சுஜாதா... இவரை வெறுமனே எழுத்தாளர் என்று குறிப்பிட்டதற்காக என்னை திட்டி ஏற்கனவே பின்னூட்டம் போட்டிருப்பீர்கள் (அ) போடத் தயாராக இருப்பீர்கள். தமிழக அரசியல் வரலாறை பேசும் யாருமே திட்டியாவது கலைஞரைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது என்று உடன்பிறப்புகள் சொல்வது சுஜாதாவுக்கும் அப்படியே பொருந்தும். தமிழ் எழுத்துலகம் குறித்து யாராவது பேசினால் அது இவரைக் குறித்து பேசாமல் முற்றுபெறாது..
இப்ப அதுக்கு என்னடா நாயே? என்று கவுண்டமணி ஸ்டைலில் கேட்பவர்களுக்கு, "கொஞ்சம் பொறுங்க சாமி"
நான் சுஜாதாவின் கதைகளை எப்போது படிக்க ஆரம்பித்தேன் என்பது நினைவில்லை, என் சின்ன வயதிலேயே அவரது நாவல்களை படித்திருக்கிறேன் என்றெல்லாம் சொன்னால் அது "ஈழத்தமிழர்களுக்காக உயிரையும் கொடுப்பேன்" என்று சொல்லும் அரசியல்வாதிகளின் வார்த்தைகளுக்கு சற்றும் குறையாத கடைந்தெடுத்த அக்மார்க் பொய்.
கற்றதும் பெற்றதும் மூலமாகத்தான் அவரது எழுத்துக்கள் எனக்கு பரிச்சயம். அது மட்டுமல்லாமல் அவ்வப்போது வார இதழ்களில் வரும் அவரது சிறுகதைகளையும் படித்திருக்கிறேன். அவரது "ஏன்? எதற்கு? எப்படி?" தொடரின் புத்தகத்தை படித்தபின் பல்வேறு துறைகள் மீதான அவரது அறிவும், ஈடுபாடும் என்னை ஆச்சர்யப்படுத்தியது.
அவர் ஒரு சிறந்த அறிவியல் கதை எழுத்தாளர் என்பதை நான் படிக்கும் எழுத்தாளர்களும், சந்திக்கும் நண்பர்களும் அடிக்கடி சொன்னாலும் நான் அவரது அறிவியல் கதைகளை படித்ததே இல்லை என்பதே உண்மை. அதிலும் எனக்கு மிகவும் பிடித்த பிரிவான அறிவியல் புனைகதைகளில் அவர் மன்னர் என்பது தெரிந்திருந்தாலும் நான் அவரது புத்தகங்களை படிக்க எந்த முயற்சியும் எடுக்காதது எனக்கே இன்று வரை ஆச்சர்யம்தான்.
இந்தமுறை சென்னை புத்தக சந்தைக்கு செல்வது என்று முடிவு செய்தவுடனே நான் எடுத்துக்கொண்ட சபதம் இந்த முறை அவரது புத்தகங்களை வாங்கிவிட வேண்டும் என்பதுதான். அவரது புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்று வழிகாட்டி உதவிய லக்கிலுக்கிற்கு நன்றி.
முதலில் படித்து முடித்த "என் இனிய இயந்திரா" மற்றும் "மீண்டும் ஜீனோ" பற்றி மற்றொரு சமயம் பதிவிடுகிறேன். இந்த பதிவில் நான் சொல்ல வந்தது அவரது "கறுப்புக் குதிரை" சிறுகதைத் தொகுப்பைப் பற்றி..
விசா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டிருக்கும் இந்தத் தொகுப்பில் சுஜாதாவின் 12 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. 2000ம் ஆண்டு வாக்கில் ஆனந்த விகடனில் வெளிவந்த "புதிய தூண்டில் கதைகள்" என்ற தொடரின் புத்தக வடிவம் இது.
சிறுகதைத் தொடர்கள் நம் எல்லாருக்குமே பரிச்சயமானதுதான். ஒரே எழுத்தாளரால் வாரம் ஒரு சிறுகதை எழுதப்படுவதை நாம் அடிக்கடி படித்துக்கொண்டுதான் இருக்கிறோம். சொல்லப்போனால் சாருவின் குட்டிக்கதைகள், ஜ்யோவ்ராம் சுந்தரின் காமக்கதைகள், லக்கியின் ஜட்டிக்கதைகள் (தமிழ்மணம் கவனிக்க, இந்த ஒரு வார்த்தைக்காக ஸ்டார் போடவேண்டாம்), கார்க்கியின் புட்டிக்கதைகள் என்று நாம் எல்லோருமே விரும்பி படித்து வரும் (அ) வந்த தொடர்கள் கணக்கிலடங்கா..
சுஜாதாவின் இந்தத் தொடர் எப்படி இதிலிருந்து எல்லாம் வேறுபட்டது? நிஜமாகவே அந்த மனிதரை எல்லோரும் புகழும் அளவுக்கு அவரிடம் சரக்கிருக்கிறதா என்ற கேள்விகளுக்கு சரியான விடை இந்த புத்தகத்தை படிப்பதுதான்.
தொகுப்பில் இருக்கும் 12 கதைகளும், நம்புங்கள், 12 வித்தியாசமான தளங்களில் எழுதப்பட்டிருக்கின்றன. எந்த இரண்டு கதைகளிலும் ஒரு ஒற்றுமை அல்லது துளிகூட எழுத்தாளனின் சாயல் தெரியவே இல்லை. "கறுப்புக் குதிரை" கிரிக்கெட் சூதாட்டம் என்றால் அதற்கு அடுத்த கதையான "எல்லாமே இப்பொழுதே" முழுக்க முழுக்க மனித இனத்தின் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டது, அதற்கடுத்த "கி.பி.2887ல் சில விலாசங்கள்" கட்டுப்பாடுகள் நிறைந்த எதிர்காலத்தில் சட்டத்தை மீறி ஒரு பெண்ணைத் தேடிச்செல்லும் ஒருவனைப் பற்றி. ஒவ்வொரு கதையை படித்து முடிக்கும்போதும் ஒரு சிறுகதையை படித்து முடித்த திருப்தி உங்களுக்கு கிடைக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம்.
சுஜாதா மோஸ்ட் வெர்சடைல் (இதுக்கு தமிழ்ல என்னாபா?) எழுத்தாளர் என்பதற்கு சரியான உதாரணம் இந்தத் தொகுப்பு..
நீங்கள் சுஜாதா ரசிகர் என்றால் இந்தக் புத்தகத்தைப் படியுங்கள். அவர் மீதான உங்கள் அபிமானம் இன்னும் அதிகமாகும். ஒருவேளை நான் தலைப்பில் சொல்லியிருப்பதுபோல், நீங்கள் இணையத்தில் எழுதும் ஒரு சிலரை போல், "அவனெல்லாம் ஒரு எழுத்தாளர்னு கொண்டாடுறானுங்க" என்று நினைப்பவராக இருந்தால், நீங்களும் இந்த புத்தகத்தை கண்டிப்பாக படியுங்கள். உங்கள் நினைப்பு தவறு என்பது உங்களுக்கே தெரியும். மொத்தத்தில் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
புத்தகம்: கறுப்புக் குதிரை
வெளியீடு: விசா பப்ளிகேஷன்ஸ் (திருமகள் பதிப்பகம்)
பிரிவு: சிறுகதைத் தொகுப்பு
விலை: ரூ.50/ (நிஜமாத்தான்.. ஒரு கதையின் விலை ஒரு கப் டீயின் விலையை விட குறைவு)
இது மலிவு விலை பதிப்பல்ல. தரமான தாளிலேயே அச்சிட்டு குறைந்த விலைக்கு கொடுத்த பதிப்பகத்தாருக்கு நன்றிகள்.
Showing posts with label சுஜாதா. Show all posts
Showing posts with label சுஜாதா. Show all posts
Monday, February 9, 2009
Subscribe to:
Posts (Atom)