தல்களுக்கு நடுவே பீட்டர் சாலமனின் தங்கையுடன் வாஷிங்டன் நகரில் தப்பி ஓடும் லாங்டன் ரகசியத்தைக் கண்டுபிடிக்கிறாரா, அவரது நண்பர் மீட்கப்பட்டாரா, வில்லன் என்ன ஆனான், அது என்ன ஃப்ரீமேசன்ஸ் ரகசியம் என்பதை சொல்லும் கதைதான் "லாஸ்ட் சிம்பல்".

கதைச்சுருக்கம் அருமையாகத் தெரிந்தாலும், கதை கொஞ்சமல்ல நிறையவே இழுவை. ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லருக்கான அத்தனை அம்சங்களும் இருக்கும் கதையில் (முக்கியமாக கதை முழுவதும் 12 மணிநேரத்திற்குள் நடக்கிறது) டான் பிரவுன் முடிந்தவரை சொதப்பியிருக்கிறார்.

ராபர்ட் லாங்டனின் மற்ற நாவல்களைப்போல அழுத்தமான காரணம் இந்த கதையில் இல்லை. ஏஞ்சல்ஸ் & டீமன் கதையில் புதிய போப்பைத் தேர்ந்தெடுக்க உலகின் அனைத்து கார்டினல்களும் வாடிகனில் கூடியிருக்க அந்த இடத்தில் அணுகுண்டிற்கு இணையான அழிவை ஏற்படுத்தும் குண்டு வைக்கப்பட்டிருக்கும். ஒருவேளை அது வெடித்தால் கிறித்துவ மதத்திற்கே அது ஒரு பேரிழப்பாக இருக்கும். அதை லாங்டன் முறியடிக்க ஒவ்வொரு சர்ச்சாக அவர் செல்லும்போது நமக்கும் அந்த பரபரப்பு இருக்கும்.

அதே போல் டாவின்சி கோட் நாவலிலும் ப்ரையாரி ஆஃப் சயின் குழுவால் பாதுகாக்கப்படும் "ஏசு திருமணமானவர்" என்பதற்கான ஆதாரங்கள் வெளிவந்தால் கிறித்துவ மத நம்பிக்கை அசைக்கப்படும். அந்த சூழ்நிலையில் நடக்கும் கதையும் நம்மை பரபரக்க வைக்கும்.

அதுபோன்ற எந்த அழுத்தமான காரணமும் இதில் இல்லை. சி.ஐ.ஏ. வருவதற்கு அவர்கள் கூறும் காரணமே கதை 80% போனபின்தான் சொல்லப்படுகிறது. அதுவரை "எதுக்குதான் அவனுங்க வந்திருக்காங்க? சொல்லித் தொலையுமைய்யா" என்று சலிப்புதான் தோன்றுகிறது. அதன்பின் அவர்கள் சொல்லும் காரணமும் சப்பையாக இருப்பது ஏமாற்றத்தின் உச்சகட்டம்.

அதைவிட பெரிய ஏமாற்றம், கதையின் முடிவு நடைபெறும் இடத்தை "விண்ணை முட்டும் பிரமிட்" என்று கதையின் ஆரம்பத்தில் லாங்டன் தேட ஆரம்பிக்கும்போதே நம்மால் யூகிக்க முடிவதுதான். ஓரளவு வாஷிங்டன் டிசி நகரத்தைப் பற்றி தெரிந்தாலே "பெரிய பிரமிட், விண்ணை முட்டும் கல்" என்ற விளக்கங்களுக்கு பொருந்தும் கட்டிடத்தை உங்களால் யூகிக்க முடிவதும், கதையின் முடிவில் அதே இடத்தில் ஃப்ரீமேசன்ஸ் ரகசியம் இருப்பதையும் படித்தால் "வாஷிங்டனைப் பாக்காத எனக்கே தெரியுது, எல்லாம் தெரிஞ்ச லாங்டனுக்கு இதைக் கண்டுபிடிக்க 500 பக்கமா?" என்ற சலிப்பே ஏற்படுகிறது.

எல்லாவற்றையும் விட, ஃப்ரீமேசன்ஸ் ரகசியமாக பாதுகாத்து வரும் அற்புதம் என்ற ஒன்று இருக்கவே இருக்காது என்ற அவநம்பிக்கையுடனேயே கடைசி அத்தியாயம் வரை லாங்டன் செல்ல்லும்போது அவருடன் செல்லும் நம்மை ஈர்க்காமல் இருப்பதில் ஆச்சர்யம் இல்லை.

படமாக வந்தாலும் இந்த கதை வெற்றிபெறப்போவது இல்லை. காரணம் கதையும் நடக்கும் இடமான வாஷிங்டன் டிசியும், வெற்றிப்படமான நேஷனல் டிரசர் முதல் பாகத்தின் ரீமேக் போல் இருக்கும்.மொத்தத்தில் என்னைப் பொறுத்தவரை ஆறு வருடங்கள் கழித்து டான் பிரவுன் பெரிய அளவில் ஏமாற்றியிருக்கிறார் என்றே சொல்வேன்.

இது டான் பிரவுனின் ஐந்தாவது புத்தகம். காலவரிசையில் மட்டுமல்ல, தரவரிசையிலும் கூட‌.

Monday, September 21, 2009

உன்னைப்போல் ஒருவன்!!!! என்னை ஏமாற்றிய கமல்....

"உங்களோட சீரியஸ் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடைவதாகத் தெரியவில்லையே. இது பற்றி?" கொஞ்சம் தைரியம் அதிகமான ஒரு ரிப்போர்ட்டர் கமலிடம் சில வருடங்களுக்கு முன் கேட்டிருந்தார்.

"ஒவ்வொரு சீரியஸ் படம் பண்ணினதும் அடுத்ததாக கமல் ஒரு காமெடி படம் பண்ணுவாரு, அதைப் பாத்துக்கலாம்னு மக்கள் நினைக்குறாங்களோ என்னவோ" என்ற அவரின் பதில் இன்னமும் எனக்கு நினைவில் இருக்கக் காரணம் அவர் சொன்ன வகை சினிமா ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதுதான்.

"ஹே ராம்" பார்க்கவில்லை. "காதலா காதலா" பலமுறை பார்த்தாலும் சலிக்கவில்லை. "மகாநதி" கிளிப்பிங் வந்தாலும் சேனல் சேஞ்ச். "அவ்வை சண்முகி" பத்து தடவையாவது பார்த்தாச்சு. இதே ட்ரீட்மெண்ட்தான் கமலின் ஒவ்வொரு சீரியஸ் படங்களும் நான் கொடுத்து வந்திருக்கிறேன்.

"உன்னைப்போல் ஒருவன்" படத்தின் விளம்பரத்தை முதல்முறை பார்த்தபோதே இது எனக்குப் பிடிக்கும் என்று தோன்றியது. காரணம் பெரிதாக ஏதுமில்லை என்ற போதும் கமலின் கெட்டப்பும், மோகன்லாலின் வசன உச்சரிப்புகளும் ஈர்த்தன.

அதேநேரம் கமல் தன்னுடன் நடிக்கும் பெரிய நடிகர்களை சரியாக உபயோகப்படுத்துவதில்லை (அ) அவர்களை விட தன் கதாபாத்திரத்தை சிறப்பாகக் காட்டுகிறார் என்பது என்கருத்து. உதாரணம் குருதிப்புனல், ஹே ராம், பஞ்சதந்திரம் போன்ற படங்கள். அதிலும் இது அவரது சொந்தத் தயாரிப்பு. அதனால் இந்த படத்திலும் மோகன்லாலை மட்டம் தட்டியிருப்பார், தன் மகளின் இசைக்கு பெரிய முக்கியத்துவம் கொடுத்திருப்பார் என்று எதிர்ப்பார்ப்புடனேயே படம் பார்க்கச் சென்ற என்னை நடு மண்டையில் "நச்"சென்று அடித்திருக்கிறார் கமல்.

படத்தில் ஹீரோ என்று யாரும் இல்லை. லீட் ரோலில் கமல் + மோகன்லால். மோகன்லாலுடன் தொடங்கும் படம் அவருடனே முடிகிறது. கமலுக்கு ஒரே கெட்டப். எந்த இடத்திலும் யாரும் ஓவர் ஆக்ட் செய்யவில்லை. தேவை இல்லாத வசனங்கள் இல்லை, படத்தின் கதைக்கு சம்பந்தமில்லாத ஒரு ஷாட் கூட இல்லை.‍ எல்லாமே "ஜஸ்ட் ரைட்".... எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு மட்டுமே, கூடவும் இல்லை, குறைவும் இல்லை.

தெளிவான கதை, அதை முழு வேகத்தில் நகர்த்தும் திரைக்கதை, தனித்துத் தெரியாமல் கதையின் ஓட்டத்திற்கு துணைபுரியும் இசை, அற்புதமான கேமிரா, அந்தந்த கேரக்டர்களில் அச்சாக பொருந்தும் நடிக நடிகைகள், வார்த்தைக்கு வார்த்தை பின்னி எடுக்கும் இயல்பான வசனங்கள், நிஜம் என்று நம்ப வைக்கும் செட்கள் என்று பட்டாசு கிளப்பி இருக்கிறார்கள்.

படம் பார்த்து இவ்வளவு நேரமாகியும் இது தமிழ்ப்படம், கமல் படம் என்பதை நம்ப முடியாமல் இருக்கிறேன். ஹேட்ஸ் ஆஃப் டு யூ கமல்..

******************

பின்குறிப்பு 1: இவ்வளவு அற்புதமான படத்தின் இரண்டு பெரிய சறுக்கல்கள். ஒன்று சென்னையில் நடக்கும் கதை, ஆனால் சென்னையில் எடுக்கப்படவில்லை, காரணத்தை கமல் மட்டுமே சொல்ல முடியும்.
சென்னையில் எடுத்திருந்தால் படம் இன்னமும் ஆதன்டிக்காக இருந்திருக்கும். படம் பார்க்கும் போது என் தங்கமணிக்கும் எனக்கும் நடந்த உரையாடல்:

தங்கமணி: ஏங்க, கமல் அஞ்சு பாமும் சென்னையிலதானே வெச்சதா சொல்றாரு...
நான்: ஆமா.. ஏன் கேக்குற?
தங்கமணி: அப்புறமா ஏன் போலீஸ் போய் ஹைதராபாத்ல இருக்குற ப்ரசாத்ஸ் மல்டிப்ளக்ஸ்ல பாமை தேடுறாங்க?
நான்: ஙே...

மற்றொரு விசயம், படத்தின் ட்விஸ்டே பாம் வைப்பவரை முதலில் தீவிரவாதியாக படம் பார்க்கவர்கள் நினைக்க அதை முடிவில் மாற்றுவதுதான். ஆனால் கமல் அந்த பாத்திரத்தை செய்வதால் "நிச்சயமா இதுக்கு எதுனா நியாயமான காரணம் இருக்கும்" என்று நாம் நம்புகிறோம், அதன்படியே நடக்கிறது. ஒருவேளை மோகன்லாலும் கமலும் கதாபாத்திரங்களை மாற்றிச் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ?

பின்குறிப்பு 2 : சாதரணமாக நான் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை ('கொய்யால, முதல்ல நீ பதிவே எழுதுறதில்ல, அப்படி எழுதுனாத்தானே என்னத்தை எழுதுறன்னு கவலைப்படுறதுக்கு' என்று கத்தும் கார்க்கி, ஆதி, கேபிள், பரிசல் வகையறாக்கள் அமைதி கொள்க). ஆனால் இந்தப் படம் பார்த்து இன்னமும் பிரமிப்பு நீங்காமல் யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் விளைவே இந்தப் பதிவு.

Monday, August 10, 2009

என்னவோ போங்க சார்!!!

ஏறத்தாழ ரெண்டு மாசமாகுது பதிவு போட்டு. ஜூலை மாசம் முழுசும் ஒரு பதிவு கூட போட முடியலை. முக்கியமான காரணம் ஆபிஸ்ல ப்ளாக்ஸை(Blogs) ப்ளாக்(block) பண்ணிட்டாங்க. ஹி..ஹி.. ரொம்ப ஓவராத்தான் ப்ளாக் படிச்சிருக்கேன் போல, கடுப்பாகிட்டாங்க. அதனால என்னோட ப்ளாக்கையே என்னால படிக்கமுடியல.

இருக்குற ஒரே வழி ரீடர்தான், அதிலயும் பதிவுகளை படிக்க மட்டும்தான் முடியும், பின்னூட்ட முடியாது. கஷ்டம்தான், வீட்டுல என்னோட பர்சனல் லேப்டாப்பும் என் பையன் கைவண்ணத்துல புட்டுகிச்சி, அதனாலதான் கொஞ்சம் லாங் கேப், அப்பப்போ பின்னூட்டம் மட்டும் போட்டுகிட்டு இருக்கேன். பாக்கலாம் மாசம் ஒரு பதிவாவது போட முடியுதான்னு. "போட்டுட்டாலும்...." அப்படின்றீங்களா?? என்னவோ போங்க சார்!!!

***************

பதிவர் முரளிகண்ணனை ரொம்ப நாளா காணோம், கண்டுபிடிச்சி குடுக்குறவங்களுக்கு என்ன பரிசு குடுக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன். :)

அதேபோல கொஞ்சம் அதிகமாவே மீள்பதிவுகள் போடுற நண்பர் கார்க்கிக்கு பப்ளிக்கா ஒரு குட்டு.

சமீபத்தில் நான் ரொம்ப ரசிச்ச பதிவு நையாண்டி நைனாவோட எதிர் கவுஜகள். தபூ சங்கர் பாணி நான்கு வரி காதல் கவிதைகளை கிண்டல் அடிச்சி இவர் போடுற பதிவுகள் முற்றிலும் புதிய வகை எதிர்க்கவுஜகள். படிச்சவுடனே வாய்விட்டு சிரிக்க வைக்குது. பாராட்டுகள் அவருக்கு.

அதேபோல் நண்பர் நர்சிம். திரட்டிகளில் இருந்து விலகுன பின்னால இவரோட படைப்புகள்ல ஒரு வேகம், வித்தியாசத்தைக் காட்டுற முனைப்பு எல்லாம் தெரியுது. நடந்த பிரச்சினைகளை ஏணிப்படியா உபயோகிச்சிகிட்ட அவரோட திறமைக்கு ஒரு சல்யூட். அதனால அவரை இனிமே திரட்டிகள் உள்ளாறயே விட வேணாம்னு சொல்றியாடான்னு கேக்குறீங்களா? என்னவோ போங்க சார்!!!

***************

நண்பர் ஓசை செல்லா புதுசா ப்ளாக்சாய் அப்படின்னு ஒரு தளம் ஆரம்பிச்சிருக்காரு. முதல் பார்வையில ஒரு வித்தியாசமான ப்ளாக் அக்ரிகேட்டர் மாதிரி தெரியுது. அவரது முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்.

அதுக்காக அவர் அனுப்பிய மெயிலில் தவறுதலாக எல்லா மெயில் ஐடிகளையும் டூ அட்ரஸிலேயே போட்டுவிட அதற்கு எல்லோரும் "ரிப்ளை டூ ஆல்" போட, அந்த அட்ரஸ்களை எடுத்து சிலர் அட்வர்டைஸ்மென்ட் அனுப்ப என்று ஒரே களேபரம். நான் போய் "ரிப்ளை டூ ஆல்" போடாதீங்க, அட்வர்டைஸ்மென்ட் அனுப்பாதீங்கன்னு சொன்னவுடனே "நீ என்ன பெரிய பில்கேட்ஸா?" என்ற ரீதியில் வந்த பதில்களில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை.

அந்த பதிலை அனுப்பிய புத்திசாலிகள் மன்னிக்கவும் அதிபுத்திசாலிகள் இருக்கும் இடத்தில் என்னை போன்ற கோயிந்துகளும் இருப்பார்கள் என்பது புரியாமல் "உன் டவுசரை அமுக்குவேன்" என்ற ரீதியிலான மின்னஞ்சல்கள் அனுப்பினால் நான் பயந்துவிட மாட்டேனா? அது கூடவா சார் உங்களுக்குத் தெரியாது? என்னவோ போங்க சார்!!!

****************

உரையாடல் போட்டியில் வென்ற அனைவருக்கும் வாழ்த்துகள். வெற்றி பெற்ற இருபது கதைகளையும் படிச்சிட்டேன், அதனால தைரியமா வாழ்த்துவேன். :)

எதிர்பார்த்தது போலவே முடிவில் சில ஆச்சர்யங்கள். கண்டிப்பாக பரிசு பெறும் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில கதைகள் பரிசு பெறாமல் போனது குறித்த விமர்சனங்கள் எழுகின்றன. நண்பர் ஜமால் அழகாக சொல்லியிருப்பதை இங்கே கோடிட்டுக் காட்டுகிறேன்.

//
நண்பர் பைத்தியக்காரன்-சுந்தரின் முடிவு அறிவிப்பில் குறிப்பிட்டதுபோல, இது ஒரு தேர்ந்தெடுப்பு. இது மதிப்பீடு அல்ல. இதில் குறைநிறைகள் இருக்கும். அது தேர்வாளர்களின் தனிப்பட்ட அனுபவம் மற்றும் பயிற்ச்சி சார்ந்தது.
//

இந்த முறை பரிசு பெற்ற கதைகளில் பொதுவான அம்சமாக எனக்குத் தென்படுவது "கட்டுடைப்பு". சரியா சுந்தர்ஜி & பைத்தியக்காரன்?

ஆமா உன் கதை என்னாச்சின்னு கேக்குறீங்களா? முதல்லயே நடுவர்கள் யாருன்னு தெரிஞ்சிருந்தாலாவது அவங்களை பாத்து "நானெல்லாம் இங்க சிறுகதை எழுத்தாளார்னு ஃபார்ம் ஆயிட்டேன்யா, என்னையும் ஜீப்புல ஏத்திக்குங்கய்யா"ன்னு கெஞ்சி கூத்தாடி ஜீப்ல ஏறியிருக்கலாம், கடைசி வரைக்கும் நடுவர்கள் யார்ன்றத சொல்லாமயே வெச்சிட்டாங்க நம்ம ஆளுங்க, என்னவோ போங்க சார்!!!

****************

ஆமா இது நீ வழக்கமா எழுதுற "துணுக்ஸ்"தானே, தலைப்பை மாத்தி வெச்சு ஏமாத்துறியாடான்னு கேக்குறீங்களா? என்னவோ போங்க சார்!!!

Monday, June 22, 2009

கனவின் நிறம்

"ரொம்ப சந்தோசம்மா"

"எனக்கு உன் சந்தோசம்தான்டா முக்கியம். ஊரு என்னவோ சொல்லிட்டுப் போகுது. அந்த பொண்ணுதான் உனக்கு நல்ல துணையா இருப்பான்னு நெனச்சா நான் ஏன் தடை சொல்லப்போறேன். எனக்கு என்ன.. இன்னும் ஒரு அஞ்சு வருசமோ பத்து வருசமோ, அதுக்கப்புறம் உன்னைப் பாத்துக்கப்போறது அவதானே"

"ச்சீ... கம்முனு இரு.. எதெதோ பேசிகிட்டு"

"டேய், எனக்கு ஒரு ஆசைடா, சொன்னா கோவிச்சுக்க மாட்டியே"

"சொல்லும்மா.."

"உன்னோட கல்யாணம் முடிச்சதும் நம்ம வீட்டை கொஞ்சம் மராமத்து பண்ணிடலாம்டா. ஓடெல்லாம் ரொம்ப பழசாயிடுச்சி, எல்லாத்தையும் எடுத்துட்டு புதுசா போட்டுடலாம்டா"

"அம்மா.. அம்மா.. மேஸ்திரி அண்ணன்ட்ட ஏற்கனவே பேசிட்டேன். ஓட்டை எடுத்துட்டு தார்சு போட்டுடலாம்மா. நீயி கவலையே படாத. அப்புறம், வர்ற வழியில சங்கர் மாமாவைப் பாத்தேன். ஐப்பசி மாசம் காசிக்குப் பதினஞ்சு நாள் டூர் போட்டிருக்காராம். நீயும் சொல்லிட்டே இருக்குறியே. இந்த முறை போயிட்டு வந்துடு. சரிம்மா, நான் போயி அவ அப்பாட்ட பேசிட்டு வந்துடறேன்‌"

"சாப்புடுறதுக்கு வீட்டுக்கு வந்துடுறா, உனக்குப் புடிச்ச கருவாட்டுக் கொழம்பு செஞ்சி வெக்கிறேன்"

************

"உண்மையச் சொல்லணும்னா நீங்க இவ்வளவு ஈஸியா சம்மதிப்பீங்கன்னு நாங்க ரெண்டு பேருமே நெனக்கலை மாமா"

"ஏன் மாப்பிள்ள, அந்தஸ்தை காரணம் காட்டி வேணாம்னு சொல்லிடுவேனோன்னு நெனச்சீங்களா?"

""

"இந்த சொத்தெல்லாம் நானே சொந்தமா சம்பாசித்ததில்ல, எங்க பாட்டன் முப்பாட்டன் காலத்து சொத்து இது. சொல்லப்போனா நானெல்லாம் இதுக்கு ஒரு வாட்ச்மேன் மாதிரிதான். அதை என்னிக்குமே நானோ என் குடும்பமோ மறக்குறதே இல்ல"

"ஆச்சர்யமா இருக்கு மாமா"

"அது புரிஞ்சதுனாலதான் சின்ன வயசுலயே உங்க அப்பா மாதிரி நல்ல மனுசங்க ஃப்ரெண்ட்ஸா கிடைச்சாங்க. உங்களப் பத்தியும் உங்க குடும்பத்தைப் பத்தியும் முழுசா தெரிஞ்சதுனால உங்களவிட என் பொண்ணுக்கு நல்ல பையன் கிடைக்கமாட்டான்னு நம்புனதுனாலதான் இந்த கல்யாணத்துக்கு உடனே ஓகே சொல்லிட்டேன்"

"ரொம்ப நன்றி மாமா"

"பையனும் அமெரிக்காவுல செட்டில் ஆகிட்டான். பொண்ணுக்கு வரப்போறவன் என்கிட்ட இருக்குற காசுக்காக வர்றவனா இருந்துட்டா அவ வாழ்க்கை நரகம் ஆகிடும் மாப்பிள்ள. என்னால அதைத் தாங்க முடியாது. அவளை நல்லா புரிஞ்சுகிட்ட உங்களாலதான் அவளை காலம் முழுக்க நல்லா வெச்சிருக்க முடியும்னு நம்புறேன் நானு"

"கண்டிப்பா மாமா.. கவலையே படாதீங்க.. உங்க பொண்ணு கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வராம நான் பாத்துக்குறேன். போதுமா?"

"அந்த நம்பிக்கை உங்கள விட எனக்கு அதிகம் மாப்பிள்ள.. அவ மேலதான் இருக்கா, போய் பேசிட்டு இருங்க. நான் கடை வரைக்கும் போயிட்டு வந்துடறேன்"

*******

"அப்புறம் உங்க அம்மாவும் எங்க அப்பாவும் குழந்தை பத்தி ஒண்ணுமே சொல்லைலியா? சொல்லியிருப்பாங்களே, கல்யாணம் ஆகி பத்து மாசத்துல ஒரு பேரன் வேணும்னு"

"ஒனக்கெல்லாம் நக்கலா இருக்கு, ஏன் கேட்டா என்ன தப்பு? கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்குது, இப்பவே ஆரம்பிச்சா கல்யாணம் முடிஞ்சு எட்டு மாசத்துலயே அவங்களுக்கு ஒரு பேரனோ பேத்தியோ குடுத்துடலாம்ல‌"

"ஏய் ச்சீ, கைய எடு... கல்யாணம் ஆகி ரெண்டு வருசம் கழிச்சிதான் குழந்தையெல்லாம். முதல்ல நாம நம்ம வாழ்க்கையை வாழலாம்டா, காஷ்மீர்ல ஹனிமூன், சொந்தகாரங்க வீட்டுக்கெல்லாம் ஒரு வீடு விடாம விருந்து, நல்ல பெளர்ணமி நிலா வெளிச்சத்துல உன் தோள்ல சாஞ்சிட்டே தாஜ்மஹால் தரிசனம், கோவா பீச் ஹாலிடேஸ், அந்தமான் செல்லுலார் ஜெயிலுக்குள்ள உன்னை வெச்சி ஒரு ஃபோட்டோ, லட்சத்தீவுல ஸ்கூபா டைவிங்.."

"ஹேய்.. ஹேய்... இரு இரு.. நீ இன்னமும் கோடீஸ்வரர் வீட்டுப் பொண்ணுல்ல, ஒரு சாதாரண சென்ட்ரல் கவர்மென்ட் வேலைக்காரனோட பொண்டாட்டி. அதுக்குத் தகுந்த மாதிரி ஆசைப்படும்மா"

"அதுக்கென்னா? எங்க அப்பாவோட பாதி சொத்து எனக்குத்தான. குடுக்க மாட்டேன்னு சொன்னா எங்க அண்ணன் மேல கேஸ் போட்டுடலாம் கவலைப்படாத"

"அடிப்பாவி... உன்னையும் உங்க அண்ணன் நம்புறானே, அவனைச் சொல்லணும்"

"ஹா..ஹா.. சும்மாச் சொன்னேன். எனக்குன்னு கேட்டா மொத்த சொத்தையும் கூட அண்ணனும் அண்ணியும் குடுத்துடுவாங்க. நான் இதுக்கு முன்னால எடுத்த எல்லா ஜென்மத்துலயும் புண்ணியம் பண்ணிகிட்டே இருந்திருக்கணும்டா.. இப்படி ஒரு அப்பா, அண்ணன், அண்ணி, எல்லாத்தையும் விட என்னா நல்லா புரிஞ்சுகிட்ட உன்கூடயே கல்யாணம்....."

"ஹேய்.. என்னாது இது? எதுக்கு அழுவுற? திடீர்னு உனக்குள்ள இருக்குற பட்டிக்காடு இப்படி வெளிய வந்துடுச்சி..."

"ச்சீய்.. போடா...."

"அம்மா... மாப்பிள்ள தம்பிக்கு ஃபோன்.. அவங்க அம்மா பேசுறாங்க‌"

*****

"உன் வெக்கேஷனைக் கட் பண்ணி அவசரமா கூப்டதுக்கு ஸாரிப்பா"

"பரவாயில்லைங்க சார்.. நானே வெக்கேஷனைக் கட் பண்ணுற ப்ளான்லதான் இருந்தேன். கல்யாணத்துக்கு நல்ல நாள் ரெண்டு மாசம் கழிச்சிதான் கிடைச்சிருக்கு. அதனால அப்ப வெக்கேஷன் எடுத்துக்கலாம்னு இருந்தேன். நீங்க கூப்பிடலைன்னாலும் மே இருவத்தஞ்சாம் தேதி நானே வந்திருப்பேன்"

"குட்..குட்.. நான் உன்னைக் கூப்பிட்டது ரொம்ப முக்கியமான விசயத்துக்காக. இந்த மாசம் முழுக்கவே நமக்கு ரொம்ப வேலை அதிகம். எல்லா வி.வி.ஐ.பி.ங்களும் தீவிரமான பிரச்சாரத்துல இருக்காங்க. சமாளிச்சடலாம்னுதான் நெனச்சி உனக்கு லீவு குடுத்தேன். பட் ரெண்டு ஹையர் ஆபிஸர்ஸ் ஆஸ்பிடல்ல படுத்துட்டாங்க. இன்னும் ஒரு வாரத்துக்கு லீவு. அதனாலதான் உன்னைக் கூப்பிட வேண்டியதா போச்சி"

"ஓ.. ஓகே."

"ரெண்டாவது, நீ டிபார்ட்மென்ட்ல சேந்ததுல இருந்து உன்னைக் கவனிச்சுட்டு வர்றேன். உன்னோட நேர்மை, வேலை மேல உனக்கு இருக்குற டெடிகேஷன், புது விசயங்களைக் கத்துக்குற ஆர்வம் எல்லாமே எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. எனக்கு அப்புறம் இந்த போஸ்டுக்கு வர்ற தகுதி இருக்குற ஆட்களா நான் நினைக்குற ஒரு சிலர்ல நீயும் ஒருத்தன். இந்த மாதிரி டஃப் சிச்சுவேஷன் எல்லாம் ஹேண்டில் பண்ணினாத்தான் உனக்கும் பின்னால உதவியா இருக்கும்"

"ரொம்ப நன்றி சார். இப்ப என்னோட அஸைன்மென்ட் என்ன?"

"வர்ற செவ்வாய்க்கிழமை மட்டும் ஒரு வி.வி.ஐ.பி.யோட பாதுகாப்பை நீ கவனிக்க வேண்டி இருக்கும். ப்ளான்படி அவரு செவ்வாய்க்கிழமை சாயங்காலம் ஏர்போர்ட்டுக்கு வர்றாரு. அங்க இருந்து நம்ம டீம் சார்ஜ் எடுத்துக்குது. ஏர்போர்ட்ல இருந்து அன்னிக்கு ராத்திரி அவர் கூட்டம் முடிக்கிற வரைக்கும் நீதான் இன்சார்ஜ்"

"கவலையேப்படாதீங்க சார். அவர் சென்னைல வந்து இறங்குனதுல இருந்து மறுபடியும் ஃப்ளைட் ஏறுற வரைக்கும் அவரைவிட்டு நகர மாட்டேன். சென்னைய பொறுத்தவரைக்கும் நாந்தான் அவரோட நிழல்னு வெச்சிக்குங்களேன்"

"ஹ..ஹ..ஹ..ஹ.."

"நைட் பொதுக்கூட்டம் எங்க சார்?"

"ஸ்ரீபெரும்புதூர்"

******

'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

Wednesday, June 17, 2009

இந்த வாரம் வலைச்சரத்தில்

நண்பர்களே,

சீனா அய்யாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வாரம் நான் வலைச்சர ஆசிரியராக இருக்கிறேன். என் வலைச்சரப் பதிவுகளை படிக்க கீழ்கண்ட இணைப்புகளை கிளிக்கவும்...

1. வலைச்சரத்தில் வெண்பூ : ஒரு சுய‌ அறிமுகம்
2. விகட(ன்)கதை சொல்லிகள்!!!
3. வெண்பூவிற்கு வயது ஒன்று
4. கோ-இன்சிடன்ஸ் பதிவர்கள்
5. என்னை அசத்திய கவிஞர்கள்
6. சினிமா வலைஞர்கள்

Monday, June 8, 2009

துரோகம்

வினய் நிலை கொள்ளாமல் தவித்தான். தரையில் இருந்து 350 கி.மீ உயரத்தில் சலிக்காமல் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் மிதக்கும் விண்வெளி ஆய்வு மையத்தின் (ஐ.எஸ்.எஸ்) தற்போதைய தலைமை விஞ்ஞானி அவ‌ன்.

முப்பத்தேழாவது முறையாக அந்த வீடியோவை பார்த்தான். இரண்டு மாதங்களுக்கு முன் எக்ஸ்பெடிஷன் 23ல் கொண்டு வரப்பட்டு ஐ.எஸ்.எஸ் உடன் இணைக்கப்பட்ட அந்த அதி நவீன கேமிரா அப்பழுக்கின்றி வினயின் வீட்டு வாசலைப் படம் பிடித்திருந்தது. வினய்க்கு சந்தேகமே இல்லை, அது தன் மனைவி ஸ்வேதா என்பதில், ஆனால் அவளுடன் இருக்கும் அந்த அவன்? கடந்த ஒரு வாரமாக சரியாக மாலை ஆறு மணிக்கு வினயின் வீட்டிற்கு வரும் அவன் எட்டு மணிக்குத்தான் வெளியேறுகிறான். அதுவும் ஒவ்வொரு நாளும் அவன் வெளியேறும்போது வாசலில் வைத்து இருவரும் உதட்டோடு உதடு பொருத்தி... சட்... வீடியோவை அணைத்தான் வினய்.

ஆறு வருட காதலிலும் மூன்று வருட திருமண வாழ்விலும் தேனாய் இனித்த அதே முத்தம், இப்போது எட்டிக்காயாய்க் கசக்கிறது. ஏன்? ஐ.எஸ்.எஸ்.ஸில் முப்பது மாத அசைன்மென்ட் வந்தபோது அவளைப் பிரியக்கூடாது என்பதற்காகவே அதை மறுத்தவன் வினய். ஆனால் இதை விடச் சிறந்த வாய்ப்பு வேறு எப்போதும் கிடைக்காது என்பதையும், பிரிந்திருந்தால் அன்பு அதிகம் ஆகுமே தவிர குறையாது என்றும் கூறி வினயைச் சம்மதிக்க வைத்தவள் அவளேதான்.

ஆனால் ஏன் இப்போது இப்படி? தனக்காக உயிரையும் தருவாள் என்று நம்பியது பொய்யா? நாசாவில் வேலை கிடைத்து கலிஃபோர்னியாவிற்கு இடம் பெயர்ந்த போது தன்னுடன் இருப்பதற்காகவே வேலையை விட்டு விட்டு வந்தது பொய்யா? ஒரு வருட பிரிவில் காதல் கசந்து விட்டதா? அல்லது காதலைக் காமம் வென்று விட்டதா? கேள்விகள்.. கேள்விகள்.. கேள்விகள்.. வினய் குழம்பினான். ஆனால் கண்முன்னால் சாட்சி வீடியோவாய் ஓடும்போது எப்படி நம்பாமல் இருக்க முடியும்!!!

சிறுவயதில் பெற்றோர் யாரென்றே தெரியாமல் அநாதை இல்லத்தில் வளர்ந்து, உடன் படிக்கும் மாணவர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி, அந்த வைராக்கியத்தில் வெறியாய்ப் படித்து கோல்டு மெடல் வாங்கி, அமெரிக்கா வந்து நல்ல வேலையில் சேர்ந்து, அடுத்து என்ன செய்வது என்று இலக்கில்லாமல் இருந்தவனுக்கு வந்து சேர்ந்த முதல் உறவு ஸ்வேதாதான்.

அவளைத்தவிர வேறு உலகம் இல்லை என்று நினைத்தவனுக்குக் கடந்த வாரம் அந்த இடி இறங்கியது. புதிய கேமிராவை சோதனை செய்துக் கொண்டிருந்தவன் தற்செயலாக அதைத் தன் வீட்டை நோக்கித் திருப்பினான். அப்போதுதான் அவனைப் பார்த்தான். அதன் பின் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்குக் கண்காணிக்க, ஒரு நாள் விடாமல் அவன் வருவதும், 8 மணிக்கு திரும்பிச் செல்வதும், வாழ்வின் மிகக் கொடுமையான காலகட்டமாக இந்த ஒரு வாரம் மாறியிருந்தது.

'இனி என்ன? எனக்கிருக்கும் ஒரே உறவும் என்னை ஏமாற்றுகிறாளா? இனி அவளுடன் எப்படி வாழ முடியும்? நான் திரும்பிச் சென்றதும் எப்படி அவளிடம் இதைக் கேட்க முடியும்? அவன் நான் இருக்கும்போது வரப்போவது இல்லை, அவளிடன் அதைப்பற்றிக் கேட்கும் தைரியமும் எனக்கு இல்லை. வாழ்நாள் முழுவதும் போலி வாழ்க்கை வாழப்போகிறேனா? ஒவ்வொரு முறை இனி அவளை முத்தமிடும்போதும் இந்தக் காட்சி வந்து மனதில் அறையாதா. இனிமேல் யாருக்காக‌ இந்த‌ வேலை, ப‌ண‌ம் எல்லாம்?'

'இல்லை, இனிமேல் நான் உயிர் வாழ்வ‌தில் அர்த்த‌மே இல்லை. இனி தின‌ம் தின‌ம் ஒவ்வொரு வினாடியும் செத்துச் செத்துப் பிழைப்ப‌தை விட‌ ஒரேடியாய் இற‌ப்ப‌தே மேல். என் உயிர‌ற்ற‌ உட‌ல் கூட‌ அந்த‌த் துரோகிக்குக் கிடைக்க‌க் கூடாது'

முடிவு செய்த‌வ‌னாய் ஐ.எஸ்.எஸ்.இன் பின் புற‌ டாக்கிங் (Docking) ஏரியாவிற்கு சென்றான்.
இப்போதைக்கு பூமியிலிருந்து எந்த விண்கலமும் வரவில்லை என்பதால் ஆள் அரவமற்று அமைதியாக இருந்தது. கழிவுகளை வெளியேற்றும் இடத்திற்கு அருகில் வந்து நின்றான். அடுத்த இரண்டு நிமிடங்களில் கழிவுகளை வெளித்தள்ள ப்ரோக்ராம் செட் செய்துவிட்டு கழிவுகளை வைக்கும் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டான். இன்னும் இரண்டு நிமிடத்தில் ஐ.எஸ்.எஸ்.இல் இருந்து தூக்கி எறியப்படுவான். விண்வெளி நடைக்கான உடை, ஆக்சிஜன் எதுவும் இல்லாமல் வெளியேறிய உடனே அவன் உயிர் அவனை விட்டு பிரியப் போகும் வினாடிக்காகக் கண்களில் நீருடன் காத்திருக்க ஆரம்பித்தான் வினய்.

அதே விநாடி, 350 கி.மீ. கீழே, ஸ்வேதா அவனுக்கான இமெயில் மெசேஜை டைப் செய்து கொண்டிருந்தாள்.

"என் அன்பு புருஷா.. ரெண்டு வாரமா கொஞ்சம் பிஸி, இந்த ரெண்டு வாரமா உனக்கு மெயில்கூட‌ பண்ணாம பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்குது. உங்க ஆளுங்ககிட்ட சொல்லி வாரம் ஒரு அஞ்சு நிமிசக் காலுக்கு பர்மிசன் வாங்கக் கூடாதா?"

"எனக்கு டென்வர்ல வேலை கிடைச்சிடுச்சி, போன வாரமே வந்து சேர்ந்துட்டேன். இன்னும் ஒன்றரை வருசத்துக்கு நீ திரும்பி வர்ற வரைக்கும் இங்கதான் இருக்கப் போறேன். அப்புறம் இன்னொரு விசயம், மனசைத் தேத்திக்கோ. உன் மச்சினிக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சி. இப்ப அவ கலிஃபோர்னியால நம்ம வீட்டுலதான் இருக்குறா. அவளோட உட்பியும் பக்கத்துலதான் வேலை செய்யுறாரு. தினமும் சாயங்காலம் ஆபிஸ் முடிஞ்சதும் வந்துடறாரு. ரெண்டு பேரும் ஒரே அட்டகாசம்தான்."

"அவங்களைப் பாத்தா அப்படியே எனக்கு நம்ம காதல் காலம்தான் நெனப்புக்கு வருது. உனக்கு ஞாபகம் இருக்கா, நாம முதல் முதல்ல டூர் போனப்ப...."

Monday, June 1, 2009

ஒரு விரலும் ஒன்பதாவது மனிதனும் (சிறுகதை)

முன்குறிப்பு: இந்த கதை முழுக்க முழுக்க கற்பனையே.

இனி கதை...

வணக்கமுங்க. நாந்தான் வெண்பூ. இந்த உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு ஒரு சிறுகதைப் போட்டி நடத்துறாங்களாம். அனுப்பலாம்னா புதுசா ஒண்ணும் தோண மாட்டேங்குது. மூணு வருசத்துக்கு முன்னால ஒரு கதை எழுதி வெச்சிருந்தேன். அதை எங்கியும் அனுப்பவே இல்லை. சரி அதை உபயோகப் படுத்திக்கலாம்னு பரண்மேல ஏறி எலி கூடவெல்லாம் சண்டை போட்டு எடுத்திருக்குறேன். கீழ இருக்குறதுதான் அந்த கதை. படிச்சுட்டு சொல்லுங்க, அனுப்பலாமான்னு..

******

கி.பி. 1885

சென்னை நகரின் நடுவே நவீனமாக தோற்றமளித்த அந்த இரண்டடுக்கு கட்டிடத்தின் முதல் மாடியில் அமர்ந்து வேக வைத்த கோழித்தொடையை கடித்துக் கொண்டிருந்த அவன் முன் வந்து அமர்ந்தான் பீட்டர்.

இரண்டு பேருமே அந்த சூழ்நிலைக்கு சிறிதும் பொருந்தாதவர்களாக தோற்றமளித்தனர். இருவரும் வெள்ளையர்கள் என்றாலும் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது.

"ஜேம்ஸ். என்ன சொல்லுது சிக்கன்? காரம் போடாம ஒழுங்கா சமைக்கிறானா?"

"ஏதோ.. ஆனாலும் நம்ம ஊர் ருசி வரல"

"ம்ம்ம்ம் சகிச்சிக்க வேண்டியதுதான்"

"அது இருக்கட்டும், க்ரோவர் க்ளீவ்லேன்ட் எதுனா செய்வாரா? இருபது வருசம் கழிச்சி டெமாக்ரட்ஸ் ஜெயிச்சி இருக்காங்க"

பீட்டர் பதில் சொல்ல வாயெடுக்கும் முன், அவசர அவசரமாக உள்ளே நுழைந்தான் அவன்.

"ஹே.. ரெண்டு பேருமே இருக்கீங்களா நல்லது. கடல் உயிரினங்கள் பத்தின ஆராய்ச்சில நம்ம ஆளுங்க ஒரு முக்கியமான விசயம் கண்டுபிடிச்சி இருக்காங்க. மெட்றாஸ்லயிருந்து 250 கி.மீ தெற்கில கரையிலிருந்து சுமார் 5 கி.மீ உள்ளாற நம்ம கப்பல் நங்கூரம் அடிச்சிருக்கு. இன்னிக்கு கடலோட தரை மட்டத்துல பவளப்பாறை மாதிரி ஏதோ ஒண்ணு கிடைக்க அதை எடுத்துட்டு வந்திருக்காங்க. அதை உடைச்சப்ப அதுக்குள்ள என்ன இருந்ததுன்னு தெரியுமா?"

"என்ன பில்? எதுனா மீன் கிடைச்சதா?"

"இல்லை. கிடைச்சது ஒரு மனித விரல்"

திடுக்கிட்டுப் போய் எழுந்து நின்றனர் இருவரும்.

"உட்கார்ங்க. அது எப்படி அங்க கிடைச்சதுன்றது இன்னும் புரியல. எடுத்துட்டு வரச் சொல்லி இருக்கேன். தேவைப்பட்டா உடனடியா அதை அமெரிக்காவுக்கு அனுப்பலாம். எனக்கென்னவோ இது இந்த உலகத்தையே மாத்தப்போற ஏதோ ஒண்ணுன்னு தோணுது. நீங்க ரெண்டு பேரும் உடனடியா இதுல இறங்குங்க." என்றார் பில் என்றழைக்கப்பட்ட வில்லியம்.

"கண்டிப்பா" என்றனர் இருவரும் ஒரு சேர.

****

இரண்டு மாதங்கள் கழித்து, லேசாக மழை தூறிக் கொண்டிருந்த மதிய வேளையில் அவர்கள் மீண்டும் கூடி இருந்தனர்.

"இப்ப என்ன முன்னேற்றம் ஜேம்ஸ்?"

"கிடைச்சிருக்குறது மனித விரல் அப்படின்றதுல எந்த சந்தேகமும் இல்லை. என்ன ஆகி இருக்கும்ன்னா ஏறத்தாழ 700 வருசத்துக்கு முன்னால அந்த மனுசன் கடல்ல மூழ்கி இறந்துட்டாரு. நாளாக நாளாக அவரோட உடல் சிதைய ஆரம்பிச்சிடுச்சி. அந்த சமயத்துல அவரோட விரல் தனியா கழண்டு விழுந்து இருக்கு. அதை சுத்தி பவளப்பாறைகள் வளர இந்த விரலை சுத்தி ஒரு வேக்வம் உருவாகி இருக்கு. அதனால இது அதிகமா சிதைவடையாம நமக்கு கிடைச்சிருக்கு. ஆனா.."

"என்ன பிரச்சினை?"

பீட்டர் தொடர்ந்தான்.. "இதை வெளியே எடுத்தப்புறம் சரியா பாதுகாக்கலை. அதனால இதிலிருந்து டி என் ஏ சரியா கிடைக்கலை. 1869ல டி என் ஏ வை தனியா முதல் முதலா பிரிச்ச ஃப்ரெடரிக் மேஷர் டீம்ல இருந்த நாங்க எல்லாம் தனியா வந்து இந்த ஆராய்ச்சிய ஆரம்பிச்சோம்ன்றது உங்களுக்கு தெரியும். ஆனா அதற்கப்புறம் இத்தனை வருசமா நாங்க என்ன பண்றோம்றது வெளி உலகத்துக்கு தெரியாது. இந்த நிலைமைல இந்த ஒரு டி என் ஏவை வைச்சி ஒரு முழு மனுசன உருவாக்க நாங்க முயற்சி செய்யப்போறோம். ஒரு நல்ல டி என் ஏ சாம்பிளை வெச்சி இந்த ஆராய்ச்சி பண்றதை விட இது போல முழுமை பெறாத டி என் ஏ வை வெச்சி ஆராய்ச்சி பண்ணினா இதுல இருக்குற எல்லா பிரச்சினைகளும் தெரிய வரும், ஆராய்ச்சியும் முழு வெற்றி அடையும். இது பத்தி ஒரு சின்ன தகவல் கூட வெளிய போகாம நீங்கதான் பாத்துக்கணும்"

"கண்டிப்பா பாத்துக்குறேன். இது ரொம்ப முக்கியமான ஆராய்ச்சி மட்டுமில்லை ரொம்ப பிரச்சினையானதும். அதனால முழு முடிவும் தெரியற வரை நாம இதைப் பத்தி வெளிய பேசவே வேணாம். உங்களுக்கு தேவையான பணம் வந்துகிட்டே இருக்கும். பிரசிடன்ட் கிட்ட நான் பேசிக்கிறேன். உடனே ஆரம்பிங்க"

*****

கொஞ்சம் வேகமாவே ஃபாஸ்ட் ஃபார்வேட்...

1972ன் இறுதியில்..

சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்த அந்த அமெரிக்க நிறுவனத்தின் நான்காவது மாடியில் அவர்கள் கூடி இருந்தனர்.

"இப்ப என்ன சாக்கு போக்கு சொல்லப்போறீங்க விக்டர்?"

"இங்க இருக்குற எல்லாருமே இந்த திட்டம் பத்தி தெரிஞ்சவங்களா இருந்தாலும் பெரும்பாலான ஆட்களுக்கு இதன் வரலாறு தெரியாது. அமெரிக்க அரசாங்கம் ஒவ்வொரு வருசமும் உயிரியல் ஆய்வுகளுக்காக பல பில்லியன் டாலர்களை செலவழிக்குது. நம்ம ஆராய்ச்சி அதில் ஒரு பகுதிதான். ஒரு டி என் ஏ ல இருந்து ஒரு முழு மனுசனையும் உருவாக்குறது மட்டுமே இல்லை இந்த ஆராய்ச்சி, அப்படி உருவாக்கப்பட்டா க்ளோனிங் மூலமா பல உயிர்க்கொல்லி வியாதிகளுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியும். இதயம், சிறுநீரகம் மாதிரி ஒரு உறுப்பை மட்டுமே ஆய்வகத்துல வளர்த்துக்க முடியும்.

இப்போ கணினித்துறையில நடந்து வர்ற வளர்ச்சிகளையும் இது கூட இணைச்சி இனிமே எதிர்காலத்துல வரப்போற எத்தனையோ வியாதிகளையும், குறைபாடுகளையும் களைய முடியும். இப்படி பலப்பல பயன்களும் அது மூலமா டிரில்லியன் கணக்கான பணமும் எதிர்பார்க்கப்படுற ஆராய்ச்சி இது.."

"எல்லாம் சரி.. ஆனா இன்னும் எத்தனை நாளைக்கு இதையே நாம சொல்லிட்டு இருக்கப்போறோம்? ரிசஸ்சன், டிப்ரஸன், கென்னடி கொலை, இப்ப வாட்டர் கேட் ஊழல்னு ஒவ்வொருமுறை எதாவது ஒரு பிரச்சினை வர்றப்பவும் நம்ம பிரச்சினையில மாட்டுறோம். ஏறத்தாழ 80 வருசமா இந்த ஆராய்ச்சி நடந்துட்டு இருக்கு. இப்ப மறுபடியும் பட்ஜெட் ஒதுக்குங்கன்னு கேட்டுப் போறதுக்கு நம்ம எதாவது முடிவுகளை காட்டணும் விக்டர்"

விக்டர் புன்னகைத்தான். "இந்த முறை கண்டிப்பாக முடிவை காட்டலாம் டீம்"

"என்ன சொல்றீங்க?"

"இதுவரைக்கும் நம்ம 8 தடவை தோத்திருக்கோம். முதல் முதல்ல ப்ரொஃபசர் பீட்டரும் ப்ரொஃபசர் ஜேம்ஸும் கிடைச்ச டி என் ஏ வை முழுமையடைய வெக்க என்ன பண்றதுன்னு யோசிச்சாங்க. கிடைச்ச டி என் ஏ ல மிஸ் ஆன சில ந்யூளியோடைட்ஸை அவங்க வேறு மனிதர்களோட டி என் ஏ ல இருந்து எடுத்து நிரப்புனாங்க‌. அந்த விரல் ஒரு பெண்ணோடதா இருக்கலாம்னு நெனச்சி அதற்கு தகுந்த மாதிரி டி என் ஏ வோட மாதிரிகளை உபயோகப் படுத்துனாங்க. நமக்கு அந்த பொண்ணு கிடைச்சாலும் அவங்களால முழுமையான பொண்ணா இருக்க முடியல. முக்கியமா மூளை வளர்ச்சி இல்லை.

அதுக்கப்புறம் நடந்த ஆய்வுகள்ல அது ஆணாத்தான் இருக்கணும் அப்படின்னு முடிவு தெரிஞ்சதுக்கப்புறம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பிரச்சினை. ஒரு தடவை உயரம் அதிகமா போயிடுச்சி, ஒரு தடவை நிறம் வெளுத்துப் போச்சி இப்படி எட்டு தடவையுமே எதாவ‌து ஒரு பிர‌ச்சினை. அது எல்லாத்தையும் இப்ப‌ உருவாக்கி இருக்கிற‌ இந்த‌ ஒன்பதாவ‌து கருவுல‌ ச‌ரி செஞ்சாச்சு. பிறந்து 2 மாசம் ஆன‌ அந்த குழந்தை நம்மோட எல்லா பரிசோதனைகளிலும் பாசிட்டிவ் ரிசல்ட்தான் குடுத்திருக்கு"

"இப்ப அந்த குழந்தை எங்க இருக்கு?"

"ஒவ்வொரு முறையுமே நாம அந்த கருவை உருவாக்கியதும் பரிசோதனைக்கூடத்திலயே வெச்சிக்கறதில்லை. அதை ஏதோ ஒரு பெண்ணோட கருப்பையில செலுத்திடுவோம். அது பரிசோதனைக் குழந்தை அப்படின்றதே அந்த பொண்ணுக்கு தெரியாது. மருத்துவர்களோட நமக்கு இருக்கும் நல்ல உறவு மற்றும் பணபல‌ம் மூலமா இதை சாதிக்க முடியுது. சொல்லப்போனா ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமான பின்புலத்துல பிறந்து வளர்ந்தது. ஒரு சில குழந்தைகள் வெளிநாடுகள்லயும் பிறந்தது. அது மட்டுமில்லாம இந்தியா மாதிரி வளரும் நாடுகள்ல இதையெல்லாம் பத்தி கவலைப்பட ஆள்கிறவர்களுக்கும் நேரம் இல்லை, பொது மக்களுக்கும் தெரியறதில்லை.

இந்த குழந்தையும் அதே மாதிரி இதே மெட்றாஸ்ல ஒரு குடும்பத்துலதான் பிறந்து வளந்துட்டு வருது. இதுவரைக்கும் பார்த்ததுல அதோட உடல்நிலை, மனநிலை எல்லாமே ரொம்ப ஆரோக்கியமா இருக்கு. சொல்லப்போனா கொஞ்சம் அதிகமாவே இருக்கு. உங்க முன்னால இருக்குற ஃபைல்ல இது பத்தின எல்லா தகவல்களும் இருக்கு"

பதினைந்து நிமிடங்களுக்கு ஃபைல் புரட்டல்கள், குசுகுசு பேச்சுகளுக்கு பிறகு,

"ரொம்ப நல்லது விக்டர். இந்த தகவல்கள் எல்லாமே நமக்கு அடுத்த பட்ஜெட் கிடைக்க உதவியா இருக்கும். ஒரு முக்கியமான விசயம்."

'என்ன?' என்பது போல் பார்த்தான் விக்டர்.

"மத்த எல்லாருமே இன்னும் உயிரோட இருந்தாலும் நாம அவங்கள கண்காணிக்கிறதில்லை. ஒரு அஞ்சு வருசம் மட்டும் ஃபாலோ பண்ணி டேட்டா கலெக்ட் பண்ணிட்டு அப்புறம் மறந்துடுறோம். இப்ப அவங்க எங்க இருக்காங்க, எப்படி இருக்காங்க எதுவுமே நமக்குத் தெரியாது. இந்த கேஸ்ல அந்த மாதிரி ஆகக் கூடாது. அந்த பையனை எப்பவும் நம்ம கண்காணிப்பிலயே வைங்க.. ஓரளவு வளர்ந்ததும் அவனை எப்படியாவது ஸ்காலர்ஷிப் ஆசை காட்டி அமெரிக்காவுக்கு இழுத்துடலாம். அதுக்கப்புறம் அவனை கண்காணிக்கிறது சுலபமாகிடும். இதுதான் அந்த விரலை வெச்சி நாம உருவாக்கிற கடைசி உயிரா இருக்கணும்."

"நல்லா புரிஞ்சது" என்றான் விக்டர்..

****

ஹலோ.. நாந்தாங்க வெண்பூ.. கதை இன்ட்ரெஸ்டா படிச்சிட்டு இருக்குறப்ப இவன் எதுக்குடா தொந்தரவு பண்றான்னு திட்டாதீங்க. ஸாரி.

அந்த கடலுக்குள்ள கிடைச்ச விரலோட சொந்தக்காரன் எப்படி கடலுக்குள்ள போனான், அப்புறம் அதனால என்ன நடக்குது அப்படின்றது மட்டுமில்லாம இப்ப உயிரோட இருக்குற ஒன்பது க்ளோன்களும் சந்திக்கிற மாதிரி ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைய எழுதி வெச்சிருந்தேன். அந்த பேப்பர்லாம் எங்க போனிச்சின்னு தெரியலயே.

ஆங்.. இப்ப ஞாபகம் வந்திருச்சி. இந்த கதைய எழுதி முடிச்ச அன்னிக்கு என்னை பாக்குறதுக்காக கமலஹாசனும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் வந்திருந்தாங்க. பாதிக் கதைய இங்க படிச்சவங்க மீதி கதையவும் படிச்சு பாத்துட்டு தரேன்னு வாங்கிட்டு போனாங்க. அதுக்கப்புறம் அவங்கள பாக்கவே முடியல. நானும் கல்யாணம், குழந்தை, வேலைன்னு செட்டில் ஆகிட்டேன்.

இப்ப அந்த மீதி பக்கங்கள் இல்லாம கதைய அனுப்ப முடியாதே!! அவங்கள பாத்தா நான் அந்த கதையோட பேப்பர்களைக் கேட்டேன்னு சொல்றீங்களா? ப்ளீஸ்.

Wednesday, March 25, 2009

துணுக்ஸ் - 2009/03/25

எப்படியோ 33 வருசத்துக்கு அப்புறமா நம்ம துளசி டீச்சர் ஊர்ல ஒரு டெஸ்ட் மேட்ச் ஜெயிச்சாச்சி. எதிர்பார்த்த முடிவுதான்னாலும் எனக்கு ஒரு சின்ன வருத்தம். மேட்ச் ஆரம்பிக்கறதுக்கு முன்னால இருந்தே எப்படியாவது இந்தியா முதல் இன்னிங்க்ஸ்ல 535 ரன்னுக்கு மேல அடிக்கணும்னு வேண்டிகிட்டு இருந்தேன், அது நடக்காம போயிடுச்சி. அது என்ன 535? கடைசியா சொல்றேன் :)))

இந்த தொடரையும் ஜெயிச்சா 40 வருசத்துக்கு அப்புறமா நம்ம ஜெயிக்குற தொடரா இருக்கும். செய்வாங்களா?

*****

விகடன்ல இந்த வாரம் ரெண்டு விசயம் ஆச்சர்யப்படுத்துனது. ஒண்ணு கிருஷ்ணா டாவின்சி எழுதுன "அச்சக்காடு" சிறுகதை. அற்புதமான களம், அருமையான நடை, மிஸ் பண்ணாதீங்க.

அடுத்தது "ஹாய் மதன்"ல ஒருத்தர் கேட்ட "காந்திஜி தாஜ் மஹாலை பாத்திருக்காரா?"ன்ற கேள்வி. ரொம்ப சாதாரணமா தெரிஞ்சாலும், இந்தியான்னு சொன்னவுடனே இந்தியர் அல்லாத ஒவ்வொருத்தருக்கும் ஞாபகம் வர்ற ரெண்டு விசயம் காந்திஜியும், தாஜ் மஹாலும்தான். மதனும் அதே பிரமிப்பை தன் பதில்ல காட்டியிருந்தாரு. ரொம்ப வித்தியாசமான கேள்வி இது.

ரெண்டு நல்ல விசயம் இருந்தா ஒரு உறுத்துற விசயமும் இருக்கணும்ல. அது என்ன இப்பவெல்லாம் விகடன் சினிமா மார்க் 43ஐ தாண்டுறதே இல்லை. சிவா மனசுல சக்திக்கு 42, நான் கடவுளுக்கு 43, காஞ்சிவரத்துக்கு 43.. ஒண்ணுமே புரியல, விகடன் மார்க் குடுக்குறத மறுபரிசீலனை பண்ணுறது நல்லதுன்னு நெனக்கிறேன்.

*****

இதோ மறுபடியும் நாடு தழுவிய தேர்தல் திருவிழா. தேதி அறிவிச்ச உடனே உண்ணாவிரதம்னு ஒருத்தர் ஆரம்பிக்கிறாங்க‌, இத்தனை நாளா பிரச்சினைக்காக உயிரையே தருவேன்னு சொன்ன எல்லாருமே அமைதியாகிட்டாங்க. என்ன அரசியலோ ஒண்ணுமே புரியல...

*****

இந்த தேர்தல் களேபரத்துக்கு நடுவுல கிரிக்கெட் வேற. அதுக்கு பாதுகாப்பு தர முடியலன்னு மத்திய அரசு உண்மையை சொன்னா, உடனே "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் வித்தியாசம் இல்லையா?"ன்னு பொசக்கெட்டத்தனமா ஒரு கேள்வி கேக்குறாங்க. விட்டா தேர்தலை தள்ளி வைக்க சொல்லுவாங்க போல. ஏன்யா, நாட்டோட அடுத்த பிரதமர் யார்னு முடிவு பண்ணுறத விட, அடுத்த அஞ்சு வருசத்துக்கு நமக்காக திட்டங்களைத் தீட்டப்போற அமைச்சர்கள் யாருன்னு தெரிஞ்சுக்குறத விட, நமக்காக நாடாளுமன்றத்துல பேசப்போற பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்குறத விட விளையாட்டு முக்கியமா போச்சா?

இத்தன நாளா விளையாட்டுலதான் அரசியல் பண்ணிகிட்டு இருந்தீங்க, இப்ப அரசியல்ல விளையாட்டா?

*****

இப்போ ஐ.பி.எல் போட்டிகள் தென்னாப்பிரிக்காவுல நடக்குதாம். எல்லா கிரிக்கெட் வீரர்கள், டீமை ஏலம் எடுத்த நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள், பி சி சி ஐ நிர்வாகிகள் எல்லாரும் இன்னும் ரெண்டு மாசத்துக்கு தென்னாப்பிரிக்காவுலதான் இருப்பாங்க.

எனக்கு ஒரே ஒரு கேள்வி சாமிகளா? இத்தனை வருசமா "இந்தியா" அப்படின்ற பேர்ல கிரிக்கெட் விளையாண்டு கோடி கோடியா சம்பாதிச்ச எந்த *****ம் ஓட்டு போடப் போறதில்லையா?

*******

அது என்னா 535?

161 + 121 + 99 + 154 = 535

வேற ஒண்ணுமில்லை, இதுக்கு முன்னால 2002 டிசம்பர் மாசம் நியூஸிலாந்துல நம்ம ஆளுங்க ரெண்டு டெஸ்ட் விளையாண்டு ரெண்டுலயும் தோத்தாங்க. அந்த ரெண்டு மேட்சுல நாலு இன்னிங்க்ஸ்லயும் இந்திய அணி அடிச்ச மொத்த ஸ்கோர்தான் இது.. :))))

Monday, February 16, 2009

நினைவுகளை மீட்டெடுத்த‌ விப‌த்து

விபத்துகள்... இன்றைய இயந்திர உலகின் தவிர்க்க முடியாமல் போன அம்சம். ஒருத்தர் செத்தால் சாவு, நூறு பேர் செத்தால் புள்ளிவிவரம் என்று சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்பது நம் எல்லோருக்குமே தெரியும். ஆனால் ஒரு சில விபத்துகள் நம்மை உலுக்கும், ஒரு சில நம் பழைய நினைவுகளை கிளறும். இந்த வாரம் 50 பேரை பலிகொண்ட அமெரிக்காவில் நடந்த விமான விபத்தும் என்னை கொஞ்சம் பாதித்தது உண்மை, காரணம்... விபத்து நடந்த இடம்.. நியூயார்க் மாநிலத்தின் பஃபலோ நகரம் (Buffalo). என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒன்றரை வருடங்களை கழித்த இடம்.

முதல் வெளிநாட்டுப் பயணம், கேரியர் கிராஃப் 90 டிகிரியில் ஏறிய காலகட்டம், எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் நான் நானாக இருந்த / இருக்கவிட்ட‌ சூழல், தங்கமணியுடன் பூசல்களே இல்லாமல் இருந்த நாட்கள் (அ) மாதங்கள், முதல் குழந்தையின் முதல் விநாடிகளும் முதல் ஸ்பரிசமும், முதல் கார், அளவில்லாத பயணங்கள் என்று என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவுகளை பஃபல்லோ எனக்கு அளித்தது என்றால் மிகையில்லை.

***

புவியியல் ரீதியாக பஃபல்லோ அமைந்திருக்கும் இடமும் அதன் முக்கியத்துவத்துக்கு ஒரு காரணம். உலகின் மிகப்பெரிய அருவி + உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றான நயாகாரா அருவியின் மிக அருகில் உள்ள பெரிய நகரம். நியூயார்க் மாகாணத்தின் மேற்கு எல்லையில் நியூயார்க் நகரில் இருந்து 8 மணி நேர தொலைவில் இருந்தாலும், நயாகராவிற்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் வந்து இறங்க வேண்டிய விமான நிலையம் பஃபல்லோ நயாகரா சர்வதேச விமான நிலையம்தான். எழுத்தாளர் சுஜாதா கூட தனது நயாகரா பயண அனுபவங்களில் இங்கே தங்கியிருப்பதை குறிப்பிட்டிருப்பார்.

நியூயார்க், நேவார்க், டெட்ராய்ட், வாஷிங்டன், சிகாகோ என்று எல்லா பெரிய நகரங்களில் இருந்தும் வரும் விமானங்கள் சுற்றுலா பயணிகளாலும், புகழ்பெற்ற பஃபல்லோ பல்கலைக்கழக மாணவர்களாலும் நிரம்பி வழியும். நயாகராவின் பிரமாண்டத்தை ரசிக்கவும், தன் மேல் படிப்புக்கான ஆர்வத்துடனும் பயணம் செய்த எத்தனை பேர் இந்த விபத்தில் இறந்திருப்பார்கள் என்று நினைக்கவே மனம் பதறுகிறது.

விபத்திற்கு காரணம் என்னவாக இருக்கும்?

இன்று உலகம் முழுதும் கிடைக்கும் ப‌ஃபல்லோ சிக்கன் விங்ஸ், நியூயார்க் மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரம், நயாகரா நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் இருக்கும் அமெரிக்க நகரம், பஃபல்லோ பல்கலைக்கழகம், அமெரிக்காவின் மிக அதிகமான எண்ணைக் கொண்ட நெடுஞ்சாலை (I 990) என்று பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் இந்த நகரின் இன்னொரு பிரபலமான‌ அடையாளம் குளிர்.

நான் முதல் முதலில் அங்கே சென்றபோது வெயில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்க, எங்கு நோக்கினும் சாலை பராமரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தது. என் கிளையண்டிடம் கேட்க, அவர் சிரித்துக் கொண்டே, "ஒரு வருசத்தோட நான்கு சீசன்ஸ் என்னன்னு தெரியுமா" என்று கேட்க, "ஏன் தெரியாமல், சம்மர், ஃபால், வின்ட்டர், ஸ்ப்ரிங்" என்றேன். "அது மத்த ஏரியாக்களுக்கு, இந்த ஏரியாவை பொறுத்தவரைக்கும், அல்மோஸ்ட் வின்ட்டர், வின்ட்டர், ஸ்டில் வின்ட்டர், கன்ஷ்ட்ரக்ஷன்" என்றார். பனி இல்லாத 5 மாதங்களை அடுத்து வரும் பனிக்காலத்திற்கு தயார் படுத்திக் கொள்ள உபயோகப்படுத்திக் கொள்ளும் அவர்களின் அறிவு இந்தியனான என்னை ஆச்சர்யப்படுத்தியதில் வியப்பில்லை.

அமெரிக்காவின் 5 பெரிய நன்னீர் ஏரிகளில் ஒன்றான எர்ரீ ஏரியின் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கும் இந்த நகரில் வருடத்தின் பெரும்பகுதி பனியால் மூடப்பட்டிருக்கும். சமயத்தில் மைனஸ் 20 டிகிரி ஃபார்ன்ஹீட் வரைகூட வெப்பநிலை செல்லும் என்றால் புரிந்து கொள்ள முடியும்.

இந்த விபத்திற்கும் காரணம் விமானத்தின் இறக்கைகளில் பனி உறைந்தது காரணமாக இருக்கலாம் என்று வரும் செய்திகளை படிக்கும்போது பனிப்பொழிவில் இரண்டு மூன்று அடி பனிகுவியலுக்குள் சிக்கிக் கிடக்கும் காரும், அதை சரி செய்ய ஐஸ் ஸ்கார்ப்பர், டீ ஐசிங் உப்பு, நான்‍ஃப்ரீஸ் வின்ஷீல்ட் வாட்டர் என்று ஒவ்வொரு கார் ஓனரும் தயாராய் இருக்க, விமானத்திற்கு எவ்வளவு முன்னேற்பாடுகள் தேவைப்பட்டிருக்கும், அதில் யார் செய்யத்தவறிய ஒன்றால் விபத்து ஏற்பட்டது என்பதெல்லாம் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

எப்படியோ, 50 பேரை பலி கொண்ட இந்த விபத்து என் பசுமையான நினைவுகளை மீட்டெடுத்தது என்று சொல்லலாம்..

ஐ மிஸ் யூ பஃபல்லோ..

Thursday, February 12, 2009

தங்கமான வண்டியும் தங்கமணியும்

"வண்டிய ஃபுல் சர்வீஸ் பண்ணிடுங்க"

"கீ குடுங்க சார்.. வண்டிய செக் பண்ணிடுறேன்"



"ஏங்க, செக் பேங்க்ல போட்டீங்களாங்க?"

"போட்டாச்சும்மா.. சொல்ல மறந்துட்டேன்"

"ஏங்க இந்த சனிக்கிழமை நீங்க ஃப்ரீயா? குசும்பன், தாமிரா, அப்துல்லால்லாம் வருவாங்கன்னு ரெண்டு மூணு வாரத்துக்கு முன்னாலயே சொன்னீங்களே. இந்த வாரம் எதும் வருவாங்களா?"

"இல்லைமா.. குசும்பன் ஊருக்கு போய்ட்டாரு.. மறுபடியும் வர்றப்ப வருவாரு. ஏன் கேக்குற‌?"

"இல்ல.. நீங்க ஷீ வாங்கணும்னு சொல்லிட்டு இருந்தீங்களே.. வாங்கிட்டு அப்படியே ராணி மெய்யம்மை ஹால்ல பட்டுப்புடவை சேல் போட்டிருக்காங்க, போய்ட்டு வரலாமா?"


"ப்ரேக் ஷீ மாத்தணும் சார்.. ப்ரேக் ரொம்ப கம்மியா இருக்கு. "

"ஆமாங்க.. சர்வீஸ் பண்ணி ஒரு வருஷம் ஆகப்போகுது. மாத்திடுங்க"

"ஃப்ரன்ட்லயும் மாத்திடவா சார்?"

"மாத்திடுங்க"


"பையனுக்கு டாய்ஸ்லாம் பழசாயிடுச்சி. தூக்கி போட்டுட்டு வேற மாத்தணும். அப்படியே நுங்கம்பாக்கத்துல டாய்ஸ் கடைக்கு போகலாங்க. "

"ஏம்மா, இருக்குறத வெச்சி வெளையாண்டுட்டுதான இருக்குறான்"

"அதுக்காக புதுசா எதுமே வாங்கக் கூடாதா? நான் என்ன‌ என‌க்கா கேக்குறேன்?"


"கேக்கவே வேணாம். இஞ்சின் ஆயில் மாத்திடுங்க. டாப் அப் பண்ணாதீங்க. கம்ப்ளீட்டாவே மாத்திடுங்க"

"சரிங்க சார். எழுதிக்கப்பா, ப்ரேக் ஷீ, ஃப்ரண்ட், பேக் ரெண்டும், இஞ்சின் ஆயில்.. டூல் கிட் இருக்குது.. பெட்ரோல் அரை லிட்டர் இருக்கு.. பேட்டரி எக்ஸைட்"

"சார் சீட் கவர் சேஞ்ச் பண்ணிடவா?"


"ஒரு சேஞ்சா இருக்கும். ஈவ்னிங் டின்னர் வெளிய பண்ணிக்கலாமா?"

"இந்த வாரம் ஏற்கனவே ரெண்டு தடவை வெளிய வாங்கி சாப்டாச்சுமா"

"வீக் எண்ட் ரெண்டு நாள்தான் வீட்ல இருக்கீங்க. அதுவும் டீவி பாக்குறது போக இருக்குறதே கொஞ்ச நேரம்தான். நாங்க வாரம் ஃபுல்லா வீட்லயேதான இருக்குறோம். வீக் எண்ட்லயாவது எங்கியாவது வெளிய கூட்டிட்டு போங்களேன். அந்த டீவி சவுண்டைதான் கொஞ்சம் குறையுங்களேன். காது கிழியுது.."


"டேங்க் கவர் கிழிஞ்சிருக்கு. மாத்திடுங்க... அப்புறம், ஹெட்லைட் வெளிச்சம் ரொம்ப கம்மியா இருக்கு. எதுனா பண்ண முடியுமா?"

"சார், இது பழைய மாடல் ஸ்பெலென்டர்ல இருக்குற பிரச்சினை. அசெம்ப்ளி ஃபுல்லா மாத்துனும். ஹாலஜென் லாம்ப் போட்டா நல்லா வெளிச்சம் வரும். 500 ரூவா ஆகும் சார். மாத்திடவா"


"மாத்தி மாத்தி எதுனா கேட்டுகிட்டே இருக்கேன்னு நெனக்காதீங்க. நான் ஒண்ணு கேப்பேன் கோச்சுக்க மாட்டீங்களே?"

""

"கல்யாணம் ஆனதுக்கு அப்புறமா நகையே எதுவும் வாங்கல. எதுனா விசேஷம்னா எங்க அம்மா போட்ட நகையேத்தான் போட்டுகிட்டு போறேன். அடுத்த மாசம் என் பர்த்டே வருதுல்ல.. நான் சின்னதா ஒரு செயின் வாங்கிகிட்டுமா?"


"மொத்தம் எவ்ளோ வரும்?"

"சர்வீஸ் சார்ஜ் எல்லாம் சேத்து 1500 ரூபா ஆகும் சார். ஆறு மாசத்துக்கு வண்டி வேற எந்த செலவும் வெக்காது. நான் கியாரண்டி"


"இப்ப எதுக்கு இவ்ளோ பெரிய செலவு?"

"நான் என்ன எப்பவுமேவா கேக்குறேன். இத்தனை வருஷம் கழிச்சி கேட்டாக்கூட வாங்கித் தரலன்னா எப்படி?"

"#$%#%#$%#$%&$%&"

"*(&*(&^%&^%%^%$$&$^$"

"^%(**()&()&()*"

Monday, February 9, 2009

உங்களுக்கு "எழுத்தாளர் சுஜாதா"வைப் பிடிக்காதா?

சுஜாதா... இவரை வெறுமனே எழுத்தாளர் என்று குறிப்பிட்டதற்காக என்னை திட்டி ஏற்கனவே பின்னூட்டம் போட்டிருப்பீர்கள் (அ) போடத் தயாராக இருப்பீர்கள். தமிழக அரசியல் வரலாறை பேசும் யாருமே திட்டியாவது கலைஞரைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது என்று உடன்பிறப்புகள் சொல்வது சுஜாதாவுக்கும் அப்படியே பொருந்தும். தமிழ் எழுத்துலகம் குறித்து யாராவது பேசினால் அது இவரைக் குறித்து பேசாமல் முற்றுபெறாது..

இப்ப அதுக்கு என்னடா நாயே? என்று கவுண்டமணி ஸ்டைலில் கேட்பவர்களுக்கு, "கொஞ்சம் பொறுங்க சாமி"

நான் சுஜாதாவின் கதைகளை எப்போது படிக்க ஆரம்பித்தேன் என்பது நினைவில்லை, என் சின்ன வயதிலேயே அவரது நாவல்களை படித்திருக்கிறேன் என்றெல்லாம் சொன்னால் அது "ஈழத்தமிழர்களுக்காக உயிரையும் கொடுப்பேன்" என்று சொல்லும் அரசியல்வாதிகளின் வார்த்தைகளுக்கு சற்றும் குறையாத கடைந்தெடுத்த அக்மார்க் பொய்.

கற்றதும் பெற்றதும் மூலமாகத்தான் அவரது எழுத்துக்கள் எனக்கு பரிச்சயம். அது மட்டுமல்லாமல் அவ்வப்போது வார இதழ்களில் வரும் அவரது சிறுகதைகளையும் படித்திருக்கிறேன். அவரது "ஏன்? எதற்கு? எப்படி?" தொடரின் புத்தகத்தை படித்தபின் பல்வேறு துறைகள் மீதான அவரது அறிவும், ஈடுபாடும் என்னை ஆச்சர்யப்படுத்தியது.

அவர் ஒரு சிறந்த அறிவியல் கதை எழுத்தாளர் என்பதை நான் படிக்கும் எழுத்தாளர்களும், சந்திக்கும் நண்பர்களும் அடிக்கடி சொன்னாலும் நான் அவரது அறிவியல் கதைகளை படித்ததே இல்லை என்பதே உண்மை. அதிலும் எனக்கு மிகவும் பிடித்த பிரிவான அறிவியல் புனைகதைகளில் அவர் மன்னர் என்பது தெரிந்திருந்தாலும் நான் அவரது புத்தகங்களை படிக்க எந்த முயற்சியும் எடுக்காதது எனக்கே இன்று வரை ஆச்சர்யம்தான்.

இந்தமுறை சென்னை புத்தக சந்தைக்கு செல்வது என்று முடிவு செய்தவுடனே நான் எடுத்துக்கொண்ட சபதம் இந்த முறை அவரது புத்தகங்களை வாங்கிவிட வேண்டும் என்பதுதான். அவரது புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்று வழிகாட்டி உதவிய லக்கிலுக்கிற்கு நன்றி.

முதலில் படித்து முடித்த "என் இனிய இயந்திரா" மற்றும் "மீண்டும் ஜீனோ" பற்றி மற்றொரு சமயம் பதிவிடுகிறேன். இந்த பதிவில் நான் சொல்ல வந்தது அவரது "கறுப்புக் குதிரை" சிறுகதைத் தொகுப்பைப் பற்றி..

விசா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டிருக்கும் இந்தத் தொகுப்பில் சுஜாதாவின் 12 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. 2000ம் ஆண்டு வாக்கில் ஆனந்த விகடனில் வெளிவந்த "புதிய தூண்டில் கதைகள்" என்ற தொடரின் புத்தக வடிவம் இது.

சிறுகதைத் தொடர்கள் நம் எல்லாருக்குமே பரிச்சயமானதுதான். ஒரே எழுத்தாளரால் வாரம் ஒரு சிறுகதை எழுதப்படுவதை நாம் அடிக்கடி படித்துக்கொண்டுதான் இருக்கிறோம். சொல்லப்போனால் சாருவின் குட்டிக்கதைகள், ஜ்யோவ்ராம் சுந்தரின் காமக்கதைகள், லக்கியின் ஜட்டிக்கதைகள் (தமிழ்மணம் கவனிக்க, இந்த ஒரு வார்த்தைக்காக ஸ்டார் போடவேண்டாம்), கார்க்கியின் புட்டிக்கதைகள் என்று நாம் எல்லோருமே விரும்பி படித்து வரும் (அ) வந்த தொடர்கள் கணக்கிலடங்கா..

சுஜாதாவின் இந்தத் தொடர் எப்படி இதிலிருந்து எல்லாம் வேறுபட்டது? நிஜமாகவே அந்த மனிதரை எல்லோரும் புகழும் அளவுக்கு அவரிடம் சரக்கிருக்கிறதா என்ற கேள்விகளுக்கு சரியான விடை இந்த புத்தகத்தை படிப்பதுதான்.

தொகுப்பில் இருக்கும் 12 கதைகளும், நம்புங்கள், 12 வித்தியாசமான தளங்களில் எழுதப்பட்டிருக்கின்றன. எந்த இரண்டு கதைகளிலும் ஒரு ஒற்றுமை அல்லது துளிகூட எழுத்தாளனின் சாயல் தெரியவே இல்லை. "கறுப்புக் குதிரை" கிரிக்கெட் சூதாட்டம் என்றால் அதற்கு அடுத்த கதையான "எல்லாமே இப்பொழுதே" முழுக்க முழுக்க மனித இனத்தின் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டது, அதற்கடுத்த "கி.பி.2887ல் சில விலாசங்கள்" கட்டுப்பாடுகள் நிறைந்த எதிர்காலத்தில் சட்டத்தை மீறி ஒரு பெண்ணைத் தேடிச்செல்லும் ஒருவனைப் பற்றி. ஒவ்வொரு கதையை படித்து முடிக்கும்போதும் ஒரு சிறுகதையை படித்து முடித்த திருப்தி உங்களுக்கு கிடைக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம்.

சுஜாதா மோஸ்ட் வெர்சடைல் (இதுக்கு தமிழ்ல என்னாபா?) எழுத்தாளர் என்பதற்கு சரியான உதாரணம் இந்தத் தொகுப்பு..

நீங்கள் சுஜாதா ரசிகர் என்றால் இந்தக் புத்தகத்தைப் படியுங்கள். அவர் மீதான உங்கள் அபிமானம் இன்னும் அதிகமாகும். ஒருவேளை நான் தலைப்பில் சொல்லியிருப்பதுபோல், நீங்கள் இணையத்தில் எழுதும் ஒரு சிலரை போல், "அவனெல்லாம் ஒரு எழுத்தாளர்னு கொண்டாடுறானுங்க‌" என்று நினைப்பவராக இருந்தால், நீங்களும் இந்த புத்தகத்தை கண்டிப்பாக படியுங்கள். உங்கள் நினைப்பு தவறு என்பது உங்களுக்கே தெரியும். மொத்தத்தில் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

புத்தகம்: கறுப்புக் குதிரை

வெளியீடு: விசா பப்ளிகேஷன்ஸ் (திருமகள் பதிப்பகம்)

பிரிவு: சிறுகதைத் தொகுப்பு

விலை: ரூ.50/ (நிஜமாத்தான்.. ஒரு கதையின் விலை ஒரு கப் டீயின் விலையை விட குறைவு)

இது மலிவு விலை பதிப்பல்ல. தரமான தாளிலேயே அச்சிட்டு குறைந்த விலைக்கு கொடுத்த பதிப்பகத்தாருக்கு நன்றிகள்.