ஒரு குற்றவாளிக்கு தரப்படக்கூடிய அதிகபட்ச தண்டனை எது? இந்த கேள்விக்கு எல்லா நாடுகளிலும் ஒரே பதில் "மரண தண்டனை" என்பதே. சில நாடுகளில் தூக்கு, சில நாடுகளில் மின்சார இருக்கை, சில நாடுகளில் கல்லால் அடித்துக் கொலை என்று தண்டனையை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதில் மாற்றம் இருந்தாலும் மரணதண்டனைக்கு மிஞ்சிய தண்டனை இல்லை என்றுதான் எல்லா நாட்டு சட்டங்களும் சொல்கின்றன.
அந்த குறிப்பிட்ட நாட்டில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவது விஷ ஊசியின் மூலம், காரணம் மற்ற முறைகளை விட விஷ ஊசி முறையில்தான் சாவதற்கான உடல் வேதனை குறைவு என்பது அவர்கள் வாதம். சுமார் 25 வருடங்களுக்கு முன்பு 1984ல் ஒரு 14 வயது சிறுமியைக் கடத்தி, கற்பழித்துக் கொன்ற அந்த குற்றவாளிக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. நமது நாடு போல் தீர்ப்பு வந்தது 10 வருடம் கழித்தல்ல, ஒரு வருடத்திற்குள்ளாகவே. ஆனால் அதை நிறைவேற்றுவதில் சில பிரச்சினைகள்: மரணதண்டனை வேண்டுமா, வேண்டாமா என்று நம் நாட்டைப் போலவே அங்கும் விவாதம், தண்டனை நிறைவேற்ற போதுமான பணம் ஒதுக்காதது போன்ற காரணங்களினால் ஏற்கனவே மரண தண்டனை பெற்று விஷ ஊசிக்கு காத்திருப்பவர்கள் வரிசையில் அவனும் சேர்க்கப்படுகிறான்.
பாதுகாப்பான சிறையில் பரோலில் வெளிவர முடியாத கைதியாக சாவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறான். என்றாவது ஒரு நாள் காவல் அதிகாரி வந்து "அடுத்த வாரம் உனக்கு தண்டனை நிறைவேற்றப்படும்" என்று சொல்வார் என்ற நிலை. இப்படி அவன் காத்திருந்தது ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, 25 வருடங்கள். எந்த நிமிடமும் தன் தண்டனை நிறைவேற்றப்படும் என்ற நிலையில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்த அவனது மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பது மரணதண்டனையை விட கொடிய ஒன்று என்பது மறுக்க முடியாத உண்மை.
முடிவாக, செப்டம்பர் 15, 2009ல் அவனது தண்டனையை நிறைவேற்றலாம் என்று முடிவு செய்கிறார்கள் சிறைத்துறையினர். விடுதலையை விட அதிக மகிழ்ச்சியை அவன் அடைந்திருப்பான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் விதி வேறு வடிவத்தில் விளையாடும் என்பதை அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான்.
மதியம் இரண்டு மணிக்கு அவன் மரண தண்டனை நிறைவேற்றும் அறைக்குள் அழைத்துச் செல்லப்படுகிறான். கண்ணாடித் தடுப்புக்கு வெளியே இருபதிற்கும் அதிகமான மனிதர்கள் (அ) சாட்சிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவன் இருக்கையுடன் சேர்த்துக் கட்டப்படுகிறான். மயக்க மருந்து எதுவும் கொடுக்கப்படுவதில்லை, நேரடியாக விஷ ஊசிமட்டுமே. ஊசி போடப்பட்ட சில நிமிடங்களில் வலி, வேதனை இல்லாமல் உயிர் பிரிவது வாடிக்கை.
இதற்கெனவே பயிற்சி பெற்ற மருத்துவர்கள் ஊசி மற்றும் விஷத்திற்கான ரசாயனங்களுடன் அறைக்குள் செல்கின்றனர். எல்லாம் தயார் என்ற நிலையில்தான் எதிர்பாராத, இதுவரை வரலாற்றில் நிகழாத அந்த விஷயம் நடக்கிறது. விஷ ஊசியைப் போடுவதற்கான இரத்தக் குழாயை அந்த மருத்துவப் பணியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டு கைகளில் கண்டுபிடிக்க முடியாவிட்டால், காலில் அல்லது தொடையில் ஊசி போடப்படும். என்ன காரணமோ அவனது உடலில் எந்த பகுதியிலும் இரத்தக்குழாய்களை அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
இப்படி அவர்கள் அவன் உடல் முழுவதும் இரத்தக் குழாய்களை தேடிக்கொண்டிருந்தது ஐந்து நிமிடமோ பத்து நிமிடமோ அல்ல, முழுதாக இரண்டு மணிநேரம். இரண்டு மணிநேரம் கழித்து தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே மரணதண்டனை நிறைவேற்றப்பட முடியவில்லை என்று கூறி அவன் சிறைக்கு திருப்பி அனுப்பப்படுகிறான்.
அவன் செய்த ஒரு கொலைக்கு இன்றோ நாளையோ என்ற நிலையில் இருபத்தைந்து வருடங்கள் சிறையில் வைத்திருந்து, மரணத்தின் வாசலுக்கு கொண்டு சென்று இரண்டு மணிநேரம் வைத்திருந்து, அவனை சிறைக்குத் திருப்பி அனுப்பி மறுபடியும் இன்றோ நாளையோ என்ற நிலையில் வைத்திருக்கும் அந்த நாடு, உலகுக்கே நாட்டாமை பண்ணிக் கொண்டிருக்கும் அமெரிக்கா. இந்த நரக வேதனைக்கு அவன் பிடிபட்ட அன்றே என்கவுன்ட்டரில் கொன்றிருந்தாலும் பரவாயில்லை என்பதே உண்மை.
சில கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
1. இந்த ஒரு குற்றவாளியைப் போன்றே அமெரிக்கச் சிறைகளில் ஆயிரக்கணக்கானோர் இன்னும் விஷ ஊசிக்குக் காத்திருக்கிறார்கள். இன்னும் எத்தனை வருடங்கள் அவர்களை இப்படி வைத்திருக்கப்போகிறார்கள்?
2. நமது நாடு போல அரசியல் காரணங்கள் இல்லாமல் மரணதண்டனை கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றால் உடனடியாக நிதி ஒதுக்கி அவர்களின் தண்டனையை நிறைவேற்றலாமே, தண்டனையை நிறைவேற்றும் முறையில் கூட வலியும் வேதனையும் இருக்கக் கூடாது என்று நினைப்பவர்கள், டெத் ரோ (Death Row) எனப்படும் மரண வரிசையில் காத்திருப்பவர்களின் மனதளவில் ஏற்படும் வலியையும் வேதனையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாதது ஏன்?
3. அமெரிக்காவின் சில மாநிலங்களில் மரணதண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் இன்னும் நடைமுறையில் உள்ளது. ஒரே நாட்டின் குடிமக்களிடையே ஏன் இந்த வேறுபாடு?
சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த செய்தி இது. இது குறித்த முழு விவரமும் இங்கே.
Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts
Monday, October 26, 2009
Subscribe to:
Posts (Atom)