Wednesday, July 21, 2010

ப்ராஜ‌க்ட் மேனேஜ‌ரை குத்து விட‌ நினைக்கும் ப‌த்து த‌ருண‌ங்க‌ள்

1. காலையில‌ இருந்து சும்மாவே இருக்கோம், இன்னிக்கு அஞ்சு ம‌ணிக்கு கிள‌ம்பிட‌லாம்னு நினைக்குற‌ப்ப‌ 4:58க்கு வ‌ந்து ஒரு நாள் முழுக்க‌ செய்யுற‌ வேலையை குடுப்பாங்க‌ளே, அப்ப‌

2. அப்ப‌டி க‌டைசி நேர‌த்துல‌ குடுக்குற‌ வேலைய‌ முடிக்க‌ நேர‌மாயிடுச்சின்னா "வீட்டுக்கு போக‌ க‌ம்பெனியோட‌ கார் புக் ப‌ண்ணிக்க‌லாமா?"ன்னு கேட்டா, ச‌ரின்னும் சொல்லாம‌ வேணாம்னும் சொல்லாம‌ ஒரு பார்வை பாப்பானுங்க‌ளே, அப்ப‌

3. வேலைய‌ முடிச்ச‌வுட‌னே அதை ச‌ரி பாக்காம‌ அதை அப்ப‌டியே க்ளைய‌ன்ட்டுக்கு அனுப்பிட்டு அவ‌ன் திட்டுறான்னு ந‌ம்ம‌ள‌ காச்சுவாங்க‌ளே, அப்ப‌

4. ந‌ல்ல‌தா எவ்வ‌ள‌வு வேலை செஞ்சாலும் க‌ண்டுக்க‌வே செய்யாம‌, எதாவ‌து சின்ன‌ த‌ப்பு செஞ்சாலும் மொத்த‌ டீமும் இருக்குற‌ப்ப‌ ப‌ப்ளிக்கா திட்டுவாங்க‌ளே, அப்ப‌

5. ஜீன்ஸ் பேன்ட்டும், தோல் செருப்பும் போட்டுட்டு வ‌ந்துட்டு, ந‌ம்ம‌கிட்ட‌ "வொய் யூ ஆர் நாட் ஃபாலோயிங் ட்ரெஸ் கோட்"ன்னு கேப்பானுங்க‌ளே, அப்ப‌

6. ரொம்ப‌ நாள் க‌ழிச்சி ந‌ம்ம‌ க்ளோஸ் ஃப்ர‌ண்ட் ஃபோன் ப‌ண்ணி பேசிட்டு இருக்குற‌ப்ப‌, "ஹேய், இங்க‌ வா, நீ க‌ம்ப்ளீட் ப‌ண்ணுன‌ வேலையில‌ ஒரு ட‌வுட்" அப்ப‌டின்னு க‌த்துவானுங்க‌ளே,அப்ப‌

7. டெய்லி 11 ம‌ணிக்குதானு வ‌ருவாங்க‌ன்னு நினைச்சி ஒரே ஒரு நாள் கொஞ்ச‌ம் லேட்டா 10 ம‌ணிக்கு ஆபிஸ் போனா அன்னிக்கு ம‌ட்டும் 9 ம‌ணிக்கே வ‌ந்துட்டு "வொய் ஆர் யூ க‌ம்மிங் லேட் எவ்ரி டே?"ன்னு கேப்பானுங்க‌ளே, அப்ப‌

8. ல‌ஞ்ச் முடிச்ச‌ப்புற‌ம் மொத்த‌ டீமையும் கான்ஃப்ர‌ன்ஸ் ரூமுக்கு கூப்புட்டு "க‌ம்பெனியோட‌ எதிர்கால‌த் திட்ட‌ம்"னு புரியாத‌ பாஷையில‌ ஒண்ணே முக்கா ம‌ணி நேர‌ம் ப்ளேடு போடுவாங்க‌ளே, அப்ப‌

9. ரெண்டு வ‌ருச‌ம் பிர‌ச்சினை இல்லாம‌ வேல‌ செஞ்சிட்டு, க‌ரெக்டா நாம‌ லோன் எடுத்து காரோ, வீடோ வாங்கின‌ அடுத்த‌ நாளே கூப்பிட்டு, "கிளைய‌ன்ட் ப்ராஜ‌க்ட் டீம் சைசை குறைக்க‌ச் சொல்லிட்டான். உங்கள‌ இந்த‌ மாச‌த்தோட‌ ப்ராஜ‌க்ட்ல‌ இருந்து ரிலீஸ் ப‌ண்ணுறேன்"ன்னு சொல்லி வ‌ய‌த்துல‌ புளிய‌ க‌ரைப்பாங்க‌ளே, அப்ப‌

10. ஆறு மாச‌ம் இர‌வு ப‌க‌லா உழைச்சிட்டு, அப்ரைச‌ல் டிஸ்க‌ஷ‌னுக்கு போனா நாம ப‌ண்ணுன‌ எல்லா த‌ப்பையும் (ம‌ட்டும்) பேசிட்டு "நீ இன்னும் இம்ப்ரூவ் ப‌ண்ண‌ணும், உன‌க்கு ரேட்டிங் 3க்கு மேல‌ குடுக்க‌ முடியாது, உன‌க்கு என்ன‌ உத‌வி வேணும்னாலும் கேளு"ன்னு சிரிச்சிட்டே சொல்லுவானுங்க‌ பாரு, அப்ப‌ வ‌ர்ற‌ கோவ‌த்துக்கு...

Monday, July 12, 2010

கார்க்கி வ‌ழ‌ங்கும் "ஃபோனை போட்டு, கேளு பாட்டு"

த‌மிழ் ப‌திவுல‌கின் ச‌மீப‌த்திய‌ வ‌ள‌ர்ச்சியைத் த‌ன் விள‌ம்ப‌ர‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ள‌ நினைக்கும் டுபாக்கூர் எஃப் எம், ப‌திவ‌ர் ஒருவ‌ரை வைத்து நிக‌ழ்ச்சி ஏற்பாடு செய்கிறது. நிக‌ழ்ச்சிக்கு "யூத்தான‌ ப‌திவ‌ர் தேவை" என்ற‌ விள‌ம்ப‌ர‌ம் பார்த்து சென்ற‌வ‌ர்க‌ளில் கார்க்கி தேர்வு செய்ய‌ப்ப‌டுகிறார். முத‌ல் நாள் மாலையில் இருந்தே காத்திருந்து தேர்வு ஆகாத‌த‌தால் கோப‌த்துட‌ன் அங்கிருந்து செல்கின்ற‌ன‌ர் யூத் கேபிளும், நைஜீரியா ராக‌வ‌னும்.

இதோ நிக‌ழ்ச்சி ஆர‌ம்ப‌ம்:

கார்க்கி: இது உங்க...ள் டுபாக்கூஊஊஊஊஊஊஊர் எஃப் எம்மின் "ஃபோனைப் போட்டு, கேளு பாட்டு" நிக‌ழ்ச்ச்ச்ச்ச்ச்ச்சி.. உட‌னே உங்க‌ ஃபோனை எடுத்து சிங்கிள் சீரோ ட‌புள் சீரோ ட்ரிபுள் சீரோ அடிங்க‌, எங்கிட்ட‌ பேசுங்க‌, உங்க‌ளுக்கு புடிச்ச பாட்டை கேளுங்க‌

ட்ரிங்.. ட்ரிங்

ஹ‌லோ.. இது டுபாக்கூர் எஃப் எம், நீங்க‌ யாரு?

நானு விருக‌ம்பாக்க‌த்துல‌ இருந்து குர்சிம் பேசுறேங்க‌..

சொல்லுங்க‌ குர்சிம், நீங்க‌ என்ன‌ ப‌ண்ணுறீங்க‌?

என்ன‌த்த‌ ப‌ண்ணுற‌து, ஒண்ணும் ப‌ண்ணாம‌ சும்மாத்தான் இருக்கேன்.

ஏங்க‌ இவ்ளோ ச‌லிச்சிக்கிறீங்க‌? ந‌ல்ல‌ விச‌ய‌மே எதுவும் இல்லையா என்ன‌?

குடும்ப‌த்தோட‌ செல‌வு ப‌ண்ண‌ நிறைய‌ டைம் கிடைக்குது, நானும் ச‌ந்தோச‌மா இருக்கேன், என் ஃபேமிலியும் ச‌ந்தோச‌மாத்தான் இருக்கு

ந‌ல்ல‌ விச‌ய‌ம்.. ச‌ரி சொல்லுங்க‌, உங்களுக்கு என்ன‌ பாட்டு வேணும்?

"நான் செத்துப் பொழ‌ச்ச‌வ‌ன்டா, எம‌னைப் பாத்து சிரிச்ச‌வ‌ன்டா"

என்ன‌து நீங்க‌ சிரிக்கிறீங்க‌ளா? எத்த‌னை பேர் வ‌யிறெரிய‌ப் போறாங்களோ!! அதெல்லாம் ப‌ழைய‌ பாட்டு, இப்ப‌ போட‌ முடியாது.. அடுத்த‌ கால‌ரை பாப்போம்.

ட்ரிங்.. ட்ரிங்..

ஹ‌லோ, யார் பேசுறீங்க‌?

நானு கோய‌முத்தூர்ல‌ இருந்து தென்க‌ரை சூல‌ன் பேசுறேங்க‌..

சொல்லுங்க‌ சூல‌ன், ஆயிர‌த்தில் ஒருவ‌னைத் த‌விர‌ வேற‌ எந்த‌ ப‌ட‌த்துல‌ இருந்து வேணும்னா பாட்டு கேளுங்க‌, போடுறோம்.

என‌க்கு சிம்லா ஸ்பெஷ‌ல்ல‌ இருந்து

ஆப்பிள் வேணுமா?

யோவ் முழுசா கேளுய்யா, "உன‌க்கென்ன‌ மேலே நின்றாய், ஓ ந‌ந்த‌லாலா" பாட்டு போடுங்க‌..

உங்க‌ளுக்கு ஏன் அந்த‌ பாட்டு புடிக்கும் சூல‌ன்?

அதுல‌ ரெண்டு வ‌ரி வ‌ரும் பாருங்க‌..

யார் யாரோ ந‌ண்ப‌ன் என்று, ஏமாந்த‌ நெஞ்ச‌ம் உண்டு
பால் போல‌ க‌ள்ளும் உண்டு, நிற‌த்தாலே ரெண்டும் ஒன்று


அப்ப‌டின்னு, அதுக்காக‌த்தான்

இருங்க‌.. தேடிப்பாக்குறேன், அட‌ அந்த‌ பாட்டும் இல்லைங்க‌.. இருங்க‌ அடுத்த‌ கால‌ரை பாப்போம்.

ஹ‌லோ இது டுபாக்கூர் டிவிங்க‌ளா?

இல்லைங்க‌, எஃப் எம்...

அப்ப‌டிங்க‌ளா, மாத்தி கூப்பிட்டுட்டேன் போல‌, கொஞ்ச‌ம் குழ‌ப்ப‌மாத்தான் இருக்கு.

நீங்க‌ எங்க‌ இருந்து பேசுறீங்க‌?

நான் கீழ்பாக்க‌த்துல‌ ஆஸ்பிட்ட‌ல்ல‌ இருந்து பேசுறேன்.

(கார்க்கி ம‌ன‌துக்குள்): அட‌ப்பாவிங்க‌ளா, இதை எல்லாம் க‌ண்பார்வையில‌யே வெச்சுக்க‌மாட்டாங்களா, குறைஞ்ச‌து ஃபோனையாவ‌து கைக்கு எட்டாம‌ வெக்க‌ மாட்டாங்க‌ளா? (ச‌த்த‌மாக‌) நீங்க‌ ஃபோனை ப‌க்க‌த்துல‌ யாராவ‌து அட்டென்ட்ட‌ர் இல்ல‌ டாக்ட‌ர் இருந்தா குடுங்க‌..

நாம‌ அடுத்த‌ கால‌ரை பாக்க‌லாம்.

ஒரு நிமிச‌ம் இருங்க‌, என‌க்கு ஒரு கால் வ‌ருது..

செல்ஃபோனில் "ஹா.. சொல்லு செல்ல‌ம்.. சாய‌ங்கால‌ம் மீட் ப‌ண்ண‌லாம்.. ஓகே. ஓகே.. ம்ம்ம்"

பேசி முடித்து மீண்டும் நிக‌ழ்ச்சியில்,

சொல்லுங்க‌.. நீங்க‌ யார் பேசுறீங்க‌?

நான் குப்துல்லா பேசுறேன்

சந்தோஷங்க! என்ன பாட்டு வேணும் உங்களுக்கு?

பாட்டெல்லாம் வேணாங்க. அதை நானே பாடி அடுத்தவங்களை கொன்னுக்குறேன்.ஒரே ஒரு வசனம் மட்டும் போடுங்க.

என்ன வசவுங்க‌.. ச்சீ.. வ‌ச‌னங்க??

இறைவா! என்னை நண்பர்களிடம் இருந்து காப்பாற்று.எதிரிகளை நான் பாத்துக்குறேன்

ம்க்ம்.. இதுக்கு ஒண்ணும் குறைச்ச‌ல் இல்ல‌..

எல்லாம் ஆம்ப‌ளைங்க‌ளா கூப்பிடுறாங்க‌ப்பா.. இதோ ஒரு பெண்ணோட‌ குர‌ல்

சொல்லுங்க‌ மேட‌ம், உங்க‌ பேர் என்ன‌?

நான் ம‌துரையில‌ இருந்து பேசுறேங்க‌, பேரு ம‌ஞ்சுளாங்க‌..

ந‌ல்ல‌ ம‌ங்க‌ள‌க‌ர‌மான‌ பேருங்க‌.. சொல்லுங்க‌ என்ன‌ பாட்டு வேணும்?

என‌க்கு "புதுமைப்பெண்" ப‌ட‌த்துல‌ இருந்து "ஒரு தென்ற‌ல் புய‌லாகி வ‌ருதே" பாட்டு போடுங்க‌

(சிறிது நேர‌த் தேட‌லுக்குப் பின்) அட‌டா அந்த‌ பாட்டு இல்லைங்க‌, ந‌ன்றிங்க‌.. அடுத்த‌ நேய‌ரைப் பாக்குறேன்.

(க‌ர‌டு முர‌டான‌ ஒரு குர‌ல்) டேய் ஒரு பெண் நேய‌ர் கேக்குற‌ப் பாட்டைப் போடாத‌ பார்ப்ப‌ன‌ப் பொறுக்கி த‌டியா?

ஹ‌லோ என்ன‌ங்க‌, இப்ப‌டி பேசுறீங்க‌, நீங்க‌ யாரு?

நான் தென‌வு பேசுறேன்..

என்ன‌து தென‌வா? யேய்... நீதான‌ கொஞ்ச‌ நேர‌த்துக்கு முன்னால‌ கீழ்பாக்க‌த்துல‌ இருந்து பேசுன‌, இப்ப‌ எதுக்கு வேற‌ வாய்ஸில‌ பேசுற‌..

அதெல்லாம் தெரியாது நீ ஒரு பொறுக்கி, உன் வீட்டுக்கு நாங்க‌ வ‌ந்து ர‌க‌ளை ப‌ண்ணுவோம்.

திடீரென‌ அடுத்த‌ குர‌ல்... ச்சீ த்தூ.. ஆணாத்திக்க‌ சமூக‌த்தின் நீட்சிதான் இந்த‌ நிக‌ழ்ச்சியே, ஒரு பெண் கேட்கும் பாட‌லைக் கூட‌ ஒலிப‌ர‌ப்பாத‌ நீங்க‌ள் எல்லாம் நாய்க‌ளை விட‌ கீழான‌வ‌ர்க‌ள்.. த்தூ.. த்தூ.. த்தூ.. த்தூ..

ஏங்க‌, எதுக்கு இப்ப‌ நாய்னெல்லாம் சொல்றீங்க‌, இந்த‌ ப்ரோக்ராம் ரெக்கார்ட் ஆகிட்டு இருக்கு, போலீஸ்க்கு போவோம் தெரியும்ல‌?

க்ழ்லாஜ்ட‌ஜ்ட்ஃப‌ அஜ்க்ல்த்ஃபாட் அட்ஃப்க்ஹ‌டிஹ்

ஹ‌லோ, ரீசீவ‌ரை தொட‌ச்சிட்டு பேசுங்க‌, நீங்க‌ துப்புன‌ எச்சி ரிசீவ‌ர்ல‌ ரொம்பி என‌க்கு ஒண்ணுமே ச‌ரியா கேக்குல‌,

நாய் என்று நான் என்னையே சொல்லிகிட்டேன்

இன்னிக்குதான்யா நீ க‌ரெக்டா பேசியிருக்க..

(குர‌ல் மாறுகிற‌து) விடுங்க‌ அங்கிள், நீங்க‌ என்ன‌ சொன்னாலும் சில‌ ப‌ன்னிங்க‌ளுக்கு புரியாது

இதுக்கு அந்த‌ ஆளே ப‌ர‌வாயில்ல‌, நாய்ன்னு ம‌ட்டும் சொன்னாரு, நீ என்ன‌மோ ப‌ன்னின்ற‌, இன்னிக்கு என்ன‌ எல்லாரும் க‌ண்ணாடி முன்னால‌ நின்னு பேசிட்டு இருக்கீங்க‌ளா?

இன்னிக்கு என‌க்கு டைம் ச‌ரியில்ல‌.. அடுத்த‌ கால‌ரை பாப்போம்..

ஹலோ.. பேர சொல்லுங்க சார்..

டேய்.. நாதாரி..&*&^%$.

சார்.டீசண்ட்டா பேசுங்க.

எங்க வீட்டுக்கு நீ கால் போட்டா டீசண்ட்டா பேசனுமா?

சாரி. நீங்கதான் கால் பண்ணியிருக்கிங்க‌.

நீ முதல்ல‌ பண்ணத பார்த்துட்டுதான் நான் பேசறேன்டா பேமானி

பேர் சொல்லுங்க சார்

நான் நெருப்பு நீல‌மேக‌ம் பேசறேன்டா.

யாரு? வ‌டிவேலு தீப்பொறி திருமுக‌மா வ‌ர்ற‌ ப‌ட‌த்துல‌ சிங்க‌முத்து வ‌ருவாரே, அந்த‌ கேர‌க்ட‌ரா சார்?

உங்க ஸ்டூடியோவுக்கே வர்றேன்டா..

என்ன பாட்டு சார் வேணும்?

பாட்டா? உனக்கு வேட்டு வைக்க போறேன்டா.

(கார்க்கி ச‌லிப்புட‌ன் ம‌ன‌திற்குள்) இன்னிக்கு எவ‌ன் முக‌த்துல‌ விழிச்சேன்னு தெரிய‌லையே.. அட‌ ச‌ட்.. அந்த‌ புது க‌ண்ணாடிய‌ பெட்டுக்கு நேரா மாட்டாத‌ன்னு சொன்னேன், கேட்டாங்க‌ளா..

ஏதோ ஒரு எஸ்.டி.டீ கால் வருகிற‌து.

சொல்லுங்க சார் உங்க பேர்?

நான் பெங்க‌ளூர் ப‌வா பேசுறேன்.

என்ன வேணும் சார்?

நியாயம் வேணும். ஆதாரம் வேணும்.

சார். அதெல்லாம் கிடைக்காது, என்ன‌ பாட்டு வேணும்னு ம‌ட்டும் சொல்லுங்க‌..

போடா என் வென்ட்ரு.. என்னை ஒருத்த‌ன் திட்டுறான்னு சொல்லிட்டு இருக்கேன், நீ பாட்டு கேக்குற‌..

நிக‌ழ்ச்சி இய‌க்குன‌ர் அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ உள்ளே வ‌ருகிறார். கையில் ஒரு நீள‌மான‌ துணி..

என்னது இது? அடுத்த காலர் எங்க‌?

இதாண்டா அடுத்த‌ கால‌ர்.. வெளில இந்த நிகழ்ச்சியை கண்டிச்சும் ஆதரிச்சும் சட்டையக் கிழிச்சுட்டு சண்டை போட்டத சமாதானப்படுத்தப்போய் கிழிஞ்ச என்னோட சட்டை காலர்தான் இது, இந்தா வெச்சுக்க. மொதல்ல சீட்டை விட்டு எந்திரிச்சு ஓடிப்போய்டு.. ஆமா.

கார்க்கி எழும்முன் ஃபோன் அடிக்கிற‌து.. தெரியாம‌ல் கை ப‌ட்டு அடுத்த‌ முனையில் இருப்ப‌வ‌ர் பேச‌ ஆர‌ம்பிக்கிறார்.

ஹ‌லோ, நான் காதி பேசுறேங்க‌

(கார்க்கி ம‌ன‌துக்குள்) ந‌ல்ல‌ வேளை பேதின்னு சொல்லாம‌ போனாரு..

சொல்லுங்க‌ காதி, என்ன‌ பாட்டு வேணும்?

பாட்டெல்லாம் வேணாங்க‌, ஒரு பேட்டி ம‌ட்டும்...

"ம‌றுப‌டியும் ஆர‌ம்ப‌த்திலேர்ந்தா" என்ற‌ அல‌ற‌லுட‌ன் பீதியாகி கார்க்கி, டைர‌க்ட‌ர் எல்லாம் பின்ன‌ங்கால் புட‌னியில் அடிக்க‌ ஓடுகிறார்க‌ள்.

Tuesday, June 22, 2010

ப‌திவுல‌க‌ பெண்ணுரிமைக் காவ‌ல‌ன் ஆவ‌து எப்ப‌டி?

1. முத‌லில் ப‌திவுல‌கில் இருக்கும் பெண் ப‌திவ‌ர்க‌ள் அனைவ‌ரைப் ப‌ற்றிய‌ டேட்டாபேஸ் இருப்ப‌து முக்கிய‌ம்

2. புதிதாக‌ எந்த‌ பெண் ப‌திவ‌ர் எழுத‌ வ‌ந்தாலும் அவ‌ரையும் டேட்டாபேஸில் சேர்த்துக் கொள்ள‌வும்

3. அனைத்து பெண் ப‌திவ‌ர்க‌ளையும் ஃபாலோ செய்ய‌வும். அவ‌ர்க‌ள் உங்க‌ளை ஃபாலோ செய்ய‌வில்லை என்றாலும் க‌வ‌லைப்ப‌ட‌ வேண்டாம்

4. பெண் ப‌திவ‌ர்க‌ளின் ப‌திவுக‌ள் ரீட‌ரில் தெரிந்த‌ உட‌னே ஓடிப் போய் முத‌ல் பின்னூட்ட‌ம் போட‌ வேண்டும். "அருமை", "பாராட்டுக‌ள்", "உங்க‌ள் எழுத்துக்கு ராய‌ல் ச‌ல்யூட்", "எப்ப‌டி இப்ப‌டி எல்லாம்? :)))" போன்ற‌ டெம்ப்ளேட் பின்னூட்ட‌ங்க‌ளே போதுமான‌து
4.1 நீங்க‌ள் ப‌திவை ப‌டிக்க‌ வேண்டிய‌து அவ‌சிய‌ம் இல்லை, முத‌ல் பின்னூட்ட‌ம் ரெக்கார்ட் ஆவ‌துதான் முக்கிய‌ம்
4.2 நீங்க‌ள் த‌ற்போதுதான் காவ‌ல‌ராக‌ முய‌ற்சி செய்ப‌வ‌ராக‌ இருப்பின், முத‌ல் பின்னூட்ட‌ம் போடுவ‌து கொஞ்ச‌ம் க‌டின‌மாக‌ இருக்க‌லாம். ஏற்க‌ன‌வே பொறுப்பில் இருக்கும் சீனிய‌ர் காவ‌ல‌ர்க‌ள் / ஏட்டைய்யாக்க‌ளை தாண்டி முத‌லிட‌த்தை பிடிக்க‌ போராட‌ வேண்டி இருக்கும்


5. பாஸிட்டிவ் ஓட்டு போட‌வும்
5.1 ஒருவேளை அந்த‌ ப‌திவ‌ர் த‌மிழ்ம‌ண‌த்திலோ, த‌மிழிஷ்ஷிலோ இன்னும் இணைக்க‌வில்லை என்றால் நீங்க‌ளே இணைத்து ஓட்டு போட‌ வேண்டி இருக்க‌லாம்.

6. உங்க‌ள் ஜிடாக், யாஹீ மெச‌ன்ஜ‌ர், ட்விட்ட‌ர், ப‌ஸ், ர‌யில், மாட்டுவ‌ண்டி, மூணு ச‌க்க‌ர‌ சைக்கிள் எல்லா இட‌த்திலும் அந்த‌ ப‌திவிற்கு லிங்க் குடுக்க‌வும்

7. எப்பாடு ப‌ட்டாவ‌து பெண் ப‌திவ‌ர்க‌ளின் இமெயில் முக‌வ‌ரியை க‌ண்டுபிடிக்க‌வும்.
7.1 அவ‌ர்க‌ளுக்கு "ஹாய், எப்ப‌டி இருக்கீங்க‌?" என்று மெயில் அனுப்ப‌லாம்
7.2 அவ‌ர்களுக்கு சாட் ரிக்வெஸ்ட் அனுப்ப‌லாம்.
7.3 அவ‌ர்க‌ளிட‌மிருந்து ரிப்ளை வ‌ர‌வில்லை என்றாலோ, அவ‌ர்க‌ள் திட்டி ரிப்ளை செய்தாலோ ம‌ன‌ம் த‌ள‌ர‌மால் மீண்டும் மீண்டும் முய‌ற்சிக்க‌வும். விக்ர‌மாதித்த‌ன், க‌ஜினி முக‌ம‌து க‌தைக‌ளைப் ப‌டிப்ப‌து இத‌ற்கு உத‌வ‌லாம்.


8. யாராவ‌து, எதாவ‌து, யாரைப் பற்றியாவ‌து சொன்னாலும் "பாருங்க‌, அவ‌ன் உங்க‌ள‌த்தான் கேவ‌லமா பேசுறான்" என்று பெண் ப‌திவ‌ர்க‌ளிட‌ம் வ‌த்தி வைக்க‌லாம். 7.3ஐ மீண்டும் ப‌டித்துக் கொள்ள‌வும்.

9. நீங்க‌ இதை எல்லாம் ப‌ண்ணுவ‌து அந்த‌ பெண் ப‌திவ‌ர்க‌ளுக்கு அசூசையை ஏற்ப‌டுத்தி அவ‌ர்க‌ளின் நண்ப‌ர்க‌ள் உங்க‌ளை பிடித்து காச்சு காச்சு என்று காச்ச‌லாம். அமைதியாக‌ கேட்டுக் கொண்டு மீண்டும் மேற்க‌ண்ட‌ அனைத்தையும் தொட‌ர‌வும். வ‌ன்முறை உத‌வாது என்று காந்தி ம‌கான் சொன்ன‌தை இத‌ற்கு ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து சால‌ச் சிற‌ந்த‌து.

பினா குனா (அட‌, பின்குறிப்புங்க‌)
1. மேலே உள்ள சம்பவங்கள், பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யாரேனும் தனக்கென்று எடுத்துக் கொள்வாராயின் அவரே முழுக் குற்றவாளி,
2. இவ‌ற்றை எல்லாம் முய‌ன்று அத‌ன் விளைவாக‌ வெற்றியோ, தோல்வியோ, த‌ர்ம‌ அடியோ எது ந‌ட‌ந்தாலும் க‌ம்பேனி பொறுப்பேற்காது
3. இந்த‌ ப‌திவைப் ப‌டித்த‌தும், if you feel uncomfortable... கைய‌ குடுங்க‌ சார்.. நீங்க‌ ஏற்க‌ன‌வே த‌மிழ்ப் ப‌திவுல‌கின் பெண்ணுரிமைக் காவ‌ல‌ராய்ட்டீங்க‌.. வாழ்த்துக‌ள்.

Monday, June 21, 2010

ந‌ண்ப‌ன் (சிறுக‌தை)

தூர‌த்தில் தெரிந்த‌ க‌ட‌லின் அலைக‌ளைவிட‌ அதிக‌மாக‌ அலைபாய்ந்து கொண்டிருந்தேன் நான். நான் நாராய‌ண், ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் அலுவ‌ல‌க‌த்திலும் மாட‌ர்னாய் ந‌ரேன். அம‌ர்ந்திருந்த‌து ராதாகிருஷ்ண‌ன் சாலையில் இருக்கும் அந்த‌ பெரிய‌ ஹோட்ட‌லின் மொட்டை மாடி பார். உட‌ன் என் ந‌ண்ப‌ன் ஈஸ்வ‌ர்.

"என்ன‌டா ரொம்ப‌ ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கே?"

"இல்ல‌ ஈஸ்வ‌ர், க‌ம்பெனியில‌ சேந்து போன‌ ஜ‌ன‌வ‌ரியோட‌ மூணு வ‌ருச‌ம் முடிஞ்சிடுச்சி. இன்ன‌மும் எந்த‌ மாற்ற‌மும் இல்லை. அதே டெஷிக்நேஷ‌ன், அதே ச‌ம்ப‌ள‌ம், அதே வேலை.. ரொம்ப‌ க‌டுப்பா இருக்குடா"

"ஏன் ச‌லிச்சிக்கிற‌ ந‌ரேன்? இப்ப‌ நீ சீனிய‌ர் க‌ன்ச‌ல்ட‌ன்ட்டா இருக்க‌, ஆனா வேலை பாக்குற‌ ரோல் என்ன‌வோ ப்ராஜ‌க்ட் மேனேஜ‌ர்தான். ஏற‌த்தாழ‌ ஒன்ற‌ரை வ‌ருச‌மா இந்த‌ 15 பேர் டீமை க‌ட்டி மேச்சிட்டு இருக்குற‌. பெரிசா பிர‌ச்சினைக‌ளும் ஒண்ணும் வ‌ர‌லை, அத‌னால‌ இந்த‌ முறை உன‌க்கு க‌ண்டிப்பா ப்ரோமோஷ‌ன் கிடைச்சிடும் க‌வ‌லைப்ப‌டாத‌"

ஈஸ்வ‌ருக்கு எல்லா விச‌ய‌மும் தெரிவ‌த‌ற்குக் கார‌ண‌ம் அவ‌ன் என் நெருங்கிய‌ ந‌ண்ப‌ன் என்பது ம‌ட்டும‌ல்ல‌, அவ‌னும் என் க‌ம்பெனியிலேயே வேலை செய்ப‌வ‌ன். இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் என் ரெஃப‌ர‌ல் மூல‌ம் என் க‌ம்பெனியில் சேர்ந்த‌வ‌ன், ஏற்க‌ன‌வே ஒரு டிய‌ர் ஒன் க‌ம்பெனியில் வேலை செய்த‌வ‌ன் ஆகையால் சுல‌ப‌மாக‌ மேனேஜ‌ர் டெசிக்நேஷ‌னிலேயே சேர்ந்த‌வ‌ன். சேர்ந்த‌ ஒரே வ‌ருட‌த்தில் ப்ரோமொஷ‌னுட‌ன் அசோசிய‌ட் டைர‌க்ட்ராகி 120 மெம்ப‌ர் அக்க‌வுன்ட்டை வ‌ழிந‌ட‌த்திக் கொண்டிருப்ப‌வ‌ன்.

"நீ என் அக்க‌வுன்ட்ல‌ இருந்தா பிர‌ச்சினையே இல்ல‌, பிஸின‌ஸ் யூனிட் ஒண்ணாவே இருந்தாலும் நீ வேற‌ அக்க‌வுன்ட்ல‌ இருக்குற‌, அது ம‌ட்டுமில்லாம நாம‌ ரெண்டு பேரும் ஃப்ர‌ண்ட்ஸ்னு ஊருக்கே தெரியும். அத‌னால‌ என்னால‌ உன‌க்கு ப‌ரிஞ்சு பேச‌வும் முடியாது, ஸாரிடா ந‌ரேன்"

"ச்சீ.. இதுக்கு எதுக்கு ஸாரி எல்லாம் கேட்டுகிட்டு? என‌க்கு க‌வ‌லை என்னான்னா ந‌ம்ம‌ பி.யூ.வோட‌ சைசே ரொம்ப‌ சின்ன‌து. இதுல‌ சீனிய‌ர் க‌ன்ச‌ல்ட‌ன்ட்ல‌ இருந்து மேனேஜ‌ர் ப்ரொமொஷ‌ன் அதிக‌ப‌ட்ச‌ம் ஒருத்த‌ருக்குதான் கிடைக்கும். அதுதான் க‌வ‌லையா இருக்கு"

"ந‌ல்ல‌தே ந‌ட‌க்கும்னு நினை. ஏன் எதுனா பிர‌ச்சினை இருக்கும்னு நினைக்கிற‌யா?"

"ஒரே விச‌ய‌ம்தான் அரிச்சிட்டு இருக்கு. போன‌ அக்டோப‌ர் டூ டிச‌ம்ப‌ர் க்வார்ட‌ர்ல‌ நான் குடுத்த‌ ரெவின்யூ ஃபோர்காஸ்ட்டை அச்சீவ் ப‌ண்ண‌ முடிய‌லை. ரெண்டு டெவ‌ல‌ப்ப‌ர்ஸ் க‌ல்யாண‌ம்னு மூணு மூணு வார‌ம் லீவு போட்டுட்டாங்க‌. அதுல‌ ரெண்டு வார‌ம் கோஇன்சைட் ஆன‌துனால‌ நான்பில்ல‌பிள் ரிசோர்ஸ‌சை வெச்சிம் பில்லிங்கை ச‌ரி ப‌ண்ண‌ முடிய‌லை. எப்ப‌டியோ அப்ப‌ பேசி ச‌மாளிச்சிட்டேன். இப்ப‌ ப்ரோமொஷ‌ன் ரேட்டிஃபிகேஷ‌ன்ல‌ இதைப் பேசுனா பிர‌ச்சினையாகுமேன்னு பாக்குறேன்"

"அட‌ விடுறா.. பி.யூ லெவ‌ல் மேனேஜ‌ர் ப்ரோமொஷ‌ன் ரேட்டிஃபிகேஷ‌ன் மீட்டிங்ல‌ நானும்தான் இருப்பேன். பாக்க‌லாம் உங்க‌ ஆளு உன்னை எப்ப‌டி டிஃப‌ன்ட் ப‌ண்ணுறாருன்னு, ச‌ரி கிள‌ம்புறேன்டா நானு"

"ஓகே.. பை"

********

ஒரு மாத‌த்தை ம‌ன‌ அழுத்தத்‌துட‌னே ஓட்டிய‌ பின், அன்று மாலை என் அக்க‌வுன்ட் ஓன‌ர் சுந்த‌ர் என்னை அழைத்தார். உள்ளுக்குள் ஏதோ குறுகுறுவென‌ ஏற‌த்தாழ‌ அவ‌ர‌து கேபினுக்கு ஓடினேன்.

ச‌ம்பிர‌தாய‌மான‌ ப்ராஜ‌க்ட் அப்டேட்ஸ், ந‌ல‌ விசாரிப்புக‌ள் முடிந்த‌தும் அவ‌ரே மேட்ட‌ருக்கு வ‌ந்தார்.

"ந‌ரேன், நீ இந்த‌ க‌ம்பெனியில‌ சேந்து மூணு வ‌ருச‌மாச்சி. ஏற‌த்தாழ‌ க‌ட‌ந்த‌ ரெண்டு வ‌ருச‌மா இந்த‌ ப்ராஜ‌க்ட்டை அழ‌கா ஹேண்டில் ப‌ண்ணிட்டு இருக்க‌"

"தேங்க் யூ சுந்த‌ர்"

"நான்தான் உன‌க்கு தேங்க்ஸ் சொல்ல‌ணும். நான் இந்த‌ அக்க‌வுன்ட்டுக்கு சார்ஜ் எடுத்துட்ட‌ க‌ட‌ந்த‌ ஒரு வ‌ருச‌த்துல‌ என‌க்கு அதிக‌மா பிர‌ச்சினையே குடுக்காம, ஸ்டேட்ட‌ஸ் ரிப்போர்ட் எவ‌ர் க்ரீனா இருக்குற‌ ஒரே ப்ராஜ‌க்ட் உன்னோட‌து"

நிமிர்ந்து பெருமையாக‌ உட்கார்ந்தேன்.

"ஐ நோ.. நீ உன்னோட‌ ப்ரோமொஷ‌னை எதிர்பார்த்துட்டு இருக்குற‌. என்னைக் கேட்டா, ஐ வுட் ஸே யூ டிஸ‌ர்வ் த‌ட்"

சில‌ விநாடிக‌ள் என் க‌ண்க‌ளையே தீர்க்க‌மாக‌ பார்த்தார் சுந்த‌ர்.

"ப‌ட், ஐ'ம் ஸாரி ந‌ரேன்.. இந்த‌ முறை என்னால‌ உன‌க்கு ப்ரோமோஷ‌ன் வாங்கித்த‌ர‌ முடிய‌லை"

காலுக்கு கீழே பூமி ந‌ழுவிய‌து. க‌ண்க‌ளில் எதாவ‌து நீர் திரையிடுவ‌து தெரிந்து விட‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌ த‌லையை கீழே க‌விழ்த்தேன்.

"ஐ நோ ஹ‌வ் இட் ஃபீல்ஸ்.. நான் எவ்வ‌ள‌வோ முய‌ற்சி ப‌ண்ணுனேன். இந்த‌ முறை ப்ரோமோஷ‌ன் ப்ராச‌ஸ் ரொம்ப‌ ஸ்ட்ரிக்ட். ந‌ம்ம‌ பிஸின‌ஸ் யூனிட்ல‌ இருந்து ஒரே ஒருத்த‌ரைத்தான் மேனேஜ‌ரா ப்ரோமோஷ‌ன் ப‌ண்ண‌முடியும்னு சொல்லிட்டாங்க‌. இருந்த‌து நாலு க‌ன்டெஸ்டென்ட்ஸ். லாஸ்ட் ரெண்டு வ‌ரைக்கும் நீ ரேஸில் இருந்த‌, ப‌ட்.."

த‌லையைக் குனிந்த‌வாறே கையை உய‌ர்த்தி அவ‌ர் பேசுவ‌தை இடைம‌றித்தேன்.

"இந்த‌ அக்க‌வுன்ட்டுக்கு மூணு வ‌ருச‌ம் உழைச்ச‌துக்கு என‌க்கு இவ்வ‌ள‌வுதான் ம‌ரியாதை இல்லையா? ஒருவேளை ஈஸ்வ‌ரோட‌ அக்க‌வுன்ட்ல‌ இருந்திருந்தா இந்நேர‌ம் என‌க்கு க‌ண்டிப்பா ப்ரோமோஷ‌ன் கிடைச்சிருக்கும் இல்லையா சார்?" அந்த‌ சார் என்ப‌தில் இருந்த‌ கேலி அவ‌ருக்கும் புரிந்திருக்கும்.

சிறிது நேர‌ம் அவ‌ர் எதுவும் பேசாம‌ல் போக‌, த‌லையை உய‌ர்த்தி அவ‌ரைப் பார்த்தேன். எந்த‌ உண‌ர்ச்சியும் காட்டாத‌ வ‌ழ‌க்க‌மான‌ போக்க‌ர் ஃபேஸுட‌ன் என்னையே தீர்க்க‌மாக‌ பார்த்துக் கொண்டிருந்தார்.

"என்ன‌ அமைதியாகிட்டீங்க‌ சுந்த‌ர்? உங்க‌கிட்ட‌ இதுக்கு ப‌தில் கிடையாதுன்னு தெரியும். நான் சீட்டுக்கு போறேன்" என்று வெறுப்பாக‌ பேசிவிட்டு எழுந்து திரும்பி க‌த‌வில் கை வைத்தேன்.

அவ‌ர் இப்போது ப‌தில் பேசினார் "நான் இப்ப‌ என்ன‌ சொன்னாலும் உன‌க்கு ம‌ன‌சு ஆறாதுன்னு என‌க்கு தெரியும். ஆனா ஈஸ்வ‌ரோட‌ அக்க‌வுன்ட்னு சொன்ன‌து என்னை ஹ‌ர்ட் ப‌ண்ணின‌தால‌ நான் இதை சொல்றேன். நான் இப்போ சொல்ல‌ப் போற‌து கான்ஃபிட‌ன்ஷிய‌ல் விச‌ய‌ம், ஆனாலும் சொல்லுற‌துக்குக் கார‌ண‌ம் உன் திற‌மை மேல‌ என‌க்கு இருக்குற‌ ம‌ரியாதைதான்"

க‌த‌வில் இருந்து கை எடுக்காம‌ல் அப்ப‌டியே நின்றேன்.

"லாஸ்ட் டூல‌ இருந்து நீ வெளிய‌ப் போன‌துக்குக் கார‌ண‌ம் போன‌ வ‌ருச‌ம் க‌டைசி க்வார்ட்ட‌ர்ல‌ நீ ரெவின்யூ டார்க்கெட்டை அச்சீவ் ப‌ண்ண‌ முடியாம‌ போன‌துதான். உன்னோட‌ ரெவ்ன்யூ ஃபோர்காஸ்ட் வெர்ச‌ஸ் டார்கெட் அச்சீவ்டு க்ராஃபை காட்டி, உன்னை விட‌ த‌ன்னோட‌ டீம்ல‌ இருக்குற‌ ஷ‌ர்மிளாதான் பெஸ்டுன்னு ப்ரூஃப் ப‌ண்ணி, ஷ‌ர்மிளாவுக்கு இந்த‌ ப்ரோமோஷ‌னை வாங்கிக் குடுத்த‌தே ஈஸ்வ‌ர்தான்"

Wednesday, March 31, 2010

சங்கம்: சில(ர்) சொல்ல தயங்கும் கருத்துகள்

மதிப்பிற்குரிய வலையுலக நண்பர்களுக்கு,

சென்னை வலைப்பதிவர் சங்கம் (அ) குழுமம் ஆரம்பித்தல் தொடர்பாக கடந்த ஒரு வாரத்தில் நிகழும் எந்த விச‌ய‌மும் த‌மிழ் வ‌லையுல‌க‌ எதிர்கால‌த்திற்கு ந‌ல்ல‌தாக‌ப் ப‌ட‌வில்லை. புதிதாக‌ பார்ப்ப‌வ‌ர்க‌ள் / வருபவர்கள் "இவ்வ‌ள‌வு அர‌சிய‌லா இங்கே?" என்று நினைத்து வில‌க‌க்கூடிய‌ அள‌வுக்கு பிர‌ச்சினைக‌ள் பேச‌ப்ப‌டுகின்ற‌ன‌, எதிர்வினையாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌, ப‌தில‌ளிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. பெரும்பாலானோருக்கு ஏன் இவ்வ‌ள‌வு பிர‌ச்சினை என்றே புரிய‌வில்லை. பிர‌ச்சினைக்குக் கார‌ண‌ம் தெரிந்த‌வ‌ர்க‌ள் க‌றுப்பும் வெள்ளையுமாக‌ ப‌திவிட‌வும் முன்வ‌ர‌வில்லை.

த‌ற்போதைய‌ பிர‌ச்சினைக‌ள் குறித்த‌ என் பார்வையே இந்த‌ ப‌திவு. அதே நேர‌ம் விவ‌ர‌ம் அறிந்த‌ ப‌ல‌ ப‌திவ‌ர்க‌ளின் மன‌திலும் இதே எண்ண‌ ஓட்ட‌ங்க‌ள் இருக்கும் என்ப‌தையும் அறிந்தே இருப்ப‌தால் இந்த‌ ப‌திவு எழுதுவ‌து அவ‌சிய‌மாகிற‌து.

பின்புலம்:
வலைப்பதிவுகள் முன் எப்போதையும் விட அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களாலும், திரைத்துறையினராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருவது உண்மை. சமீபத்தில் லீனா மணிமேகலை பிரச்சினை குறித்து ஜூனியர் விகடனில் வந்த கட்டுரையும், அதிக அளவில் கதை, கவிதைகளை அச்சு ஊடகங்களில் பார்க்க முடிவதும், "கம்ப்யூட்டர் இருந்தா என்ன வேணும்னா சினிமாவைப் பத்தி எழுதுறாங்க" என்ற ரீதியில் வரும் பேட்டிகளுமே இதற்கு அத்தாட்சி.

சமீபத்திய கேபிள் சங்கர் & பரிசல் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்த இயக்குனர் சி.எஸ்.அமுதன் "என் படத்தோட முதல் ரிசல்ட்டை நான் தெரிஞ்சுகிட்டதே பரிசல்காரனோட வலைதளத்துல இருந்துதான்" என்று சொல்லியதில் இருந்தே வலைப்பூக்களின் வீச்சையும், திரைத்துறையினர் அதற்கு தரும் முக்கியத்துவத்தையும் உணரலாம்.

இது மட்டுமின்றி, வலைப்பூக்களின் வளர்ச்சி இன்னும் அபரிதமாக இருக்கும் என்பதில் இதை எழுதும் எனக்கோ அல்லது படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கோ எந்த சந்தேகமும் இருக்கப் போவதில்லை. ஆகவே ஊடகங்களும், திரைத்துறையினரும் வலைப்பதிவர்களின் மீது இன்னும் அதிக அளவில் கவனிப்பை செலுத்தப் போகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்வோம்.

தற்போதைய நிகழ்வுகளை இந்த பின்புலத்துடனேயே அணுக வேண்டி இருக்கிறது.

சில கேள்விகளும், என் கருத்துகளும்:
இப்போது பொதுவான சில கேள்விகள் எல்லோருக்கும் இருக்கின்றன.

1. வலையுலக சூழ்நிலை இப்படி இருக்கிறது, சரி. இப்போது சங்கம் ஆரம்பிக்க வேண்டிய தேவை / நோக்கம் என்ன?
2. இவ்வளவு அவசர அவசரமாக கூட்டத்தைக் கூட்டி, முடிவெடுப்பதாகக் காட்டி, ப்ளாக்கர் ஃப்ரொஃபைல் உருவாக்கி, வலைப்பூவை உருவாக்கி, அதில் எழுத்துப் பிழைகளைக் கூட சரி செய்யாமல் அவசரமாக பதிவிட வேண்டிய நிர்பந்தம் என்ன?
3. பதிவுலகில் மிகவும் மதிக்கப்படும் / அனைவரும் அறிந்த / மூத்த பதிவர்களே இது குறித்து கேள்விகள் எழுப்புவது ஏன்?
4. ஏன் ஒரு ஒருமித்த கருத்து ஏற்படுத்த முன் நிற்பவர்கள் முயலவில்லை? அல்லது அப்படி ஒரு கருத்து ஏற்படும் வரை பொறுத்திருக்க முடியவில்லை?

இந்த எல்லா கேள்விகளுக்கும் என்னைப் பொறுத்தவரை ஒரே காரணம்தான் தோன்றுகிறது. இந்த சங்கம்/குழுமம் பதிவர்களுக்காகவோ அல்லது பதிவர் நலனுக்காகவோ ஏற்படுத்தப்படவில்லை. முற்றிலும் முன்னெடுத்துச் செல்பவர்களின் சொந்த நலனுக்காவே துவங்கப்படுகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

எப்படி?

1. சமீபத்திய லீனா மணிமேகலை குறித்த ஜூவி கட்டுரையையே எடுத்துக் கொள்வோம். அது குறித்து சம்பந்தப்படவர்கள் மட்டுமின்றி பலதரப்பட்டவர்களின் கருத்துகளும் கேட்கப்பட்டன. ஒரு எழுத்தாளர், அரசியல்வாதி, பெண்ணியல்வாதி, பதிவர் என்ற ரீதியில். தற்சமயம் சங்கம் என்ற ஒன்று இல்லாத நிலையில் ஒரு வலைப்பதிவர் என்ற முறையில் நண்பர் அப்துல்லாவிடம் கேட்கப்பட்டிருந்தது. ஒரு உறுதியான சங்கம் அமைந்தால் "சென்னை வலைப்பதிவர் சங்கத் தலைவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்" என்ற ரீதியில் அவர்களிடம்தான் கருத்து கேட்க எல்லா ஊடகங்களும் விரும்பும்.

2. திரைத்துறையைச் சேர்ந்த இயக்குனர்கள், கலைஞர்கள் வலைப்பதிவர்களை வெகுசுலபமாக அடைய இந்த சங்கத்தின் நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பதையே விரும்புவார்கள்.

3. சென்னை மாரத்தான் (அ) எழுத்தாளர்களின் புத்தக வெளியீட்டு விழா போன்ற பொது விழாக்களில் வலைப்பதிவர்களின் பிரதிநிதியாக இந்த சங்கத்தின் தலைவரோ நிர்வாகிகளோ மேடையேற்றப்படுவார்கள்.

எப்படிப் பார்த்தாலும் வலைப்பதிவர்கள் அனைவருக்குமான ஒட்டுமொத்த பிரதிநிதியாக இந்த சங்க நிர்வாகிகள் முன்நிறுத்தப்படுவார்கள். தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இதைவிட வேறு நல்ல வழிமுறை இல்லையென்றே தோன்றுகிறது.

இந்த சங்கத்தை முன்னெடுத்துச் செல்லும் யாருக்கும் சங்கத்தின் நிர்வாகி ஆகும் எண்ணம் இல்லை என்று யாரும் சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அன்றைய கூட்டத்தில் நடந்ததும், அதன் பின்னான பின்னூட்ட பதில்களும், பதிவுகளும் அவர்களுக்கு தங்களை நிர்வாகிகளாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற அளவு கடந்த ஆசையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

உண்மையில் இந்த சங்கத்திற்கு நிர்வாகிகளாக தகுதி பெற்றவர்கள் யார்? நம் ஒவ்வொரு பதிவுகளையும் உலகிற்கு கொண்டு சேர்க்கும் தமிழ்மணம், தமிழிஷ் போன்ற திரட்டிகளை நடத்துபவர்களும், தன் கைக்காசைப் போட்டு பதிவர்களின் எழுத்துகளை அச்சில் கொண்டு வரும் பதிப்பாளர்களும் (உதாரணம் அகநாழிகை வாசு, கிழக்கு பத்ரி, நாகரத்னா குகன்) மற்றும் அவ்வப்போது போட்டிகளையும் பட்டறைகளையும் நடத்தி பதிவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் உரையாடல் நண்பர்களும்தான்.

ஆனால் இவர்கள் யாரையும் முன்னிறுத்தாமல் தங்களை முன்னிறுத்திக் கொள்ள விழைவது மட்டுமில்லாமல் "இந்த சங்கம் ஆரம்பிப்பதில் உரையாடல் குழுவினருக்கு விருப்பமில்லை / மாசம் ஒரு படம் காட்டுங்க போதும்" என்ற ரீதியிலான வசைகளையும் பொழியும் சோ கால்டு சங்க நிறுவனர்கள் சாதிக்கப் போவதுதான் என்ன?

ஆதார‌ங்க‌ள்:
சரி, இவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளதான் சங்கம் ஆரம்பிக்கிறார்கள் என்று எப்படி சொல்கிறாய், ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்பவர்களுக்கு, இவர்கள் போட்ட பின்னூட்டங்களையும் பதிவுகளையும் ஒருமுறை படியுங்கள். அதே போல் இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ப்ளாக்கர் ப்ரொஃபைலையும் ஒரு முறை பாருங்கள்.

தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்

அக்டோபர் 2009ல் இருந்து இந்த ப்ரொஃபைல் இருக்கிறது. ஏன் இதுவரை யாருடனும் விவாதிக்கப்படவில்லை, யார் இதை உருவாக்கியது, ஏன் இத்தனை நாட்களாக இது குறித்து மவுனமாக இருந்தார்கள், இப்போது ஏன் திடீரென்று ஒரே வாரத்தில் எல்லாவற்றையும் செய்ய நினைக்கிறார்கள், அப்படி என்றால் யாருக்கும் தெரியாமல் இத்தனை நாட்களாக திரைமறைவு வேலைகள் நடந்து வந்ததா?

நான் ஏன் இதை எழுதுகிறேன்?
அமைதியாக சிறு சிறு ஊடல்களுடன் மட்டுமே சென்று கொண்டிருக்கும் தமிழ் வலைப்பதிவுலகை இந்த நிகழ்வு சுக்கு நூறாக சிதைத்துவிடும் என்று நான் அஞ்சுவது முதல் காரணம்.

பைத்தியக்காரனுக்கும் வாசுவுக்குமே உரசல் வந்திருப்பதும், லக்கியின் இன்றைய பதிவுமே அத‌ற்கு உதார‌ண‌ம்.

அடுத்தது, இந்த சங்கம் ஆரம்பிப்பது குறித்த மாற்றுக் கருத்துகளை அவர்கள் எதிர்கொண்ட விதம், முக்கியமாக பைத்தியக்காரன் அவர்கள் மீதான வசை. ஒரு மூத்த பதிவரையே இப்படி நடத்துபவர்கள் சங்க நிர்வாகிகளாக இருந்தால் ம‌ற்ற‌ இளைய‌, புதிய‌ ப‌திவ‌ர்க‌ள் எப்ப‌டி ந‌ட‌த்த‌ப்ப‌டுவார்க‌ள் என்று எழுந்த‌ ப‌ய‌ம்.

பெரும்பாலான பதிவர்களின் மனதிலும் இதே இருப்பதாக நான் கருதுகிறேன், ஆனால் ஏனோ அவர்கள் சொல்லத் தயங்குவதாகப் படுகிறது. அப்பட்டமான உண்மைகளைப் பேசுவதன் மூலம் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையே முக்கிய காரணம்.

எல்லாவற்றையும் விட முக்கியமாக காரணம், எனக்கு பைத்தியக்காரனும் நண்பர், கேபிள் சங்கரும் நண்பர், லக்கிலுக்கும் நண்பர். இவர்களுடன் சில விசயங்களில் மாற்றுக் கருத்து கொண்டிருந்தாலும் அது கருத்து அளவில் மட்டுமே. இந்த பிரச்சினையின் மூலம் இவர்கள் யாருடனான நட்பும் முறிவதை நான் விரும்பவில்லை என்பதே இதை எழுதத் தூண்டியது.

எழுதுவதற்கான தகுதி:
இவ்ளோ பேசுறியே நீ இதை எழுதுறதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு? என்று கேட்பார்களேயானால், "தமிழ் வலைப்பதிவர்கள்" என்ற வார்த்தை குறிக்கும் குழுவில் நானும் ஒரு சிறு பகுதி. அவர்கள் தங்களைப் பிரதிநிதிகளாகக் காட்டிக் கொள்ள முயல்வது என்னையும் உள்ளிட்ட குழுவிற்குதான். என்னை மற்றவர்கள் தங்களின் நலனுக்காக உபயோகப்படுத்திக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை என்பதாலும் என் கருத்துகளை மிக நீண்ட யோசனைக்குப் பின் வெளியிடுகிறேன்.

கடைசியாக, உங்களை சுய விளம்பரப் படுத்திக் கொள்ள வலைப்பதிவர்களாகிய எங்களை உபயோகித்துக் கொள்ளாதீர்கள். வலைப்பதிவர்களிடையே கருத்துப் பரிமாற்றம் (அ) அவர்கள் மூலம் சமூகத்திற்கு நல்லது செய்தல் (அ) வலைப்பதிவர்கள் சிறப்பாக செயல்பட உதவுதல் போன்ற காரணங்களுக்காக யார் என்ன குழுமம் / சங்கம் துவங்கினாலும் நான் என்னை இணைத்துக் கொள்வது மட்டுமல்ல, ஆக்கப்பூர்வமாக செயல்படவும் ஆயத்தமாகவே இருக்கிறேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

Monday, February 22, 2010

கொஞ்சம் சினிமா, கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் கோபம்

கடந்த ஒரு மாதத்திற்குள் நான் பார்த்த இரண்டு தமிழ்ப்படங்கள் தமிழ் சினிமா ஒரு தேவையான திருப்பத்தைக் கடந்திருப்பதைக் காட்டுவதாகத் தோன்றியது. இரண்டிலும் பெரிய ஹீரோக்கள் இல்லை, ஆனாலும் பேசப்பட்ட படங்கள்.

முதலில் தமிழ்ப்படம். இத்தனை வருடங்களாக தமிழ் சினிமாவில் பார்த்து பார்த்து சலித்த அத்தனை விசயங்களையும் அழகாக ஒரு கதைக்குள் கோர்த்து மாலையாக்கி இருக்கிறார்கள். தாலி சென்டிமென்ட் மட்டும் மிஸ்ஸிங், எப்படி மிஸ் செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆச்சர்யமான விசயம் நம் மக்கள் அந்த படத்தை எதிர்கொண்ட விதம். தியேட்டருக்குள் நுழையும் ஒவ்வொருவரும் சிரிக்கத் தயாராக இருக்கிறார்கள், சிரிக்கிறார்கள், சிரிக்கிறார்கள், சிரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு பேராசியர் ஞான சம்பந்தன் குறித்து சுஜாதா சொன்னது நினைவுக்கு வருகிறது. அவர் பேச ஆரம்பித்தவுடன் நான்கைந்து ஜோக்குகளை சொல்லி தயார்படுத்தி விடுவார். அதன்பின் அவர் "இன்னிக்கு வெள்ளிக்கிழமை" என்று சொன்னாலும் நாம் சிரிப்போம் என்று சொல்வார். இந்த படமும் அதே வகைதான். ஹாட்ஸ் ஆஃப் அமுதன் & டீம்..


அடுத்த படம் நாணயம். தமிழ்ப்படத்திற்கு முற்றிலும் எதிர் வகையான சீரியஸ் டைப் படம். எஸ்.பி.பி தயாரிப்பில் வந்திருக்கும் இந்த படத்தின் ஹீரோ பிரசன்னா உலகின் பாதுகாப்பான வங்கி ஒன்றை வடிவமைக்க அவரை ப்ளாக்மெயில் செய்தே அந்த வங்கியை சிபி கொள்ளையடிக்க முயல்வதுதான் கதை. நல்ல திரைக்கதை, ஆங்காங்கே திடுக்கிடும் திருப்பங்கள் என்று நல்ல திரைப்படம்.

விளம்பரம் சரியாக இல்லாததும், அவ்வப்போது ஸ்பீட் ப்ரேக்கர் போடும் தேவையில்லாத அளவுக்கதிமான பாடல்களும் படத்தின் மைனஸ் பாயிண்ட்ஸ். ஜேம்ஸ் வசந்தன் இசையில் "நான் போகிறேன் மேலே மேலே" பாடல் கலக்கல் மெலடி, லேசான இளையராஜா டச்சுடன் இருக்கும் இந்த பாடலில் எஸ்.பி.பி.யின் குரல்.... ம்ம்ம்ம்... ரோஸ் ஈஸ் எ ரோஸ்..

***

சென்ற வார இறுதியில் வீட்டிற்கு வந்திருந்த உறவினர்களுடன் மாமல்ல‌புரம் சென்றிருந்தோம். உலகம் எல்லாம் ரிசஸனில் அடிபட்டாலும் ஈ.சி.ஆர்.ல் மட்டும் வளம் கொழிப்பது கொஞ்சமும் குறைந்ததாக தெரியவில்லை. பங்களாக்களும் பண்ணை வீடுகளும் மட்டுமல்ல, மாமல்ல‌புரம் சென்று சேர்ந்த ஒரு மணி நேர பயணத்தில் பார்த்த வாகனங்களில் பெரும்பாலானவை மெர்சிடிஸ், பி.எம்.டபிள்யூ, ஹையர் என்ட் ஹோண்டோ, டொயோட்டோ கார்கள்தான். ஒருவேளை ஈ.சி.ஆர்.க்கு மட்டும் ரிசஸன் இல்லையோ?

***

மாமல்ல‌புரத்தில் ஐந்து ரதம் பகுதிக்கு செல்ல நாங்கள் சென்றிருந்த அதே சமயம் (பிப்ரவரி 20 மதியம்) இரண்டு அரசுப் பள்ளிக்கூடங்களில் இருந்து மாணவ மாணவிகள் அழைத்து வரப்படிருந்தனர். நாங்கள் நுழைவுச்சீட்டு வாங்க வரிசையில் நின்றிருந்தபோது அவசர அவசரமாக வந்த இருவர் என்னையும் தாண்டிப் போய் கவுன்ட்டரில் டிக்கெட் வாங்க முற்பட்டனர். இருவரும் அந்த மாணவர்களுடன் வந்த ஆசிரியர்கள். கடுப்பான நான் "வரிசையில் வாங்க, நீங்க எல்லாம் டீச்சர்ஸ்தான, குழந்தைகளுக்கு நல்ல எக்ஸாம்பிள் செட் பண்ணுங்க" என்று கொஞ்சம் சத்தமாகவே திட்டினேன். என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

ஒருவர் மட்டும் பின்வாங்க இன்னொருவர் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆசிரியருக்கு உண்டான கடமை உணர்ச்சியில், மாணவர்களை வழிநடத்தணும் என்ற உங்க கடமைய ஆத்துலைன்னா கூட பரவாயில்ல, அடுத்தவன் திட்டுறானே என்ற உணர்ச்சி கூடவா இருக்காது? :(

இனிமேல் இங்கிலாந்தில் குடியுரிமை பெற விரும்பும் மற்ற நாட்டவர்கள் 'வரிசையில் நிற்பது' போன்ற இங்கிலாந்து நாட்டவர்களின் அடிப்படை ஒழுக்கங்களை பின்பற்ற வேண்டியது முக்கியம் என்று அந்த நாட்டு அரசு சென்ற வாரம் கூறியிருந்தது முற்றிலும் சரி.

டிக்கெட் வாங்கிக் கொண்டு சிற்பங்களைப் பார்க்கச் சென்றபோது அதைவிட பெரிய அதிர்ச்சி. அங்கே அரசு பள்ளி யூனிஃபார்மில் வந்திருந்த மாணவர்களுடன் பத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்களின் கைகளையும் பிடித்துக் கொண்டு கலர் உடையில் அவர்களின் குழந்தைகள். ஒரு ஆசிரியர் கூட மாணவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. இவர்கள் எல்லாம் வருவதே மாணவர்களை கவனித்துக் கொள்ளதான் என்பதுகூடவா தெரியாது இல்லை புரியாது.

அரசு அலுவலர்களுக்கே உண்டான அலட்சியம், அரசு பணத்தில் தங்கள் தேவைகளை கவனித்துக் கொள்வது எல்லாமே ஒரு கட்டத்தில் பழகி விட்டாலும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் மனப்பான்மை நான் படித்தபோது இருந்ததை விட இன்னும் மோசமாகி இருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. இது நல்லதல்ல என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை.

ஒன்று மட்டும் வெட்ட வெளிச்சம். எதிர்கால இந்தியாவின் எந்த நல்ல தூணும் அரசுப் பள்ளிகளில் இருந்து வரப்போவதில்லை, வர வாய்ப்பிருந்தாலும் இந்த மாதிரி ஆசிறியர்கள் விடப்போவதில்லை.